வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வழிப்பாட்டு விஷயத்தில் ஒத்து இருப்பது அவசியம்!

*வழிபாடு விஷயத்தில் ஒத்து இருத்தல் அவசியம்!*

*வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைப்பதற்கு முன் வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை முதலில் மாற்ற வேண்டும் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்*

25-11-1872 ஆம் ஆண்டு ( ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம்தேதி) சித்தி வளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு *எச்சரிப்புப் பத்திரிகை* என்னும் பத்திரிகையில் வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக சொல்லி பதிவு செய்துள்ளார்

சன்மார்க்க அன்பர்கள் அவரவர்கள் விருப்பம் போல் வழிபாடு செய்யாமல் *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்னும் அழுத்தமான கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார்.*
மேலும் *புறத்தில்  தீபஒளி வழிபாடு மட்டுமே வைத்து தோத்திரம் மற்றும்  பிரார்த்தனை செய்தல் வேண்டும்* என்பதை எச்சரிப்புப் பத்திரிகையாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதன் விபரம் !

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை!

ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள்,

*ஆண்டவர் ஒருவர் உள்ளார்* என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார் என்றும்,

அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் *வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.*

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்.

அப்படி யிருத்தல் மேல்விளைவையுண்டுபண்ணா திருக்கும்.

அப்படி இனிமேல் ஒருவரை யொருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடு மறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

*அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது.*

அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்.

*அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம்.*
 அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி *ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.*

*சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்)* 

மேலே கண்ட செய்திகளை எச்சரிப்புப் பத்திரிகையாக வள்ளல்பெருமான் வெளிப் படுத்தி உள்ளார்.

வள்ளல்பெருமான் மேற்கண்டவாறு எச்சரிப்பு பத்திரிகையில் தெரிவித்தும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களான *மருதூர், வடலூர் தருமச்சாலை, சத்திய ஞானசபை, கருங்குழி, மேட்டுகுப்பம் சித்திவளாகம்* போன்ற புனித இடங்களில் வள்ளலார் சொல்லியவாறு இந்து சமய அறநிலைய துறை வழிப்பாட்டு முறைகளை செயல் படுத்த வேண்டும். 
 
 *மேலும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் உள்ள எல்லாப்  புனித  இடங்களிலும் மது மாமிசம் இல்லாமல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய புனித பூமியாக, புனித இடமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அழுத்தமான முக்கிய கோரிக்கையாகும்*

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்  வள்ளலார் சொல்லியவாறு வழிப்பாட்டு முறைகளை மாற்றினால் மட்டுமே எல்லா சன்மார்க்க சங்கங்களும் ஒத்த கருத்தோடு ஒரே வழிபாட்டு முறையை பின் பற்றுவார்கள் என்பதை திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் "சுத்த சன்மார்க்க சுடர்" முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை விளம்பர பத்திரிகை!

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் சத்திய ஞானசபைக்கு வரப்போகிறார் அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் ஞானசபையில் அமர்ந்து  அளவு குறிக்கப்படாத அற்புத சித்தியெல்லாம்  வழங்கப்போகிறார் என்பதை முன் கூட்டியே விளம்பரப் படுத்தியுள்ளார் வள்ளல்பெருமான்!* 

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம் !  25-11-1872,ஆம் ஆண்டு !*

*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !*

*அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்*

*நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்'' பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்*

*இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,*

*எல்லாத் தத்துவங்களையும் ,எல்லாத் தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்*

*தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,*

*எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.*

*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் (மனிதர்கள் ) அறிந்து,அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகப்பூரணப்  பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,*

*நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.*

*இனி இச்சீவர்கள் ( மக்கள் ) விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,*

*எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்கத்தைப் பெற்று ''பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்'' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்.*

*ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர் களாகில்  கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி,இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.*

இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம்.

*எல்லா ஜீவர்களும் அருள் பெற வேண்டும் இன்புற்று வாழவேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற பெருந்தயவு பெருங்கருணையோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைத்து வருகின்றார் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் எல்லாம் கலங்குகிறது,ஆச்சரியம் அலைமோதுகிறது,அளவில்லா மகிழ்ச்சி ஆனந்தம் கொள்கிறது,வள்ளல்பெருமான் அவர்களை நினைந்து நினைந்து, உணர்ந்து உணரந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து,ஊற்றெழும் ஆனந்த கண்ணீரால் அழுது அழுது போற்றி போற்றி  வணங்கி வணங்கி வாழ்த்தி மகிழ்வதைத் தவிர வேறு வார்த்தைகளே இல்லை*

அன்புடன் ஆன்மநேயன் சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*