திங்கள், 31 அக்டோபர், 2022

கடவுளைக் கண்டேன் ! தொடர்ச்சி 8.

 *கடவுளைக் கண்டேன் !*


தொடர்ச்சி பாகம் 8.


*1970 ஆம் ஆண்டு கர்பமான என் மனைவி அமுதாவிற்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்தது, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது. உற்றார் உறவினர்கள் நண்பர்களை அழைத்து விருந்துவைத்து பெண் குழந்தைக்கு *"சுமதி"என்று பெயர் சூட்டினோம். அன்று ஏழை எளியவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி செய்தோம்.*


*வள்ளலார் பாடல் !*


திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்


தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே


*உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க*

உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்


மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே! 


*மேலே கண்ட பாடலில் கண்டபடி எங்களின் அன்புகலந்த உடல் உறவின் உணர்ச்சியால் இறைவனுடைய திருஅருளால்,இரண்டாவதாக கிடைத்த பரிசு பெண் குழந்தையாகும்*எங்கள் வீட்டில். உருவிளங்கியது, உயிர் விளங்கியது உடம்பு காட்சியாக சாட்சியாக தோற்றம் அளித்தது.* 


*அன்பு பாசம் ஆனந்தம் மகிழ்ச்சி திருப்தி இன்பம் பொங்கி,பெண் குழந்தை பிறந்த தருணத்தில் வீட்டில் எல்லோருக்கும் பேரானந்தம் தனிச்சிறப்பு மகிழ்ச்சியுடன் விளங்கியது.*


*ஆண் ஒன்று,பெண் ஒன்று இரண்டு குழந்தைகள் போதும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளலாம் என்று எனது மாமனார் மாமியார் சொன்னார்கள்.காரணம் மகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக,* 


*நாங்கள் மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பவில்லை*


*நான் விரும்பிய கடவுள்!*


*எங்கள் அப்பா பெயர் சென்னிமலை, என்பெயர் கதிர்வேல்,என் அண்ணன் பெயர் சண்முகம் ஆதலால் முருகர்கடவுள் மேல் எனக்கு பக்தியும் ஆர்வமும் அதிகமானது. ஆதலால் பழனி முருகன்மேல் கண்மூடித்தனமான அளவுகடந்த பக்தி உண்டாயிற்று. ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்திற்கும் தவறாமல் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று  வழிபடுவது வழக்கமாக வைத்திருந்தோம்.*


*மூன்றாவது குழந்தை பிறந்தது!*


*மீண்டும் என்மனைவி கர்பமானாள் 1973 ஆண்டு ஆகஸ்டுமாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனந்தம் ஆனந்தம் அளவில்லா ஆனந்தம்* 


*குடும்பமே கோலாகலம் உற்றார் உறவினர் நண்பர்கள் அழைத்து விருந்து வைத்து "நந்தகுமார்" என்று பெயர் சூட்டினோம்* 


*இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை போதும் என்று முடிவு செய்து மனைவிக்கு குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம்*


*அப்போது எனக்கு 25 வயது என் மனைவிக்கு 23 வயது, எங்களது இளமை வயதிலே மூன்று குழந்தைகளுக்கும் தாயாகவும் தந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் போதும், மேலும்   குழந்தை வேண்டாம் என்பதை உணர்ந்து குழந்தை பாக்கியத்தை நிறுத்திக் கொண்டோம்*


*மூன்று குழந்தைகளுக்கும் நல்ல தாயாகவும், நல்ல தந்தையாகவும் திருவருள் துணையுடன்  பாதுகாப்புடன் நல்ல அறிவு சார்ந்த குழந்தைகளாக படிக்க வைத்து வளர்த்து வந்தோம்.* 


*வள்ளலார் பாடல்!*


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!


*உண்மை தெய்வம்!*


*நாம்தான் குழந்தைகளை பெற்று வளர்க்கின்றோம், தாங்குகின்றோம் காப்பாற்றுகின்றோம்,பாதுகாக்கின்றோம் என நினைத்துக் கொண்டுள்ளோம் அது உண்மையல்ல.ஆன்மாக்கள் உயிர்எடுத்து உடம்பு உண்டாவதற்கு மனித தேகத்தில் உள்ள தாயும்தந்தையும் ஒரு உபகாரக் கருவியாக  இருக்கின்றோம் அவ்வளவுதான்*,


*தாயாகவும் தந்தையாகவும்  தாங்குகின்ற ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற அருள்பேரொளியாகும்.அந்த ஒளியின் ஏகதேசமே ஆன்மாக்களாகும் இந்த உண்மை சன்மார்க்கத்திற்கு வந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது விளங்கியது. நாம் செய்யும் நன்மை தீமைகளுக்குத் தகுந்தாற்போல் ஆன்மாக்கள் நமக்கு குழந்தைகளாக வந்து பிறக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் நன்மையே செய்து  வாழ்ந்து பழகிக்கொண்டால், நமக்கு பிறக்கும் குழந்தைகளாலும் மற்றவர்களாலும் நமக்குத் துன்பம் துயரம் அச்சம் பயம் வராது பாதுகாத்துக் கொள்ளும் சூழ்நிலையைஎல்லாம் வல்ல பரம் பொருளான இறைவன் உண்டாக்குவார் என்ற உண்மையை தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.* 


*(எங்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான் இறுதியாக பிறந்த ஆண்மகன் நந்தகுமார் வீட்டில்தான் நானும் என் மனைவியும் தற்சமயம் இருக்கிறோம்.எங்களுக்கு எந்த குறைபாடும் இல்லாமல் தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுத்துக்கொண்டு வருகிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றோம்)*


*மூன்று குழந்தைகள் பிறந்ததும் குழந்தைகளின் படிப்பு  வசதிக்காக  சிறிய வாடகை வீட்டில் இருந்து,பள்ளியின் அருகாமையில் உள்ள பெரிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம்.மனைவியின் வேலை பளுவை உணர்ந்து வீட்டுவேலைக்கு வேலைக்காரியை வைத்துக் கொண்டோம்.*

*குழந்தைகளை அருகாமையில் உள்ள பாரதிய வித்யாபவன்,கலைமகள் கல்வி நிலையம்,செங்குந்தர் கல்வி நிலையம் போன்ற பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தோம்.*


*நமக்கும் பிறக்கும் குழந்தைகளை வேற்றுமை பாராமல் அனைவரையும் சமமாக பாவிக்கும் உரிமையை வளர்த்து கொள்ள வேண்டும் அதுவே தாய் தந்தையரின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்*


*அதேபோல் கணவன் மனைவியின் அன்பு பாசம் இரக்கம் ஈகை கருணை  ஒத்து இருக்க வேண்டும்.அதுவே நல்ல இல்லறமாகும்.நாங்கள் இதுவரை எல்லாவற்றிலும் அப்படித்தான் ஒத்த கருத்துடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன் அறிவு தெளிவுடன் வாழ்ந்து வருகிறோம்.*


*முதன் முதலில் ஸ்கூட்டர் வாங்கியது !*


*ஈரோட்டில் தையல் தொழில் செய்பவர்களில் முதன் முதலில் பைக் வாங்கியவன் நான்தான் என்ற பெருமை, லேம்ரெட்டா என்ற நீளமான ஸ்கூட்டர் வாங்கினோம்.அதில் நான் என்மனைவி மூன்று குழந்தைகளும் சேர்ந்து ஐந்து பேறும் செல்வோம், நாங்கள் செல்லும்போது எங்களை எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்.*


*குழந்தைகள் வளர்ந்தன குடும்பம் பெரிதாகியது,குடும்பசெலவு அதிகமானது, தொழிலும் வளர்ந்தது ஓய்வு இல்லாத உழைப்பு, நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை.*


*எங்கள் கடைக்கு போன் !*


*செல்போன் இல்லாத காலம், மத்திய அரசாங்கத்தின் லேண்ட் லைன் போன் மட்டுமே உண்டு. வசதியானவர்கள்,பெரிய  வியாபாரிகள் மட்டும்தான் வைத்திருப்பார்கள்.அக்காலக் கட்டத்தில் தையல் கடைக்கு முதன் முதலில் போன் வைத்தது *ஸ்பென்ஸர்ஸ்* *என்ற எங்கள் தையல் கடைக்குத்தான் மத்திய அரசின் தொலைத்தொடர்பு  வாங்கினோம் போன் நெம்பர் 5657 என்ற எண்.* 


*தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பவானி குமாரபாளையம் மக்களின் விருப்பத்திற்காக பவானி மெயின்ரோட்டில் ஒரு பெரிய ஷோரூம் "ஸ்பென்ஸர்ஸ" கிளை என்ற பெயரில் JKK முனிராஜா அவர்களால் திறப்புவிழா செய்து ஆரம்பித்தோம்* *தொழில் ஈரோட்டிலும் பவானியிலும் அமோக வளர்ச்சி அடைந்தது* 


*தொழில் வளர்ச்சி அடைந்தும் வருமானம் பெறுகியும் சொந்த வீடுகட்டவோ வாங்கவோ சூழ்நிலை அமையவில்லை.* அதன் காரணத்தை அடுத்த கட்டுரையில் தெரியப் படுத்துகிறோம்


*வருமானவரி அதிகாரிகள் சோதனை*


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வள்ளலார் வாலிப்பருவத்திற்கு முன்பே !

 *வாலிப்பருவத்திற்கு முன்பே!* 


*வள்ளலாரின் வாலிப்பருவம் தோன்றுவதற்கு முன்னரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்த உண்மையை வெளிப்படுத்துகிறார்*


*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.*


*வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.*


 *அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*


*அங்ஙனம் செய்வித்ததும் அன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல்* 


*எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,*


*தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்*


*கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி*


*நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.*


*இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!*


*என்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பத்தில் பதிவு செய்கிறார்.*


*எனவே நாம் குழப்பம் இல்லாமல் வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க் தனிநெறியை கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


*இதற்கு தேவையானது ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் பரோபகாரம்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ளும் சத்விசாரம் என்னும் உண்மை அறிந்து இடைவிடாது விசாரம் செய்வதே நமது உண்மையான வழிபாடும் கடமையும் ஆகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

*9865939896*

அன்புடைய நம்மவர்களுக்கு !

 *அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !*


முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


சாதி சமய மதங்களை பின்பற்றுபவர்கள் அவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை விடாமல் பின்பற்றுபவர்கள் மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் உணர்வதற்கும் தங்களை தூய்மை உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


உலகில் உள்ளோர் எல்லோரும் சாதி சமய மதங்களைச் சார்ந்தவர்கள்தான்,என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.


சன்மார்க்கத்திற்கு வந்த பின்பு விட வேண்டியவைகளை அகமும் புறமும் விட்டுவிட்டேன் சுத்த சன்மார்க்கி என்று என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது. என்னைப்பற்றி எனக்குத்தான் தெரியும்,என்னுடன் பழகிக் கொண்டு இருக்கும் சன்மார்க்கிகளுக்குத் தெரியும்


முடிந்த அளவு பற்று அற்ற வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறேன்.


வேஷம் போட்டு எனக்கு நடிக்கத் தெரியாது.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார் என்ற உணர்வு வந்தால் தவறு செய்வதற்கு தோன்றாது.


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் காலம் நேரம் வரும்போது அவரவர்களுக்கே உண்மைகள் வெளிப்படும்.


அப்போது பாடுபட்டோம் பயன் அறியோம் பாழ்க்கு இறைத்து கழித்தோம் என்ற வேதனையும் வருத்தமும் உண்டாகும். 


காலம் உள்ளபோதே வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுவோம்


கூச்சல் குழப்பம் வேண்டாம். 


அன்பு தயவு கருணைக்கு தடையாக இருப்பவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் தொடர்புகள் யாவையும் விட்டுவிட்டால்தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கின்ற அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகள் விலகி அருள் சுரக்கும் என்ற உண்மை விளங்க வேண்டும்.


உடம்பு உயிர் ஆன்மா அணுக்களின் மாற்றங்கள் தன்னைத்தானே சுழற்சி முறையில்( வேதியல்) தயார் படுத்திக் கொள்ளும்.


அவ்வாறு முயற்சியுடன் இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம் வெற்றி நிச்சயம்.


இதற்கு படிப்பு அறிவை விட,ஒழுக்கம் நிறைந்த ஆன்ம அறிவு மிகவும் முக்கியம்.



ஆன்மநேய அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் 

நன்றி

 

அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

*9865939896.*

புதன், 12 அக்டோபர், 2022

அருள் நெறி !

 *அருள்நெறி*


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்? 


*அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்*


அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? 


*நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.*


அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது? 


*காண்பார் காணுமிடம் காணப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம், கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம் முதலியவாய் விளங்கும்.*


இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? 


*புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.*


நன்மை தீமை என்பவை யாவை?


*நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம். புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.*


புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன? 


*மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும்.*


அவையாவன:-?


*மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.*


*வாக்கினால் பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.*


 *தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.*


புண்ணியங்கள்!


*இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்*


*பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்*

 *அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க 

ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்*


அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்? 


*அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி; யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து, இயன்ற அளவில் *அன்ன விரயஞ் செய்தால் நீங்கும்*. 


*மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும்.* 


*மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற் கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.*


அறியாத பாவங்கள் யாவெனில்,?


*நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம்.* 


*இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும்.* 


*இவைகள் யாவும் தினஞ் செய்யுஞ் ஜபத்தாலும், பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.*


*பிராயச்சித்தம் முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன? 


*மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும்.* 


*வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும்.*


*தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.*


வேதாந்திகள் "பாவம் முதலிய கருமங்களும், புண்ணியம் முதலிய ஏதுக்களும் நமக்கில்லை, நாம் சர்வசாக்ஷி" என்கின்றார்களே -அஃதென்ன?


*தேகவாசனை, இந்திரியவாசனை, கரணவாசனை, பிராணவாயுவின் செயற்கையிலுண்டாகும் வேறுபாடு முதலிய நன்மைகளில் சலிப்பற்று ஆகாரம், நித்திரை, பயம் முதலியவைகளில் தாம் சலித்தும் சோர்ந்தும் திடுக்கிட்டும் இல்லாமல், நிவாததீபம் போல் விளங்கும் ஜீவன் முத்தர்கள் சமூகத்தில் பாவ கிருத்தியங்கள் நடவா; புண்ணியங்களும், பிரயோஜனம் பற்றிச் செய்யார்கள்; பொன்னும் ஓடும் சரியாகக் காண்பார்கள்.* 

*அத் தன்மையுடைய நித்திய முத்த சுத்த ஞான தேக சித்தர்கட்குப் பாவ புண்ணியமில்லை யென்று அவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நமக்கே தெரியும்.*


மேலும், *அவர்கள் இந்தப் பவுதிக சரீரத்தில் வசித்தாலும், சரீரமாகிய தத்துவ தாத்விகங்கள் இப்போது நமக்கு அசுத்த தேகமாயும் அசுத்தப் பொறியாயும் அசுத்தக் கரணமாயும் அசுத்த அனுபவமாயும் அசுத்த அறிவாயும் இருப்பது போல் இரா.* 


*தத்தபடத்தைப் போல் காரியத்தில் இலதாயும் காரணத்தி லுளதாயும், அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும்.*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

*9865939896*

வியாழன், 6 அக்டோபர், 2022

முதல்வர் திரு ,ஸ்டாலின் பேசியது ?

 *கோயபல்ஸ் கும்பலுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த மு.க.ஸ்டாலின்!*


சென்னை – ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியபோது, 


திமுக ஆட்சியில் வள்ளலார் முப்பெரும் விழா நடப்பதைப் பார்த்து, மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலருக்கு ஆச்சர்யமாகவும், ஏன், அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்.


*ஏனென்றால், ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக.*


அரசியல் லாபத்துக்கும், சுயநலத்திற்கும், உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கும் மட்டுமே ஆன்மீகத்தை பயன்படுத்தி வருவர்களுக்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி.


தமிழ் மண்ணின் சமயப் பண்பாட்டை அறிந்தவர்கள், இதை நன்கு உணர்வார்கள்!


பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை என்று உணர்த்தி, பிற்போக்குக் கயமைத்தனங்களை எதிர்த்த வள்ளுவரின் மண்தான், இந்தத் தமிழ் மண்!


*‘நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்’* என்று முழங்கிய சித்தர்கள் உலவிய மண், நம்முடைய தமிழ் மண்!


*‘இறைவன் ஒருவன்தான், அவன் ஜோதி வடிவானவன்’* என்று எடுத்துச்சொன்ன வள்ளலாரின் மண், இந்த தமிழ் மண்!


*‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’* என்ற திராவிடத்தின் மூலக்கருத்தியலை முதலில் சொன்னவர் அய்யன் வள்ளுவர் பெருமான்.


*‘சாதியும் - மதமும் - சமயமும் பொய்’* என ஆதியில் உணர்த்தி, *‘சாதி - மதம் - சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன்; சாத்திரச் சோறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்’* – எனப் பாடியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகளார்.


*‘சாத்திரக் குப்பையும் தணந்தேன்’* என்றும் *‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக’* என்றும் கடைசி வரை பாடியவர் அவர்.


*சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே*

*சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே*

*ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்!*

*அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே* - என்று

பாடியவர் வள்ளலார் பெருமான் அவர்கள்.


இத்தகைய வள்ளலார் பெருமான் அவர்களைப் போற்றுவது

என்பது, திராவிட ஆட்சியின் கடமை.


எனவே, *‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’* என்ற திருமூலரின் கருத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு எடுத்துரைத்த நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் வழியில், *வள்ளலாரின் பிறந்தநாளை ‘தனிப்பெரும் கருணை நாள்’* என நாம் அறிவித்திருக்கிறோம்!


இவ்வாறு அவர் பேசினார்.


திமுக இந்து மதத்துக்கும், இந்து சமயக் கடவுள்களுக்கும் எதிரி  என்ற பொய்யை மாறி மாறி வாந்தி எடுத்து அரசியல் பிழைக்க நினைக்கும் RSS சங்கிகள் மற்றும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கோயபல்ஸ் கும்பல் இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.