புதன், 20 டிசம்பர், 2023

மரணத்தை வென்ற மகான்!

*மரணத்தை வென்ற மகான்!* 

*பஞ்ச பூதங்களான நீலம், நீர்,அக்கினி,காற்று ,ஆகாயம் போன்ற  காரிய காரண அணுக்களின் கூட்டுச் சக்தியால் அழிக்க முடியாமல் வாழ்ந்தவர் வாழ்ந்து கொண்டு உள்ளவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்* 

*வள்ளலார் பாடல்!* 

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 

*என்னை ஐந்து பூதங்களாலும் அழிக்க முடியாது,எமனாலும் அழிக்கமுடியாது,வேறு எந்த புதிய புதிய கதிர் வீச்சுகளாலும்,கொலைக் கருவிகளாலும் அழிக்க முடியாது,வேறு எந்தவிதமான தீய சக்திகளாலும் அழிக்க முடியாது என்கிறார் வள்ளலார் காரணம் நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்றவன் என்கிறார்,நீங்களும் என்னைப் போன்று அருளைப் பெறலாம் வாருங்கள் என ஆனம நேயத்துடன் அழைக்கின்றார்.*

*உயர்ந்த அறிவுள்ள மனிதன்!* 

*உயர்ந்த அறிவுள்ள மனிதன் பஞ்ச பூத கருவிகளைக் கொண்டு தன் தேவைக்காக  எவ்வளவோ அறிவியல்,விஞ்ஞானம் அணு ஆராய்ச்சிகளுக்கு தேவையான இயற்கையால் படைக்கப்பட்ட பொருள்களை  புறப்பொருள் அறிவைக் கொண்டு கண்டுபிடித்து அவைகளை துணைக்கொண்டு உலக போகத்திற்கு தேவையான ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார்கள் இறுதியில் பிணி மூப்பு பயம் மரணம் வந்து மாண்டு போகின்றார்கள். பொருள் அறிவைக் கொண்டு வாழ்வதால் பொருளே அழித்து விடுகிறது.*

*அருள் அறிவு !*

*தன்னுடைய ஆன்மாவின் உள் ஒளியாக விளங்கிக் கொண்டுள்ள அருள் அறிவைக் கொண்டு உடம்பையோ உயிரையோ காப்பாற்ற வழிமுறை தெரியாமல் மாண்டு அழிந்து போகின்றார்கள்.*

*வள்ளல் பெருமான் தன் உடம்பில் உள்ள ஆன்மாவைத் தொடர்புகொண்டு இயற்கை உண்மை மெய்ப்பொருளான  தனிப்பெருங்கருணைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு,இயற்கை விளக்க நிறைவாகவுள்ள அருளைப் பூரணமாகப் பெற்று,பஞ்சபூத ஊன் உடம்பை அருள் ஒளி உடம்பாக மாற்றிகொண்டு,என்றும் அழியாத அழிக்க முடியாத, இயற்கை இன்பமான  பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்* 

*வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்ற வேண்டும்!*

*பஞ்ச பூத கருவிகளால் பின்னப்பட்ட  ஊன் உடம்பு என்னும் வாடகை வீட்டில்  ஆன்மா குடியிருக்கின்ற வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்,பின்பு ஆன்மா வேறு வேறு தேகம் எடுத்துக் கொண்டே இருக்கும் இதுதான் இவ்வுலக வாழ்க்கை நியதியாகும்*

*ஆன்ம அறிவைக் கொண்டு அருளைப் பெற்று வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றுவதே வள்ளலார் கற்றுத் தந்த சாகாக்கல்வி யாகும்,சாகாக்கல்வியை கற்றுக் கொள்வதே வள்ளலார் காட்டிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்" ஜீவகாருண்ய ஒழுக்கமும்,அதனால் விளங்கிய  அறிவைக் கொண்டு உயிர் இரக்க பரோபகாரமே கடவுள் வழிபாடும்  ஆகும், மேலும் மனித உடம்பின் அகத்தில் உள்ள ஆன்மாவை இயக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதே சத்விசாரம் என்பதாகும்* 

*மனத்தை அடக்க முடியாது மாற்ற முடியும்!*

*புற உலகில் வாழ்க்கைக்கு தேவையான மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை மேல்  பற்றுக்கொண்டு  தேடி தேடித் திரிந்து இயங்கும் மனத்தை புறத்தில் செல்லாமல் மடக்கி திருப்பி அகப்புறத்தில் இயங்கும் ஜீவனைத் (உயிர்) தொடர்பு  கொண்டு அகத்தில் உள்ள  ஆன்மாவை இடைவிடாது தொடதொடர்பு கொண்டு, ஆன்ம அறிவை வெளிப்படுத்தி, அருள் அறிவைப் பெற்று,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதே  சத்விசாரம் என்பதாகும்.* 

*எனவேதான் பரோபகாரம் சத்விசாரம் என்னும் இரண்டின் வழியாக  இயற்கையான குணத்துடன் இயற்கையான எண்ணத்துடன்,இயற்கையான கருணையுடன் இடைவிடாது காரியத்துடன் செயல்பட்டு, அவற்றின் காரணத்தை கண்டு அதன் வழியாக சென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  அருள் வாரி வாரி வழங்குவார்,வேறு வழியால் அருள் பெறவே வாய்ப்பில்லை (சன்மார்க்க நம்மவர்களே !) என்பதை சத்தியமாக அறிந்து கொள்ள வேண்டும்.* 

*வள்ளலார் பாடல்!* 

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 

*மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்க வேண்டும்*

*மரணத்தை வென்று சத்திய வாழ்வான, பேரின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை எது என்றறிய வேண்டில்:-*

*சுருக்கமாக பதிவு செய்கிறேன்!*

*தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம் முதலிய அசுத்தபூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி, மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும், பொன்வடிவாகத் தோன்றுதல் மாத்திரமேயன்றி ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரணவ தேகத்தையும் தோன்றப்படுதலுமின்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களா யிருப்பார்கள்.* 

*அவர்களது தேகம், உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்; புறத்தே மண் கல் முதலியவற்றால் எறியினும் அவை அவர் வடிவில் தாக்குவனவல்ல. உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்; புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது. உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்; புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல. உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்; புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித் தசைக்கமாட்டாது. உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்; புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்கமாட்டாது* 

*உலக பொருள் இன்பம் மரணத்திற்கு இட்டுச் செல்லும்,அருள் இன்பம் என்றும் அழியாத பேரின்பத்தை வழங்கிக் கொண்டே இருக்கும்* 
 
*வள்ளல்பெருமான் போல் வாழ்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம்*

தொடரும்

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896

சனி, 2 டிசம்பர், 2023

ஜீவகாருண்யம் என்றால் யாதெனில்?

*ஜீவகாருண்யம் என்றால் என்ன?*

*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !* 

*உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள்இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம இன்ப லாபத்தை காலம் உள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்!*

*ஜீவகாருண்யம் என்பது மனிதர்களுக்கு மட்டும் உணவு அளிப்பது அன்று*

*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும்!*

*ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது !*

*சீவகாருணிய ஒழுக்கத்தில் முக்கியமாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவில் பசியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டு மென்றும்,* 

*பசியைப்போல் வேறு வகையினால் சீவகொலை நேரிடுவதானால் அந்தச் சீவகொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடை செய்து உயிர் பெறுவித்துச் சந்தோஷ’ப்பிக்க வேண்டுமென்றும், பிணி பயம் முதலிய மற்ற ஏதுக்களால் சீவர்களுக்குத் துன்பம் நேரிடில் அத்துன்பங்கள் தங்களால் நீக்கத்தக்கவை களாகில் நீக்கவேண்டுமென்றும்,* 

*மனித ஜீவர்கள் தவிர மற்ற ஜீவர்களுக்கும் உபகாரம் செய்ய வேண்டும்*

*மிருகம் பறவை ஊர்வன தாவரம் முதலியன சீவர்களிடத்துப் பயத்தினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் எவ்விதத்தும் நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றுள் துஷ்ட சீவர்களிடத்தும் சிறிது பயத்தினால் வருந் துன்பம் மாத்திரமே யல்லது கொலையினால் வருந்துன்பங்களைச் செய்யப்படாதென்றும்,*

*இவ்வகை முழுதும் சீவ காருணியமேயாதலால் எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணை செய்ததென் றறியவேண்டும்*

*உயிர்க்கொலை ஜீவகாருண்யம் அல்ல !*

*ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும்.* 

*எல்லா ஜீவன்களிடத்தும். கடவுள் உள் ஒளியாக விளங்குகின்றார்!*

*எல்லாச் சீவர்களும் இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும், கடவுள் இயற்கை விளக்கம் மாறுபடும் போது சீவத் தன்மை இல்லாதபடியாலும், கடவுளியற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபடாதாகலாலும், கடவுளியற்கை விளக்கமுஞ் சீவன் இயற்கைவிளக்கமும் அந்தந்தத் தேகங்களினும் விளங்குகின்ற படியாலும்*, 

*ஒரு சீவனை வதைத்து அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்.* 

*எல்லா ஆன்மாக்களும் ஒரேத் தன்மை உடையது எல்லா உயிர்களும் ஒரே தன்மை உடையது, உடம்புகள் மட்டும் வெவ்வேறு வடிவம் வெவ்வேறு வண்ணம் வெவ்வேறு உருவம் மாறுபடுகின்றது.*

*வள்ளலார் பாடல்!*

வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே

எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ

அண்ணல் நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.! 

*மேலே கண்ட பாடலின் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்*

*அருள் எவ்வாறு கிடைக்கும்!* 

*வள்ளலார் பாடல்!*

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.!

*எல்லா உயிர்களையும் எந்த பேதமும் இல்லாமல் தம் உயிர்போல் பாவிக்கும் தன்மையை வரவைத்துக் கொள்ள வேண்டும்,எல்லா ஆன்மாக்களும் சகோதர உரிமைகொண்ட ஒரே தன்மை உடையது என்று அறிந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து பேதம் இல்லாமல் நேசிக்க வேண்டும்*

*அவ்வாறு நேசிக்கின்றவர் எவரோ அவர் உள்ளத்தில் நடம் புரிகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்/ அந்த உண்மையின் உளவு தெரிந்தவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி, மரணத்தை வென்று சுத்த பிரணவ ஞான தேகத்தை பெற்று வாழ்வாங்கு வாழும் தகுதிப் பெற்றவர்களாவார்கள்.*

தொடரும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896