சனி, 11 ஏப்ரல், 2015

ஈரோடு மேயருக்கு கடிதம் !

ஈரோடு மேயருக்கு கடிதம் !



ஈரோடு மாநகராட்சி மேயர் பெரு மதிப்பிற்குரிய  ''மல்லிகா பரமசிவம் '' அவர்களுக்கு வணக்கத்துடன்  வரையும் விண்ணப்பம் (கடிதம்)

ஈரோடு டவுன் எஸ்,கே,சி,ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே,சுமதியின் தந்தையும் ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொறுப்பாளரும்'',''திரு அருட்பா ஆராய்சி மையத்தின் ஆசிரியரும்'',''திரு அருட்பிரகாச வள்ளலார் கல்வி அறக்கட்டளையின் தலைவரும்'',ஈரோடு மாநகராட்சி எஸ்,கே.சி, ரோடு  நடுநிலைப் பள்ளியின்,பெற்றோர் ஆசிரியர் சங்க இணைச்செயலாளர் '' செ,கதிர்வேல் ஆகிய நான் எழுதும் கடிதம் .

43,வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி ,பரிமளா ராஜேந்திரன் ,அவர்களின் பொய்யான புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் கே,சுமதியை ,10-4-2015,அன்று சுமார் 12,00.மணிக்கு தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து  விசாரணை என்ற பெயரில்,தரக்குறைவான,அநாகரிமான அசிங்கமான,கெட்ட,கெட்ட  வார்த்தைகளால் திட்டி அனுப்பி உள்ளீர்கள்.

உங்கள் வீட்டு வேலைக்காரியத் திட்டுவதுபோல் அரைமணி நேரம் நிற்க வைத்தே பலபேர் முன்னிலையில் பேசி உள்ளீர்கள்.இப்போதுள்ள வேலைக்காரிகள் தகாத வார்த்தைகளில் பேசினால் உடனே எதிர்த்து பேசும் குணம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

அதனால் என்னுடைய மகள் சுமதி ,மனம் உடைந்து,உள்ளம் சிதறி, உண்ணாமல்,உறங்காமல், உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் உள்ளார் ,அதை நினைத்து எங்கள் மனமும் , உள்ளமும்,தவித்துக் கொண்டு உள்ளது.அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டால் என்னுடைய மகளை உங்களால் தரமுடியுமா ? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்தக் கடிதம் எழுதுவது யாருக்கும் தெரியாது ,என்னுடைய மகள் சுமதிக்கும் தெரியாது.என்னுடைய மன வேதனையை உங்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த கடிதத்தை  எழுதுகிறேன்

மாமன்ற உறுப்பினர் பரிமளா ராஜேந்திரன் அவர்கள் தான், எல்லா வற்றிக்கும் காரணம்.அவர் செய்துள்ள குற்றங்களை மறைத்து ,தான் தப்பித்துக் கொள்வதற்காகவும் , உங்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் பொய்யான தகவல்களைத் தந்துள்ளார்.அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிக் கொண்டு இப்படி தவறாக பேசி உள்ளீர்கள் .என நினைக்கின்றேன்.

வள்ளலார் வழியில் !

நான் வள்ளலாரின் தூய்மையான ஆன்மீக வழியில் நாற்பது ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகிறேன்.என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் .தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் ,ஆன்மீக சிந்தனையாளர்களுக்கும் ,மற்றுமுள்ள ஒழுக்க சீலர்களுக்கும்,நல்ல சிந்தனை யாளர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

தமிழகம் முழுவதும்,,மற்றும்,வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் சென்று,எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நேர்மை,ஒழுக்கம்,சத்தியம்,பண்பாடு ,மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற ஒழுக்கமான வாழ்க்கை முறைகளைப் பற்றி போதித்துக் கொண்டு வருகிறேன்.

அதேபோல் என்னுடைய குழந்தைகளையும்  நேர்மை,ஒழுக்கம், சத்தியம்,நாகரீகம், பண்பாடு போன்ற நல் ஒழுக்கங்களை சொல்லிக் கொடுத்துதான்   வளர்த்தி உள்ளேன்.

என்னுடைய மகள் தலைமை ஆசிரியை சுமதி அவர்கள், நேர்மை,ஒழுக்கம்,சத்தியம்,கண்ணியம் தவறாமல்,அவருடைய பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் நலன் கருதி அயராமல் உழைத்துக் கொண்டு வருகின்றார்.அவருடைய பள்ளிக்குச்சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கே நன்றாகத் தெரியும் புரியும், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி அரசுக் கல்வி அதிகாரிகளுக்கும்,மாநகராட்சி அதிகாரிகளுக்கும்  நன்றாகத் தெரியும்.

தனியார் பள்ளிகள் உயர்ந்தும் ,அரசுப்பள்ளிகள் தாழ்ந்தும் போவதற்கு அடிப்படைக்  காரணம் அரசியல்வாதிகள் அரசுப் பள்ளிகளில் தலையிட்டு ஆசிரியர்களை சுய சிந்தனையுடன் வேலை செய்ய விடாமல் துன்புறுத்துவதால்,அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்து கொண்டே உள்ளன

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் நமது இந்திய அரசும் ,தமிழக அரசும், கல்விக்காக,பல கோடி ரூபாய் செலவு செய்து என்னபயன் ? .கல்வி நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருந்தால் தான் ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக,முறையாக, முழுமையாக மாணவ மாணவிகளுக்கு கல்வி போதிக்க முடியும்.

தமிழகம் எங்கும், அரசியல்வாதிகள் தலைமை ஆசிரியர்களுக்குத் தேவை இல்லாமல் தொல்லைக் கொடுத்துக் கொண்டே உள்ளார்கள் என்பதை பத்திரிக்கை வாயிலாக காணுகின்றபோது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

இவற்றை கலை எடுப்பதற்கு, நீக்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளேன்.அவற்றை தலைமை பள்ளிக் கல்வித் துறைக்கும்,தமிழக முதல்வருக்கும் தெரியப்படுத்தி ஒழுங்குப் படுத்தினால்தான் தடையில்லாக் கல்வி மாணவர்களுக்கு சென்று அடையும்,தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளும் மேன்மை அடையும் என்பது எங்களைப் போன்ற சான்றோர்களின் கருத்துக்களாகும். 

உங்களுடைய தனிப்பட்ட அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் மற்றவர்கள் சொல்லைக் கேட்டு ,இரண்டு பக்கமும் என்ன நடந்தது என்று தீர விசாரிக்காமல், ஒரு தலைமை ஆசிரியரை இப்படி தகாத வார்த்தைகளால் திட்டி,மனம் கலங்க,  கண்கலங்க,உள்ளம் கலங்க  வைப்பதால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன ? அதுதான் எனக்கு புரியவில்லை.

உங்களுக்குள் உள்ள உட்கட்சி பூசல்களை நீங்கள் பேசித் தீர்த்துக் கொள்ளாமல் ஒரு  தலைமை ஆசிரியரை பந்தாட வைப்பது என்ன நியாயம் என்பது தெரியவில்லை.உங்களுக்குள் உள்ள வெறுப்பை அரசு பணியாளர்களிடம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் .சிந்திக்க வேண்டும்.

நீங்களும் ஒரு பெண்,...புகார் கொடுத்தவரும் ஒரு பெண்,...தலைமை ஆசரியரும் ஒரு பெண் .பெண்களுக்கு பெண்களே இப்படி நடந்து கொண்டால் ,பெண் உரிமையைப் பற்றிப் பேசி என்னபயன் ? பெண் சமத்துவம் பற்றிப் பேசி என்னபயன் ? ஆண்களுக்கு பெண்கள் சமம் என்று பேசி என்னபயன்? .அப்படி பேசும் பெண்களை என்னவென்று சொல்லுவது.பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக மாறிவிட்டால் நாடு என்னவாகும் என்பதை  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய அளவில் என்னால் கொண்டு செல்ல முடியும். இதை அரசியலாக்கவும் என்னால் முடியும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களிடம் நேரிலே சென்று சொல்லவும் என்னால்  முடியும்.அதனால் வரும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். நான் அப்படியே  செய்தாலும் எனக்கு எந்த தடைகளும் வராது.என்னை யாரும் ஒன்றும் செய்துவிட நுடியாது .

ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன்.நான் சராசரி மனிதர்களை பின் தொடர மாட்டேன்.நான் வள்ளலாரின் உண்மையான ஆன்மீக நெறியின் வழியைப் பின் பற்றுபவன்.எது எப்படி,என்ன  நடந்தாலும், எல்லாவற்றையும் நான் வணங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அனுப்பி விடுவேன்.அவர் தீர்ப்பு நீதி தவறாமல் இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர் கொடுக்கும் தண்டனையை யாராலும் தடுத்து நிறுத்த விட முடியாது.என்பதும் எங்களுக்குத் தெரியும்.   

தமிழகத்தை இதுவரையில் ஆண்டுள்ள முதல்வர்கள்,, ஆண்டு கொண்டு இருக்கின்ற எல்லா முதல்வர்களையும் எனக்குத் தெரியும்,அவர்களிடம் நெருங்கிய தொடர்பு உடையவன் .அந்த அளவிற்கு நான் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் ஒரு அரசியல் வாதி அல்ல ! எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல ! மக்களின் நல் வாழ்க்கைக் கருதி ஆன்மீகச் சேவை செய்யும்  ஒரு சாதாரண மனிதன்.என்னுடைய குழந்தைகளையும் அப்படித்தான் வளர்த்தி வைத்து இருக்கின்றேன்.அவர்களும் எந்த அரசியலையும் சார்ந்தவர்கள் அல்ல,என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் !

நீங்கள் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள்.அவை உங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல வரப்பிரசாதம்,பொக்கிஷம் போன்றது .அதை நல்லமுறையில்,நல்ல வழியில்  மக்களுக்கு பயன்படுத்துவது உங்கள் செயலாக இருக்க வேண்டும்.அதுதான் உங்களுக்கும் நல்லது.உங்கள் தலைமையின் கீழ் பணி புரியும் அரசு அதிகாரிகளுக்கும் நல்லது,  பொது மக்களுக்கும் நல்லது.

பதவி வரும் போகும்,.எந்தப் பதவியும் நிரந்தரம் அல்ல.
''பதவி வரும்போது பணிவு  வரவேண்டும்''.

உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அறிவுரை சொல்லவெண்டும் என்பதற்காக  இந்தக்  கடிதத்தை நான்  எழுதவில்லை.உங்களை நீங்களே  சீர் தூக்கிப் பார்த்துச் சிந்திக்க  வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.உங்கள் மனமே உங்களுக்கு பதில் சொல்லும் என நினைக்கின்றேன்.

இருந்தாலும் உங்கள் வார்த்தைகளால் உங்கள் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியை சுமதி, ..என்னுடைய மகள்  படும்  வேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உங்கள் மகள் இப்படி வேதனைப் பட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தலைமை ஆசரியர் சுமைதியை, உங்கள் மகளாகக் கருதி நீங்களே அழைத்து  ஆறுதல் சொல்லி,ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்து,உற்சாகத்தை உண்டுபண்ண   வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கடிதம் என்னுடைய தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடு,..நான் எழுதிய இந்தக் கடிதத்தை  என் மகள் தலைமை ஆசிரியை சுமதிக்கும் தெரியப் படுத்த வேண்டாம்.மற்றவர்களுக்கும் தெரியப் படுத்த வேண்டாம்.நான் எழுதிய இந்தக் கடிதம்  உங்கள் பார்வைக்கு மட்டுமே,.நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் ,நீங்கள் என்னுடைய உடன்பிறவா ஆன்மநேய சகோதரி என்ற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதி அனுப்பி உள்ளேன்.

இந்தகடிதம் என்னுடைய கம்யூட்டரில் நானே டைப் செய்து பிரிண்ட் எடுத்து அனுப்பி உள்ளேன்.நான் அனுப்பியது என் குடுப்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது..

மேலும் உங்கள் சேவை இந்த ஈரோட்டு மக்களுக்கு அவசியம் தேவை என்பதை சொல்லி உங்களை மனதார உளமார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.  ..வாழ்க வளமுடன் .

அன்புள்ள ஆனமநேயன் ஈரோடு செ,கதிர்வேல்
கைபேசி ....9865939896..



  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு