வெள்ளி, 21 டிசம்பர், 2018

பொருளைத் தேடும் மனிதர்கள் அருளைத்தேடுவதில்லை!

பொருளைத் தேடும் மனிதர்கள் அருளைத் தேடுவதில்லை !


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் நாயகன் வார்த்தை என்கிறார் வள்ளலார்.....

பொருளைத் தேடும் மனிதர்கள் அருளை ஏன் தேடுவதில்லை என்ற வினாவிற்கு பதிலைத்தேடி அதன் உண்மை அறிந்து அருளைப்பெற்று.
மரணத்தை வென்று.இறைவனோடு கலந்து அனுபவித்து.

நாமும் அருளைத் தேட வழிகாட்டியவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார்.அந்த அருளை முழுமையாக பெற்றவர்தான் வள்ளலார்....

எந்த கடவுளிடம் அருளைப் பெற வேண்டும் !

கடவுளிடம் தான் அருளைப்பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்..

அருளைக்  கொடுப்பவர் ஒரு கடவுளா ? இரண்டு கடவுளா ? அல்லது நிறைய கடவுள்கள் உள்ளார்களா ?  என்பதை நாம் முதலில் தெரிந்து  கொண்டால் தான் அறிவும் அதன் விளக்கமும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்..

இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களையும்.உயிர்களையும் படைத்தது ஒரு கடவுளா? அல்லது பல கடவுள்களா ? எல்லாக் கடவுளும் சேர்ந்து  படைத்தார்களா ?   என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

பல கடவுள்கள் சேர்ந்து படைத்திருக்க முடியாது.ஒரு கடவுள்தான் படைத்திருக்க முடியும்.என்பதும் எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியும்...

படைத்தது ஒருவர் தான் நிர்வாகம் செய்ய இலாக்கக்கள் நிறைய உள்ளன..

நிர்வாகம் செய்பவர்கள் எல்லாம் கடவுள் ஆக முடியாது.

*ஒரே கடவுள் !*

ஒரே கடவுள் என்றால் அந்த ஒருகடவுள் யார் ? என்பதுதான் அப்போதும் இப்போதும் உள்ள பிரச்சனை களாகும்..

பிரம்மாவா.விஷ்ணுவா.சங்கரனா.மகாதேவனாசிவனா .ஏசுவா. அல்லாவா.புத்தனா.
பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவா தேவர்களா. மூவர்களா.பிசாசுகளா.சைத்தான்களா...மற்றும் வேறு யாராவது இந்த உலகத்தை படைத்தார்களா என்று வினா எழுப்பித் தெரிந்து கொள்வது அறிவுடைய மனிதனின் செயலாகும்...

ஆன்மீகவாதிகளைக் கேட்டால் எல்லா தெய்வங்களும் கடவுள்களும் ஒரே கடவுளைக் குறிப்பதாகும் என்பார்கள் அதற்கு ஒரு உதாரணங்களும் சொல்லுவார்கள்...

எல்லா நதிகளும் கடலில் போய் சேர்ந்து கலப்பதுபோல் நாம் எந்த தெய்வத்தை வழிப்பட்டாலும் எல்லாம் அந்த பரம்பொருளிடம் போய் சேர்கின்றது என்பார்கள்...

அந்த பரம்பொருள் யார் ? என்று கேட்டால்..
ஒவ்வொருவரும் ஒரு கடவுளைச் சொல்வார்கள்..
அதிலாவது ஆன்மீகவாதிகளுக்கு ஒத்த கருத்து உள்ளதா என்றால் ஒருவருக்கும் இல்லை....

*இப்படித்தான் இந்த  ஆன்மீகம் உலகம் உள்ளது*

அருளை கொடுக்கும் கடவுள் யார் ?

எந்தக் கடவுளைத் தொடர்பு கொண்டால் அருள் கிடைக்கும்...

இந்த உலகத்தையும் ஆன்மாக்களையும் உயிர்களையும் அனைத்தையும்  படைத்த கடவுளால் தான் அருள் வழங்க முடியும் ...(பெற்ற தாயால்தான் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும் என்பது போல்)..

*அருள் கொடுக்கும் ஒரே கடவுள் தான். அவர்தான் அருட்பெருஞ்ஜோதி*

என்பதை அருளாலே  அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டு பிடித்தவர்தான்..
திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்...
அதனால்தான் அவருக்கு திருஅருட்பிரகாச வள்ளலார் என பெயர் வழங்கப்பட்டதாகும்...

அருளைப் பெற்றால் தான் கடவுளைக் காணமுடியும்.என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லி விட்டார்.மனித தேகத்தில் மட்டுமே அருளைப் பெற முடியும்.

அருளைப் பெறுவது எங்கனம் என்பதை காட்டுவதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம்...

சமய மதங்களால்  தோற்றுவித்த சாதி.சமய.மதங்களை விட்டு வெளியே வந்து *பொது நோக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே* இறைவனை தொடர்பு கொள்ள முடியும்.அருளைப் பெறமுடியும் என்பதை அழுத்தமாக சொல்லி உள்ளார்..வள்ளலார்.

*பொது உணர்வு உணரும் போதலாற் பிரித்தே*

*அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி !**

என்று திருஅகவலில் பதிவு செய்துள்ளார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றுக்கும் பொதுவாக உள்ளார்.அதேபோல் நாம் சாதி.சமய.மதம் போன்ற பேதங்கள் இல்லாமல் பொதுவாக வாழ்ந்தால் மட்டுமே இறைவன் நம்மிடம் தொடர்பு கொள்வார்.அருளை வழங்குவார்...

வள்ளலார் பாடல் !

பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

சதுமறை
ஆகமங்கள் எலாம் சாற்றரிய பெரிய

தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்

எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்

இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே

இதுதருணம் என்றேன் நான் என்பதன்முன் கொடுத்தீர்

என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.!

வள்ளலார் பொது நோக்கம் கொண்டு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்ந்தார்  அருளைப் பெற்றார் மரணத்தை வென்றார்..

நாம் மனிதநேயமே  இல்லாமலும்.ஜீவநேயம்(உயிர்) இல்லாமலும் வாழ்கின்றோம்.எப்படி ஆன்மநேயத்துடன் வாழமுடியும்..சிந்திக்க வேண்டும்....

கடவுளை வெளியில் தேடுகின்ற வரை ஆன்மநேயத்தை உணரமுடியாது....

ஜீவ உணர்வால் ஜீவன்களை அறிந்து.ஜீவன்களுக்கு வரும் துன்பங்களைப் போக்க. ஜீவகாருண்யம் செய்தால் மட்டுமே ஆன்ம உணர்வு உண்டாகும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்து வாழ்தல் என்று அறிய வேண்டும்.என்கின்றார்.

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆனம உருக்கம் காருண்யம் .உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்.

அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும்.அவ் அனுபவம் பூரணமாதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்...என்று தெளிவாக விளக்குகின்றார்...

புற வழிப்பாட்டை.உதரித் தள்ளி விட்டு ஜீவகாருண்யமே உண்மையான வழிபாடு என்றவர் வள்ளலார்...

ஜீவகாருண்யத்தால் அறிவு விளங்கி மனத்தை புறத்தில் செல்ல வொட்டாமல் ஆன்மாவில் தொடர்பு கொள்ளும் வழி கிடைக்கும் என்றார்...

மனம் ஆன்மாவில் தொடர்பு கொள்வதே சத்விசாரம். என்பதாகும்.

மனம் ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மட்டுமே எல்லா உயிர்களும் ஒன்றே ! .எல்லா ஆன்மாக்களும் ஒன்றே.! எல்லாவற்றையும் படைத்த இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒன்றே .. என்ற உண்மை அறிவு விளங்கும் .அப்போது
தான் அருள் விளக்கமும் உண்டாகும்

*எனவேதான் ஜீவர்களிடத்தில் இரக்கமும்..ஆண்டவரிடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் என்கின்றார்*

*அப்போது தான் ஆன்மநேயம் என்ன என்பது புரியும்....*

ஆன்மநேயம் என்றால் என்ன என்பதை. புரிந்து தெரிந்து அறிந்து அதன்படி வாழ்ந்தால் மட்டுமே பொது நோக்கம் வரும்.பொது உரிமை தோன்றும்..

பொது உரிமை உள்ள ஆன்மாக்களுக்கு மட்டுமே இறைவன் அருளை வாரி வாரி வழங்குவார்...

அருள் என்பது வெளியில் இல்லை...ஆன்மாவில் தான் வைக்கப்பட்டு உள்ளது..

அவற்றை தொடர்பு கொள்வதற்கு தடையாக  இருப்பது.ஆன்மாவை சுற்றி ஒரு கதவும்.ஒரு பூட்டும் போடப்பட்டு உள்ளது

ஜீவகாருண்யத்தால் பூட்டைத் திறக்கும் திறவு கோல் கிடைக்கும்...சாவியால் பூட்டைத் திறக்க முடியும்.கதவைத் திறக்க முடியாது..
சத்விசாரத்தால் கதவு திறக்கும்...

எனவே தான் ஜீவகாருண்யமும் வேண்டும் .
சத்விசாரமும் வேண்டும்.

இரண்டும் இரண்டு கண்கள் போன்றது..எனபதை புரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பாடல் !

 பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிது நீ

பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்

எட்டிரண்டும் தெரியாதேன்  என்கையிலே கொடுத்தீர்

இதுதருணம் திறந்ததனை எடுக்க முயல் கின்றேன்

அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்

அரைக்கணத்துக் காயிரம் ஆயிரங்கோடி ஆக

வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.!

ஆன்மா என்ற பெட்டிக்குள் அரும் பெரும் பொருளான அருள் நிறைம்பி உள்ளது...

அவற்றை பெறுவதற்கு ஜீவகாருண்யம்.
சத்விசாரம் என்கின்ற இரண்டையும் சம்மாக கடைபிடித்து வாழ்பவர்களுக்கு உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூட்டையும்.கதவையும் திறந்து உள்ளே சென்று அருளைப் பெற துணையாக இருப்பார்.

அருளைப் பெற்றால் தான் முத்தேக சித்திப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ முடியும்....

விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு