ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகள்!

*சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம்!*

 *நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு அவையாவை எனில்?*

1,சாகாக்கல்வி,
2,தத்துவ நிக்கிரகம் செய்தல்,
3,ஏமசித்தி,
4,கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பனவாகும்,

*வள்ளல்பெருமான் அவர்கள் சன்மார்க்கிகள் அவசியம்  பின்பற்ற வேண்டிய,கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றி தெளிவாக சொல்லி பதிவு செய்துள்ளார்கள்!*

*இன்றுவரை சன்மார்க்கத்தைப் பற்றி பேசும் சமயமத சன்மார்க்க வாதிகளும், நீண்டகாலமாக  சன்மார்க்கத்தைப்பற்றி மேடைதோறும் பேசுபவர்களும், மற்றும் சுத்த சன்மார்க்கத்தைப்பற்றி மேடைதோறும் பேசுபவர்களும்,சாகாக்கல்வி பயிற்சி தருபவர்களும் கீழே கண்ட சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை முழுமையாக பின்  பற்றுகிறீர்களா என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.*

*நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு அவைகளைப் பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில்:? அவை நான்கு வகைப்படும்.*

1. இந்திரிய ஒழுக்கம்.

2. கரண ஒழுக்கம்.

3. ஜீவ ஒழுக்கம்.

4. ஆன்ம ஒழு

*அவற்றுள் 1,இந்திரிய ஒழுக்கம் என்பது !*

*நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல்,* 

*கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல்,*

 *கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல்,*

*சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும்;*

*இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல்,*

*பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல்*

*உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்,*

*மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.*

2,*கரண ஒழுக்கம் என்பது -!* 

*சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல்,*

*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்,*

*தன்னை மதியாதிருத்தல்,*
*செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல்,*

*பிறர்மேற் கோபியா திருத்தல்,*

*தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்,*

*அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.*

3,*ஜீவ ஒழுக்கம் என்பது -!* 

*எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.*

*4,ஆன்ம ஒழுக்கம் என்பது -!* 

*எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.*

*இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா.* 

*ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.*

*மேலே கண்ட நான்கு ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் என்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்*

*மேலும் சொல்கின்றார்!*

*சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை,சாகின்றவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்,சாகாதவனே சன்மார்க்கி என்கின்றார்*

மேலும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும்,*

*கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்*

*அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.*

*மேலும் சொல்கின்றார்!*

*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*

*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,* 

*வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.*

*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*

*தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!* 

*மேலே கண்ட சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறிகளை எவ்வாறு  கடைப்பிடிக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தமாக தெளிவாக சொல்லி உள்ளார்*

*மேலும் இங்குள்ள நாம் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக்  கொண்டு இருக்காதீர்கள் நமக்கு காலம் இல்லை என்கின்றார்*

*நாம் அனைவரும் வள்ளலார் சொல்லியவாறு கடைபிடிக்க வேண்டுவதே ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமைகளாகும்*

*மேலும் சொல்லுகின்றார்!*

*இங்கு உள்ளவர்களால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது,அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் ( அகம் புறம்) உபத்திரவம் பண்ணுகின்றது,ஆதலால் இங்கிருப்பவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து "வாயடங்கி மனமடங்கி" இருக்க வேண்டும்*

*என்மேற் பழியில்லை சொல்லிவிட்டேன் பின்பு வந்ததைப்பட வேண்டும்  என்று எச்சரிக்கை செய்கிறார் வள்ளல்பெருமான்.*

*சாதி சமய மதங்களை பிடித்துக்கொண்டும் அரசியல் ஆதாயத்திற்காக சன்மார்க்கத்தைப் பிடித்துக்கொண்டும், காலத்தை கழிக்கலாம், கெடுக்கலாம் பணம் சம்பாதித்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டி விடுவார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*

*சுத்த சன்மார்க்கத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்*

*நாம் நன்கு உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் இல்லையேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிட்டுவிடுவார்,அனைவரையும் ஓரம் கட்டிவிடுவார்* 

*அறிவுசார்ந்த புதியவர்களை  ஒழுக்கம் உள்ளவர்களை,மேலும் தகுதியுள்ளவர்களை அழைத்துக் கொள்வார்,சேர்த்துக் கொள்வார், அணைத்துக்கொள்வார் சுத்த சன்மார்க்கத்தை எவ்விதப்பட்ட தடைகளும் இல்லாமல் உலகம் முழுவதும் கொண்டு செல்வார் என்பது சத்தியம்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு