வியாழன், 13 டிசம்பர், 2018

வள்ளலார் சொல்லியுள்ள விளக்கம் !

வள்ளலார் சொல்லி உள்ள விளக்கம் !

நம் உடம்பில் உள்ள உறுப்புகள் மற்றும் உறுப்புக்கள் அல்லாது செயல் படும்.சூஷ்ம கரணங்களின் செய்கைகளினால்.
நினைவு.
சொல். செயல் .
உணர்வு.மனம்.புத்தி.
சித்தம் அகங்காரம்.உள்ளம்.
பார்வை.அறிவு
போன்றவை எவ்வாறு மாற்றம்  அடைகின்றன.
செயல்படுகின்றன. என்பதை கீழே கண்ட விளக்கத்தைக் கொண்டு நாம் தெரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.

கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குப் பொருள்:!

சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிகள் அனேகம்; மதத்தில் பிரமம் ஏகம், ஜீவர்கள் அனேகம்;

சாதாரணத்தில் கடவுள் ஏகம், பசுக்கள் (ஆன்மாக்கள்) அனேகம்;

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் தனிக்கடவுள் ஏகம், அவ்வருளால் சுத்தமாதி ஞான தேகம் வேறாகப் பெற்ற ஞானிகள் அனேகம்.

கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல்
கடவுள் ஒன்றல இரண்டல ஒன்றுமிரண்டுமானார் என்பதற்குத் தாத்பரியம்:

ஒன்றல - கடவுளானவர் ஒன்றாகிய ஞானதேகியும் அல்ல. இரண்டல - சுத்தப் பிரணவதேகியும் அல்ல. ஒன்றுமிரண்டுமானார் - கடவுளானவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞானதேகத்தையும் சுத்தப் பிரணவதேகத்தையுங் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார். இதை அனுபவத்தால் குருமுகத்தில் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குரு ) உணர்க.

வள்ளலார் பாடல் !

ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்

அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்

என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்

ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

உயிர்களின் உயர்வு !

மனித தேகத்தின் மூவகை உயிர்களின் மாற்றம்..

சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆக 3.

சகலர் இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை. செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் இம்மூன்று முள்ளவர்.

பிரளயாகலர்... இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை இவ்விரண்டு முள்ளவர்.

விஞ்ஞானகலர் இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர்.

சகலர் ஜீவர்கள்.

பிரளயாகலர் ..கல்ப தேகிகள்.

விஞ்ஞானகலர்.. காலாதீதர்கள்.

சுத்தம் 9, அசுத்தம் 9, ஆக 18.

முக்குணம்!

தானாக நிற்றல் சத்துவகுணம்,

ராகத் துவேஷ சம்பந்தமுடையது ராஜசம்,

சோம்பலாதி ஜீவ இம்சைக் கிடனாவது தாமசம்.

ஆன்மாவின் செயற்கை ராஜோதமங்கள், இயற்கை சத்துவம்.

ஜனன மரண ஏது செயற்கையாலுண்டாம்; இயற்கையான அருளைப் பெற்றவர்களுக்கு.
ஜனன மரணம் என்னும் பிறப்பு இறப்பு உண்டாகாது.

இயற்கையால் சிவானுபவம் பெறலாம். இதை விரிக்கில், ஒவ்வொன்றும்

மும்மூன்றாகும், அனந்தமுமாம்.

சத்துவம். ராஜசம். தாமசம்.

தானாக நிற்றல் சத்துவம்.

இராகத் துவேஷாதிகளோடு கூடியது இராஜசம். ஜீவஹ’ம்சை செய்தல், சோம்பல், நித்திரை முதலியன தாமசம்.

ஆகையா லியற்கையாகிய சத்துவத்தோடு கூடிச் செயற்கையாகிய ராஜச தாமசத்தைச் சிறுகச் சிறுக நீக்க வேண்டியதில்.இயற்கை உண்மையாகிய  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில்.சதா ஞாபகம் செய்யவேண்டியது அவசியம்.

குணவகை
சத்துவம், ராஜஸம், தாமசம் என்று குணங்கள் 3. ஒவ்வொன்றிலும் 3 சேர்ந்து 9 ஆயின. இந்த 9-ம் சுத்தம் அசுத்தம் என்னும் பேதத்தால் 18 ஆயின.

மூன்றாசை
சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம்.

அவஸ்தை மூன்று:

ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.

இவற்றில் உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாட ஸ்தானத்தில் நிற்பது ஜாக்கிரம்;

சொப்பனமாவது உள்ளம் வாத நாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் இருப்பது;

சுழுத்தியாவது உள்ளம்
சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் நிற்பது.

மூவகை ஞானம்!

ஞானமென்பது மூன்று வகைப்படும். அவை

உபாயஞானம், உண்மைஞானம், அனுபவஞானம்.

இவற்றின் தாத்பர்யம்:

நக்ஷத்திரப்பிரகாசம் போல் தோன்றிய ஜீவஅறிவே உபாயஞானம்;

சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்மஅறிவே உண்மைஞானம்;

எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபவஞானம்.

காட்சிகள் !

ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது இந்திரியக்காட்சி, இந்திரியஅறிவு;

கூடமாக அறிதல் கரணக்காட்சி, கரணஅறிவு;

இன்னதென்று தெரிதல் ஜீவக்காட்சி, ஜீவஅறிவு;

எதையுந் தானாக அறிதல் ஆன்மக்காட்சி, ஆன்மஅறிவு;

இதற்குத்
தோன்றும் அறிவு 1,
தோற்றும் அறிவு 1, தோற்றுவிக்கும்
அறிவு 1,

பதியறிவு 1. பதி அறிவு என்பது கடவுள் அறிவு.

ஆதலால், ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா என்பதாகும்.

அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை என்பதாகும்.

அதன் மயமாதல் காமம் என்பதாகும். அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம் என்பதாகும்.

எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.

அவாமாத்திரம்
இந்திரியக்காட்சி என்பது ஒரு வஸ்துவின் நாமரூபமின்றிக் காணுதல்;

கரணக்காட்சி என்பது அந்த வஸ்துவைப் பற்றல்;

அதை அனுபவிக்கவேண்டு மென்கிற சித்தவிருத்தி உண்டாகிறது ஆசை என்னும் காமம்;

அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகம். ஆதலால் எந்த வஸ்துவினிடத்திலும் மோகம் காமம் முதலியவை யின்றி அவா மாத்திரமாய் இருத்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் அவாவும் ஏகதேசத்திலும் கூடாது.

ஞான வகை மூன்று வகைப்படும் !

உபாய ஞானம் - ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.

உண்மை ஞானம் - ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.

அனுபவ ஞானம் - கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.

உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு.

உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு.

அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு.

ஆகையால் கடவுளை உபாய ஞானத்தால் அறியாமல் .உண்மை ஞானத்தால் அறிய வேண்டும். ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.

 பர அபர ஞானங்கள்

ஞானம் பரஞானம் அபரஞானமென இரண்டு.

பரஞான மென்பது முன், சாத்திரஞானம் அல்லது விசாரஞானம், வாசா கயிங்கரியம், சாதனம், வாச்சியார்த்தம்.

அபரஞானமென்பது பின்,

அனுபவ ஞானம், சாத்தியம், லக்ஷியார்த்தம். மேலும் பரம் முன், அபரம் பின் சாத்திரம் முன், அனுபவம் பின்;
சாதனம் முன், சாத்தியம் பின்.

ஆதி - முதல், அந்தம் - கடை,

அநாதி - ஆதி அந்த மில்லாதது.

மூவிடம் (தன்மை முன்னிலை. படர்க்கை)
தமிழில் தன்மை முன்னிலை, படர்க்கை என்பவை யாவை? அவற்றின் கருத்து யாது?

தன்மை, பண்புச்சொல், சார்புமயமாய் இருத்தலைப்பற்றி - தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்திருப்பதனால் - பண்புச் சொல் ஆகிறது. தன்னை அறிதல் தன்மை.

முன்னிலை என்பது முன்-நிலை, முன் இடங் கூறினது. அருகில் காண்பது.

ஆனால் மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்பது என்னெனில்:

படர் - படரும்படியான, கை - இடம்,

நிலை - அகண்ட இடம். கை என்பது குறுகிய இடம். ஆதலால் பேதாபேதம் குறிக்கும் நிமித்தம் இரண்டாம் இடத்துக்கு முன்னிலை என்றும், மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும்...

மேலே கண்ட விளக்கம் நம் உடம்பின் செயல்களும்.செயல்பட வேண்டிய காரியம்.காரணம். காரிய காரணங்களையும் தெளிவாக வள்ளலார் விளக்கி உள்ளார்...

இதன் உண்மை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால்.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து. ஜீவகாருண்யம் அவசியம் செய்ய வேண்டும்...

ஜீவ காருண்யம் விளங்கினால் அன்பும் அறிவும் தானாக விளங்கும் என்கிறார் வள்ளலார்....

ஜீவகாருண்யம் செய்து அன்பும் அறிவும் பெறுவோம்.

படித்து பயன் பெறுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு