செவ்வாய், 16 ஜனவரி, 2024

தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளுங்கள்!

*தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளுங்கள் !* 

*பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்*

*வள்ளல்பெருமான் மனித குலத்திற்கு மிகவும் அழுத்தமாக சொல்லியது யாதெனில்?* 

*மரணத்தை வெல்லும் மார்க்கத்தைக் கண்டுபிடித்து அதற்கு சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்தவர் வள்ளல்பெருமான் அவர்கள். அச் சங்கத்தில் இணைந்து சாகாக்கல்வி கற்க வேண்டும் என்பதே வள்ளலாரின் தனித்தன்மை கொள்கையாகும்..*

*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்! ஏன் என்றால்?* 

*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம், வந்தால் பெற வேண்டியதை நேரிலே பெற்று கொள்ளலாம்.அதற்குண்டான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என்கின்றார் !* 

*வள்ளலார் சொல்லுயதை ஊன்றி கவனிக்கவும்!*

*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்*

*ஆண்டவர் சாலைக்கு போகின்ற பத்து தினம் என்பது வடலூர் சத்திய ஞானசபைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சென்று அமர்ந்து அருள் வழங்கும் தினத்தை முன் கூட்டியே சொல்லிய குறிப்பாகும்*.

*அதற்கு முன்னாடி நல்ல விசாரணையில் இருக்க வேண்டும் என்கின்றார்*

*அந்த விசாரணை எது வென்றால்:? நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள்.* 
( பின்னாடி வேலாயுதம் அவர்களும் கை விட்டுவிட்டார் என்று வேதனையும் சொல்கின்றார்)

*அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.*

 *அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.*

*இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்..என்கின்றார்.* 

*ஆனால் வள்ளல்பெருமான் சொல்லியவாறு ,அவருடன் இருந்த ஒருவர்களும் சொல்பேச்சைக் கேட்காமல் கூச்சல் குழப்பம்  உண்டாக்கிக் கொண்டே இருந்துள்ளார்கள்,அவற்றை எண்ணி மிகவும் வேதனைப் படுகின்றார் அவர் சொல்லுவதை கவனியுங்கள்.*

*இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின என்கின்றார்.*

*மேலும் சொல்லுகின்றார்!*

*மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம்.* 

( அப்போது அவ்வளவு முயற்சி இல்லாமல் இருந்து உள்ளார்கள். இப்போதும் அப்படித்தான் உள்ளார்கள்.)

*ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.ஆனால்*.....

*முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்:? அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயா திரை இருக்கும்.*

*இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் - ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, "முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய" கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார்.*

*ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது.*

*மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மா அனுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும். என்று தெளிவாக சொல்லுகின்றார்.*

*வள்ளல்பெருமான் சொல்லியதைஅப்போது உள்ளவர்களும் கேட்கவில்லை இப்போது உள்ளவர்களும் கேட்கவில்லைஎன்பது நிதர்ஷ்ணமான உண்மை,சன்மார்க்கம் சார்ந்த ஒவ்வொருவரும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு கூச்சல் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டே உள்ளார்கள்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் நல்வழி காட்ட வேண்டும்.*

*மேலும் வள்ளல்பெருமான் சொல்லுகின்றார்! இவர்களை விட்டாலும் கதியில்லை,தொட்டாலும் தோஷம் உறும்,என்கின்றார்* 

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றதை முன் கூட்டியே சொல்லியும்,வருகின்றபோது பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்றும்  அதற்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்தியும் சொல்லி உள்ளார்*

*ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.*

*கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.*
 *இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.!* 

*நன் முயற்சி என்பது யாது ?*
*என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.*

*அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.*

*நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.*

*இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.*

*ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.*

*இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.*

*அதுதான் வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே !*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் வந்தால்தான் நல்ல வரம் பெறமுடியும்,நாமும் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்*

*நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.!*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் வந்தாரா ? அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்..

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு