செவ்வாய், 23 ஜனவரி, 2024

வள்ளலார் என்ன ஆனார்?

*வள்ளலார் என்ன ஆனார் ?*

அன்புடைய என் சகோதர சகோதரிகளே வந்தனம்.இந்தக் கட்டுரை முன்பே நான் வெளியிட்டுள்ளேன்.எல்லோர் மனத்திலும் இந்த உண்மை மிகவும் ஆழமாகப் பதியவேண்டும் என்ற ஆவலில் மீண்டும் வருகிறது.மேடையில் பேசுவோர் இன்னமும் பலப்பல விதமாக வள்ளலாரைப் பற்றிப் பேசி வருவதால் இந்த அவசியம் ஏற்பட்டது.

*வள்ளலார் அடைந்த நிலை என்ன?அவருடைய தூல தேகம் என்ன ஆயிற்று?*

ஜீவகாருண்யம்,பக்தி ,ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறியதால் அவர் தேகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.
பொன் வண்ணம்,பன்னிரண்டு வயது பருவம், நரை,திரை ,பிணி,மூப்பு, மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,சாயை முதலியன இல்லாமை.ரோமம் வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமை. இந்த நிலையை வள்ளலார் அடைந்ததனால் சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் வள்ளலாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒன்பது முறை அவரைப் போட்டோ பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் வள்ளலாரின் தேகம் போட்டோவில் விழவில்லை.அதனால்தான் வள்ளலாரின் போட்டோ இல்லை. அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்கவில்லை.இப்போது உள்ள படங்கள் எல்லாம் கற்பனையாக எழுதப்பட்ட உருவமேயன்றி வள்ளலாரின் உண்மை உருவம் அல்ல. வள்ளலார் சுத்த தேகம் அடைந்தார் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும். 

அவருடைய தொடர்ந்த முயற்சியால் அடுத்து அவர் பிரணவ தேக  நிலை அடைந்தார்.சுத்த தேகத்தில் அவர் அடைந்த நிலையோடு அவருடைய தேகம் ஐந்து முதல் எட்டு வயது பருவமாக மாறியது. அவரைக் கண்களால் பார்க்க முடிந்ததே தவிரக் கைகளால் பிடிக்கமுடியததாக ஆயிற்று. சுடர் போலத் தோன்றுமடா தூல தேகம் என்ற சித்தர் வாக்கும் இதை நிரூபிக்கின்றது. 

இறுதியாக அவர் தேகம் ஞான தேகமாக மாறியது. ஞான தேகம் என்றால் அது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்கிறார் வள்ளலார். சில நாட்கள் வள்ளலார் தோன்றாமலும் இருந்திருக்கின்றார். 1874 ம் ஆண்டில் வள்ளலார் திருக் காப்பிட்டுக்கொண்டு மறைந்தது அனைவருக்கும் தெரியும்.ஆனால் 1870ம் ஆண்டே வள்ளலார் காணாமல் போயிருக்கிறார். வள்ளலாருடைய தலை மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார். தருமச்சாலையை நிர்வகித்து வந்திருந்த ஆனந்த நாத சண்முகநாத  சரணாலய சுவாமிகளுக்கு 8-6-1870 அன்று எழுதிய கடிதத்தில் நம் பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கின்றது?  சாலை என்ன ஸ்திதியில் இருக்கின்றது?அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள் இது விபரங்களை உடனே கட்டளையிடும்படிக் கோருகிறேன். அந்தப் பக்கங்களிலிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை உணர அருள் செய்தல் வேண்டும் என்று கேட்டுள்ளார். 

இந்தக் கடிதத்தை ஊன்றிப் படித்தால் வள்ளலார் தோன்றாமலேயே  இருக்கும் நிலை பெற்றார் என்றும் உண்மை அறியாத ,மக்கள் வேலாயுத முதலியாரிடம் சில பல சொல்லியிருக்கின்றார்கள்.என்றும், உண்மையை உணரவேண்டி வேலாயுத முதலியாரும் தருமச்சாலையில் இருந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார் என்றும் அறிய முடிகிறது. பிறர் கண்களுக்குத்    தோன்றாமல் வள்ளலார் மறைந்திருந்தார் என்பது நிரூபணமாகின்றது
. இதற்குப் பதில் எழுதுவது போல் வள்ளலாரிடமிருந்து ஓர் அறிக்கை வெளியாகின்றது. வள்ளலார் அறிக்கை வெளியிட்ட நாள் 26-10-1870

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது.ஒருவனைப்பற்றி அநேகம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள் .என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால்  வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்.அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாய் நடத்துங்கள்.
சென்னையில் இருக்கும் பிரம்ம ஞான சங்கத்தாருக்கு வேலாயுத முதலியார் கொடுத்த வாக்கு மூலத்தில் கூட வள்ளலார் அடிக்கடி மறைந்து இருந்ததைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறியுள்ளது:1855ம்  ஆண்டில் சென்னையைவிட்டு சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு. இவர் எங்கு சென்றார் என்பதை அறிவோர் எவரும் இலர். இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.

ஞான தேகத்தின் தன்மை தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். தான் ஞான தேகம் பெற்றதை இவ்வாறு அடிக்கடி மறைந்து  மறைந்து சோதித்துப் பார்த்திருக்கின்றார்.என்பதே உண்மை. 
ஞான தேகம் பெற்ற வள்ளலாரால் யார் கண்ணுக்கும் புலப்படாமலும் இருக்க முடியும். அவர் நினைத்தால் மீண்டும் தோன்றவும் முடியும்.

*வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்கிறார்களே ?*

    உண்மைதான். வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது உண்மையே. அவர் கலந்ததை அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் அந்த இறைவனோ வள்ளலார் இருந்த குடிசையைத் தேடி வலிய வந்து அவருடன் கலந்தான் என்பதே உண்மை. ஆதாரம் அருட்பா.

வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து 
                         மணிமாட நடுவே 
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க 
                       எனச் செப்பி வருந்திடவும் 
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம் 
                       நல்கியதன்றியும் என் 
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு 
                     குடிசையுள்ளும் நுழைந்தனையே     ( திரு அருட்பா)

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குச் சில ஆண்டுகட்கு முன்பே இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான்.ஆண்டவன் வள்ளலாருடன் கலந்ததை அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபின் நடந்ததாகச் சொல்வது தவறு. 

வள்ளலாரின் தேகம் அணு அணுவாக மாறி உலகமெங்கும் பரவிவிட்டது என்று கூறுகிறார்களே?

வள்ளலார் தான் எழுதிய திரு அருட்பாவில் பலப் பலப் பாடல்களில் தான் என்றும் அழியாத தேகம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். உதாரணமாக:

காற்றாலே ,புவியாலே, ககனமதனாலே,கனலாலே,புனலாலே, கதிராதியாலே 
கூற்றாலே,பிணியாலே, கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும்
                                      செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞான் றும்  அழியாதே விளங்கும் மெய் அளிக்கவேண்டும் என்றேன் 
         விரைந்தளித்தான் எனக்கே
 ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி 
        இறைவனைச் சார்வீரே 

தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே போகம் எல்லாம் எந்தன் போகமதாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்க மேலேற்றி ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித்து என்னை ஆகம வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே 
வள்ளலார் அழியாத தேகம் பெற்றுவிட்டதைப்\ பல பாடல்களில் கூறியுள்ளார்.
அவர் தேகம் அணு அணுவாகச் சிதையவில்லை என்பதையும் இவ்வாறு சொல்வோர் வள்ளலாரைப் பற்றிய உண்மையை அறியாதவர் என்றும் உணரவேண்டும்.
தேகம் அணு அணுவாகச் சிதைந்து போனால் அவருடைய அந்த *உடம்பில் இருந்த அவரது உயிர் என்ன ஆயிற்று என்று கேட்டால்  என்ன பதில் சொல்வார்கள். ?*

*வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார் என்கிறார்களே?*

இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்புகளிலும், புகுந்து கொள்வோம் என்று வள்ளலார் கூறியது உண்மைதான். கார்த்திகை மாதம் உள்ளே போனவர் மார்கழி மாதமே வெளியே வந்துவிட்டார்.தை மாதம்தான் மீண்டும் வள்ளலார் தனது அறைக்குள்ளே நுழைந்து திருக்காப்பிட்டுக் கொள்கிறார்..அவர் எல்லோருடைய உடம்பிலும் புகுந்து கொண்டார் என்றால் அப்போதிருந்த மக்கள் உடம்பில் மட்டும்தானா இப்போதுள்ள நம் உடம்புகளிலும்கூட என்று சொல்லலாமா? 
உண்மையிலேயே வள்ளலார் நமது உடம்பிலே புகுந்தால் நாம் இப்படியா இருப்போம் ?இதுவரை வந்த மக்கள் உடம்பில் எல்லாம் வள்ளலார் புகுந்து கொண்டார் என்றால் அவர்கள் எல்லோரும் இறந்துதானே போனார்கள் அந்த *உடம்புகளில் எல்லாம் புகுந்து கொண்ட வள்ளலார் என்ன ஆனார்?* வள்ளலார் யாருடைய  உடம்பில் புகுந்து கொண்டாலும் வள்ளலார் புகுந்து கொண்ட உடம்பிற்கு மரணம் வராது. ஆனால்  வள்ளலார் தவிர மற்ற எல்லோரும் மரணம் அடைந்து  கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்துகொள்ளவில்லை. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களைக் கண்டு அவர்கள் மீது மனம் இரங்கி அவர்கள் உடம்பில் புகுந்தாவது அவர்களைத் திருத்தலாம் என்று வள்ளலார் எண்ணினார். மக்கள் அந்த அளவிற்குப் புண்ணியம் பண்ணவில்லை. அதனால் வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்து கொள்ளவில்லை. சரி அப்பட்டியானால் அவர் என்னதான் ஆனார்?

          *வள்ளலார் ஒளி உடம்பு பெற்றார் என்கிறார்களே அது உண்மைதானே?*

ஒளி உடம்பு பெற்றார் என்பது உண்மைதான்.நாம் சரியாகப் புரிந்துகொள்ள  வேண்டும். தமிழில் ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியதை நினைவில் கொண்டுவாருங்கள்.அப்போது என்ன செய்தோம்.ஒருவன் கண்ணை மூடிக்கொள்வான். மற்றவர்கள் ஒளிந்துகொள்வார்கள்.கண்ணைமூடிக்கொண்டு இருந்தவன் ஒளிந்து கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். ஒளி என்ற சொல்லுக்கு ஒளிந்துகொள்ளுதல் என்று ஒரு பொருள் உள்ளது புரிகின்றதா? வள்ளலார் நமது கண்களுக்குத் தோன்றாமல் இருக்கும் ஒளி தேகம்  பெற்றார் என்பதே  உண்மை. ஒளி என்ற சொல்லுக்குப் பிரகாசம் என்று பொருள் கொண்டால் அவர் தேகம் தோன்றவேண்டும். ஒளியை மறைக்கமுடியாது.ஞான தேகம் என்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்றால் தோன்றாமல் இருக்கும் நிலையே ஒளி தேகம் என்பது. தோன்றவில்லை என்பதால் வள்ளலார் இல்லை என்று சொல்லி விடலாமா. இறைவன்கூடத் தோன்றவில்லை அவன் இல்லை என்றா சொல்கிறோம். ஆகாயம் கூடத் தோன்றவில்லை.அதனால் ஆகாயமே இல்லை என்றா சொல்கிறோம். இதுவும் வள்ளலார் கருத்துதான். 

கனமுடையேம் கட்டுடையேம் என்று களித்து இறுமாந்து இருக்கின்றீர் என்ற பாடலில் வள்ளலார் ஒளிப்பிடமும் அறியீர் என்கிறார்.அடுத்த வரியில் சினமுடைய கூற்று வரும் செய்தி அறியீரோ என்று கேட்கிறார். கூற்று வரும்போது ஒளிப்பிடம் அறிந்தால் கூற்றைத் தடுக்கலாம் என்று  அறிகிறோம். ஞான சரியை முதல் பாடலிலேயே கடைசி வரியில் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே என்றார் .  அடுத்த பாடல் முதல் வரியிலேயே புகும் தருணம் இது கண்டீர் என்று ஆரம்பிக்கின்றார். இதுதான் ஒளிப்பிடம். ஆக ஒளி என்ற சொல்லுக்கு இங்கே பிரகாசம் என்று பொருள் கொள்வது தவறு.ஒளிந்து கொள்ளுதல் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

*வள்ளலார் என்னதான் ஆனார்?*

தன் தேகத்தை மறைத்துக்கொண்டார். !!வள்ளலார் ஞான தேகம் பெற்றுவிட்டதையும் அவரால் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைந்திருக்க முடியும் என்றும் முன்பே விளக்கப்பட்டுள்ளது. 30-1-1874 வெள்ளிக்கிழமையன்று மேட்டுக் குப்பத்தில்  ஓர் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. சில நாட்கள் கழித்து  அரசாங்கத்தார் வந்து கதவைத் திறந்து பார்த்ததில் அங்கு ஒன்றும் இல்லாதிருந்தது என்றும் நாம் அரசாங்கத்தாரின் அறிக்கையிலிருந்து அறிகிறோம்

. தான் என்ன செய்துகொண்டேன் என்று அவரே விளக்குகின்றார்.
 பஞ்ச பூதங்களாகிய மண் ,நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவற்றில் மண் ,நீர்,நெருப்பு ஆகிய மூன்றும் நம்முடைய கண்களால் காணமுடிகிறது. காற்றைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் உணரமுடிகிறது.வானத்திலே அண்ணார்ந்து பார்த்தால் தெரிகிற நீல வண்ணம் ஆகாயம் அல்ல.சூரிய ஒளியின் நீல வண்ணம்தான் நமக்கு ஆகாயம்போல் தோன்றுகிறது. ஆகாயம் என்பது ஒன்றுமல்லாத ஒரு வெளிதான்.மண்,நீர்,நெருப்பு,காற்று ஆகிய நான்கும் தன்னைக் காட்டுகின்றன. ஆனால் ஆகாயம் மட்டும் தன்னைக் காட்டவில்லை.ஆகாயம் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை. வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்

மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டதை 
                   நான் செய்து கொண்டேன் 
முன்செய்துகொன்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடலாதியை நுமது 
பொன் செய்து  கொண்ட பொதுவினில் ஆடும்  பொன்னடி காணப்
            பொருந்திக் கொடுத்தேன் 
என் செய்துகொண்டாலும் செய்து  கொள்கிர்ப்பீர் எனைப் பள்ளி எழுப்பி
          மெய் இன்பம் தந்தீரே 

வான் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை என்று வள்ளலார் தான் பெற்ற நிலையைதெளிவாகஅறிவிக்கின்றார். 

வள்ளலாருடைய தேகம் மண்ணில் புதைக்கப்படவில்லை,நெருப்பினால் தகனம் செய்யப் படவில்லை.எனவே வள்ளலார் இன்றும் தன் தேகத்துடன் இருக்கின்றார். அவருடைய ஞானதேகம் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. இதுவே உண்மை 

வள்ளலார் இருக்கிறார் என்று நாம் அறிவதனால் நமக்கு என்ன நன்மை?
நாம் செய்த,செய்கின்ற வினையின் காரணமாக நமக்குத் துன்பம் நேரிடுகிறது.நாம் செய்த வினைக்குரிய  பலனை இறைவன்தான் நமக்கு ஊ ட்டுகிறான்.தீவினை நல்வினை எனும் வன் கயிற்றால் இந்த ஜீவர்களை ஆட்டுகின்ற தேவே என்கிறது மகாதேவ மாலை.
மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவதற்கே வள்ளலாரை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறான்.இந்தச் செய்தியை வள்ளலார் தான் எழுதியுள்ள அகவலில் தெரிவிக்கின்றார்
. \
உலகினில் உயிர்களுக்குரும் இடையூ றெலாம் 
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க 
சுத்த சன்மார்க்க சுக  நிலை பெறுக 
உத்தமனாகுக ஓங்குக என்றனை 

இந்த அகவல் வரிகளை ஊன்றி  நோக்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் எல்லா வற்றையும் வள்ளலார் விலக்கவேண்டும் இது ஆண்டவன் வள்ளலாருக்கு இட்ட கட்டளை. இந்த உத்தரவு வேறு எந்த அருளாளருக்கும் தரப்படவில்லை .வள்ளலார் ஒருவர்தான் இந்த உத்தரவைப் பெற்றவர். இதை உணர்ந்து அவரிடம் போனால், அவரை வணங்கினால், நம்முடைய இடையூறுகள் விலகிப்  போகும். இதை விட வேறு என்ன வேண்டும்?

ஆண்டவன் இத்துடன் நிற்கவில்லை. வள்ளலாரை அழைத்து நீ இந்த மக்களுக்கெல்லாம் துணையாய் இருப்பாயாக என்றும் ஆணை இட்டுள்ளான்

எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக் கருள் புரிந்து 
எல்லோருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லோருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம் 
எல்லோர்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே/

வள்ளலார் என்ன ஆனார் என்று தெளிவாகப் புரிந்ததா?  
 அதனால் நமக்கு என்ன நன்மை?
வள்ளலாரை யார் உண்மையாக வணங்குகிறார்களோ, யார் அவர் காட்டிய வழியாகிய ஜீவகாருண்யத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவது மட்டுமின்றி எல்லோருக்கும் அவர் துணையாகவும் இருக்கின்றார். இதைவிட வேறு என்ன பலன்  நமக்கு வேண்டும்?
வள்ளலாரைச் சரணாகதி அடைந்ததால் நான் எவ்வளவோ நன்மைகளை அடைந்துள்ளேன்.அடைந்துகொண்டிருக்கின்றேன்.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

மெய்மொழி ஒழுக்க நெறிகள்!

*மெய்மொழி ஒழுக்க நெறிகள்!*

*மனிதகுலம் பெற வேண்டிய நான்கு வகையான புருஷார்த்தங்கள்!*

*அவையாவன:?*

1,சாகாத கல்வி கற்றல்,
2,தத்துவங்களை நிக்கிரகம் செய்தல்,
3,ஏமசித்திபெறுதல், 
4,கடவுளின் நிலையறிந்து அம்மயமாகுதல்  
 *இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.*

*நான்கு வகை ஒழுக்கம்!*

 1. இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடித்தலே  சாகாக்கல்வி கற்பதாகும் 
2. கரண ஒழுக்கத்தை கடைபிடித்தலே தத்துவங்களை நிக்கிரகம் செய்வதாகும், 
3. ஜீவ ஒழுக்கத்தை கடைப்பிடித்தலே ஏமசித்தி பெறுவதாகும், 4. ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்தலே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

1. இந்திரிய ஒழுக்கம் என்பது யாதெனில்?

*இந்திரிய ஒழுக்கம் என்பது!
நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் *ஞானேந்திரிய ஒழுக்கமும்;*

இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் *கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.*

*கரண ஒழுக்கம் என்பது !*

*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் மனத்தை நிறுத்துதல்,*

*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.*

*ஜீவ ஒழுக்கம் என்பது!*

*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.*

*ஆன்ம ஒழுக்கம் என்பது !*

*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.*

*இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்* 

*ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா.*

*ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.* அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, *இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும்.* 

அன்றியும்-

*சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்* *அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம்*

*தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம்.* 

*ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி*, *அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும்,*
*அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்.* 

அன்றியும்-

*உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று,*
 *உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்;*

*உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய்,* 

*எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்;* 

*ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:*

*நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் -*

*வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.*

*இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.
இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி* யென்னும் *கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை !*

*சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களே மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவரகளாவார்கள்,அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.*

தொடரும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

செவ்வாய், 16 ஜனவரி, 2024

தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளுங்கள்!

*தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளுங்கள் !* 

*பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்*

*வள்ளல்பெருமான் மனித குலத்திற்கு மிகவும் அழுத்தமாக சொல்லியது யாதெனில்?* 

*மரணத்தை வெல்லும் மார்க்கத்தைக் கண்டுபிடித்து அதற்கு சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்தவர் வள்ளல்பெருமான் அவர்கள். அச் சங்கத்தில் இணைந்து சாகாக்கல்வி கற்க வேண்டும் என்பதே வள்ளலாரின் தனித்தன்மை கொள்கையாகும்..*

*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்! ஏன் என்றால்?* 

*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம், வந்தால் பெற வேண்டியதை நேரிலே பெற்று கொள்ளலாம்.அதற்குண்டான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என்கின்றார் !* 

*வள்ளலார் சொல்லுயதை ஊன்றி கவனிக்கவும்!*

*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்*

*ஆண்டவர் சாலைக்கு போகின்ற பத்து தினம் என்பது வடலூர் சத்திய ஞானசபைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சென்று அமர்ந்து அருள் வழங்கும் தினத்தை முன் கூட்டியே சொல்லிய குறிப்பாகும்*.

*அதற்கு முன்னாடி நல்ல விசாரணையில் இருக்க வேண்டும் என்கின்றார்*

*அந்த விசாரணை எது வென்றால்:? நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள்.* 
( பின்னாடி வேலாயுதம் அவர்களும் கை விட்டுவிட்டார் என்று வேதனையும் சொல்கின்றார்)

*அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.*

 *அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.*

*இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்..என்கின்றார்.* 

*ஆனால் வள்ளல்பெருமான் சொல்லியவாறு ,அவருடன் இருந்த ஒருவர்களும் சொல்பேச்சைக் கேட்காமல் கூச்சல் குழப்பம்  உண்டாக்கிக் கொண்டே இருந்துள்ளார்கள்,அவற்றை எண்ணி மிகவும் வேதனைப் படுகின்றார் அவர் சொல்லுவதை கவனியுங்கள்.*

*இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின என்கின்றார்.*

*மேலும் சொல்லுகின்றார்!*

*மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம்.* 

( அப்போது அவ்வளவு முயற்சி இல்லாமல் இருந்து உள்ளார்கள். இப்போதும் அப்படித்தான் உள்ளார்கள்.)

*ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.ஆனால்*.....

*முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்:? அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயா திரை இருக்கும்.*

*இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் - ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, "முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய" கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார்.*

*ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது.*

*மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மா அனுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும். என்று தெளிவாக சொல்லுகின்றார்.*

*வள்ளல்பெருமான் சொல்லியதைஅப்போது உள்ளவர்களும் கேட்கவில்லை இப்போது உள்ளவர்களும் கேட்கவில்லைஎன்பது நிதர்ஷ்ணமான உண்மை,சன்மார்க்கம் சார்ந்த ஒவ்வொருவரும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு கூச்சல் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டே உள்ளார்கள்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் நல்வழி காட்ட வேண்டும்.*

*மேலும் வள்ளல்பெருமான் சொல்லுகின்றார்! இவர்களை விட்டாலும் கதியில்லை,தொட்டாலும் தோஷம் உறும்,என்கின்றார்* 

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றதை முன் கூட்டியே சொல்லியும்,வருகின்றபோது பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்றும்  அதற்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்தியும் சொல்லி உள்ளார்*

*ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.*

*கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.*
 *இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.!* 

*நன் முயற்சி என்பது யாது ?*
*என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.*

*அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.*

*நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.*

*இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.*

*ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.*

*இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.*

*அதுதான் வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் வந்தால்தான் நல்ல வரம் பெறமுடியும்,நாமும் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்*

*நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.!*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் வந்தாரா ? அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்..

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

வெள்ளி, 12 ஜனவரி, 2024

தெய்வத்தின் உண்மையை மறைத்து விட்டார்கள்!*

*தெய்வத்தின் உண்மையை மறைத்து விட்டார்கள் !*

*இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள்!*

*வாயடங்கி மனம் அடங்கி வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்றி தொடர்ந்து பின் பற்றுங்கள்!*

*வள்ளல்பெருமான் அவர்கள் சித்திப்பெற்ற  இடமான மேட்டுக்குப்பத்தில் சுத்த சன்மார்க்க கொடி ஏற்றி இறுதியாக  பேருபதேசம் செய்த அருள் பூரண வாக்கியத்தின்  முக்கியமான சில செய்தியை சுருக்கமாக பதிவு செய்கிறேன் படித்து பயன் பெறவும்*

*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை.*

*சன்மார்க்கம் இருந்து இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே.*ஆதலால் இத் தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்கக் காலம்.*

*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்:?* 

*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் ( அனுபவத்தின் கண் என்பது முக்கியமானது ) விளங்கும்.*

*இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.*

*உண்மை சொன்னாலும் தெரிந்து கொள்வாரில்லை !*

*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து தெரிந்து கொள்வார்கள்.* 

*முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார்.*

*நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்.* (ஆன்மநேய ஒருமைப்பட்டு உரிமை என்பதாகும்)

*ஆண்டவர் கட்டளை !*

*இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.*

*ஆண்டவரால் வெளியிடப்பட்ட மகா மந்திரம்!*

*மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது.* 

*அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை.*

*சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!*( அகவல்)

*இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.*

*இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.*

*நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக*

(*இயற்கை உண்மை கடவுளின் உண்மையான பெயர்!*)

*அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி!*

*என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் "பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்". இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.* 

*"சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* *என்னும் பிரமாணத்தால் உணர்க.*

*உலகிலே மிகவும் முக்கியமான இடம் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம்*! *ஏன் ? என்றால்!*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளல் பெருமானும் இணை பிரியாது கலந்த இடம்,"சித்திப் பெற்ற இடம்" மேட்டுக்குப்பம்*அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்*

*எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.*

*அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!*

*மேலே கண்ட மந்திரத்தில் அருட்சக்தி நிறைந்துள்ளது..* 

*எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை*
*கங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே!*
(அகவல்)

*எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்*
*அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி!* ( அகவல்)

*சாதியு மதமுஞ் சமயமுங் காணா*
*ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!*( அகவல்)

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
*9865939896*

புதன், 10 ஜனவரி, 2024

வள்ளல்பெருமானின் உண்மைச் செய்தி !

*வள்ளல்பெருமானின் உண்மை செய்தி !*

*வள்ளல்பெருமான் இறுதியாக அருளிய பேருபதேசத்தின் மிகவும் அழுத்தமாக வெளியிட்ட முக்கிய செய்தி படைப்பு!*

*இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.* 

*ஏனென்றால்,? அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*
 *அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.*
 *"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.*

 *ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.*

*அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும்.*
  *ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது.* 

*முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க* 

*மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்*.

*வள்ளலார் பாடல்!*

இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக

செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!

மேலும் பதிவு செய்துள்ளது!

*இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.* 

*அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை.*

 *மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா!*

 *அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.*

*ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.*

*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.* 

*நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* 

*என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"* 

*என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.*

*வள்ளலார் பாடல்!*

மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல்உன் தன்னையே மதித்துன்

சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ

தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.!
- திருஅருட்பா 3635...

*மேலும் பாடல்!*

தேடிய துண்டு நினதுரு வுண்மை
தெளிந்திடச் சிறிதுநின் னுடனே

ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
உரைத்ததும் உவந்ததும் உண்டோ

ஆடிய பாதம் அறியநான் அறியேன்
அம்பலத் தரும்பெருஞ் சோதி

கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
கூறவுங் கூசும்என் நாவே.!

*மேலும் ஒருபாடல்!*

கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!
- திருஅருட்பா 3503

*ஒவ்வொருவரும் மேலே உள்ள அருள் வாக்கியத்தை  நன்கு படித்து தெரிந்து கொண்டும் விடவேண்டியதை விட்டும்,பிடிக்க வேண்டியதை பிடித்துக் கொண்டும் வாழ்ந்தால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்*

தொடரும் 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே  உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர்  முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

வெள்ளி, 5 ஜனவரி, 2024

ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்!

*ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்!* 

*இவ்வுலகமும் இவ்வுலகில் உள்ள சராசர பேதங்களில் முக்கியமாவுள்ள சரமாகிய ஜீவராசிகளும் கற்ப பேதமும் தோன்றி உய்யும் பொருட்டு,பஞ்சபூத அணுக்களும் அநேகவிதமான வாயு பேதங்களும்,அநேகவிதமான கிரகங்களும்,மற்றும் உள்ள அனைத்தும்,அநாதியில் கடவுளால் உண்டு பண்ணப்பட்டு இருக்கின்றன, இவைகள் யாவும் ஆன்மாக்கள் வந்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று இறைவனும் தொடர்பு கொள்வதற்காகவே இவ்வுலகம் படைக்கப் பட்டதாகும்.*

*உலகில் தோன்றிய உயிர் இனங்களான ஊர்வன, தாவரம்,பறவை,மிருகம்,தேவர்,அசுரர்,மனிதர்.இந்த தேகங்களில் உயர்ந்த அறிவுள்ள தேகம் மனித தேகம் மட்டுமே....* 

*மனித உடம்பை நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன,*

*1,அகம் என்பது ஆன்மா இயங்கும் இடம் 2,அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இயங்கும் இடம்,3,புறம் என்பது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள் இயங்கும் இடம்,4, கண் காது மூக்கு வாய் மெய் (உடம்பு) என்னும் இந்திரியங்கள் இயங்கும் இடம், மேற்படி தேகத்தில்  ஆன்மா தனித்திருக்கும், அதாவது ஜீவன் மனம் முதலிய அந்தக்கரண கூட்டத்தின் மத்தியில் தனித்து இயங்கிக் கொண்டு இருப்பதே ஆன்மா என்னும் உள் ஒளி என்பதாகும்.*

*வள்ளலார் சொல்வதை கவனிக்கவும்!*

*ஆன்மாவும் ஆண்டவரும்!*

*இந்த பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யாரெனில்,நான் ஆன்மா சிற்றணு வடிவினன்,மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசமுடையது,லலாட ஸ்தானம் இருப்பிடம்,கால்பங்கு பொன்மை,முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம் இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு,*

*அவையாவன !*
1,கறுப்புத் திரை
2,நீலத்திரை
3,பச்சைத்திரை
4,சிவப்பத்திரை
5,பொன்மைத்திரை
6,வெண்மைத்திரை
7,கலப்புத்திரை
என்னும் ஏழு மாயாத்திரைகளாகும்... 

*உயர்ந்த மனித தேக ஆன்ம அறிவைக்கொண்டு இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு வகையான ஒழுக்கங்களை கடைபிடித்தால் மட்டுமே ஏழுவகையான திரைகள் யாவும் விலகும்.*

*திரைகள் விலக விலக தேகமாற்றம் உண்டாகும்,இந்திரிய, கரண ஒழுக்கத்தால் சுத்ததேகமும்,ஜீவ ஒழுக்கத்தால் பிரணவதேகமும்,ஆன்ம ஒழுக்கத்தால் ஞானதேகமும் உண்டாகும்,இந்த மூவகையான தேகத்திற்கு முத்தேக சித்தி என்று பெயர் சூட்டுகின்றார் வள்ளல் பெருமான்.* 

*சுத்த பிரணவ ஞானதேகத்தால் மட்டுமே ஆன்மாவைக் கண்டு களிக்க முடியும். ஆன்மாவைக் கண்டால் மட்டுமே இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.இதுவே ஆன்மீகம் என்பதாகும்.*

*கடவுளின் தன்மை !* 

*ஆன்மாக்கள் யாவும் இறைவன் குழந்தைகள் என்பது யாவரும் அறிந்த உண்மையே! ஆனால் அந்த இறைவன் யார் ? என்பதை  25-11- 1872 ஆம் நாள் வடலூரில், வள்ளல்பெருமான் உலக மக்களுக்காக வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !*

*இயற்கை உண்மையர் என்றும்,இயற்கை அறிவினர் என்றும்,இயற்கை இன்பினர் என்றும்,நிர்குணர் என்றும்,சிற்குணர் என்றும்,நித்தியர் என்றும்,சத்தியர்என்றும்,ஏகரென்றும்,அநேகரென்றும்,ஆதியரென்றும்,அனாதியரென்றும்,அமலரென்றும்,அற்புதரென்றும்,நிரதிசயரென்றும்,எல்லாமானவரென்றும்,எல்லாம் உடையவரென்றும்,எல்லாம் வல்லவரென்றும்,குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும்,நினைத்தும்,உணர்ந்தும்,புணர்ந்தும்,அனுபவிக்கின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய தனிப் பெருங்கருணைக்  கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*

*வள்ளல்பெருமான் பாடல்!*

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*

*வள்ளல்பெருமான் கண்டு களித்து கலத்து கொண்டு வெளிப்படுத்திய கடவுள்,இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டு கத்தர்கள் மூர்த்திகள் கடவுளர்கள் தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லா தேவர்களும் எல்லா கடவுளரும் எல்லா தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்ற படி எழுந்தருள்கின்ற தனி தலைமை பெரும்பதி கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எண்பவராகும்,*!

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் பாலிக்கும் இடமே வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்*  

*வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளதை சுருக்கமாக அப்படியே பதிவு செய்கிறோம்!*

*உலகத்தினிடத்தே பெறுவதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே*

*அறிவு வந்த கால முதல்
அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்
அடைந்து   அறியாத அற்புத குணங்களையும்,
கேட்டு அறியாத அற்புதக்கேள்விகளையும்,
செய்து அறியாத அற்புச் செயல்களையும்,          
கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும்,
அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,
இத்தருணந் தொடங்கிக்கிடைக்கப்  பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்தியவுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி  இருக்கின்றேன்

*நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று *எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்*

*அவ்வாறு    விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்*

*பலவேறு  சமயங்களிலும்,     
பல்வேறு மதங்களிலும்,
பலவேறுமார்க்கங்களிலும்,
பல்வேறுஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகின்றார்கள்*
 *இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,*

உண்மையறிவு,
உண்மையன்பு,
உண்மையிரக்கம் முதலிய
சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தைதயும்பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த *உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.*

 *ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப்பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல்மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டுபெருங்களிப்பும்  அடைவீர்கள்.!*

*ஆன்மாவை அறிந்தால் ஆன்மாவின் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறியலாம்,ஆண்டவரை அறிந்தால் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம், ஆதலால் ஆன்மாவை அறிதலே ஆன்மீகம் என்பதாகும்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்
*சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் தயவுதிரு ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

ஜோதி தரிசன பெருவிழா !

*வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா !* 

*வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே  வந்தால் பெறலாம் நல்ல வரமே!*

24-01-2024 புதன்  அன்று கொடியேற்றம்.

25-01-2024 வியாழன் அன்று காலை 6-00,10-00,மணிமதியம் 1-00,மணி இரவு 7-00 ,10-00 மணி  ஐந்து கால ஜோதிதரிசனம்.

26-01-2024 வெள்ளிக் கிழமை அன்று காலை 5-30 மணி ஆறாவது கால ஜோதி தரிசனம் காட்டப்படும்

27-01-2024 சனிக்கிழமை அன்று மதியம் 12-00 மணிமுதல் 5-00 மணிவரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற திருவறை தரிசனம்.

*திருஅருட்பா ஆராய்ச்சி மையம் மற்றும் ஈரோடு, நாமக்கல், வெண்ணந்தூர், சேலம் அன்பர்களால் 
24-01-2024 முதல் 27-01-2024 வரை தொடர் அன்னதானம் நடைபெறும்*, மேலும் சுத்தசன்மார்க்க சத்விசாரம்  நடைபெறும்,*

*சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் தயவு திரு ஈரோடு கதிர்வேல் அவர்கள் தலைமையில் சுத்த சன்மார்க்க சத்விசாரம் நடை பெறுகின்றது*

*அனைவரும் வருக ஆன்மஇன்பலாபம் பெறுக!*

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர்  ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் கல்பட்டுஐயா நகர் 
வடலூர்
*9865939896*