செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

கடவுளைக் கண்டேன் !

 **கடவுளைக் கண்டேன்!*


பாகம் 5.


*வள்ளலார் பாடல்!*


ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடுந் தோறும்


வெய்ய தீ மூட்டிவிடுதல் ஒப்பது நான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்


வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் *இவைஎலாம் தவிர்த்தே*


*உய்ய வைப் பாயேல்*

*இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.!*


*என்னும் வள்ளலார் பாடலில் உள்ளபடி மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்த்து*


*சென்னை மாநகரில் தெருத்தெருவாக அலைந்து பால்கோவா விற்று எந்த பயனோ லாபமோ கிடைக்காததால்,சென்னை தி நகரில் உள்ள பாண்டிபஜார்  போஸ்ட்ஆபீஸ் அருகில் உள்ள ஒரு பிரபலமான டைலர் கடையில் ஒரு அடையாளம் தெரியாத நபர் மூலமாக வேலைக்குச் சேர்ந்தேன்*


*அக்கடையின் உரிமையாளர் பெயர் ஓ. கே ராவ்,சிறந்த தையற்கலை தொழில் நிபுணர்.*


*அங்கு எனக்கு எடுபிடிவேலை,மற்றும் கடையை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வது. காஜாபட்டன் கட்டுவது, பெண்கள் ஆடைகளுக்கு  எம்மிங் ஊக்கு கட்டுவது போன்ற வேலை செய்வது, டைலர்களுக்கு வேண்டிய நூல் மற்றும் தையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தருவது. தைத்த துணிகளை வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று டோர் டெலவரி செய்வது.டீ காப்பி வாங்கிதருவது போன்ற எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து கடையின் உரிமையாளர் மனதில் நிலையான  ஆழமான நம்பிக்கையான முறையில் இடம் பிடித்துக் கொண்டேன்*

*அதுவே எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.*


*சினிமா நடிகர் நடிகைகள்!*


*ஆண்கள் பெண்களுக்குத் தகுந்த மாதிரி, அவரவர் விரும்புகிற மாடலில் ஆடைகள் வடிவமைத்தில் கடையின் உரிமையாளர் வல்லவர், பரத நாட்டிய டிரஸ் மிக நேர்த்தியாக தைத்துக் கொடுப்பதில் வல்லுனர்.*


*எங்கள் கடையில் அக்காலத்தின் முன்னனி சினிமா நடிகர் நடிகைகள் நிறைந்த வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள் அதுவே எனக்கு தையல் தொழில் மேல் விருப்பம் உண்டாக ஆசையைத் தூண்டியது.*


*டி ஆர் ராஜகுமாரி, லலிதா, பத்மினி,சாவித்திரி,சந்தியா,கே ஆர் விஜயா, சவுகார்ஜானகி, வைஜெயந்திமாலா, விஜயகுமாரி, அஞ்சலிதேவி,தேவிகா,போன்ற முன்னனி நடிகைகளின வீட்டிற்கு சென்று துணி டெலவரி கொடுத்துவிட்டு பணம் வாங்கிவரும் பொருப்புள்ள  வேலையை என்னிடம்தான் கொடுப்பார்.* 


*நடிகைகள் ஆடையை  அணிந்து அதில் உள்ள நிறைவு குறைவுகளை என்னிடம் சொல்லி அவற்றை சரிசெய்து கொண்டுவரச் சொல்வார்கள்.கடைக்கு கொண்டுவந்து அவர்கள் விருப்பம் போல் ஆல்டர் செய்து கொடுத்து எங்கள் முதலாலியிடமும் வாடிக்கையாளர்கள் மற்றும் நடிகைகள் இடமும் நல்ல பெயர் வாங்கிவிடுவேன்.* 


*மூன்றே மாதத்தில் தையல் தொழிலில் ஆர்வம் கொண்டு. ஆண்கள் பெண்களுக்கு அளவு எடுப்பதிலும்,அவர்கள் விருப்பம்போல் கட்டிங் செய்வதிலும்,அவர்கள் விரும்பியவாறு புதிய கோணத்தில் தைப்பதிலும் மிகவும் கவனத்துடன் பயிற்சி எடுத்து கொண்டேன்,* 


உண்மையான நேர்மையான  தொழில்!


*கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற வாக்கியத்திற்கு தகுந்தாற்போல்விரும்பி தையத்தொழில் செய்ய ஆரம்பித்தேன்*செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு இணங்க தையல் தொழிலே தெய்வமாக நினைந்து வாழ்க்கையில் கடைபிடித்தேன்*  


*கடையின் முதலாளி,மற்றும் கடையில் வேலை செய்யும் டைலர்கள் அனைவரும் பாராட்டும்படியாகவும் ஆச்சரியப்படும் படியாகவும் சுரு சுருப்பாகவும்,நேர்த்தியாகவும் தையற் கலைகள் மற்றும் வேலைகள் யாவும் என் தனிப்பட்ட அறிவுக் கூர்மையைக் கொண்டு பழகிக் கொண்டேன்*.


*கலைகளிலே சிறந்த கலை தையல்கலை என்பதை உணர்ந்தேன்* 


*ஆண்கள் பெண்களின்  மனித உடல் அமைப்பிற்கு  தகுந்தவாறு தையல் கலையின்  பயிற்சியின் அளவு சம்பந்தமான கணக்குகளை வைத்து சரியான கட்டிங் பிட்டிங் கொடுக்கும் சூத்திரத்தை, என் முதலாளியிடம் தெரிந்தும் தெரியாமலும்.சுய அறிவோடும் கற்றுக்  கொண்டேன்.*


*பெண்கள் உடைகள் வடிவம்  (மாடல் கட்டிங் பிட்டிங் கொடுப்பதில்) அமைப்பதில் தனித்திறமை பெற்றுக் கொண்டேன்.*


நடிகை சந்தியா மகள் ஜெயலலிதா வீட்டிற்கு சென்றது.


*ஒருமுறை ஜெயலலிதா அவர்களுக்கு பரதநாட்டிய டிரஸ் கொடுக்க அவர் வீட்டிற்கு சென்று இருந்தேன்.ஜெயலலிதா அவர்கள் மாடியில் பரதநாட்டியம் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். சந்தியா அம்மாஅவர்கள் சோபாவில் அமரச்சொல்லி அம்மு வரட்டும் கொஞ்சம் நேரம் இருங்கள் என்று காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தார்.*


*ஜெயலலிதா கீழே வந்து பரத நாட்டிய டிரஸ் அணிந்து பார்த்து சூப்பராக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் முதலாளியிடம் சொல்லச் சொன்னார். எங்க முதலாளி பரதநாட்டிய டிரஸ் தைப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.*


*பத்மினி, லலிதா, ராகினி, வைஜெயந்திமாலா,டிஆர் ராஜகுமாரி,சாவித்திரி,கேஆர் விஜயா போன்ற பெரிய முன்னனி நடிகைகளுக்கு எல்லாம் எங்கள் கடையில்தான் பரதநாட்டிய டிரஸ் மற்றும் பிளவுஸ்,மாடல்டிரஸ் சரியான அளவில் தைத்துக் கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.*


( *என்னுடைய சுறுசுறுப்பையும் திறமையும்,தோற்றத்தையும்,பேச்சையும்  கண்காணித்து சினிமாவில் நடிப்பதற்கு என்னை அழைத்தார்கள்,எனக்கு விருப்பம் இல்லாமல் மறுத்துவிட்டேன்*)


மூன்று மாதத்தில் ஈரோடு சென்று விட்டேன்.!


*தையல் தொழிலில் தேர்ச்சி பெற்றதும் இந்த தொழிலை வைத்து முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது.* *மனைவி குழந்தை ஞாபகம் வந்துவிட்டது*

*அந்தநேரம்  பொங்கல் காலம்,போகிப்பொங்கல்,பெரும்பொங்கல்,மாட்டுப்பொங்கல்.கழிந்து கரிநாள்  அதாவது காணும்பொங்கல் அன்று எங்கள் முதலாளியிடம் ஊருக்கு போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரவு கிளம்பி ஈரோடு சென்றுவிட்டேன்* 


*காலை 5-30 மணிக்கு ஈரோட்டில் உள்ள என்மாமனார் வீட்டிற்குள் திடீர் என்று உள்ளே சென்றேன். மகனை அனைத்துக்கொண்டு மனைவி தனிமையில் படுத்திருந்தார்கள்.*


தொடரும்...


*வள்ளலார் பாடல்!*


ஆடஎடுத் தான் என்றறை கின்றீர் என்தலைமேல்

சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் 


நாடறிய

இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்

கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எதற்காக என்னை சுத்த சன்மார்க்கத்தி்ல் கொண்டு வந்து சேர்த்தார் என்பது இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

கடவுளைக் கண்டேன் !

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி பாகம் 4. 


*செங்கம் பஸ் நிலையத்தில் இருந்து என் மனைவியும் குழந்தையும் ஈரோட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு,திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் சென்று அங்கு நின்று கொண்டு இருந்த சென்னை பேருந்தில் ஏறி மறுநாள் காலை 5-00 மணிக்கு சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் பஸ் நின்றது, அங்கே இரங்கிக் கொண்டேன்.* 


*அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லைகடவுள் என்ன வழி காட்டுவாரோ அப்படியே நடக்கட்டும் எனநினைந்து,கால்போன வழியிலே சென்று கொண்டு இருந்தேன்*


*கெட்டு பட்டணம் போ என்பார்கள,* *நான் கெடாமல் பட்டணம் சென்றுள்ளேன்.கையிலே பணம் 500 மட்டும் இருந்தது அப்போது ஐந்துநூறு என்பது இப்போது 5000 ரூபாய் மதிப்பிற்கு சமமானதாகும்.குறைந்த வாடகையில் ரூம் எடுத்து தங்கினால் வாடகைக்கும் உணவிற்கும் சேர்ந்து முன்று நாட்களுக்கு கூட பணம் போதாது என்பதால் வேலை கிடைக்கும் வரை உணவிற்கு மட்டும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சமாளித்துக் கொள்ளலாம் என மனதிலே நினைத்துக்கொண்டு,பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன்.பூக்கடை போலீஸ் ஸ்டேசன் வழியாக சென்று சென்னை உச்சநீதிமன்றத்தின் உயர்ந்த கட்டிடத்தை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து சென்று கொண்டு இருந்தேன்.*


*பாரீஸ் கார்னரின் முடிவில் சென்று ரிசர்வ்பேங்க் வழியாக  மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை வரை  பல சிந்தனைகளுடன் மெதுவாக நடந்தே சென்றேன்.*


*வள்ளலார் பாடல்!*


தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே


நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த


காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை


ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே.! 


*சென்னையில் இருந்தால் உள்ளம் தடுமாற்றம் உண்டாகும் என்று நினைந்து, வள்ளல்பெருமான் அவர்கள் மனம் அமைதியைத் தேடி சென்னையை  விட்டு கிராமம் கிராமமாக நடந்து தேடி அலைந்து இறுதியாக, சிதம்பரம் சென்றார். கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமம் மணியக்காரர் திரு.வேங்கட ரெட்டியாரின் உண்மையான அன்பையும் அழைப்பையும் ஏற்றுக் கொண்டு  அவர் வீட்டிற்கு வந்து தனிமையில் ஓர் அறையில் தங்கி இருந்துள்ளார்*


*அங்குதான் திருஅருட்பா ஐந்து திருமுறைகளையும் எழுதியுள்ளார், தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயமும் அற்புதமும் அங்குதான் நடைபெற்றது உலகம் போற்றும் உத்தமனாக, அருளாளராக,அருள் வள்ளலாக திகழ்ந்தார்.*


*நானோ சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளேன் வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தாய் தந்தையர் இல்லாத காரணத்தினாலும்,அண்ணன் அண்ணியின்  அற்ப அதிகாரச் செயல்களின் காரணத்தால் செயற்கையின் செயலால், இயற்கையின்சூழ்ச்சியால் யாரிடமும் சொல்லாமல்,யாருக்கும் தெரியாமல், தலை மறைவாக சென்னை செல்ல நேரிட்டது,இதுவே வினையின் மாயையின் விளையாட்டாகும்.*


*திருவல்லிக்கேணி!*


*வாழ்க்கையில் என்ன சோதனைகள் துன்பங்கள் நிகழ்ந்தாலும் பசி என்னும் பெரும்பிணி என்னும்  கொடும்பாவி வந்து உடம்பு இயங்க உணவு கேட்கிறது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சைவ ஓட்டலில் காலை டிபன் பொங்கல் இட்லி உட்கொண்டு 1 ஒருரூபாய் கொடுத்து விட்டு அருகில் உள்ள ஒரு முடித்திருத்தம் செய்யும் கடைக்குச் சென்று தலையை வாரிக்கொண்டு சிறிது நேரம்  அமர்ந்து, அங்கிருந்த தினத்தந்தி பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்தேன்,*


அதிலே பால்கோவா விற்க ஆட்கள்தேவை,என்ற விலாசத்துடன்  வண்ணாரப்பேட்டை என்று இருந்தது. 


*மனித தேகத்தில் தெய்வம்!*


*முடித்திருத்தம்  செய்யும் கடை முதலாளி பெயர் வேலுச்சாமி வயது 55 இருக்கும் அவரும் அவர் மகனும் மட்டுமே கடையில் பணி செய்பவர்கள். வேலுச்சாமி ஐயாவிடம் வண்ணாரப்பேட்டை எங்கே உள்ளது, எந்த பஸ்ஸில் ஏறி எப்படிப் போக வேண்டும் என்று கேட்டேன்.* *அதற்கு அவர் தெளிவாக பதில் சொல்லிவிட்டு,என்னைப் பற்றிய விபரங்களை கேட்டார். நான் ஒளிவு மறைவு இல்லாமல் என்னைப்பற்றிய சில  விபரங்கள் யாவும் கண்கலங்கச் சொன்னேன். எங்கு தங்கப் போகிறாய் என்று கேட்டார். அதுதான் ஐயா, எங்கு தங்குவது என்று ஒன்றுமே புரியவில்லை என்றேன்.* 


*(என்னைப்பற்றி என்ன நினைத்தாரோ,அவர் மனதில் என்ன தோன்றியதோ ஒன்றும் தெரியவில்லை,)*


*அவர் சற்றும் யோசிக்காமல் ஓலை மேய்ந்த சிறிய வீடு ஓடை ஓரத்தில் எங்கள் வீடு உள்ளது (கூவம்) வெளியே சிறிய திண்ணை உள்ளது, உமக்கு வேலை கிடைக்கும் வரை இரவில் மட்டும் வந்து தங்கி கொள்ளலாம்,பாத்ரூம் கக்கூஸ் வசதி கிடையாது, நான் மனைவி மகன் மூவர் மட்டுமே உள்ளோம் என்றார்.*


திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது அப்போதுதான் எமக்கு தெளிவாக புரிந்தது !


*அப்போது வேலுச்சாமி ஐயா என் கண்களுக்கு தெய்வமாகவே காட்சி தந்தார்.* *ரொம்ப மகிழ்ச்சி, சந்தோஷம், நன்றி ஐயா,முன்பின் தெரியாத எனக்கு நீங்கள் இந்த சென்னை மாநகரில் கடவுள்போல் உதவி செய்கிறீர்கள் என்று கண்களில் நீர்வழிய அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன்* *அதற்கு அவர் சொன்ன வார்த்தை கண் கலங்க வைத்தது. உன்னைப் பார்த்ததும் இறந்துபோன என் மகன் வந்தது போல் தெரிந்தது என்றார்.*


*மெரினா கடற்கரை!*


*இன்று ஓய்வு எடுத்துக் கொண்டு நாளையில் இருந்து பால்கோவா விற்க செல்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி நேராக கண்ணகி சிலை  அருகில் உள்ள மெரினா கடற்கரைக்கு சென்று அங்குள்ள ஒரு பழைய போட்டின் நிழலில் அமர்ந்துகொண்டேன். நல்ல வெயில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை, பெரியஅலை, சிறியஅலை என இடைவிடாது பொங்கி எழுந்து வீசிக்கொண்டிருக்கும் கடல் அலையின் வேகத்தை, தண்ணீர் காட்சிகளைக் கண் சிமிட்டாமல் கண்டு கொண்டே இருந்தேன்.*


 *எதற்காக வாழனும் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம், கடலுக்குள் சென்று காணாமல் மாண்டு விடலாமா ? என்ற கோழைத்தனமான எண்ணம் மனதில் ஒருபுறம் ஊசலாடியது. அன்பான மனைவி அழகான குழந்தை கண்முன் தோன்றி, என்னை நம்பி வந்த மனைவி  மகன் இவர்களை விட்டுவிட்டு மரணம் அடைவது அறிவுள்ளவன் செயல்அல்ல, இவ்வுலகில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டுவதே சிறந்த வாழ்க்கையாகும் என மனதை தேற்றிக்கொண்டேன்.* 


*மாலை நேரம் வந்ததும் பெரியவர் முதல் சிறியவர் வரை, எங்கு எங்கோ இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சி கலந்த ஆனந்தமுடன் கடற்கரையில்  மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. நானோ தனிமையில் அமர்ந்து தவித்துக் கொண்டிருந்தேன்*


*இரவு ஒன்பது மணியானது உணவு எடுத்துக்கொண்டு வேலுச்சாமி ஐயா கடைக்குச் சென்றேன். கடையை அடைத்துவிட்டு அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு சிறிய பாய் கொடுத்து திண்ணையில் படுத்து கொள்ளச் சொன்னார், அன்று இரவு பல நினைவு அலைகள்,பல சிந்தனைளுடன் பொழுது விடிந்தது.* 


*வள்ளலார் பாடல்!*


உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலிலை

உண்ணவோ உணவுக்கும் வழியிலை


படுக்கவோ பழம் பாய்க்கும் கதியிலை

பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்


எடுக்கவோ திடம் இல்லை என்பால் உனக்கு

இரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்


விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன்

வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.! 


*இவ்வுலகில் ஏழை எளிய ஆதரவு அற்ற அறிவு சார்ந்த மக்களின் வறுமை நிலையை உணர்ந்து எல்லோருக்கும் பொதுவான சிந்தனையைத் தூண்டும் பாடலை பதிவுசெய்துள்ளார் வள்ளலார்.* 


நான் படிக்கும் போது எனது தமிழ் ஆசிரியர் சொன்ன வார்த்தை, எந்த சோதனைகள் வந்தாலும், *திருடாதே! பொய் சொல்லாதே! பிச்சை எடுக்காதே!* என்ற வரிகள் என் நினைவுக்கு வந்தது.


*ஒவ்வொரு மனிதனும் உலக வாழ்க்கையை உணர்ந்து தெரிந்து தெளிந்து கண்களிலே நீர் திரண்டுவரும் சூழலை,சோதனையை உருவாக்கினாலும், யார் கைவிட்டாலும் நம்மை படைத்த கடவுள் கை விடுவதில்லை, நம்மைவிட்டு என்றும் பிரியாமல் நம்மை தாயாகவும் தந்தையாகவும் நம் சிரநடுவில் அமர்ந்து கருணை வள்ளல்போல் இயக்கிக் கொண்டு இருக்கும் இறைவன் ஒருவர் உண்டு என்றும், அவர்மீது இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும்  என்பதை வள்ளலார் வலியுறுத்தி உள்ளதை நினைக்கும் போது, வள்ளலாரின் அருள் தன்மை பூரணமாக வெளிப்படுகிறது,சிந்திக்க வைக்கிறது தெளிவடைய வைக்கிறது.*


*பால்கோவா விற்றல்!* 


*காலை ஐந்து மணிக்கு எழுந்து கண்ணகி சிலை  அருகில் உள்ள நகராட்சி பைப்பில் குளித்துவிட்டு பஸ் பிடித்து வண்ணாரப்பேட்டை பால்கோவா கம்பெனிக்குள் சென்றேன், சுமார் ஐம்பது நபருக்குமேல்  சைக்கிலுடன் சென்று பால்கோவா வாங்கி சைக்கிலில் வைத்து கட்டிக் கொண்டு இருந்தார்கள்.*


*எனக்கு சைக்கிள் இல்லை, ஒரு தகர டப்பாவிற்கும் பால்கோவாவிற்கும் சேர்ந்து  பணம்கட்டி  வாங்கிக் கொண்டேன்.ஒருரூபாய்க்கு விற்றால் நான்குஅணா லாபம் கிடைக்கும்* 


*அங்கிருந்து தெருத் தெருவாக நடந்து மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சென்று விற்றுவந்தேன்.வாங்குவோர் அதிகம் இல்லை,அங்கிருந்து நேராக மெரினா கடற்கரைக்கு சென்றேன் எப்படியோ வாங்கிய பால்கோவாவை விற்றுவிட்டேன்*


*இப்படியே ஒருவாரம்  தெருத்தெருவாக அலைந்தும் பள்ளிக்கூடம் உள்ள இடங்களிலும் பால்கோவா வியாபாரம் தொடர்ந்தது. *நடந்து நடந்து கால்கள் சோர்ந்தன, சுமந்து சுமந்து கைகள் வலித்தன,மனத்திற்கும் திருப்தி இல்லை,தொழிலை மாற்றினேன்.*


*சென்னை தி நகரில் உள்ள ஒரு பிரபலமான தையல் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்,அங்குதான் என் வாழ்க்கையின் திசை மாற்றியது.*


தொடரும்...


*வள்ளலார் பாடல்!*


உடுத்ததுகில் அவிழ்த்து விரித்தொரு தரையில் தனித்தே

உன்னாதும் உன்னி உளத் துறு கலக்கத் தோடே


*படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே*

பயமுனக்கென் என்றென்னைப் பரிந்து திருக் கரத்தால்


அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப் பிறிதோர் 

இடத்தே

அமர்த்தி நகைத் தருளிய *என் ஆண்டவனே அரசே*


தொடுத்தணி என் மொழிமாலை அணிந்து கொண்டென் உளத்தே

*சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.!*


மேலே கண்ட வள்ளலார் பாடல் வரிகள் என் நினைவிற்கு வருகிறது மனம் ஆறுதல் அடைகிறது.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

கடவுளைக் கண்டேன் பாகம் 2

 *கடவுளைக் கண்டேன்!*


*தொடர்ச்சி பாகம் 2.*


*எனது ஊர் ஈரோடு எனது பெயர் கதிர்வேல் என்று தொடங்கிய கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஆனாலும்


*திருவண்ணாமலை மாவட்டம்!*


*நான் பிறந்த ஊர்!*


 *அப்போதைய வேலூர் மாவட்டம் இப்போதைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்காவில் இருந்து 8 மைல் தொலைவில் உள்ளது மண்ணாண்டிப்பட்டி என்ற குக்கிராமம்,*

*மஞ்சம் புல்லால் மேய்ந்த சுமார் 20, குடிசை வீடுகள் இருந்தன, அங்கே எங்கள் வீடும் ஒன்று.. அங்குதான் 01-07-1947 ஆம் ஆண்டு நான் பிறந்துள்ளேன்.*


*அந்த ஊரைச் சுற்றி நான்கு புறமும் எல்லா வகையான பெரிய சிறிய மரம், செடி கொடிகள் நிறைந்த அடர்ந்த பசுமையான பெரிய  காடுகள்,அக்காட்டிற்குள் குதிரை மற்றும் நாட்டுப்புற மாடுகள் தவிர மற்றைய எல்லா வகையான மிருகங்களும்,பறவைகளும் வாழும் நெருக்கமான காடாகும் அதன் தொடர்ச்சியே ஜவ்வாது மலையாகும்.*


*எங்கள் கிராமத்தின் வடக்குப் பகுதியில் வளைந்து வளைந்து ஓடும் ஓர் அழகான நீர்ஓடும் ஓடை, ஓடையின் இரு புறங்களிலும் பலவகையான நோய் தீர்க்கும் மூலிகைகள், மற்றும் காய்கள் பழங்கள் காய்த்து தொங்கும் அழகான மரங்கள், அந்த நீரோடையை ஒட்டிய இடத்தில் 12 ஏக்கர் நிலம் அப்பா பெயரில் இருந்தன, அவற்றில் 3 ஏக்கர் தண்ணீர் பாயும் நிலம்,  அதில் வீட்டிற்கு வேண்டிய நெல் பயிர்,மற்றும் கம்பு,சோளம்,கேழ்வரகு, காய்கறிகள் போன்ற விவசாயம்.  மீதமுள்ள 9 ஏக்கர் வானம்பார்த்த புன்செய்நிலம்..*ஓடையை ஒட்டிய இடத்தில் ஒரு சிறிய கிணறு, அக்கிணற்றின் ஒருபக்கம் துலாக்கோல் வைத்து ஏற்றம் வைத்தும்,ஒருபக்கம் இரண்டு காளைமாடுகளைக் கொண்டும் கவளைக்கட்டி தண்ணீர் இறைத்துதான் பயிர் செய்ய வேண்டும்.*


மீதமுள்ள 9 ஏக்கர் நிலத்தில் மழை பெய்தால்தான்  கடலை.உளுந்து,கொள்ளு, எள்ளு,வரகு,சாமை போன்ற புன்செய் பயிர்கள் வைக்க முடியும்*


*எனது பெற்றோர்கள்!*


*எங்கள் அப்பா பெயர் சென்னிமலைப்பிள்ளை அம்மா பெயர் முத்தம்மாள்,* *அப்பாவிற்கு இரண்டு மனைவிகள்,*

*முதல் மனைவிக்கு ஒரு ஆண் இரண்டு பெண் குழந்தைகள்* *முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியாக முத்தம்மாள் என்ற பெண்மணியை ஈரோட்டில் இருந்து எனது அப்பா திருமணம் செய்து கொண்டார்.*


(அப்பா சிறந்த ஒரு முருகபக்தர் எப்போதும் நெற்றியில் உடம்பில் விபூதிப் பட்டையுடன் காட்சி அளிப்பார்.)


*இரண்டாவது மனைவிக்கு எட்டு குழந்தைகள்,*

*அவற்றில் மூன்று குழந்தைகள் இறந்து விட்டது*

*ஆதிலட்சுமி,*

*கமலா,*

*நீலாவதி,*

*சண்முகம்*

*கதிர்வேல்*

*ஆகிய ஐந்து பேர் இருந்தோம். நான்தான் எட்டாவது கடைக்குட்டி குழந்தை எனக்கு அப்பா வைத்த பெயர்தான் கதிர்வேல்* 


*வீடு தீப்பற்றி எரிந்த்து!*


*எனக்கு ஒரு வயது இருக்கும்* 

*வீட்டில் அக்காள்  சமையல் செய்யும் போது விறகு அடுப்பில் இருந்து தீப்பொறி பறந்து கூரை வீட்டில் தீ பற்றிக் கொண்டது. எங்கள் வீடும் எரிந்தும் பக்கத்து வீடுகளுக்கும்தீ பரவியது, வீட்டை விட்டு எல்லோரும் பயந்து வெளியே சென்று வேடிக்கைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள்* 


*அம்மா அப்பா தோட்டத்தில் இருந்துள்ளார்கள் நான் வீட்டின் உள்ளே சேலைத் துணியால் கட்டிய தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளேன்*.


*ஆறு வயது இருக்கும் எனது கமலாஅக்காள் அவர்கள், தம்பி எரியும்  வீட்டின்உள்ளே தொட்டிலில் தூங்கிக் கொண்டு உள்ளான் என்பது நினைவுக்கு வந்ததும் எரியும் வீட்டின் உள்ளே அதிவேகமாக நுழைந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டு் இருந்த என்னை வெளியே எடுத்து வந்து காப்பாற்றி விட்டதாக சொல்லுவார்கள்,*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அக்கா  வடிவில் தோன்றி எந்தவிதமான தீப்பொறியும் உடம்பில் தொடாமல் உயிருக்கும் உடம்பிற்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல்  காப்பாற்றி உள்ளார் என்பதை இன்றும் என்னால் அறிய முடிகிறது, அந்நிகழ்ச்சியை நினைந்து ஆச்சரியப்பட வைக்கிறது*


வள்ளலார் பாடல் !


கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என்

எண்ணிற் கலந்தே இருக்கின்றான் -பண்ணிற்

கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரில்

கலந்தான் கருணை கலந்து.! 

என்பது போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இன்றுவரை எவ்விதமான துன்பங்களும் நெருங்காமல் வாழ்ந்து கொண்டு வருகிறேன்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை சாதாரண வார்த்தைகளால் சொல்ல இயலாது இப்போதும் என் உடம்பில் உள்ளத்தில், உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து இயங்குவதைஎன்னால் காணமுடிகிறது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் எக்காலத்திலும் நல்லபிள்ளையாக வாழ்வதே இப்பிறப்பின் பாக்கியமாக கருதுகிறேன்*


சுத்த சன்மார்க்க கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காகவே என்னைக் காப்பாற்றி பொறுப்புக்களைக் கொடுத்து உள்ளார் எனக் கருதுகிறேன்.


*கிராமம் மாற்றம்!*


*வீடு தீ பற்றி எரிவதற்கு முன்பே இரண்டு மைல் தொலைவில் உள்ள மேல்வணக்கம்பாடி என்ற கிராமத்தில், ஏரி பாசனம் மற்றும் நீர் வற்றாத கிணறு உள்ள இடத்தில் அயன் நன்செய் விவசாயம் செய்யும்படியான சுமார் 6 ஆறு ஏக்கர் நிலம், அப்போதைய மதிப்பில் சுமார் 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்து எனது தந்தை விலைக்கு வாங்கி வைத்திருந்துள்ளார்*


*வீடு தீ பற்றி எரிந்ததும் மேல் வணக்கம்பாடி  என்னும் கிராமத்திற்கு  குடிபெயர்ந்து வந்து விட்டாதாக அப்பா சொல்லி உள்ளார்கள்.*

*எனக்கு இரண்டு வயதாகும் தருணத்தில் எனது அம்மா இறந்துவிட்டார்கள்.* *தாயில்லாக் குறையை உணர்ந்து எங்கள் அனைவரையும் அப்பாதான் தாயாகவும் தந்தையாகவும் இருந்து, உண்மை ஒழுக்கம் நேர்மையை போதித்து  எங்களிடம் அன்பு பாராட்டி எவ்விதமான குறைபாடுகளும் இன்றி மகிழ்ச்சியுடன் காப்பாற்றி வளர்த்து வந்துள்ளார்.*


*எங்கள் நன்செய் நிலத்தில் தான் நெல் அதிகம் பயிரிடுவது வழக்கம். அக்கிராமத்தில் அரிசிசோறு கிடைப்பது அரிது.*

*ஏழை எளிய மக்களின் கை குழந்தைகளுக்கு அரிசி சோறு வேண்டுவோர் எந்நேரமும் எங்கள் வீட்டிற்கு வந்து சோறு வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.*


*ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி அப்பாவை ஊர் நாட்டாண்மை காரராகவும், பஞ்சாயத்து தலைவராகவும் ஏகமனதாக தேர்வு செய்து பொருப்பில்வைத்திருந்துஉள்ளார்கள். ஊர் மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பதில் வல்லவராக, வள்ளலாக திகழ்ந்துள்ளார்.அக்கிராமம் செழிப்புடன் இருப்பதற்கு அப்பாவே காரண காரியமாக இருந்துள்ளார்.*


அதனால் இன்றும் ஊர் மக்கள் எங்களை நாட்டார் வீட்டு குழந்தைகள் என்று அன்புடன் அழைப்பார்கள்.


*அப்பா மரணம் !*


நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது  உடல்நலக் குறைவால் அப்பா மரணம் அடைந்தார். தாயும் இல்லை தந்தையும் இல்லாத அனாதைக் குழந்தைகளாக ஆக்கப்பட்டோம்.மேலும் நானும் அண்ணனும் எட்டாம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. எங்களை நிறைய படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை, கனவு அப்பாவிற்கு நிறையவே இருந்துள்ளது, அவருடைய ஆசை நிறைவேற வாய்ப்பில்லாமலே போயிற்று.


*விவசாயம் !*


*விவசாயம் செய்வது மாடு மேய்ப்பது,*

*ஓய்வு நேரங்களில் எங்கள் ஊரில் உள்ள ஜவுளிக்கடையில்  தையல் தொழில் செய்து பழகிக் கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபாடுடன் செய்து வந்தேன்* *பின்பு மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன்* 


அக்காள் அண்ணன் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது. எனது 19 ஆம் வயதில் ஈரோட்டிற்கு வந்து அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், முதல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அண்ணனுக்கும் எனக்கும் சிற்சில கருத்து வேறுபாட்டின் காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் குழந்தைகளின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எல்லாவற்றையும் அண்ணனிடமே ஒப்படைத்து விட்டு ஈரோட்டிற்கே குடும்பத்துடன் வந்து விட்டோம்.


*டைலர் தொழில் !*


*ஈரோடு நகரின் மையப்பகுதியில் "ஸ்பென்சர்ஸ் டைலர்ஸ்" என்ற பெயரில் பெரிய  ஷோரூம் வைத்து தொழில் தொடங்கி சிறந்த நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாக வளர்ந்து வந்தது. மீண்டும் ஒருபெண் ஒரு ஆண்குழந்தைபிறந்தது*  


*குழந்தைகளை என்னால் இயன்ற அளவு நல்ல முறையில் படிக்க வைத்தேன். குழந்தைகள் வளர்ந்துவரும் காலக்கட்டத்தில்தான் கே, கே, சாமி என்னும் பெரியவர் (காவி உடை அணிந்த துறவி) மூலமாக வள்ளலார் எழுதிய திருஅருட்பா கிடைக்கப் பெற்றேன் என்பதை முன் கட்டுரையில் தெரியப்படுத்தியுள்ளேன்.* 


*வள்ளலார் உலக மக்களுக்காக கற்பித்துக் காட்டிய  ஜீவகாருண்ய ஒழுக்கம், மற்றும் சாதி,சமயம், மதம்,இனம்,நாடு,மொழி அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய, சுத்த சன்மார்க்க கொள்கைகளை சுமார் 43, ஆண்டுகளாக மனைவி மக்கள் குடும்பம் சூழ அனைவரும் பின் பற்றி வாழ்ந்து வருகிறோம் என்பதை பெருமையாகச் சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.*


*உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்  விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க!* 


*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை!*


*என்ற வள்ளல் பெருமானாரின் திருவாக்கை சிரமேற்க் கொண்டு கிராமங்கள், நகரங்கள்,மாநிலங்கள்,வெளிநாடுகள் தோறும் மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்து வருகிறேன் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்த்தே.*


*மேலும் அறிவியல் சாதனங்கள் வாயிலாக பேஸ்புக், வாட்ஸ்அப், 

டிவிட்டர், யூ டியூப்,வலைத்தளம்,போன்றவற்றின் துணைக்கொண்டு வீடியோக்கள் ஆடியோக்கள் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.


*ஈரோட்டில் தொழிலும் மற்றும் மகன்கள் மகள்  திருமணம் முடிந்து நிரந்தரமாக இங்கேயே வாழ்ந்து வருவதால் ஈரோடு கதிர்வேல் என்று அனைவராலும் பெயர் சூட்டப்பட்டது.*


*மேலும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை யும், ஜீவகாருண்ய ஒழுக்கங்களையும் எல்லோரும் முழுமையாக கடைபிடித்து, எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஆன்ம லாபம்   அடைவோம் மரணத்தை வெல்வோம்*.


தொடரும்....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*] திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*