ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இவ்வுலகம் கண்ட உண்மைகள் !

🙏🌺🙏🌻🙏🔥🙏🌺🙏🌻🙏🔥🙏🌺🙏🌻
அருட்பெருஞ்ஜோதி!அருட்பெருஞ்ஜோதி!தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥 *சுத்தசன்மார்க்கப் பெருநெறியால் இவ்வுலகம் கண்ட உண்மைகள்* 🔥🙏
🙏🌺🙏🔥🙏🌻🙏🌺🙏🔥🙏🌻🙏🌺🙏🔥
        ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்குப் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை பணிவுடனும் தயவுடனும் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு பொதுமறை என்று புகழாரம் வந்ததற்கு காரணமே ,

அதில் உலகப்பொது நியதிகளை வகுத்து *எந்த ஒரு சாதியையும் எந்த ஒரு சமயத்தையும் எந்த ஒரு மதத்தையும்* குறிப்பிட்டுக் காட்டாமல்
 *ஆதிபகவன்* என்ற எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு கடவுளை மட்டுமே குறிப்பித்துக்காட்டியதனால்தான் இன்று இவ்வண்டம் முழுவதும் உள்ள எல்லா சமூகத்தினரும் அவற்றை ஏற்றுக்கொண்டு பல்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து புத்தகம் வெளியிடுகின்றார்கள்🌻

இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருக்குறள் ஏறத்தாழ பதினெட்டாம் நூற்றாண்டுவரை (1600 ஆண்டுகள்) தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே இயற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டாகிய தற்காலம் இந்த அளவிற்கு திருக்குறளை உலகமறிய செய்து பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதுகூட நமது *வள்ளல் பெருமானார் நடத்துகின்ற சுத்தசன்மார்க்க அருளாட்சியினால்தான் என்பதை நாம் நன்றாக உணர்தல் வேண்டும் 🌺🙏*

எப்படி திருக்குறள் எந்த சாதியையும் எந்த மதத்தையும் எந்த சமயத்தையும் குறிப்பிட்டுக் காட்டாததினால் அது உலகப்பொது நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோ !அதேபான்று ,
 *எந்த சாதியையும் எந்த சயத்தையும் எந்த மதத்தையும் சார்ந்திடாது ,*

 *ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்னும் பேதம்பாராது,*

 *தேசம்,மொழி ,இனம்,குலம்,தொழில் பாராது ,*

 *உயிர்க்குலம் அனைத்திலும் ஆன்மநேய உணர்வு கொண்டு ,*

 *ஆன்மாவே சபை அதன் உள்ளொளியே பதி அந்தந்த உயிர்கள் எடுத்துள்ள தேகங்களே கடவுள் வாழும் ஆலயங்கள் என்று அறிவால் அறிந்து ,*

 ஒவ்வோர் உயிருக்குள்ளும் இறைவன் உள்ளொளியாய் இருந்து ஆளுகின்றார் என்பதை மதித்து அவ்வுயிர்கள் வினையாலும் அஜாக்கிரதையாலும் படுகின்ற துன்பங்களை தனது துன்பங்களாகக் கண்டு அவ்வுயிர்களின்பால் இரக்கம்கொண்டு அவைகளுக்கு *மனத்தாலும் வாக்காலும் செயலாலும் திரவியத்தாலும் உபகாரம் செய்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கமே இறை வழிபாடு* என்றும்,

 *இச்ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால்தான் கடவுளது மேலான அருளைப்பெற்று முத்தியாகிய மோட்சவீட்டை அடைய இயலும்* என்றும் கூறுவதுடன் ,

*அதற்கும் மேலான மரணமிலாப் பெருவாழ்வு என்னும் அருட்பெருஞ்ஜோதி அனக வாழ்விற்கும் வழிதுறை காட்டுகின்ற திருவருட்பாவே* இனி இச்சுத்தசன்மார்க்க உலகத்தில்  *உலகப் பொது அருள்வேதப் பொக்கிஷ நூலாக திகழ்வதாலும்* அவற்றிற்கெல்லாம் மேலாக , எல்லாம் செய்ய வல்ல *சர்வசித்தியாகிய ஞானசித்தியைப் பெற்றுக்கொண்ட பெருமானே சுத்தசன்மார்க்கத்தை இவ்வண்டம் முழுவதும் முன்னின்று நடத்துவதால்* ,

ஒவ்வொரு நாட்டிலும் உயிர்இரக்கம் கொண்ட சுத்தசன்மார்க்க அன்பர்களைக் கொண்டு ஆங்காங்கு *சங்கம் சபை சாலை* என்று அமைத்து ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து பசிநிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகின்றார்கள் நமது பெருமான் .

தற்போது பலமொழிகளிலும் திருவருட்பா மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்டுவருகின்றோம் இக்காலம் சுத்தசன்மார்க்கத்தின் ஆரம்பகாலம் மட்டுமே இனி ஊழிதோறும் சுத்தசன்மார்க்கமே நிலைத்து நின்று தழைத்திட இருப்பதால்  *திருவருட்பாவை விரைந்து இவ்வண்டம் முழுவதும் அறிந்து கொள்ளும்* என்பதும் நிதர்சனமேயாகும்
 🌺🔥

🙏🌺🌻 *பொதுக் கடவுள்* 🌻🌺🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பளித்தும் ,

காணர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளித்தும்,

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளித்தும்,

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்றும் ,

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுத்தும் ,

தன்னை மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுத்தும் ,

இப்படி *எல்லார்க்கும் பொதுவில் இருந்து நடம்புரிந்து கொண்டும்,*

 *அறிவார் அறியும் வண்ணமாயும் ,*

 *கருதுவார் கருதும் வண்ணமாயும்,*

 *துதிப்பார் துதிக்கும் வண்ணமாயும்*
ஆகிய எல்லா வண்ணமுமாய் இருந்தும் *அவரவர்களுக்கும் பொதுவாய் பொதுவில் இருந்து (சிற்றம்பலம்)* *அருள்பாலிக்கின்ற கருணைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் பதியாகிய அற்புதக் கடவுள் ஒருவரேயாகும்* 🔥🙏

🙏🌺🌻 *பொது ஆலயம்* 🌻🌺🙏
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
 *இந்த சாதி இந்த மதம் இந்த சமயம் என்னும் வாய்ச் சழக்குகள் எதுவும் இல்லாமல்* ,

சமய மதத்தில் ஆளப்படுகின்ற ஆச்சாரங்களாகிய , சாதி ஆசாரம், குலஆசாரம்,
ஆசிரமாசாரம்,
லோகாசாரம்,
தேசாசாரம்,
கிரியாசாரம்,
சமயாசாரம்,
மதாசாரம்,
மரபாசாரம்,
கலாசாரம்,
சாதனாசாரம்,
அந்தாசாரம்,
சாஸ்திராசாரம்,
முதலிய ஆசாரங்கள் எதுவும்இன்றி *எவ்வுயிரையும் தன்னுயிர்போல் பார்க்கும் ஞானசாரத்தை மட்டுமே கொண்டு ,*

ஆன்மாவை சபையாகவும் அதன் உள்ளொளியைப் பதியாகவும் கண்டு அவற்றின் தேகங்களையே ஆலயமாக்கொண்டு வணங்கிட வேண்டும் என்ற உண்மையை இவ்வுலகில் தத்துவமாய் விளக்குவதற்காகவே கோயில்களைக் கட்டிட வடிவத்தில் கட்டி கருவறையில் அவரவர்கள்  சார்ந்துள்ள சமயத்தையும் மதத்தையும்  அடிப்படையாக்கொண்டு அதற்குரிய மூர்த்திகளை வைத்து ஆடை அணிகளன் ஆபரணங்கள் சாத்தி மற்ற எல்லா பூசைகளையும் செய்தபிறகு முடிவிலே *கடவுள் உண்மையை(ஜோதி சொரூபம்)* வெளிப்படுத்தும் வண்ணம் கற்பூர தீபாராதனை செய்து வழிபாட்டின் முடிவிலேதான் ஜோதியை காண்பித்து முடிப்பார்கள் .

அதற்கு , பரமாத்மாவில் ஜீவாத்மா இப்படித்தான் கலந்து பிறவிவேரை  நீக்கிக்கொண்டு முத்திஇன்பமாகிய ஆன்ம மோட்சத்தை அடைதல் வேண்டும் என்று விளக்கமும் கொடுத்தார்கள்.

ஆனால் அனைவருக்கும் அது ஓர் கற்பூரதீபமாகத்தான்  தெரிந்ததே தவிர அதுதான் நமது அகத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆண்டவர் என்ற உண்மையை வெளிப்படையாக ஆச்சாரியார்கள் உண்மையை தெரிவிக்கவில்லை 🌺

அப்படி உண்மை தெரிந்திருந்தால் இந்த மூர்த்திகள் இங்கு எதற்கு என்ற கேள்வி எழுந்திருக்கும் .

அப்படிக் கேள்வி எழுந்திருந்தால் கடவுள் உண்மையை தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக கட்டப்பட்ட தத்துவங்களையே உண்மைக்கடவுளாக எண்ணி வீண்காலம் கழித்திருந்திருக்க மாட்டார்கள் ,

 *தத்துவம் எல்லாம் கடந்து தத்துவாதீதமாக இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மையை* அறியாமல் அடையவேண்டிய ஆன்ம லட்சியத்தை அடைய முடியாமல்  பிறப்பு இறப்பை நீட்டிக்கொண்டார்கள் .

 *நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரணமான அருளைப் பெற்றுக்கொண்டதனால்* இவ்வண்ட வரலாற்றில் முதன்முதலில் ஓர் ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடிமுடியைக் கண்டுகொண்டு ,
தனது ஆன்ம லட்சியத்தை பூரணம் செய்தது .

அதன்பொருட்டே அந்த ஆன்மாவிற்கு *கடவுளது முதல் பிள்ளை* என்ற பட்டம் சூட்டப்பட்டது.

 *கடவுளது ஆதி அந்தம் அறிந்துகொண்டதால் அந்த ஆன்மாவிற்கு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மையை வெளிப்படுத்தும் ஆன்ம ஆலயம் கட்டுவதற்கு என்ற அதிகாரமும் வழங்கப்பட்டது* .

இதுவரை இவ்வுலகில்  அட்டமூர்த்தங்களால் ஆன ஆன்ம தேகத் தத்துவ விளக்கத்தை வெளிப்படுத்துவதற்கு என்று,                             *அட்ட மூர்த்தங்களாகிய சூரியன்,           சந்திரன்,                நிலம் ,                              நீர்,                          நெருப்பு,                 காற்று ,              ஆகாயம்* என்ற ஏழு மூர்ந்தங்களுக்கு ஆலயம்* கட்டி வழிபடச் செய்த அருளாளர்கள் ,

 *ஏன் எட்டாவது மூர்த்தமாகிய ஆன்மாவிற்கு என்று இதுவரை ஓர் ஆலயத்தை வெளிப்படையாக யாரும் கட்டவில்லை   ?*

அப்படிக் கட்டியிருந்தால் அந்த ஆலயத்தில் கருவறையில் மூர்த்திகளுக்கு இடமில்லாமல் அருட்பெருஞ்ஜோதி *சுடரைத்தான் நேரடியாக வழிபடச்செய்திருப்பார்கள்.* ஆனால் அதற்குரிய *கடவுளது பூரண அருளை எந்த அருளாளர்களும் இதற்குமுன் பெறாததினால் அவ்வாறு இருக்க நேரிட்டது .*

 *தற்போது வள்ளல் பெருமான் அருள் பூரணத்தைப் பெற்றார்கள்* . *உண்மைக்கடவுளை நேரடியாக் கண்டு களித்து கனிந்து கலந்து அனுபவித்ததால் , வள்ளல் பெருமானரது ஆன்மா பூரண லட்சியத்தை அடைந்தது. அதனால் நமது வள்ளல் பெருமானாருக்கு எட்டாவது மூர்த்தமாகிய ஆன்மாவிற்கு என்று ஓர் ஆலையத்தை  கட்டுவதற்குரிய பூரண அதிகாரம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்பட்டது.*

இதன்பொருட்டே இவ்வண்டத்திலேயே முதன்முதலாக *புண்ணியப் பூமியாம் வடலூர் பெருவெளியிலே சத்திய ஞானசபை என்ற பெயரிலே ஆன்மாவின் தேக விளக்கத்தைக் காட்டும் எண்கோணத்தில் ஆலயம் அமைத்து அதனுள் பதியாகிய கடவுள் உள்ளொளியாய் இருப்பதை அருட்பெருஞ்ஜோதி சுடராய் அமைத்து ,* உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் உண்மை வழிபாட்டை இவ்வுலகிற்கு உணர்த்திடவும் ,
எல்லாருக்கும் *பொதுவானக் கடவுளை பொதுவில் கண்டு வணங்கிடவும்(சிற்றம்பலத்தில்)"* எல்லோரும் சமரசத்துடன் பேதமின்றி தரிசிக்கும் வண்ணம் ஓர் *"ஆன்ம பொது ஆலயத்தை* "  நமது வள்ளல் பெருமான் ஆண்டவர் சம்மதத்துடன் இங்கு அமைத்துக்கொடுத்தார்கள் 🔥🙏

🙏🌻🌺 *பொது நெறி* 🌺🌻🙏
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
தருநெறி  எல்லாம் உள்வாங்கும் சுத்தசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண்டோங்கும் திருநெறிக்கே சென்று பாரீர் ;

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி இதுவரை பரவியதிதனால்

சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர் செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

 *புன்னெறி தவிர்த்து பொதுநெறி எனும் வான் புத்தமு தருள்கின்ற சுத்தசன்மார்க்கத்*

 *தன்னெறி செலுத்துக* என்றஎன் அரசே தனிநடராஜஎன் சற்குரு மணியே.

    ஆண்டவர் பெருமானிடம் அப்பா ; இதுவரை இவ்வுலகில் பலப்பல நெறிகளைக்கொண்ட *சமயங்கள் மதங்கள் என்கின்ற பிறப்பு இறப்பை நீட்டிக்கின்ற பவநெறியே இதுவரை பரவியிருந்தது .*

அதனால் அவர்கள் மரணத்தை தவிர்த்து அருள்வாழ்வழிக்கும் *பெருமைமிகு திருவருள் நெறியை* அறியாமல் இறந்து இறந்து உலகவர்கள் அதிகம் இருளடைந்தார்கள்.

அதனால் ,
இனி நீ அந்த *பொய்நெறிகளை எல்லாம் தவிர்த்து (நீக்கி) ஞான அமுதத்தை வழங்குகின்ற என்னுடைய நெறியாம் (தன்னெறி) சுத்தசன்மார்க்கத்தை இவ்வுலகில் நடத்துக என்று பெருமானுக்கு ஆணையிடுகின்றார்கள் .*

🙏🔥🌻 பொது நேயம் 🌻🔥🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 *ஒரு மனிதன் தன்னை ஒத்த மற்ற மனிதர்களின்பால் காட்டுகின்ற நேயம் மனித நேயம் .*
அந்த மனிதநேயம் மட்டுமே இருப்பவர்களுக்கு தன்னைப்போன்ற மனிதர்களைத் தவிர மற்றைய விலங்குகள் பறவைகள் மற்றும் உள்ள உயிர்கள் அனைத்தும் படுகின்ற துன்பங்களைக் கண்டு இயற்கையாக இரக்கம் அடையார்கள் .

ஆனால்,
இவ்வுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் தன்னைப்போன்றே இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவன் தேகம் கொடுத்து பிறப்பிக்கச் செய்துள்ளார்கள். என்பதை அறிவால் அறிந்து அவைகளின் துன்பம் கண்டு வருந்தி அவ்வுயிர்களின்பால் நேயம் கொள்வதென்பது *எவ்வுயிர்களையும் தன்னுயிர்போல் பார்க்கும் ஆன்மநேயமாகும் .*
ஆகலில் *ஆன்மநேயம் உள்ளவர்களே கடவுளின் கருணையாகிய அருளைப் பெறுவதற்கு  தகுதியுடைவர்கள் ஆவார்கள்.* 🌻🔥🙏

🙏🔥🌻 *பொது உணர்வு* 🌻🔥🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்ணால் பார்த்தல்,
காதால் கேட்டல்,
மூக்கினால் நுகர்தல்,
நாக்கினால் சுவைத்தல்,
உடலினால் தொடுஉணர்வறிதல்.

இவையெல்லாம்  *பஞ்சேந்திரியங்களின் வழியாகப் பெறப்படுகின்ற உணர்வுகள் .*
இந்த உணர்வுகளை மேற்கண்ட கண்முதலாகிய ஐந்து கருவிகளின் மூலம் பெறப்படுவதினாலேயே இதற்கு *ஞானேந்திரியங்கள்* என்று பெயர்.

இவைகளின்மூலம் பெறப்படுகின்ற *உணர்வுகளைத்தான்  ஓரறறிவு முதல் ஐந்து அறிவுகள் என்று கூறுகின்றோம் ஆறாது அறிவை பகுத்தறிதல் என்றும் கூறுகின்றோம்* .

 *கடவுள் ஒவ்வோர் உயிர்களுக்குள்ளும் உயிராயும் உணர்வாயும் ஒளியாயும் வெளியாயும் உள்ளார்கள்*

ஆகலில் ,
மனிதர்களாகிய நமக்கு உண்டாகும் இன்பதுன்பங்கள் அனைத்துமே, மலத்தில் புழுத்த புழு முதல் மதம்கொள்ளும்  யானை ஈறாக அனைத்து உயிர்களுக்கும் பொதுவில் உள்ளனவேயாகும் .

 *நமக்கு ஏற்படுகின்ற வலியும் வருத்தமும் அவைகளுக்கும் உண்டு.*

 *தண்ணீரில் அழுகின்ற மீனின் கண்ணீரை யார் அறிவார் ?*

 *தரையில் ஊறுகின்ற எறும்பின் வலியை யார் அறிவார் ?*

 *தழைத்து வளர்ந்த மரம் வெட்டுப்படும்போது அதன் வலியை யார் அறிவார் ?*

 *வெட்டுவதற்காக கட்டிப்போட்டுள்ள  ஆட்டின் உள் உணர்வுகளை யார் அறிவார் ?*

 *இன்பதுன்பங்களை வெளியில்  சொல்ல இயலாத வாயற்ற ஜீவன்களின் வாதனைகளை எல்லாம்  அவற்றைப் படைத்த இறைவன் ஒருவரே அறிவார்.*

ஆனால் அந்த இறைவனுடைய உணர்வு நமக்கும் வரவேண்டும் என்றால்!
இறைவன் குடியிருக்கும் அனைத்து உயிர்களையும் தன்னுடைய உயிர்போன்று பார்க்கின்ற  பொதுஉணர்வு நம்மிடையே இருக்குமானால் மேற்கூறிய அந்த உயிர்களின் இன்பதுன்பங்களை நாமும் அறிந்துகொள்ளலாம்.
அவற்றின் வலியை நாமும் உணரலாம்.

" *பொதுஉணர்வு உணரும்போதலாற் பிரித்தே அதுவெனிற் தோன்றா அருட்பெருஞ்ஜோதி"*
 ......அருட்பெருஞ்ஜோதி அகவல்.
 எனவே பொதுஉணர்வு என்னும்  ஆன்மநேய உணர்வு இல்லை என்றால் இறையுணர்வை பெற இயலாது என்று அறிதல் வேண்டும்🌻🔥🙏

🙏🔥🌻 *பொது விண்ணப்பம்,* 🌻🔥🙏
ஜீவர்கள் தனக்கு உற்ற துன்பங்களை எண்ணியோ !
அல்லது தமக்கு வரஇருக்கின்ற  ஆபத்துக்கருதியோ !
அல்லது தமக்கு உள்ள குறைகளைக் கருதியோ !
அல்லது தாம் எதிர்பார்க்கி்ன்ற சகாயத்தின் பொருட்டோ கடவுளிடம் விண்ணப்பம் செய்துதான் பெறவேண்டியதைப் பெறவேண்டும் .

பெருமான்கூட ஆண்டவரிடம் பல விண்ணப்பங்கள் வைத்துதான் பெறவேண்டியதை பெற்றுக்கொண்டார்கள்.
1:பிள்ளைச்சிறு விண்ணப்பம்,
2:பிள்ளை பெரு விண்ணப்பம்,
3:சமரச சுத்தசன்மார்க்க சத்தியச் சிறுவிண்ணப்பம்,
4:சமரச சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம்,
5:சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் ,
6:சமரச சுத்தசன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம். முதலிய பலவிண்ணப்பங்கள் இவற்றில் அடங்கும் இவையல்லாது பல வேண்டுகோள் விண்ணப்பங்களும் உள்ளன.
 *இவை எல்லாவற்றிலுமே பெருமான் தமக்கென்று கேட்பது மட்டுமன்றி அவற்றை இந்த உலகவர்கள் அனைவருக்கும் கொடுத்திடல் வேண்டும்என்று பொதுவிண்ணப்பம் செய்வார்கள்,*

 " *இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்திடல் வேண்டும்"*
என்று சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்திலும்,

 *"நீதிநடம்செய் பேரின்பநிதி நான் பெற்ற நெடும்பேற்றை ஓதிமுடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே* " என்று ஆறாம்திருமுறை பிரிவாற்றமையிலும்,

" *எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை யாது குறித் திசைஎனக்கே* " என்று தனித்திரு அலங்கலிலும் .

இன்னும் பலப் பாடல்களிலும் இவ்வுலக மக்களின்பொருட்டே பெருமான் பொது விண்ணப்பம் செய்து ,அந்த பொது உணர்வால் இறைவனிடம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டார்கள்.
இங்கு நாமும் அப்படி இறைவனிடம் பெறவேண்டியதைப் பெறவேண்டுமானால் *நமக்காக மட்டுமன்றி மற்ற அனைவருக்காகவும் விண்ணப்பம் செய்வதே சுத்தசன்மார்க்க ஒழுக்கமாகும்* 🌻🔥🙏

🙏🔥🌻 *பொது வழிபாடு* 🌻🔥🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எல்லா உயிர்களுக்கும் பொதுவானக்கடவுளை,
ஆன்மாவே சபை அதன்உள்ளொளியே பதி, அதன்தேகமே ஆலயம் என்று பொதுவில் கண்டுகொண்டு, பொதுநெறி,
பொதுநேயம்,
பொதுஉணர்வு ,
பொது விண்ணப்பம் என்று எல்லாம் சுத்தசன்மார்க்கத்தில்பொதுவில் விளங்கும்போது இனி்இங்கு நமக்கென்று சுயநலவழிபாடு  என்ன இருக்கின்றது ?

" *உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே"*
என்று அகவல் வரியில் கூறியுள்ளது போன்று,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே  எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கின்றார்கள் என்பதும்,
எல்லா உயிர்களும் ஆண்டவருக்குள் அடக்கம் என்பதையும் உணர்ந்து ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு முறையும் செய்கின்ற வழிபாட்டில் எல்லாம் " *எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும்* " என்று விண்ணப்பித்து தன்னால் முடிந்தவரை *ஜீவகாருண்யம் செய்து வழிபடுகின்ற உயிர்இரக்க பொதுவழிபாடே சுத்தசன்மார்க்க வழிபாடாகும்.* 🌻🔥🙏
...நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி போற்றி!
...பெருமான் துணையில்🙏
...தயவுடன் வள்ளல் அடிமை🙏
...வடலூர் இரமேஷ்;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு