ஞாயிறு, 28 நவம்பர், 2021

மானிட பிறப்பு உயர்ந்தது !

*மானிட பிறப்பு உயர்ந்தது* ! 


*தாவரம் முதல் ஊர்வன பறப்பன நடப்பன அசுரர் தேவர் இறுதியாக மனிதர் என ஏழுவகையான பிறப்புக்கள் ஆன்மாவிற்கு கொடுக்கப்படுகிறது* 


எல்லா பிறப்பு உடம்புகளிலும் மனிதப்பிறப்பு உடம்பு மட்டுமே உயர்ந்தது என்பதற்கு காரணம் என்ன?  என்பதை ஒவ்வொரு மனித தேகம் எடுத்த ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.  


*மனித தேகத்தின் தனிச்சிறப்பு !*


*மனிதபிறப்பிற்கு மட்டுமே சிந்திக்கும்திறன்  செயல்படுத்தும் திறன் பேசும்திறன் மற்றும் உண்மைஅறியும் அறிவுத்திறன் மேலும் தன்னை அறியும்திறன் தன்னைப்படைத்த தலைவன் யார்? என்பதை தெரிந்துகொள்ளும் திறன்* மற்றும் கற்றல் கேட்டல் சிந்தித்தல் உணர்தல் தெளிதல் செயல்படுதல் போன்ற உயர்ந்த செயல்பாட்டு கருவிகள் அகத்திலும் புறத்திலும் கண்களுக்குத் தெரியாமல் யாவும்  பொருத்தப்பட்டுள்ளன


*மேலும் மீண்டும் பிறப்பு இறப்பு எடுக்காமல் இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றும் உயர்ந்த அருளைப்பெறும் தகுதியும்  என்றும் அழியாத சித்திபெற்று இறைவனுடன் கலந்து  பேரின்பசித்தி அடைந்து வாழும் தகுதி உடைய உடம்பே மனித தேகமாகும்* 


மேலும் ஆன்மாவின் துணைக்கருவிகளான ஜீவன் கரணங்கள் மற்றும்  இந்திரியங்கள் யாவும் அழகாக மிகவும் அற்புதமாக பொருத்தப்பட்டுள்ளன. 


*இந்த உயர்ந்த அறிவையும் ஆற்றலையும் அருளையும் பெற்று உலகம் எங்கும் தடை இல்லாமல் செல்லும்  தகுதி உடையதால் மனித தேகம் எல்லாத் தேகத்தையும் விட உயர்ந்த அறிவுள்ள தேகம்  என்று சொல்லப்படுகின்றது*. 


*எனவே ஆன்மா மனிததேகத்தை பெற்றதினால் "உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய  உயர்ந்த அறிவுள்ள மனிததேகத்தைப் பெற்ற நண்பர்களே என்று வள்ளல்பெருமான் நம்மை எல்லாம் பார்த்து அன்புடன் அழைக்கின்றார்* 


*ஆதலால் உயர்ந்த தெளிவான  அறிவுள்ளவர்கள் மனிதர்கள் என பெயர்  சூட்டப்பட்டுள்ளது.*


*ஆன்மாக்கள்  நினைந்து நினைந்து  உணர்ந்து உணர்ந்து  நெகிழ்ந்து நெகிழ்ந்து  அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என்உரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலியீர் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திட்டலாம்* கண்டீர்  என்றும் 


*மேலும் புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே என்றும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் சொல்லுகிறார்*


*மனித தேகப் படைப்பு*


*மனித தேகம் மற்ற தேகங்களைப் போல் லேசில் கிடைத்தது அல்ல.இத்தேகம் போனால் மறுபடியும் இத்தேகம் கிடைப்பது உறுதி அல்ல என்கிறார்*

*ஆதலால் இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்*


*இந்த உலகத்தில் மனித உடம்பு கட்டுவதற்கு (கிடைப்பதற்கு) அதாவது அணுக்களை இணைப்பதற்கு  அதிக கவனம் அதிக அக்கரை அதிக முயற்சி அதிக காலத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  எடுத்து கொள்ளப்பட்டதாகும். அதனால் மனித தேகம் தனித்தன்மை வாய்ந்ததாகும்* 


*மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை குணம் தயவு அதேபோல் ஆன்மாவின் இயற்கை குணம் தயவாகும். தயவை வெளிப்படுத்தும் விதமாக மனித உடம்பு அமைக்கப்பட்டுள்ளது*  *என்பதை உணர்ந்து  ஒவ்வொரு ஆன்மாவும் தயவை வெளிப்படுத்த வேண்டுவது அவசியமாகும்*


*மனித தேகத்தில் பின்னப்பட்ட அணுக்கள் சுத்த பூதகாரிய அணுக்களாகும் மிகவும் உயர்ந்த தத்துவ ஜடப்பொருள்களைக் கொண்டு பிண்ணப்பட்ட அணுக்களாகும்* 


*மனித உடம்பின் தலைப்பாகம் மிகவும் அதிசயமான அற்புதமான வியக்கத்தக்க செயல்களைச் செய்யும் அறிவும் ஆற்றலும் வெளிப்படுத்தும் விதமாக சிறு மூளையும் பெரிய மூளையும் கொண்ட  பகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன* *மூளையின் மத்தியில் சிற்சபை என்னும் ஓர் வெற்றிடம் உண்டு அங்குதான் ஆன்மா தனிமையில்  இயங்கும் பகுதியாகும்*.

*ஆன்மாவின் உள்ளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உயர்ந்த சக்தி வாய்ந்த பொன் நிறமான அருளை நிரப்பி வைத்துள்ளார்*

*அவ்வருளைப் பெறவே உயர்ந்த அறிவு மனிதனுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது.*


*கீழ் பிறவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து மேல் பிறவியான மனிதப்பிறவி எடுத்துள்ள ஆன்மா மீண்டும் கீழ்பிறவிக்கு செல்லக்கூடாது என்பதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை நியதியாகும்* 


*உயர்ந்த அறிவும் பிறப்பும் எடுத்த ஆன்மா மீண்டும் மேல்நோக்கி செல்ல வேண்டும்*மேல் நோக்கி செல்ல வேண்டுமானால்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழும் வாழ்க்கையே மேல்நோக்கி செல்லும் வாழ்க்கையாகும்*


*எனவே மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் எல்லா உயி்ர்களிடத்தும் உயிர் இரக்கமான ஜீவகாருண்யமும்  ஆன்மநேயமும் கொண்டு வாழ்வதோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் உண்மையான இடைவிடாத அன்பை செலுத்தி   அறிவை பெருக்கி அருளைப் பெற்று ஊனினை உருக்கி உள்ஒளி பெற்று ஒளிதேகமாக்கி வாழ்வாங்கு வாழவதே உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தின் லட்சியமாகும்*


எல்லா உயி்ர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 23 நவம்பர், 2021

25-11-2025 மலேசிய மக்களுடன் ஆன்லைனில் பேசியது !

 அருள் வணக்கம்🙏.

 

*சன்மார்க்கப் பேச்சாளரும்  திருவருட்பா ஆராய்ச்சி மையத்தின் தோற்றுனருமாகிய ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயா* அவர்களுடன்   இணையம்வழி மெய்நிகர் சத்விசாரம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.


*நாள்*

25.11.2021(வியாழன்)


*நேரம்*

---இந்திய நேரம்

(மாலை மணி 5.30),

---மலேசிய நேரம்

(இரவு மணி 8.00) 


⤵️

*அங்கம் 1*

*சத்விசாரம்*


*அங்கம் 2*: 

*ஐயம் தெளிக* 



⤵️

*வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபை தோற்றுவித்து இருக்கும் நிலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிக்கைக்கு சென்று வள்ளலார் உடன் கலக்க  என்ன காரணம்? என்ற தலைப்பில் விசாரம் செய்யப்படும்.*


அடுத்து சந்தேகம் தெளிதல் *கேள்வி பதில்* நிகழ்ச்சி நடைபெறும் 


அனைவரும் கலந்துகொண்டு *ஆன்மலாபம்* பெறுக  


*கீழே உள்ள லிங்கை தொடர்பு கொள்ளவும்*


Meeting URL: https://meet.google.com/zgp-kgjv-uts

18-11-2021.மலேசிய ஆன்லைனில் பேசியது !

 அருள் வணக்கம்🙏.

 

*சன்மார்க்கப் பேச்சாளரும்  திருவருட்பா ஆராய்ச்சி மையத்தின் தோற்றுனருமாகிய ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயா* அவர்களுடன்   இணையம்வழி மெய்நிகர் சத்விசாரம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.


*நாள்*

18.11.2021(வியாழன்)


*நேரம்*

---இந்திய நேரம்

(மாலை மணி 5.30),

---மலேசிய நேரம்

(இரவு மணி 8.00) 


⤵️

*அங்கம் 1*

*சத்விசாரம்*


*அங்கம் 2*: 

*ஐயம் தெளிக*


திருவருட்பா: 

சுத்த சிவநிலை

⤵️

*பாடம் 29*

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி  நேத்திரங்கள்போல் காட்ட நேராவே - நேத்திரங்கள் சிற்றம்பலவன் திருவருள் சீர்வண்ணம் என்றே உற்று இங்கு அறிந்தேன் உவந்து.


*பாடல் 30*

வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேத ஆகமத்தின் விளைவு அறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மை வெளிதோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.


Meeting URL: https://meet.google.com/zgp-kgjv-uts

ஞாயிறு, 21 நவம்பர், 2021

உளவு தெரிந்தவன் மரணத்தை வெல்லுவான் !

 *உளவு தெரிந்தவன் மரணத்தை வெல்லுவான்!* 


*வள்ளலார் பாடல் !* 


 உளவினி லறிந்தா லொழிய மற் றளக்கின்

அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

*உளவெனக்கே* உரைத்தானை உணரார் பாட்டைக்


கொள்ளானை *என்பாட்டைக் குறிக்கொண் டானைக்*

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்


தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி


*எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட*

*எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே*! 


*மேலே கண்ட பாடல்களில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் *உளவு* *( ரகசியம்) தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் என்னவென்று தெரியாமல் சமய மதவாதிகள் சிதம்பர ரகசியம் என்றும் இறை ரகசியம் என்றும் விபரம் அறியாமல் சொல்லி வைத்துள்ளார்கள் அதையும் வெளிப்படையாக  சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்  என்கிறார் வள்ளலார்.*


*வள்ளலார் சொல்லியுள்ள உளவைத் திருஅருட்பாவில் பதிவுச் செய்துள்ளார் அவற்றை தேடி படித்து தெரிந்துகொண்டு அதன்படி வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் என்கிறார்*.


*வள்ளலார் சொல்லியுள்ள *உளவு என்னும் ரகசியம்* *சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் தெரியப்படுத்தி உள்ளார் !*


பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


*உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே,* 


*இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!* 


*தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!*


*இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.*


*எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் ?  பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து (வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,* )


*எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.*


*பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து,*


*எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்*.


*ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்*


*கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது.*


*தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்*.


*இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்*.


தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!   


*வள்ளலார் பாடல்!*


என்உயிரும் என்உடலும் என் பொருளும் யானே

இசைந்து கொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே


தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே

தந்து கலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே


மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த

மணியே என் கண்ணே என் வாழ்முதலே மருந்தே


மின்னிய பொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே

மெய்யும்அணிந் தருள்வோய் என் பொய்யும்அணிந் தருளே.! 


*மேலே கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள உண்மையான உளவை அறிந்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியும்*


*இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவன் கொடுத்த மூன்று சுதந்தரத்தையும் இறைவனிடமே திருப்பிக் கொடுத்தால் மட்டுமே அருள் சுதந்தரம் கிடைக்கும் என்பதே உளவாகும்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896.

செவ்வாய், 16 நவம்பர், 2021

பஞ்ச பூதங்களின் செயல் !

 *பஞ்ச பூதங்களின் செயல்!* 


பாரொடு நீர் கனல் காற்று ஆகாயம் எனும் பூதப்

பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான

ஏர்பெறு தத்துவ உருவாய்த் தத்துவ காரணமாய்


இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய்

நேருறும் அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடு 

பூரணமாய்


நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குண சிற் குணமாய்

ஓர்தரு சன் மாத்திரமாம் 


திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!


*இவ்வுலகில் இயங்கும் நீர் நிலம் அக்கினி காற்று ஆகாயம் எனும் பஞ்சபூதங்கள் எல்லாம் இயற்கையானது அல்ல.*

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்* *படைக்கப்பட்ட செயற்கையான  ஜட அணு* *தத்துவங்களாகும்* 


*அத் தத்துவங்களுக்கு எனத் தனித்தனி காரண காரியங்களும் அமைப்புகளும் அதிகாரங்களும் ஆற்றல்களும் செயல்பாடுகளும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்பட்டுள்ளன* அதனதன் வேலைகளை சரியாக முறையாக  செயல்பட்டுக் கொண்டுள்ளன. 


*பஞ்ச பூதங்களிலே மிகப்பெரியது ஆகாயம். அதற்கும் சிறியது காற்று. அதற்கும் சிறியது அக்கினி. அதற்கும் சிறியது  நீர். அதற்கும் சிறியது மண்(பூமி)*


 *அந்த ஐந்து பூதங்களையும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றுவதற்கும் செயல்படுவதற்கும் ஒன்பது கிரகங்கள் அதாவது (ஒன்பது துவாரங்களையும்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்துள்ளார்*


*அதேபோல் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளன என்கிறார் வள்ளலார்*


*ஆன்மாக்கள் உயிர்கள்!*


*இவ்வுலகில் இறைவனால்  அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு முதலில் உயிரைக் கொடுத்து பின் உடம்பு கொடுக்கப்படுகிற து.*  *பஞ்சபூத அணுக் கருவிகளைக்கொண்டு கட்டிக்கொடுக்கப்பட்டதுதான் உடம்பு என்னும் வாடகை   வீடாகும் அச்செயல் எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.*


*ஆன்மாக்கள்  அருள் உடம்பு என்னும் ஒளி உடம்பு  பெறுவதே சொந்த வீடாகும்*


*உயிரும் ஆன்மாவும் ஒரேத்தன்மையாக இருந்தாலும் வெவ்வேறு செயல்பாடுகள் உடையது.* 


*உயிருள்யாம்  எம்முள் உயிர்* *இவை யுணர்ந்தே*

*உயிர்நலம் பரவுக என்று  உரைத்தமெய்ச் சிவமே!* ( அகவல்)


*பஞ்ச பூத உடம்பில் ஆன்மா இருந்தால் உயிருக்கு வேலை*  *அருள் உடம்பு பெற்றால் உயிருக்கு வேலை இல்லை ஆன்மாவிற்கு மட்டுமே வேலை என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்*


*ஒவ்வொரு உருவ மாற்றத்திற்கும் தோற்றத்திற்கும் அதாவது பிறப்பு இறப்பிற்கும் பஞ்சபூத தத்துவ அணுக் கருவிகளே காரண காரியமாய் உள்ளன.*


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஆன்மா தொடர்பு கொண்டு அருளைப்பெற்றால் மட்டுமே உயிரும் பஞ்சபூத கருவிகளான  உடம்பும் ஆன்மாவிட்டு விலகும்*. *ஆன்மா அருளைப்பெற்றால்தான் மரணத்தை வெல்லமுடியும்.*

*மரணத்தை வெல்லும் தகுதியை ஆன்மா பெறுகின்றவரை பஞ்ச பூதங்களும் உயிரும் ஆன்மாவை விட்டு விலகாது* 


*வள்ளலார் பாடல்!*


ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி


காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி


ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ

ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்


ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து

அருட்பெருஞ் சோதி கண்டாடேடி பந்து!  


*மேலே உள்ள பாடலில் கண்டபடி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் வள்ளலார். அவரைப்போல் நாமும் பின்பற்ற வேண்டும்.நாம் பின்பற்ற வேண்டிய ஒரே மார்க்கம் அதாவது நேர்வழியைக் காட்டும் மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்* அச்சங்கத்தின் வழியே சென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளமுடியும். 


*உலகில் உள்ள உயிருள்ள ஜீவராசிகளிடம் ஆன்மநேயமும் ஈரமான உயிர் இரக்கமும் அதாவது இடைவிடாது தயவு கருணை என்னும்  காருண்யமும்*காட்டவேண்டும். மேலும் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இடைவிடாத அன்பும் காதலும் பற்றும் எவரிடத்தில் உள்ளதோ அவருக்கு ஆண்டவர் அருளை வாரி வாழங்குவார்* 


*அருள் பெற்ற ஆன்மாவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது* 


*வள்ளலார் பாடல்!* 


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்

*எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!*


என்னும் பாடல் வாயிலாக விளக்கம் தருகிறார் வள்ளலார்.   


*ஆன்மாவை விட்டு பஞ்சபூத தத்துவ  அணுக்கள் மரணம் அடையாமல்  விரையம் ஆகாமல் நரை திரை பிணி மூப்பு  துன்பம் துயரம் அச்சம் பயம் மற்றும்  முதிர்ச்சி அடையாமல் விலகிவிட்டால் ஆன்மா அருள்ஒளி உடம்பு பெற்று என்றும் அழியாமல்  எங்கு வேண்டுமானாலும் தன் விருப்பம்போல் செல்லலாம் செயல்படலாம்*


*மேலும் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சாதிக்கலாம் மற்றும்  எல்லாம் தடையின்றி நடைபெறும் என்பதே மரணத்தை வென்று வாழும் பேரின்ப சித்தி பெரு வாழ்க்கையாகும்.*

 *இங்வுலகில் பொருள் பெற்று வாழ்வதற்கும் அருள் பெற்று வாழ்வதற்கும் பஞ்சபூத தத்துவ அணுக்களே காரண காரியமாக உள்ளன என்பதை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு என்றும் அழியாத நன்நிதியாகிய அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வியாழன், 11 நவம்பர், 2021

சன்மார்க்கிகள். கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள்!

 *சன்மார்க்கிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள்!* 


வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நான்கு வகையாக உள்ளார்கள்.


1 கடவுள் பக்தி உள்ளவர்கள்.

2. சாதி சமய மதங்களை   சார்ந்தவர்கள்.

3.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்

4. வள்ளலார் கொள்கையை மட்டும்  பின்பற்றுபவர்கள். 


மேலே கண்டவர்கள் எவ்வாறு இருந்தாலும் என்ன வழிபாடு செய்தாலும் செய்யாவிட்டாலும் அன்பு தயவு கருணை இரக்கம் உள்ளவர்களை மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார். 

(எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி)  


*அதற்கும் மேலே உயிர்க்கொலையும் புலைபுசிப்பும் மறுத்தவர்களை ஆண்டவர் அதிகமாக நேசிப்பார் அவர்களே கடவுளிடம் நெருக்கமாக தொடர்புகொள்ளும் வாய்ப்பை பெற்றவர்களாக இருப்பார்கள்*


*எனவேதான் தயவு உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்கின்றார்.*


அவர்கள் *சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களேத் தவிர அருளைப் பெற்றவர்கள் அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்*  *அருளைப் பெறுவதற்கு வள்ளலார் சொல்லியவாறு சுத்த சன்மார்க்க கொள்கையை முழுமையாக பின்பற்றி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்* 


*வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகள்!* 


*முதலில் கடைபிடிக்க வேண்டியவைகள் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கம் எனும் நான்கு ஒழுக்கங்களாகும்.அதில் ஜீவகாருண்யம் செய்வதற்கு (அதாவது மற்ற உயிர்களின் துன்பங்களைப் போக்குவதற்காக) கண் காது மூக்கு வாய் உடம்பு எனும் இந்திரிய ஒழுக்கமும்.மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் கரண ஒழுக்கங்களை மட்டும் கடைபிடித்தால் போதுமானதாகும்*  *இந்த இரண்டு ஒழுக்கங்கள் முற்றுபெற்றால் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் இரண்டு ஒழுக்கங்களை ஆண்டவர் இலவசமாக (அன்பளிப்பாக) வழங்குவார்* 


*புற ஒழுக்கம் நிறைவு பெற்றால் அக ஒழுக்கம் தானே வரும்*


*ஒழுக்கங்களை கடைபிடிக்க தடையாக இருப்பது எதுவென்றால்?  உலகவாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டு இருக்கும் சாதி சமய மதக்கொள்களாகும். எனவேதான்  அவைகளை முற்றும் பற்றுஅற  அகற்றி விடவேண்டும் என்று  மிக அழுத்தமாக வள்ளலார் சொல்கிறார்.*


*வள்ளலார் சொல்லுவதை மிகவும்  கவனமாக ஊன்றி கவனித்து பின்பற்ற வேண்டும்*


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !* 


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள். மதங்கள். மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் வருணம். ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும். எங்கள் மனத்தில் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள். எக்காலத்தும். எவ்விடத்தும். எவ்விதத்தும். எவ்வளவும் விலகாமல்  நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல்வேண்டும் என்று இயற்கை உண்மை கடவுளான தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறார் நம்மையும் உண்மை ஒழுக்கத்துடன் விண்ணப்பம் செய்யச் சொல்கிறார்* 


*மேலும் சுத்த சன்மார்க்கத்தில் சாதனம் சாதனங்கள் ஒன்றும் வேண்டாம்* 


*எதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும் அதைக்கண்டு பல் இளித்து இறுமாந்து கெடநேரிடும்*


*ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளல் வேண்டும்* *இதுவே சாதனம் இந்தகுணம் வந்தவன் எவனோ அவன்தான்  இறந்தவரை எழுப்புகிறவன். அவனே ஆண்டவனுமாவான்*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால்?*


*எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்பும் முக்கியமானவை*  *உதாரணம் ஆண்டவர் சொல்லியது :- கருணையும் சிவமே பொருள் எனக்காணும் காட்சியும் பெறுக. மற்று எல்லாம் மருள்நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்று இருக்கின்றேன். என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறார்*


*இந்த உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து வாழ்கின்றவன் எவனோ அவனே சுத்த சன்மார்க்கி என்பவனாகும்*.

*அவனால் மட்டுமே பூரண அருளைப்பெற்று மரணத்தை வெல்லமுடியும்*.

*சாகாதவனே சன்மார்க்கி என்பவனாகும்* 


*வள்ளலார் காட்டிய இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ள தெரிந்தவனே உண்மையான் நேர்மையான ஒழுக்கம் நிறைந்த சுத்த சன்மார்க்கத்தைபின்பற்ற தெரிந்த அறிவு பெற றவனாகும் .* 


*வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்க நெறிகள்  முழுவதையும் பின்பற்றி வாழ்பவன் எவனோ அவன்தான் மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவனாகும்.*


*இதைவிடுத்து உணவுபோட்டால் மட்டும் போதும் மரணத்தை வென்றுவிடலாம் என நினைக்கின்றவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றத் தெரியாதவர்கள் என்பதாகும்*. 


வள்ளலார் பாடல்! 


உண்மையுரைக் கின்றேன் இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்


எண்மையினான் என நினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள் அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்


தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்


கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 


வள்ளலார் சொல்லியுள்ள உண்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 8 நவம்பர், 2021

வாழும் வழிகாட்டியவர் !

 *வாழும் வழிகாட்டியவர்!*


வள்ளலார் பாடல்!


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

*கற்றதெலாம் பொய்யே* நீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என்இனிநீர் *சமரசசன் மார்க்க*

*மெய்ந்நெறியைக்* *கடைப்பிடித்து* *மெய்ப்பொருள்நன் குணர்ந்தே*


எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

*இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.*! 


மேலே கண்ட பாடலை ஊன்றி கவனிக்கவும். 


*உலகியல் மனித வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை முறைகளை  வகுத்து தந்த அனைத்து அருளாளர்களும்  அருளியல்  வாழ்க்கை முறைகளை  தவறாகவே காட்டி உள்ளார்கள்*. 


அதனால்தான் மனிதர்கள் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியாமல் மாண்டுகொண்டே உள்ளார்கள்


*எனவேதான்  நாம் கண்ணால்  கண்ட காட்சிகள். காதால் கேட்ட செய்திகள். நாம் கற்ற கல்விமுறைகள். களித்து மகிழ்ந்த சிறிய இன்பங்கள். நாம் உண்ட உணவுவகைகள். பலவகைகளில் உட்கொண்டது எல்லாம் மரணத்திற்கு இட்டுச் சென்றதே தவிர மரணத்தை வெல்லுவதற்கு மேலே கண்ட செயல்கள்யாவும் தடையாகவே இருந்துள்ளன எனத் தெளிவாக வள்ளலார் சொல்லியுள்ளார்*

 *முன்னாடி வழிக்காட்டிய அருளாளர்கள் வாக்கு வடிவமாகவும்  எழுத்து வடிவமாகவும் உருவ ரூப சிலை வடிவமாகவும் அவற்றை பின்பற்றும் செயல் வடிவமாகவும் அதற்குண்டான உலகியல் கல்வி முறையாகட்டும் உணவு முறையாகட்டும் மனம் வாக்கு காயம்  எண்ணம் சொல் செயல்களின் மூலமாக நூல்களில் எழுதி விதைத்து விட்டு சென்று விட்டார்கள் அவற்றை படித்து தெரிந்து அதில் உள்ளதைபோல் வாழ்வதால் எந்த பயனும் இல்லை எந்தவிதமான  ஆன்மலாபமும் அருள் லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை  அதனால் எந்த நூல்களையும் படிக்காதீர்கள் என்கிறார் வள்ளலார்* 


*இதுவரையில் உலகியல் நூல் படித்து தெரிந்து வாழ்ந்து அழிந்தது போதும் இதற்குமேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க மெய்நெறியைப் பின்பற்றி மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து எல்லோருக்கும் பொதுவான அருள் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இறவாத வரம் பெற்று என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழலாம் வாருங்கள் என ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்*


இனிமேல் நான் சொல்லுவதை மட்டும் தயவுசெய்து கேளுங்கள் என்கிறார் ஏன் என்றால் ? நான் சொல்லவில்லை எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து சொல்லிக்கொண்டுள்ளார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உண்மை எல்லாம் விளங்கும்.


*அதற்கு ஒரே பதில் நான் எந்த பள்ளியிலும் படிக்கவில்லை எனக்கு எந்த ஆசிரியரும் போதிக்கவில்லை கற்றது கேட்டது  உணர்ந்தது அறிந்தது  தெரிந்து புரிந்து கொண்டது எல்லாம் நின்னிடத்தே என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே சொல்லுகின்றார்*


வள்ளலார் பாடல்!


ஓதாது உணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


ஓதாது உணர உணர்த்தி உள்ளே  நின்று உளவு சொன்னது நீதான் என்றும்.


கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே கண்டதும் நின்னிடத்தே  உட்கொண்டதும் நின்னிடத்தே பெற்றதும் நின்னிடத்தே  இன்புற்றதும் நின்னிடத்தே  என்றும் 


ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து  உணர்வாம் உருவுறச்செய் உறவே என்றும் பல பாடல்களில் எல்லோருக்கும் புரியும்படி தெளிவாகச் சொல்லியுள்ளார்.


*இந்த உண்மைத் தெரிந்து கொள்ளாமல்  வள்ளலார் யார் யாரிடமோ பயின்றார் கற்றார் பின்பற்றினார் என்று மேடைகளில் பேசும்  சன்மார்க்கிகள் தவறான செய்திகளை பரப்பி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டு  வருகிறார்கள்*


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் அவருக்கு உலக ரகசியங்கள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உணர்த்தி தெளிவுபடுத்தி மக்களுக்கு உண்மையை போதிக்க வேண்டும் என அனுப்பி வைத்துள்ளார்  என்பதுவே உண்மையாகும்*


*வள்ளலார்போல் நாமும் உண்மையுடன் ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நமக்கும் தெளிவாக உணர்த்தி  அருளை வழங்கி அணைத்து ஆட்கொள்வார்*. 


*உலகியல் நூலில் உள்ளது யாவும் திருஅருட்பாவில் உள்ளன திருஅருட்பாவில் உள்ளது வேறு எந்த நூலிலும் இல்லை என்பதை முதலில் சன்மார்க்கிகள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.* *அவ்வாறு தெளிவுபெற்றால் மக்களை குழப்பாமல் தானும் குழம்பாமல் மெய்ந்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து இறவாத வரம் பெற்று இன்பமுடன் வாழ்வாங்கு வாழலாம்.*


*சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் திருஅருட்பா தவிர வேறு எந்த நூலையும் பின்பற்ற மாட்டார்கள் என்பதே வள்ளலார் காட்டிய மெய்ந்நெறி ஒழுக்க உண்மையாகும்.*


சுத்த சன்மார்க்கிகள் வாழ்க்கையில் எவ்வாறு கடைபிடித்து வாழவேண்டும் என்பதை அடுத்த கட்டுரையில் தெளிவு பெறலாம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 2 நவம்பர், 2021

ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நானே !

 *ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நானே !*


*ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியின் இன்ப உணர்ச்சியில் ஒன்று சேரும்போது தாயின் வயிற்றில் கரு  உருவாக்கப்படுகிறது. கரு வளர்ந்து  உருவமாகி உருப்புக்கள் வளர்ந்து தத்துவங்கள் தழைத்து தன்னைத்தானே இயங்கும் வரையில் தாயின் கருவறையில் இருந்து  பத்தாவது மாதத்தில்  குழந்தை முழு வளர்ச்சி பெற்று கருவறையை விட்டு வெளியே வந்து இவ்வுலகைப் பார்க்கிறது. தாய் வேறு குழந்தை வேறாக பிரிக்கப்படுகிறது.* 


*குழந்தை வேறாக பிரிந்தாலும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வளர்ந்து வருவது உலகம் அறிந்த உண்மையாகும். அக்குழந்தையிடம் தந்தை அன்பைக் காட்டுகிறார் தாய் பாசத்தைக் காட்டுகிறார்*. 


*குழந்தை வளர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட தேகசுதந்தரம் ஜீவசுதந்தரம் போகசுசந்தரம் என்னும் மூன்றுவகையான சுதந்தரத்தை பெற்று வாழ்கின்றபோதும் தாயிடம் உண்மையான பாசத்தையும் தந்தையிடம் உண்மையான அன்பையும் காட்டி கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் பெருமைப்படும் அளவிற்கும் பாராட்டும்படிக்கும்  வாழ்ந்தால் மட்டுமே தாய் தந்தையர் அக்குழந்தையை  *நல்லபிள்ளை* என்று பாராட்டிப் போற்றப்படுவார்கள் .


*தாயிடம் ஜீவ தன்மையுள்ள உயிர் இரக்கமுள்ள பாசத்தையும் தந்தையிடம் அறிவுசார்ந்த உண்மையான அன்பையும் கொடுத்து வாழ்கின்ற குழந்தைகள் தாய் தந்தையரால் மகிழ்ச்சியுடன்  பாராட்டிப் போற்றப்படுவார்கள். தாய் தந்தையரால் போற்றப்படுகின்ற பாராட்டப்படுகின்ற குழந்தைகளை உலகமே பாராட்டி போற்றப்படும் என்பதுதான் உண்மையாகும்*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள்!*


*தந்தை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு  அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்கள் மாயை என்னும் தாயின் அரவணைப்பில் ஐந்துபூத அணுக்களின் கூட்டுச்சேர்க்கையின் அன்பால் உணர்ச்சியால் (உஷ்ணத்தால்)   உடம்பையும் உயிரையும் எடுத்து இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வருகிறது.*  


*உடம்பு உயிர் எடுத்த உயர்ந்த அறிவுடைய மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் மாயை என்னும் தாயிடம் உண்மையான பாசத்தையும் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் உண்மையான அன்பையும் காட்ட வேண்டுவதே ஆன்மாக்களின் இயற்கை குணமாகும்.* 


*இந்த உண்மைத் தெரியாமல் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனித ஆன்மாக்கள் பொய்யான தாய் தந்தையரைத் தொடர்புகொண்டு அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் மறைதியாலும் தீவினையாலும்  கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரத்தின் செயல்களால் இந்திரியங்களான கண் காது மூக்கு வாய் உடம்பு என்னும் உருப்புகளின் துணைக்கொண்டு மனம்  போனபடி பொய்யான வாழ்க்கையில் வாழ்ந்து  (பிறந்து பிறந்து இறந்து இறந்து) உருமாற்றம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.* 


*உண்மையான தாய் தந்தையர் யார் ? என்பதையும் அவர்களை எவ்வாறு ?  தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் அருளைப்பெறும் வழியையும் மரணத்தை வெல்லும் கல்வியும் கற்கவேண்டி மனிததேகம் பெற்ற ஆன்மாக்களுக்கு சொல்லி தெளிவுபடுத்தி  புரியவைக்கவே வள்ளலார் இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவராகும்.*


*வள்ளலார் பாடல்!*


மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்

மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்


இனமுற என் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்

இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை 

ஆனாலோ


தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்

சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே


நனவில்எனை அறியாயோ யார்என இங் கிருந்தாய்

*ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே*.!  


*மனம் எனும் பேய்க்குரங்கை அடக்கி தன் உண்மை நிலை அறிந்து எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியான தலைவனை அறிந்ததால் அந்த தனிப்பெருங் கருணை உள்ள தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளலாருக்கு ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை என்ற பெயரையும் பட்டத்தை வழங்கிஉள்ளார்*.


*மேலும் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு தொடர்பு கொண்டு இணைந்து சுத்த உஷ்ணத்தினால் சிற்சபையை மறைத்துக்கொண்டுள்ள திரைகள் விலகி   அருளைப்பெற்று  பிறப்பு இறப்பு அற்ற (அருள் ஒளிஉடம்பு) மரணத்தை வெல்லும் தகுதியைப் பெற்றுக் கொண்டதால் தனக்கு உயிரையும் உடம்பையும் கொடுத்த மாயை என்னும் தாயின் உபசரிப்பு இனிமேல் எனக்கு வேண்டாம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே  எனக்கு எல்லாம் உபகரிக்கின்றது ஆகையினால் தந்தையுடன் செல்ல எனக்கு விடையும் அனுமதியும் வழங்க வேண்டும் என தாயான மாயையிடம் கேட்கிறார் வள்ளலார் அதன் விளக்கப்பாடல்*


*வள்ளலார் பாடல்!*


 பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை *நீதான்*

*பெற்றவுடம் பிது* சாகாச் சுத்தவுடம் பாக்கி

ஒருஞானத் 


*திருவமுதுண் டோங்குகின்றேன்* இனி நின்

*உபகரிப்போர் அணுத்துணையும்* உளத்திடைநான் விரும்பேன்


*அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது* நீ

அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க


தெருளாய உலகிடை என் சரிதமுணர்ந் திலையோ

*சிற்சபை என் அப்பனுக்குச் *சிறந்தபிள்ளை நானே.!*


மேலே கண்ட பாடலிலே மிகவும் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்துகின்றார் 


*ஞானசபைத் தலைவனுக்கு சிறந்த பிள்ளையாகவும்  நல்லபிள்ளயாகவும் வாழ்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்துள்ளார் வள்ளலார். அதே நேரத்தில் மாயையால் படைக்கப்பட்ட உயிர் இனங்களுக்கு எந்தவிதமான துன்பம் துயரம் அச்சம் பயம் தராமல் அன்பு தயவு கருணை இரக்கம் கொண்டு ஜீவ காருண்ய உணர்வோடு ஜீவ நேயத்துடனும் ஆன்மநேயத்துடனும் வாழ்ந்ததால் *தாயான மாயையானது* தடை இல்லாமல் தந்தையுடன் அனுப்பி வைக்கின்றது என்ற உண்மையை  உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.


*நாமும் ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளையாக வாழ்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896