திங்கள், 20 ஏப்ரல், 2015

உண்மை அறிவு எது ?

உண்மை அறிவு எது ?

தெய்வங்கள் பல உண்டு என்று சிந்திப்பவரும் ,சிவலோகம்,வைகுண்டம்,கைலாயம்,பரலோகம் எல்லாம் உண்டு என்று நினைப்பவரும்,பொய்யான கற்பனைக் கதைகளையும்,அதனால் உருவாக்கப் பட்ட கற்பனைக் கலைகளையும்,அந்த கலைகளை தெய்வங்களாகப் படைத்து வழிபாடு செய்கின்றவர்களும் 

அவைகளைப் பற்றி மக்களுக்கு உண்மையாக இருப்பது போல் சொல்லுகின்றவரும்.பொய்யான சமய மதங்களை போற்று கின்றவர்களும் ,அவற்றை நம்புகின்றவர்களும் உண்மையை அறியாத ,அறிந்து கொள்ளமுடியாத உண்மையான அறிவு இல்லாதவர்கள் என்று வள்ளல்பெருமான் திட்டவட்டமாக பதிவு செய்து உள்ளார் .

பாடலைப் பாருங்கள் !

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்று இல்லார்
மேல் விளைவை அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

உண்மையான இறைவனையும்,உண்மையான அருளையும்,உண்மையான இன்பத்தையும் தெரிந்து கொண்டு அதை அனுபவிப்பவர்களே உண்மையான அறிவு உள்ளவர்களாகும் என்பதை மக்களுக்கு சொல்லி தெளிவுப் படுத்தி உள்ளார் .

எனக்கு உண்மையான அறிவையும்,அருளையும் ஆற்றலையும்,கொடுத்து தெளிவுப் படுத்தி மரணத்தை வெல்லும் வழியைக் காட்டி உள்ளது போல்,என்னுடைய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதரர்களுக்கும், எனக்கு அறிவைத் தெளிவித்து விளக்கியதுபோல் அவர்களுக்கும் அறிவை கொடுத்து நம்மவர் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நமக்காக இறைவனிடம் வள்ளல்பெருமான் வேண்டிக் கொள்கின்றார்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே .,,,,அகவல் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு