ஞாயிறு, 4 ஜூன், 2023

அகம் !அகப்புறம்! புறம்! புறப்புறம்!

 *அகம் ! அகப்புறம்! புறம்! புறப்புறம்!*


*நமது மனித உடம்பு நான்கு பகுதிகளாக பிரித்து இணைத்து இயங்குகிக் கொண்டுள்ளது!* 


*அகம் என்பது ஆன்மா இருக்கும் இடம் அதற்கு சிற்சபை அங்கம் என்று சொல்லப்படுகிறது,*


*அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இயங்கும் இடமாகும்.*


*புறம் என்பது அந்த கரணங்கள் என்னும் மனம்,புத்தி,சித்தி,அகங்காரம்,ஆச்சரியம் போன்ற நுண்ணிய மின்காந்த அலை போன்ற கருவிகள் இயங்கும் இடம்.*


*புறப்புறம் என்பது கண்,காது,மூக்கு,வாய்,மெய்( உடம்பு) என்னும் இந்திரியங்கள் இயங்கும் இடமாகும்.*

*அதில் கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் சூட்சும பஞ்ச இந்திரியங்கள் ஒருபகுதி. கண்களுக்குத் தெரிந்து இயங்கும் ஸ்தூல பஞ்ச இந்திரியங்கள் ஒரு பகுதி*


*அகம் என்னும் ஆன்மா அகப்புறம் என்னும் ஜீவன்,புறம் என்னும் இந்திரியங்கள்,புறப்புறம் என்னும் சூட்சும பஞ்ச இந்திரியங்கள்.இவைகள் யாவும், எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற அறிவியல் சார்ந்த மருத்துவ விஞ்ஞானக் கருவிகளுக்கு புலப்படாது. மனிதனின் புறக் கண்களாலும் காண இயலாது*


*உடம்பின் உள் பின்னப்பட்ட, இணக்கப்பட்ட பஞ்சபூத ஜட கருவிகள மட்டும் அறிவியல் கருவிகளால் காணலாம் கண்டு பிடிக்கலாம்* 


*கண்களுக்குத் தெரியாத ஆன்ம சக்தி அருள் ஆற்றலால் உயிர் என்னும் ஜீவன்,மற்றும் அந்தகரணங்கள்,சூட்சும இந்திரியங்கள் யாவும் இயங்கிக் கொண்டு உள்ளன இக் காரணச் செயல்களால்,புறக் கருவிகளாக இந்திரியங்கள் காரியப் படுகின்றன அதாவது செயல்படுகின்றன்*


*ஆன்மாவிற்கு அருள் சக்தி வழங்குபவர் யார்! ?*


*எல்லா ஆன்மாக்களும் இயங்குவதற்கு அருள்சக்தி என்னும் ஆற்றல் இடைவிடாது வழங்கிக் கொண்டு இருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !*


*வள்ளலார் பாடல்!*


அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

*எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்*


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*


மேலும்...


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

*தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்*


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


*சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்*

*சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!* 


*உடம்பு இயங்கும் சக்தியை இழக்கும் போது, அதாவது நரை,திரை,பிணி, பூப்பு,பயம், உண்டாகி மரணம் அடைகின்ற போது, ஆனமாவை  வெளியேற்றி வினைக்குத் தகுந்தவாறு வேறு ஒரு உயிர், உடம்பு எடுத்து (அதாவது வாடகை வீட்டிற்கு) வாழ்வதற்கு ஆன்மா தொடங்கிவிடும்,இதுவே பிறந்து பிறந்து இறந்து இறந்து,பிறவிகள் எடுத்துக் கொண்டே இருப்பதாகும்*


*இத் தொடர் கதையை நிறுத்தி இறப்பு பிறப்பு இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டுவதே வள்ளலார் கண்டுபிடித்த சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி கற்கும் கல்விக் கொள்கையாகும்*


*ஆன்மாக்களை இடைவிடாது இயக்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! அவரை இடைவிடாது தொடர்பு கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளாகும்*

*அந்த ஒழுக்க நெறிகள், புறப்புறம் என்னும் இந்திரிய ஒழுக்கம்,*


*புறம் என்னும் கரண ஒழுக்கம்,*

 

*அகப்புறம் என்னும் ஜீவ ஒழுக்கம்,*


*அகம் என்னும் ஆன்ம ஒழுக்கம்*


 *மேலே கண்ட நான்கு வகையான ஒழுக்கங்களை, வள்ளலார் சொல்லியவாறு நான்கு வகையாக கடைபிடிக்க வேண்டும் என்கின்றார் வள்ளலார்*


*வள்ளலார் சொல்லிய நான்கு ஒழுக்கங்களை முறை தவறாமல் நேர்வழியில் கடைபிடிக்க வேண்டும், சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்கத் தவறியதால் மரணம் வந்து கொண்டே உள்ளன, முறைதவறாமல் கடைபிடித்தால் கண்டிப்பாக மரணத்தை வெல்லலாம்.*


*இந்திரிய கரண ஒழுக்கத்தால் சுத்ததேகமும்,*

*ஜீவ ஒழுக்கத்தால் பிரணவ தேகமும், ஆன்ம ஒழுக்கத்தால் ஞான தேகமும் மாற்றமடையும்,ஒவ்வொரு ஒழுக்கத்திற்கு தகுந்தவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையால் ஆன்மாவின் தன்மைக்கு தகுத்தவாறு  அருள் சுரக்கும், அருள் தன்மைக்குத் தகுந்தவாறு தேகமாற்றம் உண்டாகும்*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் பெற்ற அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியது, இரண்டு முக்கிய வழிகள்.. 1,பரோபகாரம் 2,சத்விசாரம் என்பதாகும்*


*இந்த இரண்டு நேர் வழிகளால்தான் அறிவு விளக்கம்,அருள் விளக்கம் உண்டாகும். அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் பெறாமல் அன்பர்கள் குழப்பம்  அதிகமாக வைத்துள்ளார்கள்,காரணம் வள்ளல்பெருமான் சொல்லிய இயற்கை உண்மையை,இயற்கை உணமை விளக்கத்தை,இயற்கை உண்மை இன்பத்தை பெறுவதற்குண்டான ஒழுக்க நெறிகளை, காற்றில் பறக்க விட்டுவிட்டு அவரவர் புத்திக்குத் தகுந்தவாறு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்அதனால் அன்பர்கள் வெற்றபெற வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றார்கள்*


*ஞானசரியை!*


*திருஅருட்பாவில் ஞானசரியை ( மரணம் இல்லாப் பெருவாழ்வு ) என்னும் தலைப்பில் 28 பாடல்கள்  பதிவு செய்துள்ளார்,அவற்றில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை மிகத் தெளிவாக எளிய தமிழில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.*


 *அகம், அகப்புறம், புறம் புறப்புறம் என்கின்ற நான்கு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளார்*

*1,ஞான சரியை*

*2,ஞான கிரியை*

*3,ஞான யோகம்*

*4,ஞானத்தில் ஞானம் என்பனவாகும்*


*1,ஞானசரியை என்பது இந்திரி ஒழுக்கம்*


*2,ஞானகிரியை என்பது கரண ஒழுக்கம்*


*3, ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கம்*


*4, ஞானத்தில் ஞானம என்பது ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்*


 *வள்ளலார் சொல்லிய வழிபாடு வித்தியாசமானது. ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார், சுத்த சன்மார்க்கத்திற்கு தத்துவங்களான சிலைகளை வணங்கும் புறவழிபாடே கிடையாது*


*சுத்த சன்மார்க்கம் அறிவு சார்ந்த  ஞானம் என்னும் அருள் பெறும் வழிபாடாகும்*


*1,புறப்புறம் என்னும் இந்திரியங்களால் விக்கிரகங்களை வழிபடுபவர்கள் சரியையில் ஞானம் என்னும் பக்தி காண்டிகள் என்பவர்களாகும்* 


*2,புறம் என்னும் சரியையில் ஞானம் என்னும் கரணங்களால்  அக்கினியை வழிபாடு செய்கிறவர்கள் கர்ம காண்டிகள் எனபவர்களாகும்*



*3,அகப்புறம் என்னும் சரியையில் ஞானம் என்னும் ஜீவத் தன்மையுள்ள யோகிகள் ( உயிர் தொடர்பு ) வழிபடுவது இதயத்தில் உபாசிப்பவர்களை யோகிகள் என்றே சொல்வார்கள்*


*4,அகம் என்னும் ஞானத்தில் ஞானம் என்பது, ஆன்ம தன்மை அறிந்த ஆன்மாக்கள் அதாவது ஆன்ம அறிவுபெற்ற ஞானிகள், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குவதாக உபாசிப்பார்கள் அவர்களை ஞானத்தில் ஞானம் பெற்றவர்கள் என்று சொல்லப்படுவார்கள்.*


*ஞானத்தில் ஞானம் பெறுபவர்களே கடவுளை அகக் கண்ணால் காணமுடியும், மரணத்தை வெல்ல முடியும்,முத்தேக சித்தி பெறமுடியும்.பேரின்பவாழ்வு வாழமுடியும்.*


*புறப்புறம் உள்ள இந்திரியங்களால் ஆதரவு அற்ற ஜீவர்களுக்கு  பரோபகாரம் செய்தும்,*

*புறத்தில்  அலைபாயும் புறத்தில் முதன்மையாக உள்ள மனத்தை அகம் என்னும் ஆன்மா இயங்கும் இடமான சிற்சபையின் கண் மனத்தை செலுத்த தெரிந்தவர்களே அருளைப் பெறும் தகுதி உடையவர்களாவார்கள்*


*வள்ளலார் பாடல் !*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன்

*முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு