வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஆசைப்பட வேண்டும்!

 *ஆசைப் படவேண்டும்!*


வள்ளலார் பாடல்!


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! (ஞானசரியை பாடல்)


*உலகில் மனிதன் வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்ற மூன்று வகையான ஆசைகளே காரணம் காரியமாக உள்ளன.இந்த மூவகையான ஆசைகளிலே மூழ்கி முழுமையாக அனுபவிக்க முடியாமல் இறுதியில் துன்பம் வந்து மனிதர்கள்  மாண்டுபோகிறார்கள்*.


*ஆசையை ஏன் ஒழிக்க வேண்டும்?*


*துன்பத்திற்கு காரணமே ஆசைதான் என்கிறார்கள்*


*மனிதர்கள் அழிவிற்கும் துன்பத்திற்கும் ஆசைகளே காரணம் என்பதால் ஆசைகளை விட்டு இறைவனை தொடர்புகொண்டு அருளைப்பெற்று சொர்க்கம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் போன்ற இடங்களில் சென்று துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று ஆன்மீக அருளாளர்கள் மக்களுக்கு நிறைய போதித்து வருகிறார்கள்*


சில அருளாளர்கள் *அறுமின் அறுமின் ஆசையை அறவே அறுமின் ஈசனோடுயாயினும் ஆசையை அறவே அறுமின் என்றும் போதித்து உள்ளார்கள்* *கடவுளிடத்திலும் ஆசை வைக்ககூடாது என்றும் சொல்லுகிறார்கள்* 


*ஆசை இல்லாத மனிதபிறப்பே உலகில் கிடையாது*.

*ஆசை இல்லாத ஆன்மா உணர்ச்சி இல்லாத  ஜட தத்துவம் போலாகிவிடும்*


*மேலே சொன்ன மூன்று ஆசைகளையும் துறந்த துறவிகளும் சன்னியாசிகளும் சித்தர்களும் தன் உயிர்மீதும் உடம்பு மீதும். உணவுமீதும் ஆசை வைத்துள்ளார்கள்.அதுவும் ஒருவகையான ஆசைதான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*இங்கேதான் வள்ளலார் தனித் தன்மையுடன் நிற்கிறார்*!


*மனிதர்கள் ஆசை இல்லாமலும் பற்று இல்லாமலும் வாழவே முடியாது. ஆசையையும் பற்றையும் அழிக்கவே முடியாது.ஆனால் அவற்றை மாற்ற முடியும் என்பதால் ஆசை உண்டேல் வம்மின் இங்கே என்று அன்புடன் அழைக்கிறார் வள்ளலார்* 


*ஆசைகளிலே பெரியது பெண்ணாசை என்கிறார்கள்*.

*வள்ளலார் ஆண் ஆசைதான் பெரியது  என்கிறார்.*

*ஏன் என்றால்?*

ஆன்மாக்கள் எல்லாம் பெண்தன்மை உடையது.

ஆன்மாக்கள் ஆன்மாக்களுடன் ஆசை வைப்பது ஒர்இனச் சேர்க்கை வைப்பதற்கு ஒப்பாகும் என்கிறார்.


*வள்ளலார் பாடல்!*


கண்ணாறு படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்

கணவர் திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்


எண்ணா என் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா

தெனை ஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ


*பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்*

*பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே*


உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.! 


என்னும் அனுபவமாலை பாடலிலே தெளிவாக சொல்லுகின்றார்.


என்னால் ஆசையை அழிக்கவோ ஒழிக்கவோ முடியவில்லை. என்னுடைய  ஆசையானது வெள்ளம்போல் என் சொல்வழி கேட்காமல் செல்ல வேண்டிய செலுத்த வேண்டிய இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கின்றது.


எங்கு என்றால்? அவர்தான் என்கணவர் பொன்மேனி கொண்டவர் ஆண் அழகர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் ஆண்தன்மைக் கொண்டவர்

அவரிடம் நான் இணைந்து இடைவிடாது அனுபவிக்கிறேன். நான் அனுபவிக்கும் செய்தி வெளியில் தெரிந்தால் கண்பட்டுவிடும் ( கண்ணேறு) என்று நான் அஞ்சுகிறேன் என்கிறார்.


மேலும் *பெண்ணாசை பெரியது என்று சொல்லும் மண்.நீர்.அக்கினி காற்று மற்றும் விண்ணை ஆள்பவர்களுக்கும் பெண்ணாசை பெரியதல்ல ஆண் ஆசையே பெரியதென்று வள்ளலார் சொல்லுகின்றார்*

*நான் அனுபவித்த அதே இன்பத்தை நீங்களும் அனுபவிக்கலாம் ஆசை உண்டேல் வாருங்கள் என்று அன்புடன் மக்களை அழைக்கின்றார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே ஆன்மாக்களுக்கு இன்பம் தரமுடியும் அதுவே ஆன்ம இன்பலாபம் என்றும். என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் சொல்லப்படுகிறது* 


*உயிரும் உடம்பும் அனுபவிக்கின்றது பொருள் இன்பம் நிலையற்றது*.

*ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதியும் அனுபவிக்கின்றது அருள் இன்பம் என்றும் அழியாதது.*


*மனிதப்பிறப்பு எடுத்த ஒவ்வொரு ஆன்மாவும் இப்பிறப்பிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலித்து அனுபவிப்பதே அருள்பெறும் இன்பமாகும்* .


உலகம் முழுவதும் *தோற்றுவித்தல்*

*விளக்கம் செய்வித்தல். துரிசுநீக்குவித்தல் பக்குவம் வருவித்தல். பலன்தருவித்தல்  போன்ற ஐந்தொழில் செய்கின்ற  இயற்கை உண்மைக்  கடவுளாகியவர் எல்லாம் வல்லவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டுபிடித்து காதலித்து கணவராக்கி அனுபவித்து அருள்பெற்றுக் கொண்டவர் வள்ளலார் ஒருவரே என்று எல்லோரும் போற்றுகிறார்களாம்.*


*வள்ளலார் பாடல்*


*எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்*

*எவ்வுலகில் யார் எனக்கிங் கீடுரைநீ தோழீ*


நல்லாய்மீக் கோளுடையார் *இந்திரர்* 

*மாமுனிவர்*

*நான்முகர்* 

*நாரணர்எல்லாம் வான்முகராய் நின்றே*


*பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை* *நம்மால்*

*பகர்வது அரிதென் கின்றார்* *சிற் பதியில்நடம் புரியும்*


*வல்லானை மணந்திடவும்* *பெற்றனள்*

*இங்கிவளே*

*வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே*.! 


என்று *நாம் வணங்கி போற்றுபவர்களே வள்ளலாரை போற்றி பாராட்டி மகிழ்கிறார்கள்*.


*அருள் பெறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது ஆசைப்படவேண்டும் என ஆன்மநேயத்துடன் அழைக்கிறார் வள்ளலார்*


*பொருள் இன்பத்தால் மரணம் வரும். அருள் இன்பத்தால் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு