ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

பேருபதேசத்தில் பதிவு செய்துள்ள ஒரு முக்கிய செய்தி !

*என்னை தூக்கிவிட்டது எவை ?* 

*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்*

*சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.*

*ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன்* 

*நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா!*

*அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.* 

*ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.*

*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* 

*என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** 

*என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.* 

*தயவுதான் என்னைத் தூக்கிவிட்டது என்று மிகவும் அழுத்தமாக ஆழமாக பதிவு செய்கிறார். அதேபோல் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வாழ்ந்து கொண்டுள்ளார்*

*தயவுதான் ஒவ்வொரு சன்மார்க்கிகளின் முக்கிய கொள்கையாக  வழிபாடாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் எல்லா குற்றமும். நீங்கிவிடும் பாவமும் நீங்கிவிடும் புண்ணியம்  வளர்ந்து ஆன்ம லாபம் பெற்று அறிவு விளங்கிக் கொண்டே இருக்கும்* 

*தயவும் இரக்கமும்  உயர்ந்தால் அருள் தானே கிடைக்கும் அருள் கிடைத்தால் எல்லா நன்மைகளும் தன்னைத்தானே தோன்றும்* 

*வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கம் ஒன்றே சாதி சமயம் மதம் கடந்த புனிதமான தனிப்பெருங் கருணை நிறைந்த தனி மார்க்கமாகும்* 

*வள்ளலார் வழியைப் பின்பற்றுவோம் ஆன்மலாபம் அருள் லாபம் பெற்று மரணத்தை வென்று முத்தேக சித்திப் பெற்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம்..*

*அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு