திங்கள், 23 ஜூன், 2014

உயிர்க்கொலை செய்யாதே புலால் உண்ணாதே !

உயிர்க்கொலை செய்யாதே!  புலால் உண்ணாதே !

மனிதகுணம் !

மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம் மனிதனின்  கட்டுப்பாட்டில் உள்ளன என்றும்.மனிதன் எல்லா உயிர்களையும் துன்பப்  படுத்தி தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும்.அதே நேரத்தில் எல்லா உயிர்களும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டது .ஆதலால்  அந்த உயிர்களை கொன்று ,அதன் மாமிசத்தை உண்பதில் எந்த தவறும் இல்லை என்று ,படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை எண்ணிக் கொண்டு ,வாய் பேசாத உயிர்களைக் கொன்று உணவாக உண்டு கொண்டு உள்ளார்கள்..


மேலும் கடவுள் பெயரைச்சொல்லி கடவுளுக்கு பலிக் கொடுத்து அதன் மாமிசத்தை உண்ணும் பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றார்கள்.

மேலும் கொன்றால் பாவம் .தின்றால் போகும், என்று தங்களுக்கு சாதகமான வார்த்தைகளைப்  பயன் படுத்தி சரிகட்டி திருப்தி அடைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள் .

உயிர்க் கொலை செய்ய வேண்டாம் என்பதும் அதன் புலாலை உண்ண வேண்டாம் என்பதும் ஏன் ? எதற்காக ? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் என்பது இறைவனால் ( இயற்கையால் ) கொடுக்கப்பட்டது .உயிர் வாழ்வதற்கு உடம்பு என்னும் வீடு பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்படுகிறது . உடம்பு வெவ்வேறு தோற்றங்களாக இருந்தாலும் உயிரின் தன்மை ஒரேத் தன்மை, ஒரே வகையானதாகும் .உடம்பில் பேதம் உண்டு உயிரில் பேதம் இல்லை.

நாம் குடியிருக்கும் வீட்டை அழித்தாலோ.இடித்தாலோ,எரித்தாலோ,நமக்கு எவ்வளவு வேதனையும்,துன்பங்களும்,துயரங்களும் வெறிக் கொண்டு வருகிறது. நம்முடைய வீட்டை  அழித்தவன் மீது எவ்வளவு கோபம்,ஆவேசம்  வருகின்றது ,நினைத்துப் பாருங்கள் .

அதுபோல் ஒரு உடம்பை அழிக்கின்ற போது அதில் குடியிருக்கும் உயிருக்கு எவ்வளவு துன்பமும்,துயரமும்,அச்சமும்,பயமும்,வரும் என்பதை நினைத்து பாருங்கள்.

உடம்பை அழித்தால் உயிர் என்றும் அழியாது ,அந்த உயிர் வேறு ஒரு பிறவி என்னும் உடம்பை எடுத்துக் கொள்ளும்.எந்த உடம்பு எடுக்கும் என்பது கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது

ஆனால் உயிர் படும் துன்பங்களும் துயரங்களும் அச்சமும், பயமும், உடம்பை அழித்தவன்,உடம்பை கொன்றவன்,அந்த புலாலை (மாமிசத்தை ) உண்பவன்  உயிரிலே பதிவாகி,உடம்பிலே பதிவாகி, அளவில்லா துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.

அதனால் அவன் அடுத்த பிறப்பிலே துஷ்ட பிறவிகளான பாம்பு, தேள், நாய், நரி,புலி சிங்கம்,கரடி,போன்ற பிறவிகள் (உடம்பு ) எடுத்து அடிப்பட்டு, கொலைப்பட்டு,மிதிப்பட்டு,துண்டிக்கப் பட்டு அளவில்லா துன்பங்களை அனுபவிக்க நேரிடும்..

உயிர் !

உலகில் தோன்றிய உயிர்களில் தாவரங்கள் தவிர மற்ற அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ,உயிர் தலைப் பாகத்தில் தான் உள்ளது .தாவரங்களுக்கு மட்டும்தான் உயிர் வேர் பகுதியில் உள்ளது.

ஆதலால் தலையைத் துண்டித்தால் உயிர் உடம்பை விட்டு வெளியே சென்று அடுத்த உடம்பு கிடைக்கும் வரை அலைந்து கொண்டே இருக்கும்.அந்த துன்பத்தை வார்த்தையால் சொல்ல முடியாது.

தாவரங்களும் உயிர்கள் தானே! அவற்றை உண்பது போல் மாமிசத்தையும் உண்பது தவறில்லை என்று, பல மேதாவிகள் கேள்விக் கணைகளை தொடுக்கின்றார்கள் .

அவர்களுக்கு உயிரின் தன்மை,உடம்பின் தன்மை, ஆன்மாவின் தன்மை  என்ன வென்று புரிவதில்லை.அறிவதில்லை.தெரிவதில்லை.

நாம் யார்?,எங்கிருந்து வந்தோம்,ஏன் வந்தோம்,எப்படி பிறப்பு எடுக்கின்றோம்,ஏன் வாழ்கின்றோம், எதற்கு இன்பம்,துன்பம்,என்பது வந்து வந்து மாறிக் கொண்டே உள்ளன,ஏன் நோய் வருகின்றன,ஏன் இறுதியில் மரணம் அடைகின்றோம்,

நாம் வரும்போதும், ஒன்றும் கொண்டு வருவதில்லை,போகும்போதும் ஒன்றும் கொண்டு போவதில்லை.எதையும் கொண்டு போக முடியாத வாழ்க்கைக்கு ஏன் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை,அதற்கு நேரத்தை ஒதுக்குவதும் இல்லை.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கோணத்தில் வீணான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

எப்படி வாழ்ந்தாலும் உணவு நமக்கு அவசியம் தேவைப்படுகின்றது.நாம் உணவு முறையிலாவது கொஞ்சம் சித்திப்போம்.

தாவரங்களும் உயிர் உள்ளவைதான் ஆனால் அதையும் வேரோடு பிடுங்கி உண்ணக் கூடாது.தாவரங்களின் உயிர் வேர் பாகத்தில் உள்ளது வேரோடு பிடுங்கினால் அதுவும் உயிர்க் கொலைதான் .

தாவரங்கள் எல்லா உயிரினங் களுக்கும் வேண்டிய உணவாக ,இலை,பூ ,காய்,கனிகளாக,இளநீர்,நுங்கு போன்ற நீர் வகைகளும்  கொடுக்கின்றது .

தாவரங்களின் கிளைகளையோ, மட்டை களையோ வெட்டினால் ,மீண்டும் வளருமே தவிர உயிர் போகாது.

அவை எதுபோல் என்றால் ,நம்முடைய நகம்,மூடி வெட்டினால் நமக்கு வலி ஏற்படுவதில்லை .துன்பம் தருவதும் இல்லை,உயிருக்கு ஆபத்தும் இல்லை .

.அதுபோல் தாவரங்களில் உள்ள  இலை,பூ,காய்,கனி,நீர் போன்றவற்றை பறித்து  உண்பதால் உயிர் போவதில்லை, உயிருக்கு துன்பம் வருவதும் இல்லை.

எல்லா உயிர் இனங்களுக்கும் தாவரங்கள் மட்டுமே,பொதுவான  உணவாக இறைவன் படைத்துள்ளார் .தாவரங்கள் இல்லை என்றால்,நீரில் வாழ்வன நிலத்தில் வாழ்வன போன்ற  எந்த உயிர் இனங்களும் இல்லை.

தாவரங்களை உண்பதால் நமக்கு எந்த நோய்களும் வருவதில்லை,துன்பங்களும்,வருவதில்லை,நமக்கு எந்த பாவமும் வந்து சேர்வதில்லை .நம்முடைய குடும்பம் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நாம் அஜாக்கிரதையாக இருந்து நோய் வந்தாலும் அந்த நோயை தீர்ப்பதற்கு தாவரங்களே மருந்தாக பயன் படுகின்றது. இறைவனால் படைக்கப் பட்ட தாவரங்கள் எல்லா ஜீவ ராசிகளுக்கும் உணவாக ,அரும் மருந்தாக பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றது .

மாமிசம் !

மாமிசம் என்பது அசுத்த பூத காரிய தேகமாகும்.அதாவது அசுத்த அணுக்கள் நிறைந்த உடம்பாகும்.ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டால் அதனால் உண்டாகும் தீமைகள்,பாவங்கள்  அளவில் அடங்காது.

அதே மாமிசத்தையும் பச்சையாக அப்படியே உண்ண முடியுமா ?அதனுடன் தாவரங்களில் இருந்து கிடைக்கும்  காரம்,உப்பு,புளிப்பு, எண்ணெய்,போன்ற,பொருட்களும் மற்றும் மசாலா போன்ற  வாசனை திரவியங்களை சேர்த்துதான் உண்ண முடியும்.

தாவரங்களை பறித்து வந்து சமையல் செய்யாமல் வீட்டில் அப்படியே வைத்து இருந்தாலும் வாடிப் போகுமே தவிர துர்நாற்றம் வீசாது .

அதேபோல் மாமிசத்தை சமையல் செய்யாமல் ஓர், இரு நாட்கள் வீட்டில் வைத்துப் பாருங்கள் .வீடே துர்நாற்றம் வீசும் .அப்படி துர்நாற்றம் வீசும் உணவை உட்கொண்டால் நமது உடம்பும் உயிரும் என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

தாவர உணவான அரிசி,கம்பு,கேழ்வரகு,கோதுமை,சோளம்,பருப்பு எண்ணெய்,தேங்காய்,போன்ற தானியங்களும், கீரை,தலை,இலை,
பூ,காய்,கனி,போன்ற வற்றை தினமும் உட்கொள்ளலாம் .

தாவரம் அல்லாது  மாமிசத்தை மட்டும் தினமும் உட்கொள்ள முடியுமா ? அப்படி உட்கொண்டால் என்னவாகும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

மாமிச உணவை அதிகம் உட்கொள்பவர்கள் .அறிவு மந்தமாகி,அன்பு,தயவு,கருணை என்ன என்பது தெரியாமல்  தவறான பாதையில் சென்று கொண்டே இருப்பார்கள் .

இன்று தேசத் துரோகிகள் என்று சொல்லும  தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நக்சல் பார்ட்டிகள், கள்ளக் கடத்தல் பேர்வழிகள் கொலைக்காரர்கள்,கற்பழிப்பு பேர்வழிகள்.போன்றவர்கள் அனைவரும் அதிகம் மாமிசம் உண்பவர்களாகவே இருப்பார்கள்.

மாமிசம் உண்பவர்களுக்கு சாந்தம் பொறுமை அமைதி உண்மை,நேர்மை போன்ற நற்குணங்கள் அதிகம் இருக்காது.அதிகமாக வெறி கொண்ட மிருக உணர்வையே  தூண்டும்.

அதேபோல் மாமிசம் உண்ணும் மிருகங்களைப் பாருங்கள் .மனித நடமாட்டம் இல்லாத பயங்கர காட்டில்தான்,சிங்கம்,கரடி,புலி,சிறுத்தை,போன்ற மிருகங்கள் வாழுகின்றன.

தாவர உணவை உட்கொள்ளும் மிருகங்களைப் பாருங்கள் .ஆடு,மாடு,குதிரை,யானை,கழுதை,எருமை,போன்ற மிருகங்கள் மனிதர்களுடன் அன்புடன் பாசத்துடன் வாழ்கின்றன.

மேலும் தாவர உணவை உட்கொள்ளும் உயிர் இனங்களுக்கு அறிவு வலிமை,வேகம்,விவேகம்,ஞாபகசக்தி,செய் நன்றி மறவாமை,போன்ற நற்குணங்கள் இருக்கும்.

நாம் உண்ணும் உணவிற்கு தகுந்தாற் போல் உடலில் உள்ள உறுப்புக்கள் அமையும்.மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,ஜீவன்,அறிவு ஆன்மா போன்ற இயக்கங்கள் ஒழுங்காக செயல்படும்.

அறிவுள்ள மனித தேகம் படைத்த உயர்ந்த அறிவுள்ள ஆன்மநேய உடன் பிறப்புகளே சிந்தியுங்கள் மற்றவர்களை சிந்திக்க வையுங்கள்.

நாம் பிறப்பால் மாமிசம் உண்பவர்கள் அல்ல ! பழக்கத்தால் உண்பவர்கள் ,நாம் குற்றவாளிகள் அல்ல ! நமக்கு வழி காட்டியவர்கள் குற்றவாளிகள்.

நம்முடைய பொய்யான சாதி,சமயம்,மதங்கள் போன்றவற்றின்  வழி காட்டுதலின் பேரில் நம்முடைய உண்மையான உணவு முறைகள் மாறிவிட்டன.மறைந்து போய் விட்டன .

மேலும் பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் வியாபார விளம்பர முறையில் மனித மனங்களை மாற்றி ,புலால் உண்ணும்படி செய்து மனித உயிர்களை அழித்துக் கொண்டு உள்ளார்கள் .வாய் பேசாத உயிர்களையும் விலைக்கு வாங்கிக் கொன்று குவித்து கொண்டு உள்ளார்கள் .

யார் என்ன சொன்னாலும் புலால் உண்ண மாட்டேன் .உயிர்க் கொலை செய்ய மாட்டேன் ,எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்பதை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.உங்களை இறைவன் எந்த குறையும் இல்லாமல் காப்பாற்றுவார் .இது சத்தியம்..

மனித உயிர் விலை மதிப்பு அற்றது .அதை இழந்து விடலாமா ? அழித்து விடலாமா !

நம் இந்திய நாடு,கொல்லாமை, அகிம்சை,சத்தியம்,நேர்மை,ஒழுக்கம்,உயர்ந்த பண்பாடு,நிறைந்த ஞானிகள் பிறந்த நாடு, .அறிவுமிக்க ஆற்றல் படைத்த,திருவள்ளுவர் ,மற்றும் உலக மக்களை உயிர்களை காப்பாற்ற இறைவனால் அவருவிக்க உற்ற அருளாளர்  மரணத்தை வென்ற வள்ளல்பெருமான் போன்ற அருளாளர்கள் அவதரித்த  நாடு .

அவர்கள் சொல்லிய கருத்துக்கள்,ஒழுக்கங்கள் வாழ்க்கை முறைகள் யாவும் அறிந்து,தெரிந்து அனுபவித்து வாழ்ந்து காட்டிய  உண்மைகளாகும் . ,

நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

நாம் உயிர்த் துன்பம்,உடல் துன்பம் இல்லாமல் வாழ வேண்டுமானால் புலால் என்னும் துர்நாற்ற உணவை நீக்கி .நீடுழி வாழ வைக்கும் தாவர உணவையே உண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .



வியாழன், 19 ஜூன், 2014

ஞானம் மூன்று வகைப்படும் !

ஞானம் மூன்று வகைப்படும் !

அவை ;--உபாய ஞானம் ...உண்மை ஞானம் ...அனுபவ ஞானம் ..

இவற்றின் தாத்பரியம்;--

நட்சத்திரம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாய ஞானம் !.

சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் அறிவே உண்மை ஞானம் !.

எல்லா வஸ்துக்களையும்  தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள் அறிவே அனுபவ ஞானம் ! .

காட்சி ;--

ஒரு வஸ்துவை அதன் நாமம் ரூபமின்றிக் காண்பது இந்திரியக் காட்சி இந்திரிய அறிவு என்பதாகும் ! .

உருவமாக ( கூடமாக ) அறிதல் கரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் !.

உருவம் இன்னதென்று அறிதல் தெரிதல் ஜீவக் காட்சி ஜீவ அறிவு என்பதாகும்!.

எதையும் தானாக அறிதல் ஆன்மக் காட்சி ஆன்ம அறிவு என்பதாகும் !.

இதற்குத் தோன்றும் அறிவு ...தோற்றுவிக்கும் அறிவு ...பதிஅறிவு என மூன்று அறிவு நமக்குள் இயங்கிக் கொண்டு உள்ளது !.

ஆதலால் ;--ஒரு வஸ்துவின் இடத்தில் பற்றுதல் வைப்பது அவா என்றும் அன்பு என்றும் காதல் என்றும் சொல்லப்படுவதாகும் .!.

அதை அனுபவிக்க வேண்டும் என நினைப்பது (எழுந்தது ) ஆசை என்று சொல்லப்படுவதாகும் !.

அந்த ஆசையை அதன் மயமாதல் காமம் என்று சொல்லப்படுவதாகும் !. .

அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம் என்று சொல்லப்படுவதாகும் !

எந்த வஸ்து இடத்திலும் மோகமாதி இன்றி அவா மயமாய் நிற்றல் வேண்டும்!

அதுவே அனுபவ ஞானம் என்பதாகும்.! .

அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற உரிமையை அறிதலே அருள் அறிவு என்பதாகும்.!

அருள் அறிவு விளங்கும் போது அனுபவ ஞானம் தோன்றும் !.

அனுபவ ஞானமே இறைவனை அடையும் துவாரமாகும் !.

ஞானத்தில் சிறந்தது,...உபாயத்தை அறிந்து,...உண்மையை அறிந்து  ..அனுபவ ஞானத்தை பெறுதலே மரணத்தை வெல்லும் வழியாகும் .

இதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

சிந்திப்போம் செயல்படுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .    

செவ்வாய், 17 ஜூன், 2014

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்பது உண்மை அறிவு என்பதாகும் .

உண்மை அறிவு எங்கு இருக்கிறது ?

உண்மை அறிவு ஆன்மா என்னும் உள் ஒளியில் இருக்கின்றது .

அதை அறிந்து கொள்வது எப்படி !?

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும் சத்விசாரம் என்னும் மனத்தாலும் அறிய வேண்டும் .

ஜீவகாருண்யம் என்றால் என்ன ?

பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை போன்ற துன்பங்களால் வருந்தும் உயிர்களுக்கு உண்மையான அன்பு  தயவு,கருணை, இரக்கம் கொண்டு ,நம்மால் முடிந்த அளவுக்கு உபகாரம் செய்வது ஜீவ காருண்யம் என்பதாகும்.

சத்விசாரம் என்றால் என்ன ?

நம்முடைய ஆன்மாவின் உள்ளே உண்மையான அறிவு விளக்கம் உள்ளது ,அதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதை எப்படி அறிவது,?

நம்முடைய மனம் புத்தியைக் கொண்டு செயல்படுகின்றது .புத்தி என்பது மனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், இவைகள் நான்கும் புறத்தில் உள்ள அழியும் பொருள்களையே தேடும் .ஆகவே தேடும் பொருள்களும் அழிந்து விடும் அதை தேடும் மனிதர்களும் அழிந்து விடுவார்கள் .

ஆன்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது அறிவு என்பதாகும்,அதற்கு உண்மை அறிவு என்பதாகும்.ஆன்ம அறிவை அறிந்து கொண்டவர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதாகும்.அறிவால் கிடைக்கும் பொருள் அருள் என்பதாகும் .

ஆன்மாவும் அழியாது,அதில் இருந்து தோன்றும் அறிவும் அழியாது, அறிவால் கிடைக்கும் அருள் என்னும் பொருளும் அழியாது அழியாத பொருளைப் பெறுவதே ஞானம் என்பதாகும்.

ஆதலால் பொருளைத் தேடி வெளியே செல்லும் மனத்தை அடக்கி ஆன்மா இருக்கும் இடமான புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.

எப்படி செலுத்த வேண்டும் ?

அதற்கு ஞானம் என்று பெயர் ! ஞானம் என்பது நான்கு பிரிவுகளாக உள்ளன்,
.
அவைகள் '--''ஞானசரியை '' ''ஞான கிரியை ''.''ஞான யோகம்'',''ஞானத்தில் ஞானம்'' என்பதாகும் .

வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கு முதல் சாதனம் ஜீவகாருண்யம்,இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும் .

முதல் சாதனம் ஜீவகாருண்யம் ;--ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உண்டாகும் .பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை,போன்ற துன்பங்கள் வரும்போது நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அவற்றைப் போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்.

இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது  ''ஞான சரியை'' என்பதாகும்.

ஞான சரியை என்பது ;--புறத்தில் செல்லும் மனத்தை வெளியில் செல்ல விடாமல் ஆன்மாவில் செலுத்த வேண்டும் ,இதுவே சுத்த சன்மார்க்க தியானம்...சாதனம்  என்பதாகும்.

அப்படி இடைவிடாது செய்து வந்தால் ஞான சரியையில் இருந்து ,ஞானகிரியை,ஞானயோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து கொண்டே வரும்.

இறுதியில் இருக்கும் ஞானத்தில் ஞானம் என்னும் கதவு திறந்தால் அருள் என்னும் அமுதம் பூரணமாக கிடைக்கும். அதற்கு அருள் பூரணம் என்று பெயர்

அந்த அருள் பூரணத்தை பெறுபவர்கள் எவரோ அவர்களே மரணத்தை வெல்ல முடியும்.இதுவே ஞானம் என்பதாகும் இதுவே ஞான அறிவு என்பதாகும்.இதுவே அருள் சித்தி என்பதாகும் .இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும் .அதுவே சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .



உலகில் தோன்றிய அருளாளர்கள் சத்விசாரம் செய்து முத்தி அடைந்தார்கள் .வள்ளல்பெருமான் மட்டுமே ஜீவகாருண்யத்தையும்,சத்விசாரத்தையும் முழுமையாக கடைபிடித்து முத்தி,சித்திகளைப் பெற்று ஞானம் என்னும்,என்றும் அழியாத நிலைப்பெற்ற  ஞானத் தேகத்தை பெற்றவராகும்.

நாமும் வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்ந்து ஞானம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்.