வெள்ளி, 21 மே, 2010

ஆன்மிக துறவிகளின் அடையாளம்




1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.

2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.

3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க   வேண்டும்.

4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என என்ன வேண்டும்.

5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.

6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.

7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.

8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.

9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.

10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.

11. ஏழைல்களின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.

12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.

13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளை காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

14. தான் அணியும் ஆடை ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது.

15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.

16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.

17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.

18. எதிலும் பொது நோக்கம் தேவை.

19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

20. மரணத்தை வெல்லும் முயற்ச்சியில் இருக்க வேண்டும்.

21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.

22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.
      1. இந்திரிய ஒழுக்கம்
      2. கரண ஒழுக்கம்
      3. ஜீவ ஒழுக்கம்
      4. ஆன்மா ஒழுக்கம்
      இவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக   ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).

மேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி(ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.

லேபிள்கள்:

நித்தியானந்தா பற்றி தமிழக முதல்வருக்கு கடிதம்

19-3-2010,
ஈரோடு மாவட்டம்.

பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் உலக அறிவும் இரண்டையும் சேர்ந்த பொது அறிவுக்கு இரைபோடும் மாண்புமிகு முதலமைச்சர் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதும் விண்ணப்பம் நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல மெய்ப் பொருளை வேண்டிக்கொள்கிறேன்.

ஆன்மிகம் என்ற பெயரில் கடவுள் பெயரை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் காவி உடை சாமியார்களும், துறவி, சந்நியாசி என்ற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் மற்றும் வேறு பல வழிகளில் போலி சாமியார்களும், புற்று ஈசல் போல் நாட்டில் பரவிக் கொண்டு வருகிறார்கள். மக்களும் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக்காரணம் பேராசையே. ஆசையே அழிவிற்கு காரணம் என்ற உண்மையை உணராத மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து அழிந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

ஏமாற்றுக்காரர்கள் முதலில் - அரசியல் வாதிகளையும், உயர் அதிகாரிகளையும், பெரும் பணக்காரர்களையும் அழைத்து அவர்கள் தலைமையில், யோகம், தவம், தியானம், மந்திரம் தந்திரம் அபிஷேகம், ஆராதனை, வழிபாடு போன்றவற்றை நடத்தி நம்பவைத்து ஏமாற்று வேலையை ஆரம்பிக்கிறார்கள். அதைப் பார்த்த மற்ற சமூகத்தில் உள்ள பெரியவர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்கள் பலரும் போக ஆரம்பித்து விடுகிறார்கள். பெரிய, பெரிய ஆட்களே நம்பித் தானே போகிறார்கள் நாமும் போகலாம் என்ற ஆசைகள் மக்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது. அதன் அடிப்படையில் நடுத்தர மக்கள் ஏமாந்து வீண் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஏமாற்றுக்காரர்களுக்கு வேட்டையாட வசதியாகி விடுகிறது. பணம் பறிக்கும் வேலையை மிக சுலபமாக ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கவலையே இல்லாமல் போய் விடுகிறது.

சில பல போலி சாமியாகள் மாட்டிக்கொண்டாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. திருந்தவே மாட்டார்கள். சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருந்தாலும் திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதற்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் வாதிகளும் அரசியல் தலைவர்களும் பெரும் பணக்காரர்களும், அரை குறை ஆன்மிக வாதிகளும் உடந்தையாக இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

மாயைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் என்ன என்பதே தெரியாத ஆன்மிக வாதிகள் எல்லா மதத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இவ்வுலகை கடவுள் படைத்தாலும்  கடவுளை இவர்களால் படைக்க முடியுமா? மனிதர்களால் கடவுளை படைக்க முடியாது என்பது உண்மை.

கடவுள் இவ்வுலகை படைத்தாலும் கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் கிடையாது. பஞ்சம் பூதங்களான மாயையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதை தெரியாத ஆன்மிக வாதிகளும் மக்களும் மாயா உருவங்களை கடவுள் என்றும், தத்துவங்களை கடவுள் என்றும், மனிதர்களை கடவுள் என்றும் நம்பி வீண் பொய் கொண்டு இருக்கிறார்கள்.

இதனுடைய உண்மை இரகசியங்களை வள்ளலார் திரு அருட்பா நூலில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும் தெரியாது என்றே சொல்ல முடியும்.

அதனால் தான் கோயில்,ஆலயம், சர்ச், மசூதி, பிரமீடு போன்ற சமய மதங்களில் உள்ளது போல் அமைக்காமல் ஜாதி, மதம், சமயம் ஆசாரங்களற்ற எல்லாவருக்கும் பொதுவாகிய உருவ வழிபாடற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் 1872 -ஆம் ஆண்டு தோற்றி வைத்துள்ளார். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார். அதற்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை 1867 -ல் துவங்கிவைத்துள்ளார். இன்று வரை ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.


வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் வள்ளலார் கூறிய படி வழிபாட்டு முறையை செயல் படுத்தாமல் சமய, மத வாதிகள் உள்ளே பகுந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களுக்கு மாறாக செயல் பட்டு வந்தார்கள்.


எங்களைப் போன்றவர்களின் எதிர்ப்புகளால் பல ஆண்டுகளாக போராடி பல ஆட்சியாளர்கள் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் தான் தீர்த்து வைத்தீர்கள். அதற்க்காக வள்ளலார் வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் அன்பர்களின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம். 


 கடவுள் உருவமற்றவர் கல்லிலும், செம்பிலும், தங்கத்திலும், மரத்திலும், மண்ணிலும் கடவுள் இல்லை கடவுள் ஒளி மயமானவர். அவர் எல்லா உடம்பிலும் உயிரொளியாக  இயங்கிக்கொண்டு இருக்கிறார். அதைத்தான் ஆன்மா என்கிறார்கள். உள்ளமே பெருங்கோயில் ஊன் உடம்பே ஆலயம். ஆலயமான உடம்பில் வாழும் உயிர்களுக்கு தொண்டு செய்யுங்கள் கருணை புரியுங்கள் அதுவே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார். 


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்துதல் வேண்டும் என்றார். வள்ளலார் கூறும் கடவுள் வழிபாடு ஜீவகாருண்யம். பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதே இறைவழிபாடு என்றார்.


வள்ளலார் காட்டிய வழியிலே ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கும் உங்கள் காலத்தில் ஏழைகளின் பசியை போக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். பட்டினி இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 


பசி, பிணி இரண்டும் மனிதனை கொள்ளும் விஷமாகும் இவை இரண்டையும் காப்பாற்றி கொண்டு இருக்கிறீர்கள். இதவே கடவுள் தொண்டாகும் இதுவே கடவுள் வழிபாடாகும். 


மக்கள் தொண்டே மகேசன் தொண்டாகும். ஆதலால் நீங்கள் போலி சாமியார்களையும், போலி மடாதிபதிகளையும்,போலி ஆசிரமங்களையும், போலி குடில் போன்ற வற்றையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தயவு தாட்சண்யம் இன்றி, போலிகளை கைது செய்து சட்டப்படி சிறையில் அடைக்க வேண்டும்.


நம் நாட்டிலே முறையான ஆன்மிகமும் இல்லை முறையான வழிகாட்டுதலும் இல்லை. ஆன்மிகத்தை பற்றி போதிப்பதற்கு ஆன்மிகவாதிகளின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டும் பாடும் இல்லை. 


அரை குறை எல்லாம் ஆன்மிகம் பேசுகிறது, அரை குறை எல்லாம் ஆன்மிக நூல்கள் எழுதுகிறது, அரை குறை எல்லாம் அதற்க்கு ஆதரவு தருகிறது. ஏதும் தெரியாத அப்பாவி மக்கள் பார்த்து கேட்டு படித்து வீண் போய் கொண்டு இருக்கிறார்கள். 


இந்து மதம் மட்டும் அல்ல எல்லா மதங்களிலும் உலக மக்களின் அறியாமையை பயன் படுத்தி குழப்பி கொண்டு தான் இருக்கிறார்கள். 


கண்களுக்கு தெரியாத கடவுளை பற்றி யார் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், வணங்கலாம், வழிபடலாம் கடவுள் பெயரால் கொலையும் செய்யலாம். என்ற மூட நம்பிக்கைகள் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. ஆதலால் தான் போலி சாமியார்கள் போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றி கொண்டு  இருக்கிறார்கள்.


கடவுள் கொள்கையால் தான் இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம், மத வாதம் மித வாதம், பயங்கரவாதம், நக்சல் பார்ட்டிகள், எல்லைத் தகராறுகள்,  அணு ஆயுதப்  போர்கள், குண்டு வெடிப்பு போன்ற போர்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. 


எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோருக்கும் ஓர் இறை என்பதை அறியாத மத வாதிகளால்தான் குழப்பமும் போராட்டமும் போர்களும் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் கடவுள் ஒருவே என்பதை அறியாத ஆன்மிக வாதிகளின் செயல்களாகும்.


நம் தமிழகத்தில்  உங்கள் தலைமையில் பகுத்தறிவு ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும், தலைமை ஏற்று வழி நடத்தி போற்றி பாதுகாத்து கடைப்பிடித்து செயல் பட்டு கொண்டு இருக்கிறீர்கள். தமிழக முதல்வராகிய நமது கலைஞர் என்ன செய்ய போகிறார் என்பதைத் கமிழக மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 


மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுமா? எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுமா?

சட்டத்தின் பிடியில் இருந்து நித்தியானந்தா போன்ற போலி சாமியார்கள் தப்பி விட்டால் மக்களை காப்பாற்றுவது கடினமாகி விடும். பல கோடிகள் வைத்திருக்கும் நித்தியானந்தா பல கோடிகளை தூக்கி எரிந்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வாரா எல்லாம் உங்கள் செயலில் தான் இருக்கிறது.

அரசும் அதிகாரிகளும் என்ன செய்ய போகிறார்கள், சட்டமும் நீதி மன்றமும் என்ன தீர்ப்பு வழங்க போகிறது என்பதை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.

பல கோடிகள் வெல்லுமா? சட்டமும் நீதியும் வெல்லுமா? எது வெல்லப் போகிறது என்பதை மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

நித்தியானந்தாவின் லீலைகள் தமிழ் நாட்டில் நடக்க வில்லை கர்நாடகாவில் தான் நடந்தது ஆதலால் தமிழக காவல் துறை வழக்கை கர்நாடகாவிற்கு மாற்றியுள்ளதாக  தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. தமிழக மக்களும் நித்தியானந்தாவின் மோசடியில் சிக்கி உள்ளார்கள். நித்தியானந்தா வும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை காவல் துறை கவனிக்கவில்லையா?

இதை தமிழக முதல்வர்தான் கவனிக்க வேண்டும். மோசடியில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

மோசடி நாயகன், காம வெறி சாமியார் மக்கள் பணத்ததை கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழி. தங்க சிம்மாசனம் அமைத்து தரிசனம் கொடுக்கும் சமய துரோகியின் முக மூடியை கிழித்து எரிய வேண்டும்.

நித்தியானந்தா என்பவன் ஒரு சாதாரண மனிதன், காம உணர்ச்சி உள்ளவன், அவன் சாமியும் அல்ல, துறவியும் அல்ல, கடவுளும் அல்ல. போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் குற்றவாளி என்பதையும் அவன் மக்களை ஏமாற்றி சேர்த்து வைத்த சொத்துக்களையும் மடங்களையும் ஆசிரமங்களையும் அரசு கைப்பற்றி சமுதாய நலனுக் காக பயன் படுத்த வேண்டும்.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். திருவள்ளுவர் மனிதன் வாழ்வதற்கு வழிகாட்டியவர். வள்ளலார் மனிதனாக வாழ்ந்து ஒளி தேகம் அடைந்தவர். மூட நம்பிக்கைகளையும், கலை உரைத்த கற்பனை களையும் குழி தோண்டி புதைத்தவர். ஜாதி, மத, சமய, இன வேறுபாட்டை எல்லாம் பற்றற விட்டால் தான் மனிதனாக வாழ முடியும் என்றார் வள்ளலார்.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் முன்னாடியே பகுத்தறிவு கொள்கைகளை நம் தமிழ் நாட்டில் விதைத்தவர். அவரை இன்னும் நம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வில்லை. அவரை சமய வாதியாகவே சமய வாதிகள் போற்றி வருகிறார்கள். ஆதலால் அவருடைய முற்போக்கான பகுத்தறிவு கொள்கைகள் மக்கள் மத்தியில் முடங்கி கிடக்கிறது. அவர்களிடம் இருந்து வள்ளலாரையும் அவர் எழுதிய திரு அருட்பாவையும் காப்ற்ற வேண்டியது நமது தமிழக அரசின் கடமை யாகும்.

திரு அருட்பா முழுவதும் அறிவியல், வேதியல், விஞ்ஞானம், மெய்ப்பொருள் அடங்கியதாகும். உலக ஆராய்ச்சிக்கு பயன்படக் கூடியதாகும். உங்கள் ஆட்சியில் தமிழ் செம்மொழி ஆனது தமிழர்கள் உலகம் முழுவதும் பாராட்டப் படுகிறார்கள்.

வள்ளலார் தமிழில், தமிழ் நாட்டில் பிறந்ததற்காக நன்றியும் பெருமையும் அடைவதாக தன் அருட்பாவில் குறிப்பிடுகிறார். தமிழ் மெய்மொழி என்று எழுதுகிறார். உலகிலேயே முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி என்கிறார்.

மேலும் அனைத்தும் தெரிந்த தமிழக முதல்வர்கள் ஆகிய நீங்கள் போலியான குற்றவாளிகளை கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தீர்ப்பு வழங்கி தண்டிக்க வேண்டுமாய் கேட்டுக்க் கொள்கிறேன்.

பெரும் மதிப்பிற்குரிய தமிழக முதல்வராகிய நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதம் எழுதுகிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
செ.கதிர்வேல்.

லேபிள்கள்:

செவ்வாய், 11 மே, 2010

வள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்

ஆன்மநேய அன்புடைய அன்பர்களே! நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை திருவருட்பாவின் மூலமாக படிக்கிறோம், தெரிந்துகொள்கிறோம், மற்றவர்களுக்கு போதிக்கிறோம். ஆனால், அதன் படி நாம் வாழ்கையில் கடைபிடிக்கிறோமா என்று அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் திருவருட்பாவை படிப்பது பேசுவதற்காக அல்ல, வாதம் செய்வதற்காக அல்ல, விழா நடத்துவதற்காக அல்ல. வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறி ஆகிய அருளைப் பெற வேண்டுவதற்காக.

மனித தேகம் எடுத்துக்கொண்டுள்ள நாம் அனைவரும் மனித தேகம் எடுத்ததின் நோக்கம் என்ன என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார், வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க

சுத்த சன்மார்க்க சுகநிலை பெருக
உத்தமனாகுக ஓங்குக

என அருட்பா அகவலில் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் உத்தமனாக வாழ வேண்டுமென்றால் உலகிலுள்ள உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் நேராத படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர்களுக்கு துன்பம் வருகிற பொழுது எவ்வித தந்திரத்திலாவது அவைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இடைவிடாது செய்து வந்தால் நம் உடம்பில் இருந்து உயிர் பிரியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார். நம் உடம்பும் உயிரும் நீண்ட நாட்களுக்கு பிரியாமல் இருக்கும்.

சுத்த சன்மார்க்கம் என்பது நம் உடம்பை சுத்தமாக வைத்திருப்பதல்ல ஆன்மா குடியிருக்கும் ஆலயமாகிய நம் உடம்பில் எந்த விதமான பஞ்ச பூதங்களான உணவை உண்ணாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோற்றாசையோடு காம சேற்றாசை படுவாரை துணிந்து கொள்ள கூற்றாசைப் படும் என்கிறார் வள்ளலார். நாம் உண்ணும் உணவும் உணவினால் உண்டாகும் காமமும் நம்மை கூற்றுவன் என்னும் எமன் ஆசையோடு கொன்றுவிடுவான் என்று கூறுகிறார் வள்ளலார்.

வள்ளலார் உணவு வகைகளை இரண்டாகப் பிரிக்கின்றார். ஒன்று அருள் உணவு மற்றொன்று பொருள் உணவு. அருள் உணவு ஆண்டவனால் கொடுப்பது. பொருள் உணவு மாயையினால் கொடுப்பது இவை இரண்டில் எது நமக்கு தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பொருள் உணவு மரணத்தை உண்டாக்குவது. அருள் உணவு மரணத்தை வென்று பேரின்பத்தை அடையச் செய்விப்பது.

வள்ளலார் உணவை தேடிப் போய் உண்டதாக வரலாறு இல்லை. அன்பர்களுக்காக நண்பர்களுக்காக அவர்கள் தம்மேல் வைத்துள்ள அன்பிற்காக ஒரு பிடி அதாவது கைப் பிடி எடுத்து உண்டு இருக்கிறார். வேறு பொருள் உணவு உண்ணவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

அன்னமுன அழைக்கின்றார் தொளியிங்கே நான்தான்
அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடிமலர்த்தேன்
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும்
ஒரு தலைமை பெருந்தலைவர் அவருடைய அருட்புகழாம்
இன்னமுதம் என்னுடைய அன்பெனும் நறுங் கனியின்
இரதமும் என் தனித்தனைவர்  உருக்காட்சிஎனுமோர்
கன்னனுளே தனித்தெடுத்த தேன் பாகும் கலந்தே
களித்துண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.

என்னும் அனுபவமாலையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார். நாம் எதை நினைத்து வாழ வேண்டுமோ அதை நினைத்து வாழ்ந்தால் தான் அது கிடைக்கும். பொருளை நினைத்துக்கொண்டு அருளை நினைத்தால் எப்படி கிடைக்கும்? ஒன்றை விட்டால் தான் மற்றொன்று கிடைக்கும்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்று திருக்குறளில் திருவள்ளுவரும் மெய்ப்பொருளைப் பற்றி கூறியுள்ளார்.

அருட்பெருஞ்சோதியிடம் செல்லவேண்டுமானால் அருளைத்தேடு பூலோகத்தில் வாழ வேண்டுமானால் பொருளைத் தேடு. இரண்டையும் பிடித்துக்கொண்டு வீணாக அழிந்து விடக்கூடாது. வள்ளலார் வழியில் இருந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களை போதிக்கும் சன்மார்க்க அன்பர்கள் இன்று வரை சுத்த சன்மார்கத்தை கடைப்பிடித்து இருக்கின்றார்களா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

வள்ளலாருடன் இருந்த மெய்யன்பர் வேலாயுதம் மற்றும் அன்பர்கள் அனைவரும் வள்ளலார் மீது அன்பும் பண்பும் பாசமும் மரியாதையும் வைத்துக்கொண்டிருந்தார்களே  தவிர அவர்க்காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. அதனால் வருத்தமடைந்த வள்ளலார் வேலாயுதமும் கைவிட்டுவிட்டார் என்பதை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜாதி மத சமய சம்பிரதாயங்கள் அவர்களை விட்டு விலகவில்லை அவர்களும் விடவில்லை. உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை என்று வேதனைப் படுகிறார் வள்ளலார். ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்த பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உண்மை அன்புடன் உள்ளபடி அனுபவித்தாலல்லது அத்தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால் தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முக்கிய லட்சியத்தில் இருந்து கொண்டு விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று நம்மை பார்த்து வேண்டிக்கொள்கிறார்.

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியே னுமது
தான் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்
என்மார்கத்தில் எனை உமக்குள் ஒருவரெனக்கொள்வீர்
எல்லாம் செயவல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்கத்தவர் போல வேறு சிலப் புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மே விளங்குச் சுத்தசிவ மொன்றே
தன்னானை என்னானை சார்ந்தரிமி னீண்டே

என்று தன் மீது ஆணை வைத்து சொல்லுகிறார். சத்தியம் வைத்து சொல்லியும் நாம் வள்ளலார் கருத்துக்களை கேட்கவில்லை என்றால் சுத்த சன்மார்கத்திளிருந்து என்ன பயன் என்பதை சிந்தித்து பாருங்கள்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்று நம் காலைத்தொட்டு வணங்கி சொல்கிறார். தயவு செய்து புன்மார்கத்தவர் போல் (அதாவது சமயவாதிகளைப் போல்) அறிவு மழுங்கி தெளிவில்லாமல் இருக்காதீர்கள் எல்லாம் வல்ல நம் அருட்பெருஞ்சோதியர் ஒருவர்தான் உண்மைக்கடவுள் என்பதை உறுதியாக நம்பிக்கை வைத்து சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்க வேண்டும். அதை பார்த்து மற்றவர்களும் நம்மை பின்தொடர்ந்து வருவார்கள்.

ஆடாதீர் சற்று மசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் -- வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் -- விரைந்திநியிங்
கென் மார்கமு மொன்றாமே.

என்னும் கருத்தாழமுள்ள பாடலில் தெளிவு படுத்தியுள்ளார். சன்மார்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் அன்பர்கள் வள்ளலார் சுத்தசன்மார்க்க கருத்துக்களுக்கு விரோதமில்லாமல் தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் மலரும்...

லேபிள்கள்:

சனி, 8 மே, 2010

அருட்பெருவெளிக்குள் அண்டங்கள் பல...

லேபிள்கள்:

அருட்பெருஞ்ஜோதி யார்?


அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங் கருணை!
அருட்பெருஞ்ஜோதி!

திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அறிமுகப்படுத்திய கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்.

அவற்றிற்கு இயற்கை உண்மை !இயற்கை விளக்கம் !இயற்கை இன்பம் !என்று விளக்கம் தந்துள்ளார் 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதால் உருவமுள்ள கடவுளாக எண்ணிவிடக் கூடாது. அது ஒரு மாபெரும் அருள் பேரொளியாகும் --பல கோடி அண்டங்களையும்,பல கோடி ஆன்மாக்களையும், ஆன்மாவிற்குள் உள்ள  உயிர்களையும் உயிர்த் தோற்றங்களையும் அணுக்களையும் அணுக்களின் ஆற்றல்களையும் அணுக்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் அண்டங்களையும், மற்றை எல்லாவற்றையும் ஆண்டுகொண்டு (அதாவது ஆட்சி செய்துகொண்டிருப்பதால்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெயர் சூட்டியுள்ளார்.

அவர் எப்படி உள்ளார் என்பதை விளக்குகிறார்!

இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லா கலைகளையும்,எல்லாப் பொருள்களையும் ,

எல்லா தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,     எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும் ,மற்றை எல்லா வற்றையும்,

தமது திருவருள் சத்தியால் ;--

தோற்றுவித்தல் ,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல் ,விளக்கஞ் செய்வித்தல் ,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெரும் தலைமை வகிப்பவர் --அருட்பெருஞ்ஜோதியர் என்றும் --சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக கடவுள் ஒருவரே,அகம,புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில்,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

இயற்கை உண்மை !

அவர்தான் அருட்பெரும் சோதியர் என்பவராகும்,! இதற்கு வள்ளலார் வைத்த பெயர் இயற்கை உண்மை என்பதாகும்,இயற்கை உண்மை என்பது பிறப்பு இறப்பு இல்லாதது,என்றும்,எக்காலத்தும்  அழிவு இல்லாதது,தோற்றம் மாற்றம் இல்லாதது,எக்காலத்தும் நிலைப் பெற்றது, இயற்கை உண்மை என்பது அருட்பெரும் வெட்ட வெளியாகும்,

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பார்ப்போம் !

வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலாம்
வகுக்குமடி வெளிகள் எல்லாம் வயங்கு வெளியாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்த பரவேளியாகி இயல் உபய வெளியாய்
அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்த பெருவெளியாகி அருள் இன்ப வெளியாத்
திண்ணமுறுந் தனி இயற்கை உண்மை வெளியான
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

பஞ்ச பூதங்களில் உள்ள வெளி -- பல கோடி அண்டங்களுக்கும் இடை இடையே உள்ள வெளிகள், மற்றும் உள்ள பல கோடி வெளிகளுக்கும் வெளியே -அமைந்துள்ள இயற்கை உண்மை பெருவெளியே,திருச் சிற்றம்பலம் என்னும் தனி வெளியில் உள்ளதுதான் அருட்பெரும்ஜோதி என்னும் அருள் வெளியாகும்.

வெளியைப் பற்றி மற்றும் ஒருபாடல் வருமாறு !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
அருட்பெரும் தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெருஞ் சித்தி என் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

இந்த வெளியைக் கண்டவர்கள் யாராவது உண்டா ?எந்த அருளாளர்கள் யாராவது கண்டது உண்டா ?அந்த இடத்திற்கு யாராவது சென்றது உண்டா ?

இதுவரையில் தோன்றிய சமய மதவாதிகள் கண்டுள்ள வெளி எது என்றால் ஒரு அண்டத்திற்கும் மற்று ஒரு அண்டத்திற்கும் இடையே உள்ள வெளியைக்  கண்டு உள்ளார்களே தவிர அருட்பெரு வெளியைக் கண்டவர்கள் இல்லை !

அருட்பெரு வெளி என்பது,பலகோடி அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பேரண்டமாகும்.அங்கே இருப்பது , அருட்பெருஞ்ஜோதி என்னும் ஓர் பிரம்மாண்டமான பேரொளியாகும், அதற்குமேல் உயர்ந்த எந்த ஜோதியும் இல்லை, எந்த ஒளியும் இல்லை. அதனால்தான் அருட்பெருஞ்ஜோதிக்கு சமமானது நிகரானது அருட்பெரும்ஜோதியே யாகும் !

அருட்பெருஞ்ஜோதிக்கு சமமானது அருட்பெருஞ்ஜோதிதான் என்பதை தெளிவுபடுத்துகிறார் வள்ளலார்.அதனால்தான் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என இரண்டுமுறை மகாமந்திரத்தில் முதலில் அறிமுகப்படுத்துகிறார்.

இயற்கை விளக்கம்,!

இயற்கை விளக்கம் என்பது -- தனிபெருங்கருணை என்பதாகும் இயற்கை உண்மையான அருட்பெரும்ஜோதியின் உள் இருந்து வெளியே விளக்கமாக தோன்றும் ''அருள் ''தனிப்பெருங் கருணை என்பதாகும்.,இவை  ஈடு இணை இல்லாத பெருங் கருணையாகும், பேதமில்லாத கருணையாகும்.அன்பும் தயவும் சேர்ந்த தனிப்பெருங் கருணை யாகும் .

இந்த தனிப்பெரும் கருணையால் தான் அனைத்தும் தோற்றம் தந்து விளக்கம் பெறுகிறது.அதனால் இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளலார் .அந்த அருள் பெருவெளியில்  இருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன .

இயற்கை விளக்கம் என்னும் பாடலைப் பார்ப்போம்.!

சார்பூத விளககமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கம் எல்லாம் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரை விளக்கமாகி
நிலைத்த பராபரை விளக்கமாகி அகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்த விளக்கமதாய்ப்
பெரு விளக்கமாகி எல்லாம் பெற்ற விளக்கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கமதாம்
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

இயற்கை உண்மை என்னும் அருட்பெரும்ஜோதியின் கருணையினால்{அருளால் } அனைத்தும் விளக்கம் பெறுவதால் இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளலார் ,

இந்த உண்மையைத் தெரியாமல் சமய மத வாதிகள் கண்டபடி உளறிக்  கொண்டு இருக்கிறார்கள்,இயற்கை உண்மை என்னும் அருட்பெரும்ஜோதிக்கும் உருவம் இல்லை! இயற்கை விளக்கம் என்னும் தனிப்பெரும் கருணைக்கும் {அருளுக்கும் }உருவம் இல்லை ! எந்த தெய்வங்களாலும்,எந்த கடவுளாலும் எந்த இறைவனாலும் கொடுக்க முடியாத கருணைதான் --தனிப பெருங்கருணை என்பதாகும்.

அடுத்து இயற்கை இன்பம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார் !

இயற்கை இன்பம் -இயற்கை இன்பம் என்றால் என்ன ?எல்லா அண்டங்களிலும் உள்ள  எல்லா உயிர்களுக்கும் பேதம் இல்லாமல்,சமமாக
 அருளைக் கொடுத்து இன்பம் அடைய செய்விப்பது தான் இயற்கை இன்பமாகும் .தான் உயிர்களுக்கு அருளைக் கொடுத்து இன்பம்{மகிழ்ச்சி } அடைய செய்வித்து தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது இயற்கை இன்பமாகும் .அதுவே நான்காவதாக சொல்லிய அருட்பெரும்ஜோதி என்பதாகும்

இயற்கை இன்பத்தைப் பற்றி,வள்ளலார்  பதிவு செய்துள்ள பாடலைப் பார்ப்போம்.

இடம் பெரும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக
இன்பம் உயிரின் இன்பம் முதல் எய்தும் இன்பமாகித்
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம்
சத்தியப் பேரின்பம் முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம பெறும் மெய்ப் பொருள் இன்பம் நிரதிசய இன்பம்
ஞான சித்திப் பெரும்போக நாட்டரசின் இன்பமுமாய்த்
திடம் பெற ஓங்கிய இயற்கைத் தனி இன்பமயமாம்
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

இந்திரிய இன்பம்,கரண இன்பம்,உயிர்களின் இன்பம் ,ஆன்ம இன்பம்,அறிவு இன்பம்,சத்திய பேரின்பம்,முத்தி இன்பம்,மெய்ப்பொருள் இன்பம்,அதிசிய இன்பம்,ஞான சித்தி இன்பம்,அருள் அரசாட்சியை நடத்தும் இன்பம்,கடவுள் நிலை அறிந்து அதன் மயமாகும் இன்பம் --போன்ற அனைத்து இன்பங்களையும் தருவதுதான் இயற்கை இன்பமாகும் .

இயற்கை இன்பத்தை முழுவதுமாக பெற்றவர்தான் நம்முடைய அருட் தந்தை என்னும் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும்,- நாம் அனைவரும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் --இயற்கை உண்மை,--இயற்கை விளக்கம் --இயற்கை இன்பம் --என்னும் மெய்ப் பொருளைக் கண்டு கொள்வதற்கு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் வாழ்க்கை வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

சமய மதங்களை பின் பற்றினால் உண்மை விளங்காது !       

இவ்வுலகிலுள்ள சமய, மத, தெய்வங்களாகிய மாயா உருவங்களாகிய, கல்லிலும், செம்பிலும்,பொன்னிலும், மரத்திலும், மண்ணிலும் கடவுள்கள் இல்லை, கருணையும் இல்லைஅவைகள் யாவும் மனிதர்களால் உருவாக்கியுள்ள விளையாட்டு பொம்மைகளாகும். அவைகள் யாவும் தத்துவ கற்பணை கதைகளாகும் என்கிறார் வள்ளலார்.

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை கருணை யிருக்கிறது. இவர்களால் கிடைக்கும் கருணையானது இவர்கள் மூலமாகக் கிடைப்பதில்லை. அருட்பெருஞ்ஜோதியிடத்தில் இருந்து பெற்று மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதையும் அவர்களிடத்திலிருந்து எளிதில் பெற்றுக்கொள்ள முடியாது.

பொய்யான மந்திரம், தந்திரம், விரதம், அபிஷேகம், ஆராதணை, வேடிக்கை வினோதங்கள், பொய்யான வழிபாட்டுமுறைகள் போன்ற குழந்தைத்தனமான விளையாட்டுகள் விளையாடி அற்பமான கருணையை பெறவேண்டியுள்ளது.

ஆதலால் இடைத்தரகர்களாகிய சமய,  மத தெய்வங்களை நம்பவேண்டாம். அவர்களிடமிருந்து பெறவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வியாபாரிகள். இலாபம் சம்பாதிக்க பார்கிறார்கள். நாம் நேரடியாக அருட்பெருஞ்ஜோதியிடம் இலவசமாக கருணையை பெற்றுக்கொள்ளலாம். நமக்கு இடைத்தரகர்கள் வேண்டாமென்று உலகமக்கள் அனைவரையும் ஆன்ம நேயத்துடன் அழைக்கிறார் நம் வள்ளல் பெருமான் அவர்கள்.

அடுத்து மகா மந்திரத்தில் ஒரு அருட்பெருஞ்ஜோதி யென்று சொல்கிறார். இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கும், பொருள்களுக்கும், வடிவங்களுக்கும், வண்ணங்களுக்கும், குணங்களுக்கும், செயல்களுக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் காரண காரியமாய் தகுதிக்குத் தகுந்தாற்போல் முறைத் தவறாமல், பேதாபேதமில்லாமல் எல்லாவற்றிற்கும் தானே காரணமென்பதை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் "ஒரே ஒளிதான் அருட்பெருஞ்ஜோதி" என்றும், அவரே முழுமுதற்கடவுளென்றும் கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்பதை குறிக்கும்வகையில் மகாமந்திரத்தில் அருட்பெருஞ்ஜோதியென்று முடிக்கிறார்.

அருட்பெருஞ்ஜோத அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


என்னும் மகாமந்திரம் எல்லா மந்திரங்களுக்கும் மூலமாக, ஆதியாக உள்ளதால் எல்லாவற்றிற்கும் நன்மையே செய்வதால் ஈடு, இணையில்லாததால் மகா மந்திரமென்று பெயர்சூட்டியுள்ளார் வள்ளலார்.


ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றும் இரண்டுமானார்
உருவமில்லார் அருவமில்லார் அருவுருவுமானார்
அன்றுமுளார் இன்றுமுள்ளார் என்றுமுள்ளார் தமக்கோர்
ஆதியில்லார் அந்தமில்லார் அருட்பெருஞ்ஜோதியினார்
என்று கணல் மதியகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
யாவும் இலார் யாவும் உளார், யாவும் அலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம்பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

என்று வள்ளலார் ஆறாம் திருமுறையில் பதிவிளக்கம் என்ற தலைப்பில் மேலே கண்ட பாடலை பதிவு செய்துள்ளார். உலகிலுள்ள அனைவரையும் வாழவைக்கும் அருமையும் பெருமையும் வாய்ந்த மகாமந்திரத்தை தினந்தோரும் உச்சரித்தால் எல்லா நலமும் கிடைக்கும் என்பது சத்தியம்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மற்ற தெய்வங்கள் போல் குடும்பம் நடத்தும் தெய்வம் அல்ல என்பதை--வள்ளலார் எப்படி பதிவு செய்துள்ளார் என்பதைப் பார்ப்போம்

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏதும் இலார் தத்துவங்ககள் ஏதும் இலார் மற்றோர்
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும்
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

மேலே கண்ட பாடலில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலைகளை தெளிவாக எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் இதற்கு விளக்கமே தேவை இல்லை சாதாரண மனிதர்களில் இருந்து பெரிய படிப்பு படித்தவர்கள வரை புரிந்து கொள்ளும்படி விளக்கி உள்ளார்--- நம் அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் .

இந்த உலகம் தோன்றியதில் இருந்து உண்மையான கடவுளை யாரும் காண வில்லை --பொய்யான கற்பனைக் கடவுள்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்கள். அதனால் மக்கள் பிறந்து பிறந்து-- இறந்து இறந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பம் நடத்தும் கடவுள்களை ,கோவில்களில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள் அவர்களால் எந்த பயனும் இல்லை,

கடவுள் நம் உடம்பில் உள்ள தலைப் பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேலே சிற்சபை என்னும் இடத்தில் ஆன்ம ஒளியாக உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளார் .அதுவே அருட்பெரும்ஜோதியாகும் ,அந்த சிற்சபையின் கண்ணே மனதை செலுத்த வேண்டும் இதுவே இறை வழிபாடாகும் .

அலைபாயும் மனதை சிற்சபையில் செலுத்தி நிறுத்த வேண்டுமானால் --ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் தேவைப்படுகிறது.--அதாவது உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்,இருக்க வேண்டும்,மேலும் உயிர்களுக்கு வரும் துன்பங்களான --பசி,கொலை,பிணி,இச்சை எளிமை,பயம்,துன்பம் ,போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் .நம்மால் முடிந்த அளவுக்கு செய்தால் போதுமானதாகும்.

இறை வழிபாடு என்பதே ஜீவ காருண்யம் !
உயிர் இரக்கம் என்பதே இறை வழிபாடாகும்.!

அதனால்தான் வள்ளலார் --கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !என்றார்.

தயவு உடையோர்  எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவரே !
அருள் உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை அடைந்தவர் !   

மூட நம்பிக்கையில் மனதை செலுத்தாமல் --உண்மை மார்க்கமான சன்மார்க்கத்தில் அறிவை செலுத்தி --உண்மைக கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் .உங்களுக்கு எல்லா நன்மைகளும் உங்களைத் தேடிவரும் .

வள்ளலாருக்கு அழியா வரம் தந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் எங்கு உள்ளார் என்பதை மேலும் தெளிவாக ஒரு பாடலை பதிவு செய்கிறார் !

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையை
உன்ன முடியா அவற்றின்
ஓராயிரம் கோடி மாலண்டம் அரன்அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதா
சிவன் அண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என் புகலுவேன்
உருவுறு இவ் அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உறு சிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !

அளவிட முடியாத அண்டங்களை எல்லாம் தன் வசமாக்கிக் கொண்டு அருள் வெளியின் நடு நின்று நடனமாடிக் கொண்டு இருக்கும் உன்னுடைய பெருமையை எப்படி புகழ்வேன் ,அண்டங்கள் எல்லாம் சிறு சிறு அணுக்களாக அசைந்து கொண்டு இருப்பதை எனக்கு காண்பித்து -என்னையும் ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரமும் {அருள் }தந்த மெய்த் தந்தையே !நீ ஒருவர்தானே தெய்வம் --இந்த பெருமையை எப்படி உரைக்க முடியும்

இதை ஏன் சமய மதவாதிகள் தெரிந்து கொள்ளாமல் பொய்யான தெய்வங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .என்று வேதனைப் படுகிறார் வள்ளலார் .

மேலும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் பெருமையை வள்ளலார் சொல்லுவதை பாருங்கள் கேளுங்கள்.!

காய் எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒரு பெருங்
கருணை அமுதே எனக்குக்
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
காட்சியே கனக மலையே
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித்
தலைவனே நின் பெருமையைச்
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
சார்கின்ற தோறு அந்தோ
வாயெலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும்
மதிஎலாம் தித்திக்கும் மென்
மன்னிய மெய் அறிவெலாம் தித்திக்கும் என்னில் அதில்
வரும் இன்பம் என் புகல்வேன்
தூயெலாம் பெற்ற நிலைமேல் அருட் சுகம் எலாம்
தோன்றிட விளங்கும் சுடரே
துரிய வெளி நடுநின்ற பெரிய பொருளே அருட்
ஜோதி நடராஜ குருவே !

என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் --பெருமையை போற்றி புகழ்ந்து அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறார் வள்ளலார் கருணையே வடிவமாக இருக்கும் அருட்பெரும்ஜோதி ஒன்றே உண்மைக கடவுளாகும்.

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவான கடவுளை --தமிழ் நாட்டில் உள்ள வடலூர் என்னும் இடத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார் வள்ளலார் அந்த இடத்தைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள்.

உத்தர ஞான சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும் ,பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப் பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்கினற தெய்வப் பதியின் இடத்தே இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞானசபையில் --இயற்கை உண்மை நிறைவாகிய திரு உருவைத் தரித்து இயற்கை இனப் நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திரு நடச்செய்கையை ,எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருள்கின்ற --

அருட்பெரும்ஜோதியிராய் அமர்ந்து அருள் புரிந்து கொண்டு உள்ளார் .

அளவு குறிக்கப் படாத நெடுங்காலம் அளவு குறிக்கப் படாத சித்திகள் எல்லாம் விளங்க அமர்ந்து விளையாடிக் கொண்டு உள்ளார் .ஆதலால் அனைவரும் வந்து வந்து தரிசிக்கப் பெருவீர்களானால் கருதிய வண்ணம்,பெற்று பெருங் களிப்பு அடைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல் --மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பு   அடைவீர்கள் .  
    
இது சத்தியம் !இது சத்தியம் !

உங்கள் அன்பில் என்றும் ;;-ஆன்மநேயன் கதிர்வேலு .

மீண்டும் தொடரும் ;--

லேபிள்கள்:

வெள்ளி, 7 மே, 2010

சத்திய ஞான சபையை வள்ளலார் பூட்டியது எதனால்?


வடலூரில் சத்திய ஞான சபை !


வடலூரில் சத்ய ஞான சபையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்.ஆணைப்படி  கட்டளைப்படி எக்குறையும் இல்லாமல் கட்டிமுடித்து வைக்கிறார் வள்ளலார்.

சத்திய ஞான சபையின் வரைபடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வரைந்து வள்ளலாரிடம் கொடுத்துள்ளார் ,

சத்திய ஞான சபையை கட்டிமுடித்து நிறைவு பெற்ற பின்பு.சன்மார்க்க  அன்பர்களுக்கு ஓர் கட்டளை வைக்கிறார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய
ஞானசபை
விளக்கப் பத்திரிக்கை

இன்று தொடங்கி சபைக்கு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும் 
சாலைக்கு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்
சங்கத்திற்கு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்
பெயர் வழங்குதல் வேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்ஜோதி சித்தி வெளிப்படும் வரைக்கும், ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும், பித்தளை முதலியவற்றுள் செய்த குத்து விளக்கு வேண்டாம். தகரக்கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி, கரண் சுத்தி உடையவர்களாய் திருவாயிற்படிப் புறத்தில் இருந்துகொண்டு விளக்கு எற்றி பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது, எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது, உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்துச் செய்விக்க வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்.

நாலு நாட்களுக்கு ஒருமுறை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும், பெரியரைக் கொண்டாயினும், உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும், தூசு துடைப்பிக்கப் புகும்போது, நீராடிச் சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து, முட்டிக்காலிட்டுக்கொண்டு தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்கனமே செய்விக்கவேண்டும்.

விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவரும், எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும், பொருள், இடம், போகம் முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் தெய்வ நினைப்புள்ளவர்களாய், அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும்போதும், தூசு துடைக்கும் போதும், நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர்கையிலும் வெளிப்பட இறுத்தல் கூடாது. அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோளை ஆஸ்தான காவலுத்தரவாதியா இறுக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

இதன் தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன் என்று ஆங்கிரச வருடம் ஆடி மாதம் 5ந் தேதி 1873ம் வருடம் வெளியிடுகிறார். இப்படிக்கு சிதம்பரம் இராமலிங்கம் என்று கையொப்பமிட்டு ஞான சபை விளக்கப் பத்திரிகையை வெளியிடுகிறார்.

ஞான சபையின் உண்மை !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு இட்ட கட்டளைப்படி சபையை கட்டி முடித்து சபையின் செயல்பாடு குறித்து விளக்கமாய் தெளிவுபட எழுதி வைத்துள்ளார்.

வள்ளலாரின் உடம்பு, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் முத்தேகசித்தி பெற்று யாருக்கும் வெளிப்படக் காட்டாமல் சாதாரண மனித உடம்பு போலவே அன்பர்களுக்கு காட்சி கொடுத்துக்கொண்டுவந்து இருக்கிறார்.

சபை கட்டுவதற்கு முன்பே தன் தேகத்தை ஒளி தேகமாய் மாற்றிக்கொண்டுள்ளார் என்பது.அவருடன் இருந்த சன்மார்க்க  அன்பர்களுக்கு தெரியாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அழைத்துப் போவதற்காக,மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் தங்கி கொண்டு  காலம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சபைக்கு வரும் காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார்.

வள்ளலார் அறிவித்தபடி சபையை கவனிக்க அன்பர்கள் தவறி விடுகிறார்கள் ஆதலால் வள்ளலாருக்கு வருத்தம் ஏற்படுகிறது, கோபத்தோடு சபையை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார்.

வள்ளலார் எண்ணத்தின்படி  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெரும் சித்தி சபையின் உள் வெளிப்பட்டு இருக்க வேண்டும். வள்ளலாரும் அருட்பெரும் ஜோதி ஆண்டவரும் சத்திய ஞான சபையின் உள்ளே கலந்திருக்க வேண்டும். வள்ளலார் ஒளிதேகம் சபையின் உள்ளே  வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வள்ளலார் எண்ணப்படி அவை நடைபெறவில்லை.

வள்ளலாருடன் நீண்டகாலம் பழகி இருந்தவர்களே வள்ளலார் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளவில்லை. வள்ளலாரே அவர்களை நினைத்து மிகவும்  வேதனை பட்டுள்ளார். வள்ளலாருடன் இருந்தவர்கள் வள்ளலாரிடம் அன்பும் பாசமும் பணிவும்  வைத்திருந்தார்களே தவிர சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க முடியாதவர்களாய் இருந்திருக்கின்றார்கள்.

காரணம் -- சாதி, மத, சமய, இன பற்றுதல்களை அவர்களால் விட்டுவிட முடியவில்லை. அந்த அளவிற்கு சமய மதக் கொள்கைகள் அவர்கள் உள்ளத்திலே ஆழமாய் பதிந்து இருந்ததே காரணமாகும்.

வள்ளலார் கூரிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்களே தவிர எவராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பது உண்மையாகும்.

வள்ளலாரே வேதனையுடன் சொல்லி உள்ளார் .இவ்வளவு காலம் என்னுடன் இருந்தும்.பழகியும்.நான் சொல்லும் சுத்த சன்மார்க்க கொள்கைகள் என்னவென்று உங்களால் புரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்று வருத்தப்பட்டு வெளிப்படுத்து கின்றார் . 

இனி சன்மார்க்க அன்பர்களாகிய நாம் வள்ளலார் கூரிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து வள்ளலார் வழியிலே நடப்போம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம்!  இது சுத்த சன்மார்க்க காலம் ,நாம்  பெற வேண்டியதை இக்காலத்திலே பெற்றுக் கொள்ள வேண்டும்.என்பது வள்ளலார் கட்டளை ஆணையாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவ நெறி என்று உணர்ந்து சேர்ந்திடுமின் நீண்டு

வருநெறியில் எனை யாட்கொண்டு அருள் அமுதம் அளித்து  வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளம் கொண்டு அருளிப் பெருங் கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறியில் வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

என்னும் ''ஞான சரியை'' தலைப்பின் பாடலில் தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார் ..

இந்த உயர்ந்த மனித பிறப்பில் பெற வேண்டியதை காலம் உள்ளபோதே பெற்றுக் கொள்வோம்.

இதன் தொடர்ச்சி அடுத்த கட்டுரையில் வெளிப்படும்.

அன்புடன் ஆனமநேயன் ஈரோடு கதிர்வேல்.

மீண்டும் வலைப்பூ பூக்கும்...

லேபிள்கள்:

வியாழன், 6 மே, 2010

உலகம் தோன்றிய விதம்



பஞ்ச பூதங்களின் இயக்கம்...



விளக்கப் படங்கள்:

படம் 1: முதலில் உலகம் விரிந்து சுருங்கும் பந்துபோல் அருட்பெருஞ் ஜோதியால் தோற்றுவிக்கப்பட்டது.


படம் 2: பஞ்ச பூதங்கள் இயங்குவதற்காக ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டது.



படம் 3: பஞ்ச பூதங்கள் முறையே ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம்.



பஞ்ச பூதங்களின் இரகசியம் விரைவில்...

லேபிள்கள்:

சனி, 1 மே, 2010

வள்ளலார் இறைவனிடம் வேண்டும் விண்ணப்பம்

இயற்கை உண்மையரென்றும் இயற்கை அறிவினர் என்றும், இயற்கை அன்பினர் என்றும், நிர்குணர் என்றும், சிற்குணர் என்றும், நித்தியர் என்றும், சத்தியர் என்றும், ஏகரென்றும், அநேகர் என்றும், ஆதியர் என்றும், அநாதியர் என்றும், அமலர் என்றும், அருட்பெருஞ் ஜோதியர் என்றும், அற்புதர் என்றும், நிரதிசயர் என்றும், எல்லாமானவர் என்றும், எல்லாம் உடையவர் என்றும், எல்லாம் வல்லவர் என்றும் குறிக்கப்படுதல் முதலிய அளவுகடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற,

தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளே!

தேவரீர் திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோர்களாகிய நாங்கள் சிற்றறிவாற் செய்துகொள்ளும் சிறு விண்ணப்பங்களை திருச்செவிக்கு ஏற்பித்தருளி எங்களை வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் உங்கள் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் பெருமைகளை படித்து அறிந்து தேடி கண்டுபிடித்து உண்மையான கடவுள் யார்? என்று கேட்டு அறிந்துகொள்ள ஆசைப்பட்டதுண்டு ஆனால் யாரும் உண்மையான கடவுள் யார் என்பது தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம் இன்னும் எங்களுக்கு அந்த உண்மையான கடவுளின் அறிமுகம் கிடைக்கவில்லை என்று கண்களில் நீர்விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

"கருணாநிதியாகிய கடவுளே!”

நாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி எங்களை காத்தருளி உண்மையை தெரிவிக்க வேண்டும்.

இம்மனித தேகத்தில் செலுத்திய காலத்தும் தாய் வயிற்றிலும் சிசு பருவத்திலும் குமாரப்பருவத்திலும் பல்வேறு அவத்தைகளால் அறிவின்றிருந்தோம் ஆதலின் "தேவரீர் பெருங்கருணைத் திறத்தை" அறிந்துகொள்ளாமல் வீண்போது கழித்தோம் அப்பருவம் கழிய இப்பருவத்தினிடத்தே

எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருள்களையும், மற்ற எல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலம் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மையன்பால் கருத்தில் கருதி வழிபாடி செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்குமென்று அறிந்தேன்.

அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாத, பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்று அருளறிவால் அறிந்துகொண்டோம். எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட உணர்த்தி அருளப்பெற்றும்.

அவ்வருள் பெற்றது தொடங்கி "கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்?” மரணம், பிணி, மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்றுமழியாத பேரின்பசித்தி எக்காலம் கிடைக்கும் என்று எண்ணி எண்ணி வழிதுறை தெரியாமல் வருந்துகின்ற தருணத்தே,
"களைப்பறிந் துதவும் கருணைக்கடலாகிய கடவுளே!”

தேவரீர் நெடுங்காலம்மரண முதலாகிய அவத்தைகளால், துன்பமுற்றுக் களைப்படந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும், நீங்கி, களைப்பும் கலக்கமுந் தவிர்த்து, அழியாத பேரின்பசித்தியை அடைவித்தற் பொருட்டாகவே,

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் பூர்வஞான சிதம்பரத்தின் வடக்கே பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூரிலுள்ள உத்தர ஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெலாம் விளங்கத் திருவறுள் நடஞ் செய்வோ மென்றும் அதுதருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், அப்பதியினிடத்தே, யாம் அருள்நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபை காணுதல்வேண்டுமென்றும், திருவருட் குறிப்பால் அறிவித்ததுமின்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞானசபையையும் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய, தேவரீர் பெருங்கருணையைக் கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம். . இனி அத்திருஞானசபையை அலங்கரித்தல் வேண்டுமென குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்கத் தொடங்குகின்றோம்.


அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே!

தேவரீர் அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யம் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்வித்தாலும், யாதொரு தடையும் வாராத வண்ணம் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்.

"சர்வ வல்லபராகிய தனித்தலைமை க் கடவுளே!”

அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மையடியர்களாக்கி , உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி, வாழ்வித்தல் வேண்டும்.

“எல்லாமுடைய அருட்பெருஞ் ஜோதி அற்புதக் கடவுளே!”

இதுதொடங்கி எக்காலத்தும், சுத்தசன்மார்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்: வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும், சுத்தசன்மார்க்கதின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும் என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டினார்.

எல்லாமாகிய தனித்தலைமை
“அருட்பெருஞ் ஜொதி ஆண்டவரே!”
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

இப்படி,
சிதம்பரம், இராமலிங்கம்.


லேபிள்கள்: