வெள்ளி, 9 ஜூன், 2023

கடவுள் காரியப்படும் இடம்!

 *கடவுள் காரியப்படும். இடம்!*


*உலகில் தோன்றியுள்ள  உயிர் இனங்களான  தாவரம்,ஊர்வன்,பறப்பன, நடப்பன,அசுர்ர்,தேவர் போன்ற ஜீவன்களில் (உயிரில்) உள்ள ஆன்மாக்களில் கடவுள் காரண காரியமாக இயங்கிக் கொண்டு இருந்தாலும்,மேலும் எல்லா அணுக்களிலும் உள் ஒளியாக இருந்தாலும், கடவுள் காரியப்படுவது ஜீவன் என்னும் உயிர்களில் ஏகதேசம் அனகமாக காரியப்படுகின்றார் ஆதலால் எல்லா ஜீவராசிகளிலும் ஆன்ம விளக்கம்  அறிவு விளக்கம் பூரணம் இல்லாமல், ஏகதேசம் விளங்கிக் கொண்டுள்ளது (குறைவாகவே) உள்ளது*.


*மனித பிறப்பின் சிறப்பு !*


*வள்ளலார் சொல்லுவதை கவனிக்கவும் !*


*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ? என்ற கேள்வியை  அவரே கேட்டு, அவரே பதில் சொல்கிறார் வள்ளலார்*


*ஆன்ம வியாபகமாகிய சிரநடு சிற்றம்பலமான புருவ (நடுவில்) மத்தியில், ஆன்ம அறிவு விளக்கம், அருள் விளக்கம் போன்றவை மனித தேகத்தில் மட்டும் பூரணமாக காரண காரியத்தோடு விஷேசமாக விளங்கி கொண்டு இருக்கிறது.* 


*மனித தேகம் எடுத்தவர்கள் மட்டுமே கடவுளின் அருள் பெற்று மரணத்தை வென்று, பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதே கடவுளின் அருள் நியதி சட்டமாகும், அதாவது இயற்கை சட்டமாகும்.*

  

*மனித சிரநடு சிற்சபையில் காரண காரியத்தால் விளங்கும் சிற்றணு வடிவமாகிய  ஆன்மா கோடி சூரியபிரகாசம் உடையது, அந்த ஆன்ம பிரகாசமே ஞானசபையாகும், அந்த பிரகாசத்திற்க்குள் இருக்கும் பிரகாசம் கடவுள்,அந்த உள் ஒளியின் அசைவு நடம்.அதுதான் ஞானாகாச நடனம் என்றும், அசைவுற்றதே நடராஜர் என்றும், ஆனந்த நடனம் என்றும் சொல்லப்படுகின்றது.* 

 

*ஆன்மாவின்  பிரகாசத்திற்குள், உள் ஒளியாக அமர்ந்து உயிர்ஒளியாக விளங்கி, கடவுள்  காரியப்படுவதால், உயர்ந்த அறிவு பெற்றவர்கள் மனிதர்கள் என்கின்றார் வள்ளலார்,*


*எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருந்தாலும், மனித தேகத்தில் மட்டுமே கடவுள் காரணத்திற்காக காரியப்பட்டுக் கொண்டு உள்ளார்*


*உண்மைக்கு பறம்பாக செயல்படுதல்!*


*கடவுளின் உண்மை அறியாமல், புறத்தில் ஆலயங்கள், மசூதிகள்,சர்ச்சுக்கள் போன்ற பிரமாண்டமான கட்டிடங்களை எழுப்பி அதன் உள்ளே மத்தியில் பீடத்தை வைத்து அதன் மேல் சிலைகள்,விக்கிரகங்கள்,பூத,தாரு,மெழுகுபத்தி தீபம், போன்ற ஜட தத்துவங்களையும், மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,நட்சத்திரம் போன்ற பஞ்சபூத ஒளி தத்துவ கருவிகளையும் படைத்து ( வைத்து ) அதில் கடவுள்  வெளிப்படுவதாகவும்,காரியப்படுவதாகவும் நினைந்து வழிபடுவது  "மந்த நியாயம்" என்கிறார் மந்தம் என்றால் அறிவு குறைவு என்பதாகும்,மேலும் அதில் தோன்றி அனுகி்கிரப்பதாகச் சொல்வது ஜாலம் என்கிறார்,ஜாலம் என்றால் ஏமாற்றுவது ஏமாறுவது என்பதாகும்*


*1,சிலைகளை வழிபடுபவர்கள் பக்தி காண்டிகள்*


*2,அக்கினியை வழிபடுபவர்கள் கர்ம காண்டிகள்.*


*2, கடவுளை இதயத்தில் உபாசிப்பவர்கள் யோகிகள்.*


*4,எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவிப்பவர்கள், நேசிப்பவர்கள், இரக்கம் காட்டுபவர்கள் ஞானிகள்*


*கடவுள் வழிபாடு  என்னும் பெயரில் உயிர் இல்லாத  சிலைகளை வைத்து உயிர்உள்ள வாயில்லா ஜீவன்களை கொன்று குவிப்பது, பலிகொடுப்பதும் அதன் மாமிசத்தை உண்பதும் கொடுமையிலும் கொடுமையாகும்.மேலும் மன்னிக்கமுடியாத குற்றமாகும்,*


*மனித தேகத்தின் ஆன்மாவில் கடவுள் காரண   காரியத்தால் இயங்கி இயக்குவதால், மனித தேகம் கிடைத்தவர்களை  உயர்ந்த அறிவு பெற்ற நண்பர்களே என்கிறார் வள்ளல்பெருமான்*


*சாதி சமய மதங்கள்!*


*உயர்ந்த அறிவு இருந்தும் தன்னையும் தன் ஆன்மாவில் உள்ளே இடைவிடாது  இயங்கிக் கொண்டு இருக்கும் கடவுளின் பூரண அருள் விளக்கத்தையும் அறிந்து தெரிந்து புரிந்து, தொடர்பு கொள்ளத் தெரியாமல், உலக மக்கள் அனைவரும், அகத்தே கருத்து,புறத்தே வெளுத்து போனதற்கு காரணம் ?* 


*சாதி, சமய மதங்களைத் தோற்றுவித்த ஆன்மீகப் பெரியோர்களே,இக் குற்றங்களுக்கு அடிப்படைக் காரிய காரணங்களாக திகழ்ந்துள்ளார்கள் என்கின்றார் வள்ளலார்.*


*வள்ளலார் பேருபதேசத்தில் சொல்வதைக் ஊன்றி கவனிக்க வேண்டும்!*


*நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால்,? அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*

 *அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில்:? கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.*

*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.*


 *ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.*


*(பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்பதின் விளக்கம் அந்த பூட்டை வள்ளல்பெருமான் வந்து உடைத்து விட்டார் என்பதாகும்*)

*அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.!*


*வருவிக்க உற்ற வள்ளலார்!*


**இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளத் தெரியாமல், தத்துவக் கடவுள்களை தொடர்புகொண்டு பிறந்து பிறந்து,இறந்து இறந்து அழிந்து கொண்டே இருக்கிறார்கள்* 


*அவ்வாறு மனித தேகத்தில்  வாழும் ஆன்மாக்கள் அனைவருக்கும் உண்மைக் கடவுளைக் காட்டி, அக்கடவுளைத் தொடர்பு கொண்டு  அருள் பெற்று வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டும். என்பதற்காகவும்,ஆன்மாக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் இறைவனால் வருவிக்க உற்றவரே வள்ளல்பெருமான் அவர்களாகும்*


**வள்ளலார் பாடல்!*


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் *சன்மார்க்க சங்கத்* தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன்* அருளைப் பெற்றேனே.!


மேலும் பாடல்!


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என் றிடும்ஓர்

*பவநெறி* இதுவரை பரவிய திதனால்


*செந்நெறி அறிந்திலர்* *இறந்திறந் துலகோர்*

*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனிநீ


*புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி* எனும்வான்

புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


*என்னும் பாடல்கள் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்.*


*இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காரியப்படும் இடமான ஆன்ம  சிற்சபையின் கண் மனத்தை இடைவிடாது செலுத்தினால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்கின்றார்.*


*கரண ஒழுக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்,சிற்சபையின் கண் மனத்தைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர்குற்றம் விசாரியாதிருத்தல்,தன்னை மதியாதிருத்தல்,செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதிருத்தல்,பிறர்மேல் கோபியாதிருத்தல்,தனது சத்ருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல் அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவைகளை கடைபிடிக்க வேண்டும். இதுவே கடவுள் காரியப்படும் இடத்தை தொடர்புகொள்ளும் ஒழுக்கம் நிறைந்த வழியாகும்*


*சாதி சமய மதங்கள் அற்ற, எல்லா உலகத்திற்கும் உண்மை விளக்கும் விளங்கும் ஒரு பொது நெறியான சமரச  சுத்த சன்மார்க்க சத்திய தனிநெறியை தோற்றுவித்துள்ளார்* 


*சுத்த சன்மார்க்க பொது நெறியில், மனித தேகத்தில் கடவுள் பூரணமாக  காரியப்படும் இடத்தை சுட்டிக் காட்டி தொடர்பு கொள்ளச் சொல்லுகின்றார். வள்ளலார் சொல்லியவாறு நான்கு வகையான ஒழுக்கத்தைக் கடைபிடித்து அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


*வள்ளலார் பாடல் !*


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


   *எல்லா உயிர்களிலும் கடவுள் காரியப்படுகிறார் என்பதை உணர்ந்து தெரிந்து பரோபகாரம் செய்து வாழ்வதே கடவுள் வழிபாடாகும்*


தொடரும்...


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

1 கருத்துகள்:

19 ஜூன், 2023 அன்று PM 1:30 க்கு, Blogger mahendiran sri கூறியது…

எல்லா உயிர்களூம் இன்புற்று வாழ்க.
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு