வியாழன், 4 ஆகஸ்ட், 2022

கடவுளைக் கண்டேன் பாகம் 2

 *கடவுளைக் கண்டேன்!*


*தொடர்ச்சி பாகம் 2.*


*எனது ஊர் ஈரோடு எனது பெயர் கதிர்வேல் என்று தொடங்கிய கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஆனாலும்


*திருவண்ணாமலை மாவட்டம்!*


*நான் பிறந்த ஊர்!*


 *அப்போதைய வேலூர் மாவட்டம் இப்போதைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்காவில் இருந்து 8 மைல் தொலைவில் உள்ளது மண்ணாண்டிப்பட்டி என்ற குக்கிராமம்,*

*மஞ்சம் புல்லால் மேய்ந்த சுமார் 20, குடிசை வீடுகள் இருந்தன, அங்கே எங்கள் வீடும் ஒன்று.. அங்குதான் 01-07-1947 ஆம் ஆண்டு நான் பிறந்துள்ளேன்.*


*அந்த ஊரைச் சுற்றி நான்கு புறமும் எல்லா வகையான பெரிய சிறிய மரம், செடி கொடிகள் நிறைந்த அடர்ந்த பசுமையான பெரிய  காடுகள்,அக்காட்டிற்குள் குதிரை மற்றும் நாட்டுப்புற மாடுகள் தவிர மற்றைய எல்லா வகையான மிருகங்களும்,பறவைகளும் வாழும் நெருக்கமான காடாகும் அதன் தொடர்ச்சியே ஜவ்வாது மலையாகும்.*


*எங்கள் கிராமத்தின் வடக்குப் பகுதியில் வளைந்து வளைந்து ஓடும் ஓர் அழகான நீர்ஓடும் ஓடை, ஓடையின் இரு புறங்களிலும் பலவகையான நோய் தீர்க்கும் மூலிகைகள், மற்றும் காய்கள் பழங்கள் காய்த்து தொங்கும் அழகான மரங்கள், அந்த நீரோடையை ஒட்டிய இடத்தில் 12 ஏக்கர் நிலம் அப்பா பெயரில் இருந்தன, அவற்றில் 3 ஏக்கர் தண்ணீர் பாயும் நிலம்,  அதில் வீட்டிற்கு வேண்டிய நெல் பயிர்,மற்றும் கம்பு,சோளம்,கேழ்வரகு, காய்கறிகள் போன்ற விவசாயம்.  மீதமுள்ள 9 ஏக்கர் வானம்பார்த்த புன்செய்நிலம்..*ஓடையை ஒட்டிய இடத்தில் ஒரு சிறிய கிணறு, அக்கிணற்றின் ஒருபக்கம் துலாக்கோல் வைத்து ஏற்றம் வைத்தும்,ஒருபக்கம் இரண்டு காளைமாடுகளைக் கொண்டும் கவளைக்கட்டி தண்ணீர் இறைத்துதான் பயிர் செய்ய வேண்டும்.*


மீதமுள்ள 9 ஏக்கர் நிலத்தில் மழை பெய்தால்தான்  கடலை.உளுந்து,கொள்ளு, எள்ளு,வரகு,சாமை போன்ற புன்செய் பயிர்கள் வைக்க முடியும்*


*எனது பெற்றோர்கள்!*


*எங்கள் அப்பா பெயர் சென்னிமலைப்பிள்ளை அம்மா பெயர் முத்தம்மாள்,* *அப்பாவிற்கு இரண்டு மனைவிகள்,*

*முதல் மனைவிக்கு ஒரு ஆண் இரண்டு பெண் குழந்தைகள்* *முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியாக முத்தம்மாள் என்ற பெண்மணியை ஈரோட்டில் இருந்து எனது அப்பா திருமணம் செய்து கொண்டார்.*


(அப்பா சிறந்த ஒரு முருகபக்தர் எப்போதும் நெற்றியில் உடம்பில் விபூதிப் பட்டையுடன் காட்சி அளிப்பார்.)


*இரண்டாவது மனைவிக்கு எட்டு குழந்தைகள்,*

*அவற்றில் மூன்று குழந்தைகள் இறந்து விட்டது*

*ஆதிலட்சுமி,*

*கமலா,*

*நீலாவதி,*

*சண்முகம்*

*கதிர்வேல்*

*ஆகிய ஐந்து பேர் இருந்தோம். நான்தான் எட்டாவது கடைக்குட்டி குழந்தை எனக்கு அப்பா வைத்த பெயர்தான் கதிர்வேல்* 


*வீடு தீப்பற்றி எரிந்த்து!*


*எனக்கு ஒரு வயது இருக்கும்* 

*வீட்டில் அக்காள்  சமையல் செய்யும் போது விறகு அடுப்பில் இருந்து தீப்பொறி பறந்து கூரை வீட்டில் தீ பற்றிக் கொண்டது. எங்கள் வீடும் எரிந்தும் பக்கத்து வீடுகளுக்கும்தீ பரவியது, வீட்டை விட்டு எல்லோரும் பயந்து வெளியே சென்று வேடிக்கைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள்* 


*அம்மா அப்பா தோட்டத்தில் இருந்துள்ளார்கள் நான் வீட்டின் உள்ளே சேலைத் துணியால் கட்டிய தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளேன்*.


*ஆறு வயது இருக்கும் எனது கமலாஅக்காள் அவர்கள், தம்பி எரியும்  வீட்டின்உள்ளே தொட்டிலில் தூங்கிக் கொண்டு உள்ளான் என்பது நினைவுக்கு வந்ததும் எரியும் வீட்டின் உள்ளே அதிவேகமாக நுழைந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டு் இருந்த என்னை வெளியே எடுத்து வந்து காப்பாற்றி விட்டதாக சொல்லுவார்கள்,*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அக்கா  வடிவில் தோன்றி எந்தவிதமான தீப்பொறியும் உடம்பில் தொடாமல் உயிருக்கும் உடம்பிற்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல்  காப்பாற்றி உள்ளார் என்பதை இன்றும் என்னால் அறிய முடிகிறது, அந்நிகழ்ச்சியை நினைந்து ஆச்சரியப்பட வைக்கிறது*


வள்ளலார் பாடல் !


கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என்

எண்ணிற் கலந்தே இருக்கின்றான் -பண்ணிற்

கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரில்

கலந்தான் கருணை கலந்து.! 

என்பது போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இன்றுவரை எவ்விதமான துன்பங்களும் நெருங்காமல் வாழ்ந்து கொண்டு வருகிறேன்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை சாதாரண வார்த்தைகளால் சொல்ல இயலாது இப்போதும் என் உடம்பில் உள்ளத்தில், உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து இயங்குவதைஎன்னால் காணமுடிகிறது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் எக்காலத்திலும் நல்லபிள்ளையாக வாழ்வதே இப்பிறப்பின் பாக்கியமாக கருதுகிறேன்*


சுத்த சன்மார்க்க கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காகவே என்னைக் காப்பாற்றி பொறுப்புக்களைக் கொடுத்து உள்ளார் எனக் கருதுகிறேன்.


*கிராமம் மாற்றம்!*


*வீடு தீ பற்றி எரிவதற்கு முன்பே இரண்டு மைல் தொலைவில் உள்ள மேல்வணக்கம்பாடி என்ற கிராமத்தில், ஏரி பாசனம் மற்றும் நீர் வற்றாத கிணறு உள்ள இடத்தில் அயன் நன்செய் விவசாயம் செய்யும்படியான சுமார் 6 ஆறு ஏக்கர் நிலம், அப்போதைய மதிப்பில் சுமார் 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்து எனது தந்தை விலைக்கு வாங்கி வைத்திருந்துள்ளார்*


*வீடு தீ பற்றி எரிந்ததும் மேல் வணக்கம்பாடி  என்னும் கிராமத்திற்கு  குடிபெயர்ந்து வந்து விட்டாதாக அப்பா சொல்லி உள்ளார்கள்.*

*எனக்கு இரண்டு வயதாகும் தருணத்தில் எனது அம்மா இறந்துவிட்டார்கள்.* *தாயில்லாக் குறையை உணர்ந்து எங்கள் அனைவரையும் அப்பாதான் தாயாகவும் தந்தையாகவும் இருந்து, உண்மை ஒழுக்கம் நேர்மையை போதித்து  எங்களிடம் அன்பு பாராட்டி எவ்விதமான குறைபாடுகளும் இன்றி மகிழ்ச்சியுடன் காப்பாற்றி வளர்த்து வந்துள்ளார்.*


*எங்கள் நன்செய் நிலத்தில் தான் நெல் அதிகம் பயிரிடுவது வழக்கம். அக்கிராமத்தில் அரிசிசோறு கிடைப்பது அரிது.*

*ஏழை எளிய மக்களின் கை குழந்தைகளுக்கு அரிசி சோறு வேண்டுவோர் எந்நேரமும் எங்கள் வீட்டிற்கு வந்து சோறு வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.*


*ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி அப்பாவை ஊர் நாட்டாண்மை காரராகவும், பஞ்சாயத்து தலைவராகவும் ஏகமனதாக தேர்வு செய்து பொருப்பில்வைத்திருந்துஉள்ளார்கள். ஊர் மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பதில் வல்லவராக, வள்ளலாக திகழ்ந்துள்ளார்.அக்கிராமம் செழிப்புடன் இருப்பதற்கு அப்பாவே காரண காரியமாக இருந்துள்ளார்.*


அதனால் இன்றும் ஊர் மக்கள் எங்களை நாட்டார் வீட்டு குழந்தைகள் என்று அன்புடன் அழைப்பார்கள்.


*அப்பா மரணம் !*


நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது  உடல்நலக் குறைவால் அப்பா மரணம் அடைந்தார். தாயும் இல்லை தந்தையும் இல்லாத அனாதைக் குழந்தைகளாக ஆக்கப்பட்டோம்.மேலும் நானும் அண்ணனும் எட்டாம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. எங்களை நிறைய படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை, கனவு அப்பாவிற்கு நிறையவே இருந்துள்ளது, அவருடைய ஆசை நிறைவேற வாய்ப்பில்லாமலே போயிற்று.


*விவசாயம் !*


*விவசாயம் செய்வது மாடு மேய்ப்பது,*

*ஓய்வு நேரங்களில் எங்கள் ஊரில் உள்ள ஜவுளிக்கடையில்  தையல் தொழில் செய்து பழகிக் கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபாடுடன் செய்து வந்தேன்* *பின்பு மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன்* 


அக்காள் அண்ணன் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது. எனது 19 ஆம் வயதில் ஈரோட்டிற்கு வந்து அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், முதல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அண்ணனுக்கும் எனக்கும் சிற்சில கருத்து வேறுபாட்டின் காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் குழந்தைகளின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எல்லாவற்றையும் அண்ணனிடமே ஒப்படைத்து விட்டு ஈரோட்டிற்கே குடும்பத்துடன் வந்து விட்டோம்.


*டைலர் தொழில் !*


*ஈரோடு நகரின் மையப்பகுதியில் "ஸ்பென்சர்ஸ் டைலர்ஸ்" என்ற பெயரில் பெரிய  ஷோரூம் வைத்து தொழில் தொடங்கி சிறந்த நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாக வளர்ந்து வந்தது. மீண்டும் ஒருபெண் ஒரு ஆண்குழந்தைபிறந்தது*  


*குழந்தைகளை என்னால் இயன்ற அளவு நல்ல முறையில் படிக்க வைத்தேன். குழந்தைகள் வளர்ந்துவரும் காலக்கட்டத்தில்தான் கே, கே, சாமி என்னும் பெரியவர் (காவி உடை அணிந்த துறவி) மூலமாக வள்ளலார் எழுதிய திருஅருட்பா கிடைக்கப் பெற்றேன் என்பதை முன் கட்டுரையில் தெரியப்படுத்தியுள்ளேன்.* 


*வள்ளலார் உலக மக்களுக்காக கற்பித்துக் காட்டிய  ஜீவகாருண்ய ஒழுக்கம், மற்றும் சாதி,சமயம், மதம்,இனம்,நாடு,மொழி அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய, சுத்த சன்மார்க்க கொள்கைகளை சுமார் 43, ஆண்டுகளாக மனைவி மக்கள் குடும்பம் சூழ அனைவரும் பின் பற்றி வாழ்ந்து வருகிறோம் என்பதை பெருமையாகச் சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.*


*உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்  விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க!* 


*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை!*


*என்ற வள்ளல் பெருமானாரின் திருவாக்கை சிரமேற்க் கொண்டு கிராமங்கள், நகரங்கள்,மாநிலங்கள்,வெளிநாடுகள் தோறும் மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்து வருகிறேன் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்த்தே.*


*மேலும் அறிவியல் சாதனங்கள் வாயிலாக பேஸ்புக், வாட்ஸ்அப், 

டிவிட்டர், யூ டியூப்,வலைத்தளம்,போன்றவற்றின் துணைக்கொண்டு வீடியோக்கள் ஆடியோக்கள் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப் படுத்திக் கொள்கிறோம்.


*ஈரோட்டில் தொழிலும் மற்றும் மகன்கள் மகள்  திருமணம் முடிந்து நிரந்தரமாக இங்கேயே வாழ்ந்து வருவதால் ஈரோடு கதிர்வேல் என்று அனைவராலும் பெயர் சூட்டப்பட்டது.*


*மேலும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை யும், ஜீவகாருண்ய ஒழுக்கங்களையும் எல்லோரும் முழுமையாக கடைபிடித்து, எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஆன்ம லாபம்   அடைவோம் மரணத்தை வெல்வோம்*.


தொடரும்....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*] திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு