ஞாயிறு, 6 ஜனவரி, 2019

சுத்த சன்மார்க்க வேண்டுகோள் !

🙏🌻🔥🌻🙏🌻🔥🌻🙏🌻🔥🌻🙏🌻🔥🌻🙏
அருட்பெருஞ்ஜோதி ;
அருட்பெருஞ்ஜோதி ;
தனிப்பெருங்கருணை ;
அருட்பெருஞ்ஜோதி ;

🙏🔥🌺 *சுத்தசன்மார்க்க வேண்டுகோள்* 🌺🔥🙏
🙏🌻🔥🌻🔥🙏🌻🔥🌻🙏🌻🔥🌻🙏🌻🔥🙏
      ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு இவ்வெளியவனின் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை அனைவருக்கும் தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

இதற்கு முந்தையப் பதிவுகளில் திருவருட்பா முழுப்பாடல்களின் விளக்க வரிசையில் அருட்பெருஞ்ஜோதி அட்டகம் எட்டுப் பாடல்களுக்கும்,
திருக்கதவந் திறத்தல் பத்துப்பாடல்களுக்கும்,

பொய்கொடுத்த மனமாயை சேற்றின் வசப்பட்டு மயங்குகின்ற  மதியினேனாகிய எனது மருளறிவினால் அருளறிவுக்குரிய திருவருட்பாவை விசாரம் செய்யும் வகைத் தெரியாவிட்டாலும் ,
எனது இக்குருட்டறிவைக்
கொண்டு விசாரித்த வகையில் எனது கீழான தரத்திற்கும் தெளிவற்ற பக்குவத்தையும் திருவருள் கருத்தில்கொண்டு எனது மருளறிவிற்கு புரியும் வண்ணம் தெரிவித்ததை என் உயிர் உறவுகளாகிய ஆன்மநேய சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்து கலந்து மகிழ்வோம் என்ற பேராவலின் பொருட்டுதான் இங்கு அவற்றை பதிவுசெய்துவந்தேன் 👏

அவற்றையும் ஓர் பொருட்டாய்ப் படித்து இக்கடையேனைப் பாராட்டியும், அவரவர்களின் கருத்துகளை தெரிவித்தும், திருத்தியும் பதிவுசெய்து அன்பு பாராட்டிய ஆன்மநேய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான தயவான நன்றிகளைத் தெரிவித்து மகிழ்வதுடன்,

இவற்றிற்கு எல்லாம் மூலமாக நமது அனைவரின் அகமிருந்தும் இவ்வுலகில் சுத்தசன்மார்க்கம் நிலைபெற்று இவ்வுலகவர்களின் வாழ்வு நிலைத்திடவேண்டி,
சுத்தசன்மார்க்கத்தை தாமே முன்னின்று நடத்திவரும் நமது அருட்பெருந்தந்தை பூரண அருட்சுடராம் நமது அருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருவடியைப் போற்றி வணங்கி,

அவர்களது அறிவுறுத்தலின் வண்ணமே அடுத்து சுத்தசன்மார்க்க வேண்டுகோள் என்ற தலைப்பில் உள்ள 11 பாடல்களின் பொருள்களை காணும் பொருட்டு இன்று முதல்பாடலின் பொருளைக் காண திருவருள்துணைக்கொண்டு முயல்கின்றேன்🔥👏

கற்றறிந்த சுத்தசன்மார்க்கப் பெரியோர்கள் இச்சிறியேன் சொல்லாலும் பொருளாலும் செய்துள்ள பிழைகளைப் பொறுத்தருள வேண்டிப் பணிவுடன் வேண்டுகின்றேன்👏

🌺 *சுத்தசன்மார்க்க வேண்டுகோள்* 🌺
 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
       சுத்தசன்மார்க்க வைண்டுகோள் என்ற இந்த தலைப்பில் உள்ள 11 பாடல்களின் பொருளைக் கண்டுகொண்டோமானால் ,

 பூரண அருட்ச்சுடர் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானுக்கு முன்பு இவ்வுலகிற்கு வந்து சென்ற அருளாளர்களுக்கும் *நமது வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்கப்பட்டதற்கும் உரிய காரண காரியங்கள் தெள்ளத் தெளிவாக வெளிப்படும்* 💐

 *ஆம் , நமது வள்ளல் பெருமானிற்கு முன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு வந்தருளிய அருளாளர்கள் யாரேனும்  இவ்வுலகில் செத்தவர்கள் எல்லாரையும் எழுப்புகின்ற வரத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் கேட்டுள்ளார்களா ?*

 *உண்ணாடி உயிர்கள் உறும் துயர்தவிர்த்திடுவதற்குஉரிய வரத்தைக் கேட்டுள்ளார்களா ?*

 *உலகஉயிர்த்துயரம் இனி கணமும் என்னால் பொறுக்கமுடியாது அதனால், இறைவா உனது அருளொளியை கொடுத்தருள வேண்டும் என்று இவ்வுலக உயிர்களுக்காக அருளொளியைக் இறைவனிடம் கேட்டுள்ளார்களா ?*

 *எவ்வுயிரையும் தன்னுயிர்போல் பார்த்து அவ்வுயிர்களுக்கு வரும் அச்சம் துயரம் தீர்த்து அவர்களை எல்லாம் திருமணிப் பொதுவிற்கு அடிமைகளாய் செய்திட வேண்டும் என்று யாரேனும் கேட்டுள்ளார்களா ?*

 *துடிசேர் எவ்வுலகமும் எத்தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்று, ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதமற்று, சாதி சமய விகற்பங்களெல்லாம் தவிர்ந்து எவ்வுலகும் சன்மார்க்க பொதுவடைதல் வேண்டும் என்று இறைவனிடம்  கேட்டுள்ளார்களா ?*

 *படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் என்று பஞ்சகிருத்திய செயல்களை இவ்வுலக உயிர்களின் பொருட்டு   கேட்டுள்ளார்களா ?*

 *இவ்வுலகில் ஐந்து தொழில்புரிந்து ,செறியாத (அடங்காத) கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும் என்று, அடங்காமல் குரங்கு ஆட்டம்போடும் இவ்வுலகவர்களின் மனத்தை எல்லாம் அடக்கி சுத்தசன்மார்க்க நன்னெறிக்கு அழைத்து வருவதற்கு ஆண்டவரிடம் ஐந்து தொழில் கேட்டவர்கள் யாரும் உண்டா ?*

 *இவ்வுலகதிலே இறைஅரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும் இச்சை ஒன்றறியேன் என்று இறைத்தன்மை தனக்கு கிடைத்தும் ,  அந்த இறைநிலையைக் கொண்டு இங்கு தனக்கென்று ஓர் இறை அரசாட்சி வேண்டாம் என்று சொன்ன கர்த்தாக்கள் யாரும் இருக்கின்றார்களா ?*

 *சரியை ,கிரியை, யோகம் ,ஞானத்தால், அடைகின்ற பதங்களை அடைந்து முத்தியடைவதற்கே பிறவிகள் எடுத்த அருளாளர்கள் மத்தியில்,       இந்தனை பதங்களை எல்லாம் பொருந்தவும் ஆசை எனக்கில்லை ஏன், முத்தி இன்பத்தைக் கூட அடைவதற்கு ஆசை எனக்கில்லை  என்று கூறி,*

 *கருணையே வடிவாய் நின்று பிறர்களுக்கு நேர்ந்த அச்சம் முதலிய துன்பங்களை நினது அருளால் தவிர்த்து அவர்களுக்கு இன்பமே அளித்து இவ்வுலகை வன்புலைகொலை தவிர்த்த ஓர் நெறியில் நடத்திட அருள்புரியவேண்டும் இதுவே எனது ஆசை, அந்த ஆசையை எனக்கு அருள்வாய் என்று , ஆண்டவரிடம் இதுபோன்ற ஆசைகளையும் வரத்தையும் கேட்ட அருளாளர்களையோ ஞானிகளையோ இந்த பிரபஞ்சம் இதுவரைக் கண்டதுண்டா ?*

 *மண்ணுலகிலே பிற உயிர்கள் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் சகித்திடமாட்டேன் , அதனால் நான் கேட்கின்றபோதெல்லாம் பிறர் துயரத்தை சொல்லுகின்றபோதெல்லாம் உன்னுடைய அருள்வலத்தால், அவர்களுடைய துயரத்தை போக்குவதற்குரிய வரத்தை மட்டும் எனக்கு அருள்வாய் என்று கேட்ட  ஞானிகளை இதுவரை இவ்வுலகம் அறிந்ததுண்டா ?*

 *இரக்கமும் எனது உயிரும் ஒன்றேயாகும். இரக்கம் நீங்கில் என்உயிரும் நீங்கும் என்று சொன்ன அருளாளர்களை இதுவரை இந்த விண்ணும் மண்ணும் பார்த்ததுண்டா ?*

 *அகத்தே கறுத்து புறத்தே வெளுத்திருந்த உலகவர்களை திருத்துவதற்காகவே என்னை இறைவன் வருவிக்கவுற்றான் என்று ,தான் இவ்வுலகிற்கு வந்த நோக்கம் எதற்கு என்று சொன்ன அருளாளர்கள் இதுவரை யாரேனும் உண்டா ?*

 *சாதி வேண்டாம் சமயம் வேண்டாம் மதம் வேண்டாம் என்று கூறி அவைகளால் நமது உண்மைக்கடவுளை நம்மால் நெருங்கி அடைய இயலாது ,*

 *நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டதனால்,*

 *ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே என்றும்,*

 *ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒருநிலை ஆக்க என்றுரைத்த மெய்ப்பரமே என்றும்*,

 *இவ்வுலகில் இதுவரை மதங்களாலும் சமயங்களாலும் எட்டாத ஓர் கடவுளுண்மை வெளிப்படக்கூடிய ஓர் ஒப்பற்ற உயரிய நிலையாம் சுத்தசன்மார்க்க நிலைக்கு என்னை ஏற்றிவைத்து,*

 *அதன்மூலம் இவ்வுலகில் இதுவரை இருந்த மதங்களையும் சமயங்களையும் மற்ற மார்க்கங்களை எல்லாம் மாற்றி , அவைகளை எல்லாம் சுத்தசன்மார்க்கம் என்ற ஒருநிலைக்கு ஆக்குவாய் என்று  இதுபோன்று ஆண்டவர் கட்டளை இட்டதாக எந்த அருளாளர்களாவது கூறியுள்ளனரா ?*

 *நீநினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் ஆகவே உன்னை நேர்க்காண வந்தோம் என்று கூறி ,*

 *நான் இவ்வுலக உயிர்களின்பால் கொண்டிருக்கும் இரக்கத்தையே உன்னிடத்திலும் கண்டேன் .*

ஆகலில் ,
நீ எனது பிள்ளை என்று *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பிள்ளை* என்று பெருமானுக்கு ஓர் பிள்ளைப் பட்டத்தை கொடுத்ததுடன்,

 *அதற்கு அடையாளமாக கையில் ஓர் கங்கணத்தையும் ஆண்டவர் அணிவித்து* ,

 *இனி நின் செயல் அனைத்தும் என்செயலே,*

 *நின் இயல் அனைத்தும் என் இயலே ,*

 *நின் உருவே எனது உருவுமாகும்,*

 *நின் உரை அனைத்தும் நான் உரைக்கும் உரையே என்றும் ,*

தன்னையும் தன் அருட்சக்தியின் வடிவையும் பெருமானையும் ஒன்றே என்று கூறி,
 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், அருள்சக்தி பெருமான் எனமூன்றும் இனி ஒன்றினுள் ஒன்றே என்றுரைத்து,*

 *தனது கையில் வைத்திருந்த இவ்வுலகை ஆளும் திருவருட் செங்கோலை பெருமானாரது கையில் கொடுத்து,*

 *எனது மகனே, நீ இனி உன்விருப்பப்படி இவ்வுலகினில்  உயிர்களுக்கு உண்டாகின்ற துயரங்களை எல்லாம் விலக்கி மகிழ்க !               உத்தமன் ஆகுக ! ஓங்குக ! என்று இத்தனை அருளடைவுகளையும் அடைந்த அருளாளர்களை இந்த அண்டபகிரண்டமும் கண்டதுண்டா ?*

அப்படிப்பட்ட உயரிய அருள்நிலையை நமது வள்ளல் பெருமான்  பெற்றுக்கொண்டு, *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே பெருமானாரது திருவுருவில் இவ்வுலகில் வடலூர் புண்ணிய பூமியேலே தமது திருப்பாதம் தழுவ நடந்து உலாவி வந்துள்ளார்கள் என்றால் .*

 *அத்திருப்பாதம் பட்ட மண்ணில் நமது அசுத்த கால்பாதம் பதித்து நடப்பதற்கு நமது கல்மனமும் சம்மதியுமோ  !*

இருந்தும் என்ன செய்வது அதைவிடுத்தால் வேறு கதிஇல்லை ,
 *அப்படிப்பட்ட பெருமைமிகு புண்ணியபூமியை நாம் எப்படி மதித்து வாழ்தல் வேண்டும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்* 🔥👏


இன்னும் பெருமானார் அடைந்த நிலைகளை எல்லாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம் ஆனால் எழுதுவதற்கு ஏடுகொள்ளாது, சொல்லுவதற்கு நாள்போதாது,
படிக்க கேட்க்க மனம் சலிக்காது, பெருமானைப் புகழ வார்த்தைகளே கிடையாது ;

இத்தனைப் பெருமைகளையும் புகழையும் தான் ஒருவருக்கு மட்டுமே சொந்தமாக பெற்று வைத்திருக்கும் பெருமான் ,

தான் பெற்ற இவ்வனைத்தையும் இவ்வுலகவர் அனைவரும் பெற்றிடவேண்டும் என்ற தனிப்பெருங்கருணையாகிய *தயவே* என்னை  *வேதாகமத்தினாலும்  எட்டி ஏற இயலாத ஓர் உயரிய  திருநிலைக்கு ஏற்றிவைத்தது* என்று கூறுவது மட்டும் அல்லாமல் ,

 *அந்த திருநிலையை அடைவதற்கு ஜீவகாருண்யமே வழி என்றும் இதற்கு வேறு எந்த வழியும் கிடையாது என்றும் கூறி அதற்கு நானே சாட்சி என்றும் பெருமான் தெளிவுபடுத்துகின்றார்கள் நமக்கு;*

ஆகவே ஒவ்வொரு சுத்தசன்மார்க்க சங்கத்தார்களும் வள்ளல் பெருமான் அடைந்த நிலையை அடைய இருப்பவர்களே என்பதைக் கருத்தில் கொண்டு ,
இந்த சுத்தசன்மார்க்க வேண்டுகோள் என்ற தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்துகொண்டு ஒவ்வொருநாளும் வழிபடும்போது நமது வேண்டுகோளாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தித்தல் அவசியமாகும் 🔥👏

நல்லது,
தற்போது சுத்தசன்மார்க்க வேண்டுகோள் தலைப்பில் உள்ள முதல் பாடலின் பொருளைக் காண்போம் 🙏

பாடல்;
 *அப்பா நான் வேண்டுதல் அருள்புரிதல் வேண்டும் !ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் !*

பொருள்;
பூரண அருட்சுடராம் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானார் நமக்கு கொடுத்துள்ள ,

அருளால் நிறைந்து பொங்கிவழியும் அமுதொத்த பாக்களைக் கொண்டு தொடுத்துள்ள *திருவருட்பாவின் ஒவ்வொரு வார்த்தைகளும், வாக்கியங்களும் ஊனை உருக்கி உயிரை உருக்கி ஆன்மாவை நெகிழச்செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடியில் கொண்டுபோய் சேர்த்துவிடக்கூடிய மகாமந்திர எழுத்துக்களால் ஆன மாபெரும் அருள் பொக்கிஷமாகும்* 🌻🔥🙏

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நமது வள்ளற் பெருமான் பிரார்த்தித்து வேண்டும் போது,

எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் தலைவனுமாய் இருந்து அருளாட்சி செய்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றும்  வகையில் ,
அப்பா,அம்மா,அண்ணா,ஐயா,அத்தா,அச்சா,
அடிகேள்,அரைசே,அறிவா,அருளா,அமலா என்று பத்துப்பாடல்களிலும் பத்துவிதமாய் இறைவனைப்போற்றி வேண்டுவார்கள் 🌺

அந்தவகையில் முதல் பாடலில் அப்பா என்று, தந்தை மகன் என்ற உரிமையோடு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்,
அப்பா நான் வேண்டுகின்றதை பெருங்கருணையுடன் தங்களது திருவுளத்தில் ஏற்றுக்கொண்டு இக்கடையேனுக்கு அருள்புரிய வேண்டும் என்றும்,

அப்பா அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே இவ்வுலகில் தங்களால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் தாங்களே உள்ளொளியாய் இருந்து அவைகளை இயக்குகின்றதால்,

தங்களது தனிப்பெருங்கருணையால் அவைகளுக்கு தேகம்கொடுத்து
புல் பூண்டு முதலாகிய தாவரப் பிறவி தொடங்கி ஆறறிவு மனிதப்பிறவிவரை  அனைத்து உயிர்களிடத்தும்  நான் எவ்வித பேதமும் பார்க்காமல் *ஆன்மநேயத்துடன் அவைகளிடத்தில்  அன்புசெய்து வாழ்ந்திடல் வேண்டும்* என்றும் 🌻🙏

 *பாடல்;                எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட்புகழை இயம்பியிடல் வேண்டும்;*

 *பொருள்;*
அப்பா அருட்பெருஞ்ஜோதி என் தந்தையே நீ படைத்த இவ்வண்டத்தில் உள்ள எல்லா உலகத்திற்கும் அதிலுள்ள எல்லா இடங்களுக்கும் நான் சென்று ,

எனது அருட்பெரும்ஜோதி ஆருயிர் தந்தையே உனது அருளாகிய தயவை, கருணையை இவ்வண்ட பகிரண்ட உயிர்கள் எல்லாம் அறிந்து தெரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கி அவைகளுக்கு பெருமைப்பட புகழ்ந்து சொல்லுதல் வேண்டும் 🌻🙏

 *பாடல்;              செப்பாத மேனிலைமேல் சுத்தசிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்;*

உரை மனம் கடந்த ஒரு அருட்பெருவெளிமேல் சொல்லுதற்கரிய ஓர் அரிய பெரிய மேல்நிலையில் சுத்தசிவ மார்க்கம் சிறந்து ஓங்குவதற்கு நினது அருளொளியைக் கொடுத்தருள்புரிதல் வேண்டும்🔥🙏

 *பாடல்;*
 *தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்!          தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே;*

 *பொருள்;*
அப்பா எனது அருட்தந்தையே,
மாயையால் வினையால் அரிபிரமாதி வானவர்களே மனமதி மயங்கி தீய காரியங்களை செய்கின்றார்கள் என்றால் நான் செய்வது என்பது இயல்புதான் ,
அவ்வாறு நான் தப்பேது செய்தாலும் நீ இவண் யாரோ என்று இருந்துவிடாமல் தீயது இவை என்று அறிவித்து என்னைத் திருத்தி செய்த தவற்றை பொறுத்தருளல் வேண்டும்.💐


அடியார்களின் அன்பிற்கு இசைந்து அவர்கள் கேட்பதை எல்லாம் காலமறிந்து கொடுத்தருளும் கருணாநிதியே எனது தந்தையே எனக்கும் இதுவரை நான் கேட்ட வண்ணமெல்லாம் கொடுத்து அருள்பாலித்தருளும் , எனது தலைவனே *உன்னைவிட்டு ஒருகணமும் நான் பிரிந்துவிடாத நிலைமையையும்  (உறுதியையும்) எனக்கு சேர்த்து கொடுத்து அருள்பாலித்திட வேண்டுகின்றேனே .*🔥👏
என்று முதல் பாடலை பெருமான் வேண்டி விண்ணப்பித்து நிறைவுசெய்கின்றார்கள். நாமும் அவ்வண்ணமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் நமது அருட்பிரகாசப் பெருமானையும் வேண்டிப் பரவுவோமே!🌻🔥👏
...நன்றி 🙏
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🙏
...பெருமான் துணையில் 🙏
...தயவுடன் வள்ளல் அடிமை🙏
...வடலூர் இரமேஷ் ;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு