வியாழன், 2 ஏப்ரல், 2015

அன்பு என்பது வேறு ! கருணை என்பது வேறு !

அன்பு என்பது வேறு ! கருணை என்பது வேறு !

அன்பு என்பது சிவமாக உள்ளது என்றார் திருமூலர்,

அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார் என்பார் .
அன்புதான் சிவம் ,அன்பு வேறு ,சிவம் வேறு இல்லை அப்படி சொல்வது அறிவில்லாதவர் செயல் என்கின்றார்.

ஆனால் வள்ளல்பெருமான் அந்த பூட்டை உடைத்தார் .

அன்பு என்பது வேறு ,சிவம் என்பது வேறு என்கின்றார்.
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே ...என்கின்றார் .

அன்பு என்பது அணுவாக உள்ளது ,என்றதோடு அமையாது.அன்பின் அணுவின் உள்ளே பேரொளியாக உள்ளதுதான் சிவம் என்கின்றார்.
அன்பை விரிக்கின்ற போது,அதனுள் உள்ளவைகள் யாவை !

கலை குறையாத நிறைமயமாம் பதி...கனல்...செங்கதிர் ...ககனமாகிய வான் ...காற்று...அமுது...நிலை நிறை அடி,...அடிமுடி தொற்றா நின்மலம் ....நிற்குணம் ...மலைப் பற்ற உள்ளத்தே வயங்கும் மெய் வாழ்வு ....வரவு போக்கற்ற சின்மயம்...அலைகள் அற்ற கருணைத் தனிப் பெருங்கடல் ஆகிய இப் பன்னிரண்டும் ,அன்பினுள் உள்ளவைகளாகும்.

அல்லது இப்பன்னிரண்டும் கூடியது அன்பு என்பதாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

கலை நிறை மதியைக் கனலைச் செங்கதிரை
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலை நிறை அடியை அடிமுடி தொற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்கு மெய்வாழ்வை
வரவு போக்கற்ற சின்மயத்தை
அலையறு கருணைத் தனிப் பெருங் கடலை
அன்பினில் கண்டு கொண்டேனே !

அன்பு என்பதற்கு இப்படி ஒரு விளக்கம் யாரும் கூறினார் இல்லை.ஏன் ? அன்பு என்பதற்குரிய பொருள் பூட்டியே கிடந்தது.
அந்த பூட்டைத் திறந்து விட்டார் வள்ளலார் .

சிவம் என்பது ;--

கருணையே சிவம் என்கின்றார் .

இதனை ''கருணையும் சிவமும் பொருள் எனக் காணும் காட்சியும் பெருக ''--என ஆண்டவர் வள்ளலாருக்கு உணர்த்தி உள்ளார் .

அதைக் கண்டு கொண்ட பின்தான் ஆண்டவருக்கு பெயர் வைக்கின்றார் .

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி !.

உண்மையானக் கடவுள்;;அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுள் தனிப் பெருங்கருணையாக உள்ளார் .என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

ஆதலால் அன்பு என்பது சிவம் அல்ல ! கருணை என்பதுதான் சிவம் என்னும் பேரொளியாகும்..

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

என்பதை வள்ளல்பெருமான் .அருட்பெருஞ்ஜோதி அகவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

அறிவோம் கருணை யாக மாறுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு