செவ்வாய், 1 ஜனவரி, 2019

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது !

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது !

வள்ளலார் முதன்முதலில் 1865ஆம் ஆண்டு *சமரச வேத சன்மார்க்க சங்கம்* என்று பெயர் வைக்கிறார். பின்பு அதையும்.மாற்றி *ஷடாந்த சமரச சன்மார்க்க சங்கம்* என்று பெயர் வைக்கின்றார்..

பின்பு மேலே கண்ட இரண்டு சங்கங்களின் பெயர்களையும் மாற்றம் செய்து இறுதியாக உறுதியாக....

18-7-1872 ஆம் நாள் **சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்** என்று பெயர் வைக்கிறார்...

மாற்றம் செய்ததோடு மட்டும் அல்லாமல்.

இன்று தொடங்கி **சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்**

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும் என்று கட்டளைப் பிறப்பிக்கின்றார்....

வள்ளலார் சங்கங்களின் பெயர்களை மாற்றியதற்கு உண்டான  காரண காரியங்களையும் தெளிவுப் படுத்துகின்றார்...!

சன்மார்க்க சங்கம்
சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.
சத்திய மார்க்கம்
ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.
சமரசம்
சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.
சத்துவகுண லட்சியம்
சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.
சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.
சமயாதீத மத சன்மார்க்கம் - நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. 
 சத்துவகுணத்தின் முதல் விளைவுதன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.
சுத்தம்
சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.
சத்மார்க்கம்
சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.
சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.
சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.
சர்வ சித்தி
சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.
சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.
ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.
சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்....

மேலே கண்ட விளக்கங்களை படித்து அறிந்து கொண்டால் சமய மதங்களின் மீது உள்ள பற்றுதல்கள் குறைந்து .வள்ளலார் இறுதியாக சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகள் மட்டுமே மரணத்தை வெல்லுவதற்கு உண்டான அருளைப் பெறும் சிறந்த வழி என்பதை தெரிந்து கொள்ளலாம்...
விரிக்கில் பெருகும்.....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு