வியாழன், 22 ஜூன், 2023

ஆளுநர் ஆர் என் ரவி பேசியதற்கு பதில் !!

 வடலூரில் நேற்று 21-06-2023 மாலை வள்ளலார் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள்  “பத்தாயிரம் ஆண்டுகள் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று பேசி இருக்கிறார். 


ஆளுநரின் இந்த பேச்சால்  அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. வள்ளலாரின் கொள்கைக்கு நேர் எதிர் கருத்துடைய சனாதனவாதி இப்படிதான் பொய்யையும் புரட்டையும் பேசுவார்.
 
அதில் வள்ளலார் உச்ச நட்சத்திரம் என்று சொல்லுவது வள்ளலாரை ஆரிய கருத்தான சனாதனத்திற்குள் அடக்கும் சதி கருத்தாகும். அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிடும் ஆளுநரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிக்கு எதிரானது.

சனாதனம் என்பது மனிதர்களிடையே பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று  நால்வகை வருண வேறுபாட்டை கற்பிப்பதும் அதை இவ்வாறு நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ஆதிக்க கருத்தாகும். சாதி, தீண்டாமை உள்ளிட்டகூறுகளை உள்ளடக்கியதாகும். 

வர்ணாசிரமத்தை பின்பற்றுங்கள், சாதி தீண்டாமையை கடைப்பிடியுங்கள் என்று வள்ளலார் எங்கேனும் குறிப்பிட்டுள்ளாரா? 

வள்ளலார் அருளிய திருவருட்பா, உரைநடைப்பகுதி, திருமுகங்கள் (கடிதங்கள்) உள்ளிட்டவையிலிருந்து எங்கெனும் ஒரு வரியை காட்ட முடியுமா? காட்ட இயலாது.

ஆனால் வர்ணாசிரமம், ஆகமம், புராணங்கள், சாதி, மதம், சமயம் போன்றவற்றை கண்டிக்கின்ற திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல்கள் ஏராளம் ஏராளம். அதே போல் வள்ளலார் எழுதிய உரை நடை பகுதியிலும் ஏராளம் இருக்கின்றது.

வள்ளலார் ஆரம்பத்தில் சைவ சமயத்தை பின்பற்றிய காலத்திலும்கூட “மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றே பாடினார்.

அதன் பிறகு சமய கருத்துகளிலிருந்து விலகினார். உருவ வழிபாட்டை மறுத்து சோதி வழிபாட்டை வலியுறுத்தினார்.

 1865-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவி சாதி, மதம், சமயம் போன்ற எவ்வித ஏற்றத்தாழ்வில்லா ”சமத்துவ ஆன்மிகமான சன்மார்க்க நெறி” நிறுவி செயல்படுத்தியவர் வள்ளலார்.

 வள்ளலார் 19-ம் நூற்றாண்டில் ”சாதியும் மதமும் சமயமும் பொய்” என்று முழங்கியவர். செயல்பட்டவர்.

இதற்கு வள்ளலார் இயற்றிய திருவருட்பா, உரை நடைப்பகுதிகளே சான்றுகள்

         வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
          வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
          சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
          என்ன பயனோ இவை. (5516)

மேற்கண்ட பாடலில் வேதம் என்றும் ஆகமம் என்றும் வீணே வாதம் புரிகின்றீர்கள்; அவற்றின் விளைபயனை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அவை பொய்யாகச் சொல்லப்பட்டனவே அன்றி உண்மையை வெளிப்படையாகத் தோன்றும்படி உரைக்கவில்லை; ஆகவே அவற்றால் ஒரு பயனுமில்லை என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே'' (5566)

சாதி, மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் உள்ளிட்ட தீயவற்றில் உழன்று உழன்று அழியாதீர்கள் என்கிறார் வள்ளலார்.

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே (4174)

இப்பாடலில்  நால்வருணம், ஆசிரமம் (பிரமச்சரியம், கிருகத்தம், வானப் பிரகத்தம், சந்நியாசம்) ஆசாரம் உள்ளிட்டவையில் கூறப்பட்டவையெல்லாம் பிள்ளை விளையாட்டு. பிறர் மேல் கூறப்படும், வருண வகைகளை உடம்பின் தோல் வருணம் கொண்டு அறிகின்றவர்கள் யாருமில்லை; எனவே இவற்றில் மயங்காமல் நீ விழித்துப் பார்ப்பாயாக என இறைவனே தனக்கு சொல்லி அருளினான் என்று திருவருட்பாவில் பதிவுச்செய்துள்ளார். 

மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச் சிரமம் எனுமயக்கமும் சாய்ந்தது (4503)
மதம் சமயங்களின் பெயரால் நடத்தப்படும் தீய செயல்களையும் நடைமுறைகளையும் மனிதர்களிடையே சாதி, தீண்டாமை பிரிவினைகளை ஏற்படுத்தும் வர்ணாசிரமத்தை பொய் என்கிறார்.

இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் திருவருட்பா ஆறாம் திருமுறையில் இருக்கின்றது.

வர்ணம், ஆசிரமம், ஆசாரம், சாத்திரம் இதெல்லாம் குப்பை என்கிறார் வள்ளலார் இதை ஆளுநர் ஏற்பாரா?

மேலும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். (சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்)

இப்படி சாதி, சமயங்கள், மார்க்கங்கள், வருணம், ஆசிரமம் போன்றவை சுத்த சன்மார்க்கத்தின் தடைகள் என்று அறிவித்த வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று ஆளுநர் கூறுவது தெரியாமல் அல்ல தெரிந்தே சூழ்ச்சியாக சொன்னது.
 சுத்த சன்மார்க்க நெறிக்கு எதிரானது. இவை கண்டிக்கத்தக்கது. 

சனதானத்திற்கு நேர் எதிராக எல்லா உயிர்களுக்கும் சமம் என்ற கொள்கைக்  கொண்ட ஆன்மிக மக்கள் அமைப்பாக இருப்பது சன்மார்க்க நெறியாகும், இவை சனாதனவாதிகளுக்கு பெரும் நெருடலாக இருக்கிறது.

 அவற்றை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், இதை  சன்மார்க்க அன்பர்களும் தமிழர்களும் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். 

சன்மார்க்கத்தை விழுங்க முயலும் சனாதனவாதிகளின் சதியை வள்ளலாரின் சமத்துவ ஒளி கொண்டு விலக்குவோம்...!

தோழமையுடன்
வே.சுப்ரமணியசிவா

வெள்ளி, 9 ஜூன், 2023

கடவுள் காரியப்படும் இடம்!

 *கடவுள் காரியப்படும். இடம்!*


*உலகில் தோன்றியுள்ள  உயிர் இனங்களான  தாவரம்,ஊர்வன்,பறப்பன, நடப்பன,அசுர்ர்,தேவர் போன்ற ஜீவன்களில் (உயிரில்) உள்ள ஆன்மாக்களில் கடவுள் காரண காரியமாக இயங்கிக் கொண்டு இருந்தாலும்,மேலும் எல்லா அணுக்களிலும் உள் ஒளியாக இருந்தாலும், கடவுள் காரியப்படுவது ஜீவன் என்னும் உயிர்களில் ஏகதேசம் அனகமாக காரியப்படுகின்றார் ஆதலால் எல்லா ஜீவராசிகளிலும் ஆன்ம விளக்கம்  அறிவு விளக்கம் பூரணம் இல்லாமல், ஏகதேசம் விளங்கிக் கொண்டுள்ளது (குறைவாகவே) உள்ளது*.


*மனித பிறப்பின் சிறப்பு !*


*வள்ளலார் சொல்லுவதை கவனிக்கவும் !*


*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ? என்ற கேள்வியை  அவரே கேட்டு, அவரே பதில் சொல்கிறார் வள்ளலார்*


*ஆன்ம வியாபகமாகிய சிரநடு சிற்றம்பலமான புருவ (நடுவில்) மத்தியில், ஆன்ம அறிவு விளக்கம், அருள் விளக்கம் போன்றவை மனித தேகத்தில் மட்டும் பூரணமாக காரண காரியத்தோடு விஷேசமாக விளங்கி கொண்டு இருக்கிறது.* 


*மனித தேகம் எடுத்தவர்கள் மட்டுமே கடவுளின் அருள் பெற்று மரணத்தை வென்று, பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதே கடவுளின் அருள் நியதி சட்டமாகும், அதாவது இயற்கை சட்டமாகும்.*

  

*மனித சிரநடு சிற்சபையில் காரண காரியத்தால் விளங்கும் சிற்றணு வடிவமாகிய  ஆன்மா கோடி சூரியபிரகாசம் உடையது, அந்த ஆன்ம பிரகாசமே ஞானசபையாகும், அந்த பிரகாசத்திற்க்குள் இருக்கும் பிரகாசம் கடவுள்,அந்த உள் ஒளியின் அசைவு நடம்.அதுதான் ஞானாகாச நடனம் என்றும், அசைவுற்றதே நடராஜர் என்றும், ஆனந்த நடனம் என்றும் சொல்லப்படுகின்றது.* 

 

*ஆன்மாவின்  பிரகாசத்திற்குள், உள் ஒளியாக அமர்ந்து உயிர்ஒளியாக விளங்கி, கடவுள்  காரியப்படுவதால், உயர்ந்த அறிவு பெற்றவர்கள் மனிதர்கள் என்கின்றார் வள்ளலார்,*


*எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருந்தாலும், மனித தேகத்தில் மட்டுமே கடவுள் காரணத்திற்காக காரியப்பட்டுக் கொண்டு உள்ளார்*


*உண்மைக்கு பறம்பாக செயல்படுதல்!*


*கடவுளின் உண்மை அறியாமல், புறத்தில் ஆலயங்கள், மசூதிகள்,சர்ச்சுக்கள் போன்ற பிரமாண்டமான கட்டிடங்களை எழுப்பி அதன் உள்ளே மத்தியில் பீடத்தை வைத்து அதன் மேல் சிலைகள்,விக்கிரகங்கள்,பூத,தாரு,மெழுகுபத்தி தீபம், போன்ற ஜட தத்துவங்களையும், மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,நட்சத்திரம் போன்ற பஞ்சபூத ஒளி தத்துவ கருவிகளையும் படைத்து ( வைத்து ) அதில் கடவுள்  வெளிப்படுவதாகவும்,காரியப்படுவதாகவும் நினைந்து வழிபடுவது  "மந்த நியாயம்" என்கிறார் மந்தம் என்றால் அறிவு குறைவு என்பதாகும்,மேலும் அதில் தோன்றி அனுகி்கிரப்பதாகச் சொல்வது ஜாலம் என்கிறார்,ஜாலம் என்றால் ஏமாற்றுவது ஏமாறுவது என்பதாகும்*


*1,சிலைகளை வழிபடுபவர்கள் பக்தி காண்டிகள்*


*2,அக்கினியை வழிபடுபவர்கள் கர்ம காண்டிகள்.*


*2, கடவுளை இதயத்தில் உபாசிப்பவர்கள் யோகிகள்.*


*4,எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவிப்பவர்கள், நேசிப்பவர்கள், இரக்கம் காட்டுபவர்கள் ஞானிகள்*


*கடவுள் வழிபாடு  என்னும் பெயரில் உயிர் இல்லாத  சிலைகளை வைத்து உயிர்உள்ள வாயில்லா ஜீவன்களை கொன்று குவிப்பது, பலிகொடுப்பதும் அதன் மாமிசத்தை உண்பதும் கொடுமையிலும் கொடுமையாகும்.மேலும் மன்னிக்கமுடியாத குற்றமாகும்,*


*மனித தேகத்தின் ஆன்மாவில் கடவுள் காரண   காரியத்தால் இயங்கி இயக்குவதால், மனித தேகம் கிடைத்தவர்களை  உயர்ந்த அறிவு பெற்ற நண்பர்களே என்கிறார் வள்ளல்பெருமான்*


*சாதி சமய மதங்கள்!*


*உயர்ந்த அறிவு இருந்தும் தன்னையும் தன் ஆன்மாவில் உள்ளே இடைவிடாது  இயங்கிக் கொண்டு இருக்கும் கடவுளின் பூரண அருள் விளக்கத்தையும் அறிந்து தெரிந்து புரிந்து, தொடர்பு கொள்ளத் தெரியாமல், உலக மக்கள் அனைவரும், அகத்தே கருத்து,புறத்தே வெளுத்து போனதற்கு காரணம் ?* 


*சாதி, சமய மதங்களைத் தோற்றுவித்த ஆன்மீகப் பெரியோர்களே,இக் குற்றங்களுக்கு அடிப்படைக் காரிய காரணங்களாக திகழ்ந்துள்ளார்கள் என்கின்றார் வள்ளலார்.*


*வள்ளலார் பேருபதேசத்தில் சொல்வதைக் ஊன்றி கவனிக்க வேண்டும்!*


*நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால்,? அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*

 *அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில்:? கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.*

*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.*


 *ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.*


*(பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்பதின் விளக்கம் அந்த பூட்டை வள்ளல்பெருமான் வந்து உடைத்து விட்டார் என்பதாகும்*)

*அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.!*


*வருவிக்க உற்ற வள்ளலார்!*


**இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளத் தெரியாமல், தத்துவக் கடவுள்களை தொடர்புகொண்டு பிறந்து பிறந்து,இறந்து இறந்து அழிந்து கொண்டே இருக்கிறார்கள்* 


*அவ்வாறு மனித தேகத்தில்  வாழும் ஆன்மாக்கள் அனைவருக்கும் உண்மைக் கடவுளைக் காட்டி, அக்கடவுளைத் தொடர்பு கொண்டு  அருள் பெற்று வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டும். என்பதற்காகவும்,ஆன்மாக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் இறைவனால் வருவிக்க உற்றவரே வள்ளல்பெருமான் அவர்களாகும்*


**வள்ளலார் பாடல்!*


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் *சன்மார்க்க சங்கத்* தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன்* அருளைப் பெற்றேனே.!


மேலும் பாடல்!


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என் றிடும்ஓர்

*பவநெறி* இதுவரை பரவிய திதனால்


*செந்நெறி அறிந்திலர்* *இறந்திறந் துலகோர்*

*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனிநீ


*புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி* எனும்வான்

புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


*என்னும் பாடல்கள் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்.*


*இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காரியப்படும் இடமான ஆன்ம  சிற்சபையின் கண் மனத்தை இடைவிடாது செலுத்தினால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்கின்றார்.*


*கரண ஒழுக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்,சிற்சபையின் கண் மனத்தைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர்குற்றம் விசாரியாதிருத்தல்,தன்னை மதியாதிருத்தல்,செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதிருத்தல்,பிறர்மேல் கோபியாதிருத்தல்,தனது சத்ருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல் அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவைகளை கடைபிடிக்க வேண்டும். இதுவே கடவுள் காரியப்படும் இடத்தை தொடர்புகொள்ளும் ஒழுக்கம் நிறைந்த வழியாகும்*


*சாதி சமய மதங்கள் அற்ற, எல்லா உலகத்திற்கும் உண்மை விளக்கும் விளங்கும் ஒரு பொது நெறியான சமரச  சுத்த சன்மார்க்க சத்திய தனிநெறியை தோற்றுவித்துள்ளார்* 


*சுத்த சன்மார்க்க பொது நெறியில், மனித தேகத்தில் கடவுள் பூரணமாக  காரியப்படும் இடத்தை சுட்டிக் காட்டி தொடர்பு கொள்ளச் சொல்லுகின்றார். வள்ளலார் சொல்லியவாறு நான்கு வகையான ஒழுக்கத்தைக் கடைபிடித்து அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


*வள்ளலார் பாடல் !*


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


   *எல்லா உயிர்களிலும் கடவுள் காரியப்படுகிறார் என்பதை உணர்ந்து தெரிந்து பரோபகாரம் செய்து வாழ்வதே கடவுள் வழிபாடாகும்*


தொடரும்...


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

புதன், 7 ஜூன், 2023

அருட் சிவ மருந்து !

 *அருட் சிவ மருந்து !*


*இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பப்பட்ட ஆன்மாக்கள் தனித்து வாழ முடியாது. ஆதலால் ஆன்மாக்கள் வாழ்வதற்கு உயிர் உடம்பு என்னும் "வாடகை வீடு" மாயை,மாமாயை,பெருமாயை என்னும் நிர்வாகத் தலைவிகளால் (மாயாசக்தி) கட்டிக் கொடுக்கப் படுகிறது*


*ஏழு பிறப்பு !*


*தாவரம்,ஊர்வன,பறப்பன,நடப்பன,அசுரர்,தேவர், மற்றும் இறுதியாக ஏழாவதாக மனிதப்பிறப்பு என்னும் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.*


 *ஆன்மாவைப் பற்றி உள்ளது மூன்று பிணி !* 


*இவ்வுலகில் ஆன்மாவைப் பற்றிக் கொண்ட பிணிதான் உயிர்ப்பிணி, உடற்ப்பிணி என்பதாகும், இந்த இரண்டு பிணிகளால் மரணப் பெரும்பிணி தொற்றிக் கொள்கிறது. அம் மூன்று பிணிகளை அகற்றுவதற்காகவே உயர்ந்த  அறிவு இறைவனால் மனிதப் பிறப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.*


*இந்த மூன்று பிணிகளையும் சுமந்து கொண்டே தான் இவ்வுலக மனித தேக வாழ்க்கையில் ஆன்மாக்கள் மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்னும் மூன்று ஆசைகளில் மூழ்கி மூழ்கி தேக இன்ப வாழ்வு,போக இன்பவாழ்வு,ஜீவ இன்ப வாழ்வு என்கின்ற சிற்றின்பத்தில் பற்றுக் கொண்டு வாழ்வதால், உயிர்ப்பிணியும், உடற்பிணியும்,மரணப் பெரும் பிணியையும் நீக்கிக் கொள்ள முடியாமல் நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,போன்றவை ஆன்மாவைப் பற்றிக் கொண்டு இறுதியாக உயிர்ப்பிணியும் உடற்பிணியும் நீக்கிக்கொள்ள முடியாமல் இறுதியாக  மரணப்பெரும்பிணி வந்து ஆன்மா வெளியே சென்று விடுகிறது,* 


*மறுபிறப்பு*


*மீண்டும்  வேறு ஒரு வாடகை வீடு கட்டிக் கொடுக்கப்படுகின்றன. அவ் வீட்டிலும் உயிர்ப்பிணியும்,உடற்ப்பிணியும் சேர்ந்து , மரணப் பெரும் பிணியும் பற்றிக் கொண்டு வாழ்வதுதான் ஆன்மாக்களின் மறுபிறப்பு என்பதாகும்.இவை தொடர்ந்து தொடர்கதையாக நடைபெற்றுக் கொண்டே வருகிறது.*


*வள்ளலார் பாடல்!*


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


*நோவது இன்று புதிதன்றே என்றும் உளதால்* இந்த *நோவை நீக்கி*


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் *மற்றை இறைவராலே*


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.! 


*மனித  குலத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் இந்த  தொற்று நோயை நீக்கவல்ல கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் ! அவரைத் தவிர வேறு எந்த கடவுளாலும் நீக்கமுடியாது  என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கின்றார் வள்ளலார் அவர்கள்.*


*மீண்டும் இறப்பு பிறப்பு  எடுக்காமல் வாழ வேண்டுமானால், உயிர்ப்பிணியும் உடற்பிணியும், மரணப் பெரும்பிணி என்கின்ற மூன்று பிணிகளையும் அகற்றி, பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டு குடியிருக்கும் வாடகை வீட்டை  சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும், இதைத்தான் "அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்" என்கிறார் வள்ளல் பெருமான்.*


*பொருள் தேகத்தை அருள் தேகமாக மாற்றுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய கொள்கையாகும்*


*சிறந்த மருந்து*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித ஆன்மாக்க ளை தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ள உயிர்ப்பிணியும் உடற்பிணியும் முதலில் நீக்க வேண்டும். அந்த இரண்டு பிணிகள் நீங்கினால்தான் மரணப் பெரும்பிணி தானாக நீங்கிவிடும்..*


*அந்த பிணிகளை நீக்கவல்ல சிறந்த மா மருந்தை, தன்னுடைய  உயர்ந்த அறிவைக் கொண்டும் அருளைப் கொண்டும் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே!*


*வள்ளலார் அகவல் !*


*என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞானமருந்தே !*


*முதலில் நரை, திரை,பிணி மூப்பு,பயம்,மரணம் வராமல்  உடம்பை இளமையோடு இருக்க பாதுகாக்க வேண்டும் என்கின்றார், அதற்கு வேண்டிய  உபாயங்களான,இந்திரிய கரண ஜீவ ஆனம ஒழுக்கம் என்னும் நான்கு ஒழுக்க நெறிகளை வள்ளலார் கண்டுபிடித்து பின் அவற்றைக் கடைபிடித்து இளமையோடு  வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து காட்டியுள்ளார்.*


*வள்ளலார் போல் கடைபிடித்தால் இளமையோடு இருக்கலாம் என்பது சத்தியம்.*


*உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்* அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ *மருந்தே !* ( அகவல்)


*மரணப் பெரும்பிணி* வாரா வகைமிகு கரணப் பெரும்திறல் காட்டிய *மருந்தே !"*

(அகவல்) 


*ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ளது உயிர்ப்பிணி உடற்ப்பிணி மரணப் பெரும்பிணியாகும். மேலும் அந்த மூன்றையும்  பற்றி உள்ளது, ஐந்து மலங்களான ஆணவம்,மாயை,மாமாயை,பெருமாயை,கன்மம் என்னும்  ஐந்து மலங்களாகும் அம்மலங்களை் யாவையும் அருட்சிவ மருந்தை கொண்டே நீக்க வேண்டும்.*


*அகவல் வரிகள்*


மலப்பிணி தவிர்த்து அருள் வலந்தரு கின்றதோர் நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே ! (அகவல்)


*மருந்து கிடைக்கும் இடம்!* 


*உடற்பிணியையும்,உயிர்ப்பிணியையும்,மரணப் பெரும்பிணியையும் வராமல் தடுக்க வேண்டும்*


*இவ்வுலகில் வெளியில் எங்கு சென்று தேடினாலும் காணக் கிடைக்காத அற்புத மருந்து ஆனந்த மருந்து அதுவே அருட் சிவ மருந்து.* 


*அம் மருந்து இருக்கும் இடத்தை அறிந்து தெரிந்து அனுபவித்து, மரணத்தை வென்று*,

*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் தெரிவிக்கின்றார் வள்ளலார்* 


*மேலும் என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  என்பதை தன்னுடைய அறிவு விளக்கத்தாலும், அருள் விளக்கத்தாலும் அறிந்து, அன்பு தயவு கருணையுடன் மருந்து இருக்கும் இடத்தையும்,அவற்றை அறிந்து தெரிந்து  அருந்தும் வழிமுறைகளைப் பற்றியும் அருட்பெருஞ்ஜோதி அகவலிலும், ஆறாம் திருமுறை பாடல்களிலும் தெளிவாகத் தெரிவிக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்*


*சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே !*(அகவல்) 


*சிற்சபை என்பது மனித சிரநடுவில் ஆன்மா இயங்கும் இடமே சிற்சபை என்பதாகும், அங்குதான் அருள் மருந்து என்கின்ற, அற்புத ஆனந்த மருந்து பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றது*


,*அப் பெட்டியைச் சுற்றி அறியாமை, அஞ்ஞானம் என்னும் ஏழு மாயா வண்ணத் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளன.*


*திரைகளை நீக்கும் வழிகள்!* 


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளல்பெருமான்*


*மோட்ச வீட்டின் திறவுகோல் பெறுவதற்கு ஜீவகாருண்யம் ரொம்ப ரொம்ப முக்கியம்,ஜீவ காருண்யம் என்றால் என்ன ?* 


*ஜீவன் ( உயிர்) என்கின்ற உயிர்களுக்கு, ஜீவர்களால் உண்டாகும் பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை போன்ற துன்பங்களை, அன்பு தயவு கருணை கொண்டு விளம்பரம் இல்லாமல் இயற்கை உள்ளத்தோடு தயவாலே, அத் துன்பம் துயரம் அச்சம் பயத்தை போக்க வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும்,*


*மேலும் அச் சீவன்களுக்கு ஆன்ம உருக்கும், ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம மகிழ்ச்சி, ஆன்ம இன்பத்தை உண்டாக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்*


*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்  சிவமே ! (அகவல் வரிகள்) என்பார்*


*ஜீவன்களுக்கு உண்டாகும் ஏழுவகையான துன்பங்களை தங்கள் தங்கள் தகுதிக்குத் தகுந்தவாறு தக்கவாறு, தக்க நேரத்தில் உபகாரம் செய்பவர்களுக்கு மட்டுமே மோட்ச வீட்டின் உள்ளே பெட்டியின் திறவுகோல் என்னும் சாவி கிடைக்கும்,பெட்டியைத் திறந்து அதில் உள்ள அருளை அருந்தினால் மட்டுமே, உயிரும் உடம்பும் பாதுகாக்கப்படும்* 


*சாவிமட்டும் கிடைத்தால் அருள் நிறைந்த பெட்டி திறக்குமா என்றால் திறக்காது !*


*ஜீவகாருண்யத்துடன்,இடைவிடாது சத்விசாரம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அவர் அனுமதி ( நற்சான்று) பெற வேண்டும். பரோபகாரம்! சத்விசாரம்! என்கின்ற இரண்டும் சமமாக கடைபிடித்து வந்தால்தான் பெட்டியின்  பூட்டைத் திறந்து உள்ளே சென்று "அருள் சிவ ஞான மருந்தை" அருந்தி மரணத்தை வெல்ல முடியும் என்பதே வள்ளல்பெருமகனாரின் சத்திய வாக்காகும்*


*வள்ளலார் பாடல்!*


பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண்டு இது நீ

பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்


எட்டிரண்டும் தெரியாதே என் என்கையிலே கொடுத்தீர்

இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்


அட்டிசெய நினையாதீர் *அரைக்கணமும்* தரியேன்

அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக


வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.! 


*பசித்த ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க வடலூரில் சத்திய தருமச்சாலை தோற்றுவித்தும், மற்றும் உடற்ப்பிணி, உயிர்ப்பிணிகளைப் போக்கியும், இடைவிடாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டும், பஞ்ச பூத உணவுகளை உட்கொள்ளாமலும்,ஊற்றெழும் கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து அழுது புலம்பி கடவுளைக் காணவேண்டும் என்கின்ற தீராத காதல் உணர்வால், தூங்காமல் விழித்து,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ்ந்து வந்த வள்ளல்பெருமானுக்கே திறவுகோல் கிடைத்தும் மேல்வீட்டுக் கதவைத் திறக்க தாமதப்படுத்தி உள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,* 


*காலதாமதம் செய்யும் ஒவ்வொரு அரை  கணத்திற்கும் வட்டியிட்டு வாங்குவேன் என ஆண்டவரையே எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் வள்ளல்பெருமான்*


*அருள் வழங்கி ஆட்கொண்டார்! பாடல்!*


சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் *உடம்பினில்* புகுந்தேம்


இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே

*இன்புறக் கலந்தனன்* அழியாப்


பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்

பரிசு பெற்றிடுக பொற் சபையும்


சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்

தெய்வமே வாழ்கநின் சீரே.!


*மேலும் ஒருபாடல்!*


பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை


*உற்றே கலந்தான்* *நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்*


எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்


துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.!


*இதுவரையில் எவரும் பெற்றிடாத அருட் சிவ மருந்து என்னும் ஞான மருந்தை அருந்தி ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு, சுத்த பிரணவ ஞனத்தேகத்தோடு என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*


*நமக்கு தொடர்ந்து உண்டாகும் பசிப்பிணி, உடற்ப்பிணி, உயிர்ப்பிணி,மரணப்பெரும்பிணி யாவையும் போக்குவதற்கு அருட்சிவ மருந்து என்னும் அருள் ஆனந்த மருந்தை பெற்று உட்கொண்டு மரணத்தை வென்று வள்ளல்பெருமான் போல் வாழ்வாங்கு வாழ்வோம்*


*வள்ளலார் அனுபவித்த மருந்து!*


*அம்பலத்தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே !*


அருட்பெருஞ்ஜோதி மருந்து - என்னை 

ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து..

பொருட் பெரும் போக மருந்து- என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து....


தொடரும்..


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

*9865939896*

ஞாயிறு, 4 ஜூன், 2023

அகம் !அகப்புறம்! புறம்! புறப்புறம்!

 *அகம் ! அகப்புறம்! புறம்! புறப்புறம்!*


*நமது மனித உடம்பு நான்கு பகுதிகளாக பிரித்து இணைத்து இயங்குகிக் கொண்டுள்ளது!* 


*அகம் என்பது ஆன்மா இருக்கும் இடம் அதற்கு சிற்சபை அங்கம் என்று சொல்லப்படுகிறது,*


*அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இயங்கும் இடமாகும்.*


*புறம் என்பது அந்த கரணங்கள் என்னும் மனம்,புத்தி,சித்தி,அகங்காரம்,ஆச்சரியம் போன்ற நுண்ணிய மின்காந்த அலை போன்ற கருவிகள் இயங்கும் இடம்.*


*புறப்புறம் என்பது கண்,காது,மூக்கு,வாய்,மெய்( உடம்பு) என்னும் இந்திரியங்கள் இயங்கும் இடமாகும்.*

*அதில் கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் சூட்சும பஞ்ச இந்திரியங்கள் ஒருபகுதி. கண்களுக்குத் தெரிந்து இயங்கும் ஸ்தூல பஞ்ச இந்திரியங்கள் ஒரு பகுதி*


*அகம் என்னும் ஆன்மா அகப்புறம் என்னும் ஜீவன்,புறம் என்னும் இந்திரியங்கள்,புறப்புறம் என்னும் சூட்சும பஞ்ச இந்திரியங்கள்.இவைகள் யாவும், எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற அறிவியல் சார்ந்த மருத்துவ விஞ்ஞானக் கருவிகளுக்கு புலப்படாது. மனிதனின் புறக் கண்களாலும் காண இயலாது*


*உடம்பின் உள் பின்னப்பட்ட, இணக்கப்பட்ட பஞ்சபூத ஜட கருவிகள மட்டும் அறிவியல் கருவிகளால் காணலாம் கண்டு பிடிக்கலாம்* 


*கண்களுக்குத் தெரியாத ஆன்ம சக்தி அருள் ஆற்றலால் உயிர் என்னும் ஜீவன்,மற்றும் அந்தகரணங்கள்,சூட்சும இந்திரியங்கள் யாவும் இயங்கிக் கொண்டு உள்ளன இக் காரணச் செயல்களால்,புறக் கருவிகளாக இந்திரியங்கள் காரியப் படுகின்றன அதாவது செயல்படுகின்றன்*


*ஆன்மாவிற்கு அருள் சக்தி வழங்குபவர் யார்! ?*


*எல்லா ஆன்மாக்களும் இயங்குவதற்கு அருள்சக்தி என்னும் ஆற்றல் இடைவிடாது வழங்கிக் கொண்டு இருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !*


*வள்ளலார் பாடல்!*


அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

*எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்*


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*


மேலும்...


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

*தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்*


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


*சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்*

*சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!* 


*உடம்பு இயங்கும் சக்தியை இழக்கும் போது, அதாவது நரை,திரை,பிணி, பூப்பு,பயம், உண்டாகி மரணம் அடைகின்ற போது, ஆனமாவை  வெளியேற்றி வினைக்குத் தகுந்தவாறு வேறு ஒரு உயிர், உடம்பு எடுத்து (அதாவது வாடகை வீட்டிற்கு) வாழ்வதற்கு ஆன்மா தொடங்கிவிடும்,இதுவே பிறந்து பிறந்து இறந்து இறந்து,பிறவிகள் எடுத்துக் கொண்டே இருப்பதாகும்*


*இத் தொடர் கதையை நிறுத்தி இறப்பு பிறப்பு இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டுவதே வள்ளலார் கண்டுபிடித்த சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி கற்கும் கல்விக் கொள்கையாகும்*


*ஆன்மாக்களை இடைவிடாது இயக்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! அவரை இடைவிடாது தொடர்பு கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளாகும்*

*அந்த ஒழுக்க நெறிகள், புறப்புறம் என்னும் இந்திரிய ஒழுக்கம்,*


*புறம் என்னும் கரண ஒழுக்கம்,*

 

*அகப்புறம் என்னும் ஜீவ ஒழுக்கம்,*


*அகம் என்னும் ஆன்ம ஒழுக்கம்*


 *மேலே கண்ட நான்கு வகையான ஒழுக்கங்களை, வள்ளலார் சொல்லியவாறு நான்கு வகையாக கடைபிடிக்க வேண்டும் என்கின்றார் வள்ளலார்*


*வள்ளலார் சொல்லிய நான்கு ஒழுக்கங்களை முறை தவறாமல் நேர்வழியில் கடைபிடிக்க வேண்டும், சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்கத் தவறியதால் மரணம் வந்து கொண்டே உள்ளன, முறைதவறாமல் கடைபிடித்தால் கண்டிப்பாக மரணத்தை வெல்லலாம்.*


*இந்திரிய கரண ஒழுக்கத்தால் சுத்ததேகமும்,*

*ஜீவ ஒழுக்கத்தால் பிரணவ தேகமும், ஆன்ம ஒழுக்கத்தால் ஞான தேகமும் மாற்றமடையும்,ஒவ்வொரு ஒழுக்கத்திற்கு தகுந்தவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையால் ஆன்மாவின் தன்மைக்கு தகுத்தவாறு  அருள் சுரக்கும், அருள் தன்மைக்குத் தகுந்தவாறு தேகமாற்றம் உண்டாகும்*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் பெற்ற அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியது, இரண்டு முக்கிய வழிகள்.. 1,பரோபகாரம் 2,சத்விசாரம் என்பதாகும்*


*இந்த இரண்டு நேர் வழிகளால்தான் அறிவு விளக்கம்,அருள் விளக்கம் உண்டாகும். அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் பெறாமல் அன்பர்கள் குழப்பம்  அதிகமாக வைத்துள்ளார்கள்,காரணம் வள்ளல்பெருமான் சொல்லிய இயற்கை உண்மையை,இயற்கை உணமை விளக்கத்தை,இயற்கை உண்மை இன்பத்தை பெறுவதற்குண்டான ஒழுக்க நெறிகளை, காற்றில் பறக்க விட்டுவிட்டு அவரவர் புத்திக்குத் தகுந்தவாறு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்அதனால் அன்பர்கள் வெற்றபெற வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றார்கள்*


*ஞானசரியை!*


*திருஅருட்பாவில் ஞானசரியை ( மரணம் இல்லாப் பெருவாழ்வு ) என்னும் தலைப்பில் 28 பாடல்கள்  பதிவு செய்துள்ளார்,அவற்றில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை மிகத் தெளிவாக எளிய தமிழில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.*


 *அகம், அகப்புறம், புறம் புறப்புறம் என்கின்ற நான்கு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளார்*

*1,ஞான சரியை*

*2,ஞான கிரியை*

*3,ஞான யோகம்*

*4,ஞானத்தில் ஞானம் என்பனவாகும்*


*1,ஞானசரியை என்பது இந்திரி ஒழுக்கம்*


*2,ஞானகிரியை என்பது கரண ஒழுக்கம்*


*3, ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கம்*


*4, ஞானத்தில் ஞானம என்பது ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்*


 *வள்ளலார் சொல்லிய வழிபாடு வித்தியாசமானது. ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார், சுத்த சன்மார்க்கத்திற்கு தத்துவங்களான சிலைகளை வணங்கும் புறவழிபாடே கிடையாது*


*சுத்த சன்மார்க்கம் அறிவு சார்ந்த  ஞானம் என்னும் அருள் பெறும் வழிபாடாகும்*


*1,புறப்புறம் என்னும் இந்திரியங்களால் விக்கிரகங்களை வழிபடுபவர்கள் சரியையில் ஞானம் என்னும் பக்தி காண்டிகள் என்பவர்களாகும்* 


*2,புறம் என்னும் சரியையில் ஞானம் என்னும் கரணங்களால்  அக்கினியை வழிபாடு செய்கிறவர்கள் கர்ம காண்டிகள் எனபவர்களாகும்*



*3,அகப்புறம் என்னும் சரியையில் ஞானம் என்னும் ஜீவத் தன்மையுள்ள யோகிகள் ( உயிர் தொடர்பு ) வழிபடுவது இதயத்தில் உபாசிப்பவர்களை யோகிகள் என்றே சொல்வார்கள்*


*4,அகம் என்னும் ஞானத்தில் ஞானம் என்பது, ஆன்ம தன்மை அறிந்த ஆன்மாக்கள் அதாவது ஆன்ம அறிவுபெற்ற ஞானிகள், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குவதாக உபாசிப்பார்கள் அவர்களை ஞானத்தில் ஞானம் பெற்றவர்கள் என்று சொல்லப்படுவார்கள்.*


*ஞானத்தில் ஞானம் பெறுபவர்களே கடவுளை அகக் கண்ணால் காணமுடியும், மரணத்தை வெல்ல முடியும்,முத்தேக சித்தி பெறமுடியும்.பேரின்பவாழ்வு வாழமுடியும்.*


*புறப்புறம் உள்ள இந்திரியங்களால் ஆதரவு அற்ற ஜீவர்களுக்கு  பரோபகாரம் செய்தும்,*

*புறத்தில்  அலைபாயும் புறத்தில் முதன்மையாக உள்ள மனத்தை அகம் என்னும் ஆன்மா இயங்கும் இடமான சிற்சபையின் கண் மனத்தை செலுத்த தெரிந்தவர்களே அருளைப் பெறும் தகுதி உடையவர்களாவார்கள்*


*வள்ளலார் பாடல் !*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன்

*முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 3 ஜூன், 2023

அருடபெருஞ்ஜோதி அகவல் மணிமகுடம்!

 *வள்ளலாரியத்தின் மணிமகுடம்....!*



🙏🙏🔥🙏🙏


வள்ளலார் அருளிய  பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு திருஅருட்பா என்றழைக்கப்படுகின்றது. இதனுள் சுமார் ஆறாயிரம் பாடல்கள் உள்ளன.


  வள்ளல் பெருமானாரின்  உள்ளார்ந்த ஆன்மிக அனுபவத்தின் நிறைவான நிலையில் இயற்றப்பட்ட நெடும்பாடல் அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்...

இதுவே வள்ளலாரியத்தின் மணிமகுடமாகப் போற்றப்படுகின்றது.


இதன் முதன்மைக் கருதியே... இன்றளவிலும் வடலூர் சத்திய தருமச்சாலையின் வழிபாட்டு மேடையில்.... பெருமானாரின் திருவுருவப் படத்திற்கு வலப்புறம்... பெருமானார் தம் திருக்கரத்தால் எழுதிய அகவலின் அசல் நோட்டுப் புத்தகம் கண்ணாடிக் கூண்டில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.


இவ் அருட்பெருஞ்ஜோதி அகவல் பற்றிய ஒருசில தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.....!


🙏🙏🔥🙏🙏


*மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் தங்கியிருந்த  காலக்கட்டத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பெருமானார் எழுதினார்கள்.*


  வள்ளல் பெருமானார் 1865- இல் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றிவைத்ததற்குப் பின் ;


   1867-இல் அணையா அடுப்போடு அன்னமிடும் சத்திய தர்மச்சாலையைத் தோற்றிவைத்தற்குப் பின் ;


  1870-இல் சத்திய ஞான சபையைத் தோற்றிவைத்து ஜோதி தரிசனத்தை நிகழ்த்தியதற்குப் பின்தான் ... ; 


அருட்பெருஞ்ஜோதி அகவலை வள்ளல் பெருமானார் இயற்றினார்கள் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.


சுவாமி சரவணாந்தா எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க நூலின் அணிந்துரையில் -  சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின்  தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள்  கூறும் கருத்து இங்கு நினைவு கொள்ளத்தக்கது.


*" வள்ளல் பெருமானால் அருளப்பெற்ற திருவருட்பாவின் மணிமுடியாக விளங்குவது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதற்கு அவரே தலைப்பிட்டுள்ளார். 1872-ஆம் ஆண்டு சித்திரை எட்டாம் நாள் இதனை அருளியுள்ளார்."*


வள்ளல் பெருமானார் இறைவனோடு இரண்டற கலப்பதற்குச் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்....


ஆதலால்... *அகவலானது... பெருமானாரின் அருட்பேராற்றலின் தகவலை எல்லாம் ஒருங்கே தரும் ஞானக் களஞ்சியமாக விளங்குகின்றது...!*


----------------------------

*அகவல் தரும் தகவல்கள் :*

----------------------------


வள்ளல் பெருமானார் ஒன்பது வயதளவிலிருந்து அருட்பாக்களை எழுதத்தொடங்கினார்கள். பன்னிரண்டு வயதளவிலிருந்து ஞான வாழ்வைத் தொடங்கினார்கள். இடைவிடாத ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார்கள்... 


வள்ளல் பெருமானாரின் மெய்ஞ்ஞானத் தேடலின் முயற்சியால் பெருமானாரின் 49-ஆம் வயதில் மலர்ந்ததுதான் அருட்பெருஞ்ஜோதி அகவல். 

  

ஆதலால் ; *அகவல் சன்மார்க்க - மெய்ஞ்ஞானத்தின் உச்சமாக விளங்குகின்றது .*


இவ் அகவல் அமிழ்தில்...  ஒருசில துளிகளைச் சுவைத்துப் பார்ப்போமே..!


*"என்னுள்ளே அரும்பி என்னுள்ளே* *மலர்ந்து*

*என்னுள்ளே விரிந்த* *என்னுடை அன்பே*


*என்னுள்ளே விளங்கி* *என்னுள்ளே பழுத்து*

*என்னுள்ளே கனிந்த என்னுடை அன்பே"*


என்று வள்ளல்பெருமனார் அகவலின் 1480-ஆம் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.


இவ்வரிகளின் மூலம் .... 


வள்ளல் பெருமானாரின்  அக அனுபவமே... இறையாற்றலே... அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்..


அகவலில் 1555-ஆம் வரியில்..


*"சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து*

*எனக்கே அபயம் அளித்தோர் அருட்பெருஞ்ஜோதி"*


என்று வள்ளல் பெருமனார் பாடியுள்ளார்கள்.


இதன்மூலம் ,' தன்னுள் விளங்கிய இறை அனுபவத்தையே , வடலூரில் சத்திய ஞான சபையாக அமைத்துக் காட்சிபடுத்தினார்கள் ' என்பதையும் புரிந்துகொள்ளலாம்.


*"சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்*

*சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்* *கொண்டனன்*

*நித்திய ஞான* *நிறை அமுது உண்டனன்.."*


என்ற திருஅருட்பா ஆறாம்  திருமுறையின் பாடல் (2173) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.


" *பிண்டமும் அதிலுறு பிண்டமும்*, *அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே ! "*


எனும் அகவலின் (1294 ) வரிகள்...


 நம்... மனித உடலுள் ... இறைப்பண்டம் பொதிந்துள்ளது என்பதை அழகாக விளக்குகின்றது.


" *உள்ளகத்து அமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே..!"*


எனும் அகவலின் (1020) வரிகள் .. 


பெருமாரின் உள் அகத்துள் இறையாற்றலானது.. கலந்து ... அருள் செய்தமையை விளக்குகின்றது.


" *இயற்கை உண்மையதாய் , இயற்கை இன்பமுமாம் அயர்ப்பிலாச்  சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ... "*


எனும் அகவலின் (70) வரிகள் ... 


ஒவ்வொரு மனித தேகத்தினுள்ளும் இயற்கையாகவே அருட்பெருஞ்ஜோதியானது அமைந்துள்ளது என்பதையும் ;  அவ் இயற்கை உண்மையைப் புரிந்துகொண்டு... அப்பேரொளியைக் தன்னுள் காண்பதே இயற்கையான பேரின்பம் என்பதையும்  விளக்குகின்றது.


வடலூர் சத்திய  ஞான சபையின் தொடக்க விழா பத்திரிக்கையில்...

*"இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய  ஞான சபைக்கண்ணே , இயற்கை உண்மை என்கின்ற சத்திய திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்திய திரு நடம் செய்தருள்கின்ற ....."*


என்று பெருமானார் குறிப்பிட்டுயிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.


இயற்கை உண்மையான;  இயற்கை இன்பமான அருட்பேரொளியானது நம் உடம்பில் சிற்சபையில் - புருவமத்தியில் விளங்குகின்றது என்ற மெய்ம்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


----------------------------

*சிற்சபை எங்குள்ளது...?*

~~~~~~~~~~~~~~~~


    " சிற்சபை " என்பதற்கும் ; அருட்பெருஞ்ஜோதி என்பதற்கும் வள்ளல் பெருமானார் கூறும் கருத்தை .... பெருமானாரின் வார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு சற்று சிந்திப்போமே....!


   *"இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில் : நான் ஆன்மா  , சிற்றணு வடிவனன். மேற்படி அணு கோடிசூரியப் பிரகாசமுடையது. லலாட ஸ்தானம் இருப்பிடம் . கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."*


என்று உபதேசப் பகுதியில் (பக்கம்: 435) வள்ளல் பெருமானார் குறிப்பிட்டுள்ளார்கள்.


 இக் குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன... ?


★இறை ஆற்றலானது மனிதத் தேகத்தில் விளங்குகின்றது.


★அது கோடி சூரியப் பிரகாசத்துடன் பெரிய ஜோதியாக விளங்குகின்றது.


★லலாட ஸ்தானம் எனப்படும் புருவ மத்தியில் இப் பெருஞ்ஜோதி  விளங்குகின்றது.


★அது பொன்மையும் வெண்மையும் கலந்த  பேரொளியாத் திகழ்கின்றது.


★அவ் இறையொளியை ஏழு திரைகள் மறைத்துள்ளன.


ஆம்...


இவ் அருட்பேரொளி இறைக் கொள்கையின் உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையைப் பெருமானார் அமைத்தார்கள் ; தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்தார்கள்.


அப்பேரொளியை... அவ் அருட்பெருஞ்ஜோதி பற்றிய மெய்ம்மைகளைத்தான் அகவலில் எழுதிவைத்தார்கள்


-----------------------------

*பெருமானார் பெற்ற பெரும் பேறு..:*

~~~~~~~~~~~~~~~

  

             கோடி சூரியப் பிரகாச , அருட்பெருஞ்ஜோதியைத் தன்னுள் கண்ட பெருமானார் பெற்ற பெரும் பேற்றைப் பற்றி ... பெருமானார் கூறும்  வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிந்திப்போமே..!


*"மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்*


*யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை"*


என்று வள்ளல் பெருமனார் அகவலில் (1582) குறிப்பிட்டுள்ளார்கள்.


இதன் மூலம் ,  இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் யாரும் பெறாத மாபெரும் இறையாற்றலைப் பெருமனார்  பெற்றிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.


*"...அருட் பேரொளியால் இன்பையும் நிறைவித்து*


*என்னையும் நி(உ)ன்னையும் ஓர் உரு(வம்)ஆக்கியான்"*


எனும் அகவல் (1572) வரியாலும் ;


*" தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே...! "*


எனும் அகவல் (1146) வரிகளால் வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒரே  உருவமாகியதை புரிந்துகொள்ளமுடிகின்றது.


*"உலகு உயிர்த் திரள் எல்லாம் , ஒளிநெறி பெற்றிட இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை..! போற்றி நின் பேரருள்...! "*


எனும் அகவல் (1578) வரியால் ; 


    படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் ... எனும் ஐந்தொழில் செய்யும் பேராற்றலை வள்ளல் பெருமானார்  பெற்றமையை அறியமுடிகின்றது . 


அதுமட்டுமின்றி  அனைவரும் மெய்ஞ்ஞான ஒளிநெறியைக் கடைபிடித்துப் பேரின்ப பெருவாழ்வு வாழ ... வழிகாட்டும் ஞானகுருவாகவும் பெருமானார் விளங்கும் தன்மையை உணர முடிகின்றது.


*ஒளிநெறிக்கா(ண)ன வழிமுறை... :*

-----------------------------


   நம்முள் - அக அனுபவமாக விளங்கும் - ஆன்ம பேரொளியைத் தரிசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.. ? 


வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு... சற்றே சிந்திப்போமே...!


 மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளியில் ... முதன்முதலாகச் சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்து நிகழ்த்திய பேருபதேசத்தின் தொடக்கப் பகுதியை நோக்குவது சிறப்பாக அமையும் .


       *"....யோகிகள் வனம் , மலை , முழை முதலியவற்றிற்குப் போய் நூறு - ஆயிரம் முதலிய வருட காலம் தவஞ் செய்து  சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.*


   *இப்படி தவம் செய்து உஷ்ணத்தைஉண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும் ,*


*தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் , இதை விடக் கோடிப் பங்கு , பத்துக் கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.*


*எவ்வாறெனில் ; ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் , நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்... ......"*


என்று வள்ளல் பெருமனார் பேருபதேசத்தில் (பக்கம் 464) கூறியுள்ளார்கள்.


இக் குறிப்பினால் நாம் புரிந்துகொள்வது என்ன...?


★நாம் தினசரி ஒரு ஜாம நேரம் (சுமார் இரண்டு மணி நேரம்)  இறை சிந்தனையுடன்  இருக்க வேண்டும்.


★இறை சிந்தனையுடன்  கவனமாக இருந்தால் அல்லது  அருட்பாக்களை பாராயணம் செய்து கொண்டிருந்தால் ; சுத்த உஷ்ணத்தை நம்முள்  நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். ... எனும் ஆன்மிக உண்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.


     இறை அனுபவத்தின் உச்சத்தில் இவ் அகவல் எழுதப்பட்டதால் ; இவ் அகவலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையதாக சன்மார்க்க அன்பர்கள் நம்புகின்றனர்.


    ஆதலால், இவ் அகவலைத் தினசரி வாசித்தால் ; காடு- மலைகளுக்குச் சென்று தவமிருந்து சித்தர்கள் பெற்ற பெரும் தவப் பேற்றை - சுத்த ஞான உஷ்ணத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம் என்று சன்மார்க்கிகள் நம்புகின்றனர்.


    இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலை கூட்டுப் பாராயணமாகச் செய்த பின்பே ; எந்தவொரு சன்மார்க்க விழாவையும் தொடங்குவது சன்மார்க்கர்களின் வழக்கமாக உள்ளது.


     வள்ளல்பெருமனார் காட்டிய சன்மார்க்க வழியில் நடக்கும் பல அன்பர்கள் தினசரி காலை நேரத்தில் இவ் அகவலைப் பாராயணம் செய்து வருகின்றனர்.


*"தோத்திரம் புகல்தல்"* சன்மார்க்கத்தின் ஞான வழிமுறையாகக் கருதப்படுகின்றது.


   *"..... ஞானம் தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்*


*சிற்குண வரைமிசை உதயம் செய்தது மாசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த*


*நற்குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம் பண்ணி நிற்கின்றார்...."*


என்று திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பெருமானார் பாடியுள்ளமை ; இவ்விடத்தில் நினைவுகொள்ளத்தக்கது.


ஆம்... நம்முள்...  மாயைத் தொலைந்து , பொன்னொளி   தோன்றி , சித்திகள் எல்லாம் கைக்கூட வேண்டுமானால் தோத்திரம் பாடுதல் வேண்டும் என்ற பெருமாரின் கருத்தை மேற்கண்ட அருட்பா வரிகளால் புரிந்துகொள்ளலாம்.


*மாயத் திரைகள் அகல.... வழி...:*

-----------------------------


       *"  கோடி சூரியப் பிரகாசமுடைய.. ... ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."* என்று பெருமானார் கூறியுள்ள கருத்துத் தொடர்பாக.... பெருமான் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்திப்போமே....!


*" தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி...!*


எனும் அகவல் (834) வரிகளின் மூலம்...


உலகமெலாம் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைகொண்டே , அவரின் அருளாலே நம்முள் மறைத்திருக்கும் மாயைத் திரைகளை நீக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.


 *" எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி...! "*


எனும் அகவல் (838) வரிகளின் மூலம் ,


சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆணவம் , கன்மம் , மாயை , பொறாமை , காமம் , மாச்சரியம் , உலகச்சாரம் முதலிய தடைகளைக் கடந்தால் ; நம்முள் பேரொளியைத் தரிசிக்க முடியும் என்பதை அறிய முடிகின்றது. 


வடலூர் சத்திய ஞான சபையின் தைப்பூசச் ஜோதி தரிசனத்தின் பொழுது ஏழு திரைகளை நீக்கியப் பின் பேரொளி தரிசனம் காண்பிப்பதை இங்கு நினைவுகொள்ளத்தக்கது 


 *" பவக் கடல் கடந்து நான் பார்த்த போது அருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே...!"*


எனும் அகவல் (1392) வரிகளின் மூலம் ,


காமம் , களவு , கொலை முதலிய பாவச் செயல்கள் செய்வதைத் தவிர்த்தால் (பாவம் எனும் பெருங் கடலைக் கடந்தால் )  அருளெனும் கரையைக் கண்டு மகிழலாம் என்பதை அறிய முடிகின்றது.


மேலும் ...


*"சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும் ,*


*காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும் ,*


*கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*


*மரணம் , பிணி , மூப்பு , பயம் , துன்பம்.... இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.*


*அதாவது செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவ லாதிகார மரணம் நீங்கும்..."*


எனும் வள்ளல் பெருமனாரின் உபதேசக் குறிப்பும் (பக்கம் : 411 - 412) இங்கு நினைவுகொள்ளத்தக்கது. 


மேற்கண்ட பெருமானாரின் உபதேசக் குறிப்பினால்... 


... உயிருள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைக் காண தடைகளாக இருப்பனவற்றை பற்றி புரிந்துகொள்ளலாம்.


*உயிர் ஒளியைக் காண தகுதி :*

---------------------------


  *"உயிருள் யாம் ; எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே...! "*


எனும் அகவல் (974) வரிகளால்...


 இறையாற்றலானது  நம் உயிருள் பொதிந்துள்ளது என்பதை அறியலாம்.


  *" உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுக! எனச் செப்பிய சிவமே...! "*


எனும் அகவல் (970 ) வரிகளின் மூலம்...


உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும்  வேறுபாடு இன்றி பொதுவாக நோக்கவேண்டும் என்பதை அறியலாம்..


 *"எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உவக்கின்றார் யாவர் அவர் உளம் தாம் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் எனத் தெளிந்தேன்..  "*


எனும் அருட்பா வரிகளும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.


ஆம்...


உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எவ்வித வேறுபாடும் பார்க்காது... அவற்றைத்  தம் உயிரைப் போல் எண்ணி மகிழ்கின்றார்களோ.... அவர்களின் உள்ளமே இறைவன் தங்கியிருக்கும் இடமாகும்..


 *"எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே.. ! "*


எனும் அகவல் (962 )வரிகளால்..


இரக்க குணம் , கருணை உள்ளம் இயற்கையாகவே உள்ளவர்களிடத்தே இறையாற்றல் நிரம்பியுள்ளது என்பதை அறியலாம்.


*" உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக ... நீ அடைந்து விலக்குக மகிழ்க...! "*


எனும் அகவல் (1590 ) வரிகளால்....


உலகில் வாழும் உயிரினங்கள் அடையும் துன்பத்தை  நீக்குபவர்களே பேரின்ப பெருவாழ்வில் வாழ முடியும் என்பதை அறியலாம்.


*"நமக்கு முன் சாதனம் கருணை...."* என்று பெருமானார் பேருபதேசத்தில் குறிப்பிட்டுயிருப்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.


வள்ளல் பெருமானார் வடலூர் பெருவெளியில் சத்திய ஞான சபையை அமைப்பதற்குச் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பசித்துயர் துயர் நீக்கும்  அணையா அடுப்போடு விளங்கும் சத்திய தர்மச்சாலையை அமைத்தமையை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.


ஆம்...


நம்முள் விளங்கும் சத்திய ஞான சபையைக் காண முதல் தகுதி... உலக உயிரினத்தின் துன்பத்தை நீக்கும் கருணை உள்ளமே ஆகும்....


*உள்ளொளியைக் கண்டால்....:*

----------------------------


 சிற்சபை நடுவே திருநடம் புரிகின்ற , உள்ளொளி அற்புதத்தை நாம் கண்டுவிட்டால் என்ன... என்ன நிகழும்... வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளின் அடிப்படையிலே சற்றுச் சிந்திப்போமே...!


 *" உடல் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி  அனைத்தையும் அடர்ப்பு அறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே...! "*


எனும் அகவல் (1322) வரிகளால் .. 


நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்... நம் உடலைப் பற்றியிருக்கும் அனைத்து உடல் நோய்களும் , உயிர்ப்பிணிகளும் நீங்கிவிடும் என்பதை அறியமுடிகின்றது.


 *" என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து , உளம் நன்றுற விளங்கிய நந்தனக் காவே...! "*


எனும் அகவல் வரிகளால்... 


நம்முள் அருள்பேரொளியைக் கண்டுவிட்டால் , அனைத்து துயரங்களும் சோகங்களும் நீங்கி , மனமானது நிம்மதியாய் நல்ல நிலையில் நிலைத்திருக்கும் என்பதை அறியமுடிகின்றது.


 *"தாழ்வெல்லாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த  வளரொளி மணியே...!"*


எனும் அகவல் (1308) வரிகளால்...


உள்ளொளியை நாம் கண்டுவிட்டால் அனைத்து இழிவுகளும் நீங்கி , மரணமிலா பெருவாழ்வில் வாழலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.


 *" அண்ட கோடிகள் எல்லாம் அரைக் கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே...! "*


எனும் அகவல் (1302) வரிகளால் ...


 சித்திக்கு மூலமாக விளங்கும் அருள்பேரொளியை நம்முள் கண்டுவிட்டால்... இவ் அண்ட உண்மைகளை எல்லாம் அரை நொடியில் அறிந்துகொள்ளலாம்... என்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது.


 *" இரு நிதி  எழு நிதி  இயல் நவ நிதி முதல்  திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே...! "*


எனும் அகவல் (1374 ) வரிகளால் ...


நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்.. இப் பிறவியின் மண்ணுலக வாழ்விற்கான நிதியையும் , மறுபிறப்பிற்கான நிதியையும் , விண்ணுலக வாழ்விற்கான நிதியையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியமுடிகின்றது.


ஆம்...


 ★ சமரச சத்தியச் சபையில் நடம் புரிகின்ற ,  சமரச சத்தியச் தற்சுயம் சுடரை .... நம்முள் காண்போம்...!


 ★ வேதமும் ஆகம விரிவும் பரம்பரநாதமும்  கடந்த  ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!


 ★ உள்ளொளி ஓங்கிட...  உயிரொளி விளங்கிட... வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலை நம்முள் காண்போம்...!


 ★ எண்ணிய எண்ணிய எல்லாம் தருகின்ற , நண்ணிய புண்ணிய  ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!


★சித்திகள் அனைத்தையும் தெளிவாகப் பெற்று , சத்திய நிலைதனைப் பெறுவோம்.  ...!


★எங்குமாய் விளங்கும் அருள்பேரொளியை... உள்ளங்கை நெல்லிக்கனி போன்று ... நம் அக அனுபவத்தால் கண்டு  தரிசிப்போம்....!


*நிறைவுரை :*

--------------------

வடலூர் சத்திய தர்மச்சாலையின் மைய மண்டபத்தில் , வள்ளல் பெருமானார் கைப்பட எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் நோட்டுப் புத்தகம் கண்ணாடிப் பேழையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.


அவ் அகவல் நோட்டுப் புத்தகத்தைப் பலரும் பயபக்தியுடன் கைக் கூப்பி வழிபட்டு வருகின்றனர்..


அகவலை வழிபடுபடுவதோடு விட்டுவிடாமல் , அகவல்  காட்டும் ஞான வழியில் வாழ முயற்சிப்பதே வள்ளப்பெருமானார்க்கு காட்டும் உண்மையான மரியாதை ஆகும் 


*"வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ,*


*ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் ,*


*தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே!"*


என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப தினசரி நாமும் அகவலை  வாசிப்போம்.


அருள் அகவலின்  மந்திர ஆற்றலானது நம்மை வசீகரித்து உயர்த்துவதை அனுபவத்தில் உணர்வோம்...!


தினசரி அகவலை வாசிப்போம்...!

ஞானத் தகவலைப் பெறுவோம்..!


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 


வள்ளல் மலரடி வாழி...! வாழி...!


(கருத்துப் பதிவும் பகிர்வும்:  அருள்பாவலர் சக்திவேல்.வே)


Message from:---

Dhayavu Thiru. V. Shakthivel Aiyya