சனி, 7 ஆகஸ்ட், 2021

விந்துநாதம் பரவிந்து பரநாதம் !

 *விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் !*



*விந்து நாதம் ! பரவிந்து பரநாதம் ! என்றால் என்ன ?*


விந்து என்றால் சுக்கிலம் ! இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று *மேல்நிலை சுக்கிலம்* ஒன்று *கீழ்நிலை சுக்கிலம்* இவை இரண்டும் மனித உடம்பில் உற்பத்தியாகிறது


*நாம் உண்ணும் பஞ்ச பூத உணவினால் உண்டாவது கீழ் நிலை சுக்கிலம்* 

*இறைவன் அருளினால் உண்டாவது மேல் நிலை சுக்கிலம்* .


விந்து என்ற சுக்கிலத்தால் நாதம் என்னும் சத்தம் உண்டாகிறது அந்த நாதம்தான் நாம் பேசும் மொழிகள் வார்த்தைகள்.


*குழந்தை பேசுகின்றது !*


தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்தததும் சத்தமும் வராது பேச்சும் வராது தாயிக்கும் குழந்தைக்கும் தொடர்பு உடைய தொப்புள் கொடியை துண்டிக்கும் போது வெளிக் காற்று  உள்ளே போகும் போதுதான் வீர் என்று சத்தம் வரும். சத்தம் என்னும் நாதம் வந்தால் குழந்தை நன்றாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.


அதன் பின்பு தாயின் பாலைக் குடித்து குழந்தை வளருகின்றது.ஆனாலும் குழந்தைக்கு பசிக்காக அழும் சத்தம் மட்டுமே வரும் ஆனாலும் பேசுவதில்லை ...நாம் உண்ணும் உணவை கொஞ்சம் கொஞ்சமாக  குழந்தைக்கு கொடுத்து உணவு உண்ணும் பழக்கத்திற்கு கொண்டு வந்து விடுகின்றோம்.


*உணவினால் சுக்கிலம் உண்டாகிறது.*


தினம் ஆகாரங் கொண்டால் அவ் ஆகாரம் மார்பின் இடத்தில் ஓர் தட்டில் தங்கும்.அந்த தட்டின் மேல் கடவுள் கடவுளை என்று இரண்டாக இருக்கின்றது.

உண்ட அன்னத்தை ஒரு மணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவங்களுக்கு { உறுப்புகளுக்கு } ஊட்டுகின்றது .


மறுபடியும் இரண்டு மணிக்குள் மேற்படி அன்னத்தினது  மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் *சுக்கிலமாக்கி* இரண்டரை வராகன் எடையில் கோச நுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும் .பிரமந்திரத்தில் அறையுஞ் ...சேர்த்து மற்றவைகளைக் கொண்டு ஆங்காங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை .குறும்பை.

நகத்தூசி .தொப்புள் அழுக்கு ,கண் பீளை .முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது


மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள திரவத்தைப் பிரித்து உதிரமாக்கி யூட்டுகின்றது  .

மூன்று மணிக்கு மேல் சக்கையை மல பாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது .ஆதலால் ஆகாரங் கொண்ட மூன்று மணிக்கு மேல் தான் ஆகாரங் கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார்.


*ஒரு குழந்தையின் உடம்பில் இவ்வளவு வேலைகளையும் மாற்றங்களையும் யார் ? செய்வது* சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஐந்தொழில் வல்லபம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு குழந்தை பிறந்தவுடன் பேசாது,உண்ணும் உணவை அரைத்து திரவமாக்கி அதில் மத்திய தரமாகிய திரவத்தை இரத்தமாக்கி.உடம்பிற்கு தேவைப் போக வீரியம் உள்ள இரத்தத்தை சுக்கிலமாக மாற்றுகின்றது. சுக்கிலம் என்னும் விந்து மூலாதாரம் என்னும் குண்டலனிவட்ட பையில் சேர்க்கின்றது.

அந்த சுக்கிலம் என்னும் விந்து கொஞ்சம் கொஞ்சமாய்  சேர்ந்து சேர்ந்து .அதன் ஆவி ஆறு ஆதாரங்களின் வழியே சென்று குரல் வலையில் உள் நாக்கின் வழியாக வரும் போதுதான் குழந்தை பேச ஆரம்பிக்கின்றது ..அக் குழந்தை உலகியல் தாய் தந்தை பழக்கத்திற்குத் தகுந்தாற் போல் தன்னை வளர்த்துக் கொள்கின்றது .

விந்துவின் தன்மைக்குத் தகுந்தாற் போல் விந்துவின் உணர்ச்சிக்குத் தகுந்தாற் போல் பேச்சு என்ற ஒலியும் அறிவு என்ற விளக்கமும் பெறுகின்றது ..


பஞ்ச பூத விந்து !


*பஞ்ச பூத உணவால் உண்டாவது தான் வீரியமுள்ள பூத விந்து பூநாதம் என்பதாகும்* அதனால் வரும் ஒலிதான் விந்து நாதம் என்பதாகும்.

விந்து சக்தியால் தான் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் பேசிக்கொண்டு உள்ளார்கள்.  


*பேச்சின் ஒலித்தன்மைக்குத் தக்கவாறு எழுத்து என்ற வரிவடிவம் உருவடிவம் தோன்றியது*. 


அதற்கு வரி வடிவம்

ஒலி வடிவம் தன்மை வடிவம்

உணர்ச்சி வடிவம் உண்மை வடிவம் என்று பெயர் வைத்துள்ளார்கள் .இந்த விந்து சக்தியின் துணையுடன் பரவிந்து சக்தியுடன் தொடர்பு கொண்டு இறை அருளின் ஏக தேசத்தைக் கொண்டு  சில பல அருளாளர்களால் .உலகில் உள்ள மொழிகளின் இலக்கணம்.

இலக்கியம் மற்றும் வேதம் .ஆகமம்.

புராணம்.

இதிகாசங்கள் .

சாத்திரங்கள் யாவும் தோன்றின.


*விந்துவில் (சுக்கிலம்) இரண்டு வகை!*


*தாவர  உணவால் உண்டாவது சுத்த பூதகாரிய விந்து.*

*மாமிச உணவால் உண்டாவது அசுத்த பூதகாரிய விந்து என இரண்டு வகை உண்டு*.


*அசுத்த பூத காரிய மாமிச உணவு உண்பவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை.*


*சுத்த பூத காரிய தாவர உணவு உண்பவர்களுக்கு மட்டுமே பரவிந்து பரநாதத்தின் தொடர்பு கிடைக்கும்.*


*பரவிந்து பரநாதம் !*


பரவிந்து பரநாதம் என்பது உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து பெறும் அருளும் அதில் தோன்றும் நாதம் என்பதாகும்.


*மனித தேகம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த அறிவுள்ள தேகம். இந்த மனித தேகத்தனால மட்டுமே உயர்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.இங்கே உயர்ந்த அறிவு என்பது உலகியல் அறிவு அல்ல அருள் அறிவைப் பெறுவதே உயர்ந்த அறிவாகும்* 


ஏழாவது பிறப்பாகிய மனித தேகத்தில் 

 இந்திரிய அறிவு.

கரண அறிவு.

ஜீவ அறிவு.

ஆன்ம அறிவு என நான்குவிதமான உயர்ந்த அறிவு  உள்ளன.


*கடவுளிடம் உள்ளது பரவிந்து பரநாதம்*!


*ஆன்ம அறிவுக்கு மேல் அருள் அறிவும்*

*அதற்குமேல் கடவுள் அறிவும்* *எனகின்ற உயர்ந்த அறிவும் பெறவேண்டும்*. 

*அந்த உயர்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ளத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன.*


*இந்திரிய ஒழுக்கத்தால் இந்திரிய அறிவும்

கரண ஒழுக்கத்தால் கரணஅறிவும் 

ஜீவ ஒழுக்கத்தால் ஜீவ அறிவும் ஆன்ம ஒழுக்கத்தால் ஆன்ம அறிவும் முழுமை பெற்றால் மட்டுமே *பரவிந்து பரநாதம்* என்ற ஆண்டவர் தொடர்பு கிடைக்கும். 


*அருள்அறிவும் கடவுள்அறிவும் ஆன்மஅறிவில் ஒன்று பட்டால் தான் மரணத்தை வெல்ல முடியும்*. அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடையும் முறையாகும்.


அருள் பெறுவது எப்படி !


நாம் உணவு உட்கொள்ளுகின்ற வரை.பரவிந்து என்னும் அருள் சுரக்காது .பர நாதம் என்னும் இறை ஒலி தோன்றாது .இறை ஒலி தோன்றினால் தான் .இறை ஒளி என்னும் அருட் பிரகாசம் தோன்றும்.


*நாம் உண்ணும் உணவுகளின் அசுத்தங்களை வெளியேற்ற ஒன்பது துவாரங்கள் உள்ளன.உணவை நிறுத்தி ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும்.இடைவிடாது இறைவனிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே ஒன்பது துவாரங்களும் இறை உணர்வால் அடைக்கப்படும்.அப்படி அடைக்கப் பட்டால் தான்  துரியக் கதவுத் திறக்கப்படும். அதுதான் மோட்ச வீட்டின் கதவு என்பதாகும்*.


அந்த மோட்ச வீட்டின் கதவைத் திறக்க திறவுகோல் என்னும் அருள் வேண்டும்.

அருள் பெறுவதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் வேண்டும்.


*நாம்பெற வேண்டுவது அன்பு தயவு அருள் 

கருணை என்பதாகும்* கருணையே அருளாக மாற்றம் அடையும்.கருணை என்னும் சுத்த உஷ்ணத்தினால் மேல் வீட்டுக் கதவு திறக்கும்.கதவு திறந்தால் அருள் மலரும்.அருள் மலருவதே  பரவிந்து பர நாதம் என்பதாகும்.*


*கருணையும் சிவமும் பொருள் என காண்க* என்கிறார் வள்ளலார்


வள்ளலார் பாடல் !


இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார்

எல்லாஞ் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார்

அன்பர் உளத்தே இனிக்கும் அமுதர் வருகின்றார்

அம்பலத்தே நடம் புரியும் ஐயர் வருகின்றார்

என்பு உருவம் பொன் உருவாக்க எண்ணி வருகின்றார்

என்று திரு நாத வொலி இசைக்கின்றது அம்மா

துன்பம் அறத் திருச்சின்ன வொலி அதனை நீயுஞ்

சுகம் பெறவே கேளடி என் தோழி எனைச் சூழ்ந்தே !


என்னும் பாடலில் தான் அனுபவித்த பர நாத ஒலியையும் அதனால் கிடைக்கும் பரவிந்து என்னும் அருளையும் .அதனால் அடைந்த பேரின்பத்தையும். அளிக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார் நீங்களும் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை வாருங்கள் வாருங்கள் என்று உலக மக்களை அன்புடன் அழைக்கின்றார் 


விந்து நாதத்தை நிறுத்தி பரவிந்து பர நாதத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஞானசரியை என்னும் 28.பாடல்களில் விளக்கி உள்ளார் படித்து பயன் பெறலாம்.


*முதல்பாடல்*


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு


நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என் உரமை நாயகனே என்று


வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியிலீர்

மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு