செவ்வாய், 16 மே, 2017

சித்தர்கள் என்பவர்கள் யார் !


சித்தர்கள் என்பவர்கள் யார் !

சித்தர்களில் மூன்று வகையாக பிரிக்கின்றார் வள்ளலார் !

கர்ம சித்தர் ..யோக சித்தர் ...ஞான சித்தர் என மூன்று வகையான சித்தர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.இவர்கள் பக்தி மார்க்கத்தை தாண்டி உயர்ந்தவர்கள் .

பக்தி மார்க்கம் !

பக்தி மார்க்கத்திலும் உயர்ந்தவர்கள் இருக்கின்றார்கள்,அவர்கள் பக்தியின் வாயிலாக தத்துவ உருவங்களைக்  கடவுளாக எண்ணி,அதிலே மூழ்கி   உருவ வழிப்பாட்டால்,பக்தியில் முக்தி அடைந்தவர்களேத் தவிர  சித்தி அடையவில்லை. அவர்கள் எழுவகைப் பிறவியாகிய தாவரம் ,ஊர்வன,பறப்பன ,மிருகம்,நரகர்,தேவர் ,மனிதர் ,இவர்களை தன்வசமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்கள்.

அவர்கள் வேத ஆகமக் கலைகளில் ,சரியையில் உள்ள ,கிரியை  யோக ஞான சாத்திரங்களில் ,பற்று வைத்து சமய,  மத ஆச்சார நூல்களில் பலப்பல வகையான கடவுள் கொள்கைகளையும்,,தத்துவங்ககளையும்,சாதி,சமய மத பற்றுகளைக் பின்பற்றி,வழிபட்டு ஆச்சிரம  ஆச்சார சங்கற்ப விகற்பங்களில் ஈடு பட்டு, சிறு  குழந்தை விளையாட்டுகள் போல்,பல பல அபிஷேக ஆராதனைகள்,,சாத்திரங்கள்,இடத்திற்கு தகுந்தாற் போல் மந்திர உபவாசங்களை உச்சரித்து,  ,உயர்வு ,தாழ்வு போன்ற செயல்களில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு  அவர்களுக்கு உரிய , சிலை  உருவங்களை பல்லக்கில்  சுமந்து ஊர்வலம் வந்தும்   கடவுளுக்குத் திருமணம் செய்விக்கும் வரை ,கோயிலில் உள்ள உருவ வழிபாடு வரையும்,புற நிலைச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு  வருகின்றார்கள்.

மேலும் சின்ன சின்ன அற்ப சுகமே லட்சியமாகக் கொள்வதும் அதற்குத்தகுந்த பலவிதமான முயற்ச்சிகள் செய்வதும்,களித்து ஆடுவதும்,ஆடாமல் அடங்கி பக்திப் பாடல்கள் பாடி கிடப்பதும், பக்தி மார்க்கத்தின் செயல்பாடுகளாக உள்ளன, இவர்களின் ஆயுட்காலம் சுமார் நூறு வருஷ காலம் மட்டுமே வாழ்பவர்கள் .

அதன்பின் மரணம் அடைந்து  மீண்டும் பிறப்பு எடுப்பார்கள்.அதற்க்கு மேல் அவர்களின் அடுத்த பிறப்பு என்னவென்று அவர்களுக்கேத்  தெரியாது. அவர்களுக்கு ஆணவம் .மாயை ,கன்மம்,என்னும் மும்  மலங்கள் மூன்றும் சராசரி மனிதர்களை விட குறைந்து இருந்தவனவே  ஒழிய முற்றிலும் மலங்களை நீக்கிக் கொள்ள அவர்களால் முடியவில்லை .

கர்ம சித்தர்களின் விபரம் ;--- கிரியையில் உள்ள  யோக ஞான சித்திகளைப் பெற்றவர்கள் . தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல் .அதவாது ''அபர மார்க்கி'' என்றுபெயர் .சதாசிவானந்த அனுபவம்,சதாசிவகால வரை....இறந்த உயிர்களை நாசம் அடையா முன்  எழுப்பும் சக்தி உடையவர்கள்,அதன் சித்தி காலம் மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் வருடம் வரையே நிலைக்கும்,அந்த சித்தியை பயன் படுத்தினால் மறுபடியும் சராசரி மனித நிலைக்கு வந்து விடுவார்கள்.மேலும் அவர்கள் எந்த சித்தியும் பெறமுடியாமல் மரணம் அடைந்து விடுவார்கள்.

அவர்கள்  பக்தி மார்க்கத்தை கடந்து உருவ வழிப்பாட்டைக் கடந்து, தேகத்தையும் உயிரையும் நீட்டிக்கும் வகையான உபாய மார்க்கத்தைக் கண்டவர்கள்.. மூலிகைகளைக் கொண்டு மந்திர ,தந்திர முறைகளில்  காய கல்பம் செய்து,தியானம் தவம் செய்து,ஏக தேச அருளைப் பெற்றவர்கள்.  தன்னுடைய உடம்பை பலப் படுத்திக் கொண்டு உடம்பும் உயிரும் இயங்காமல் ,நிறுத்தி ''சமாதி நிலை'' அடைந்தவர்கள்,கன்ம மலத்தை வென்றவர்கள்.அதற்கு சுத்த தேகம் என்று பெயராகும் கர்ம சித்தர் என்றும் கர்ம சித்திப் பெற்றவர்கள் என்றும் சொல்லப் படுவார்கள்.

அவர்களும் ,தாவரம்,ஊர்வன,பறப்பன ,நடப்பன,தேவர்,நரகர்,மனிதர் ,இவர்களை தான் சொல்லுவதை கேட்டு அதன்படி இயங்க வைத்துக் கொண்டு உள்ளவர்கள்.அவர்களுக்கும்  அற்ப சித்தி கிடைத்துள்ளது,அதற்குமேல் அவர்களுக்கு சித்தி கிடைக்க வாய்ப்பே இல்லை.அவர்களுக்கு நூறு வயது முதல் 500,ஆண்டுகள் வரை உடம்பை அழிக்காமல் சமாதி நிலையில் வைத்து  இருப்பார்கள்.அவர்களும் மீண்டும் இறந்து பிறப்பு எடுப்பார்கள்.

யோக சித்தி விபரம் ;---யோக ஞான சித்திப் பெற்றவர்கள். இவர்கள் பக்தி மார்க்கத்தை தாண்டி கர்ம சித்திகளைப் பெற்று அதற்குமேல் ஆன்மாவைத் தொடர்பு கொண்டு இடைவிடாது தன்னை மறந்து யோக ஞான  நிலையில் இருப்பவர்கள்.64,சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துபவர்கள் அதாவது 64 ,கலைகளையும் அறிந்து அவற்றை  தன் வசமாக மாற்றி உடம்பையும் உயிரையும் இயங்க விடாமல்,அவற்றை அழிக்காமல்  இறைவன் அருளைப் முக்கால் பங்கு பெற்றவர்கள் .

இவர்களுக்கு சங்கல்ப ,குளிகை,பூரண கல்பதேகி என்று பெயர் . பிரமகாலம்,   ''பராபர மார்க்கி'' என்று பெயர்,அதாவது பஞ்ச பூத அணுவால் பின்னப்பட்ட,ஸ்தூல  உடம்பை ,மாற்றி சூட்ச்சும உடம்பில் ,ஆதாவது உருவம் இல்லாத உடம்பாக மாற்றிக் கொள்வார்கள்,கூடு விட்டு கூடு செல்லும் சக்தி பெற்றவர்கள். அவர்களுடைய சித்தி காலம் 12,வருடம் முதல் 108,வருட காலம் .வரை இறந்து  புதைத்த தேகத்தை நாசம் அடையாமுன் உயிர்ப்பிக்கும் சக்தி என்னும் ஆற்றல் படைத்தவர்கள்..அந்த சித்தியை பயன் படுத்தாமல் இருந்தால் சுமார் ஆயிர வருடத்திற்கு மேல் ஐந்து ஆயிரம் வருட காலத்திற்கு மேல்  வாழ்வார்கள் .அதற்குமேல் அவர்களுக்கும் இறப்பு பிறப்பு உண்டு ,இவர்களுக்கு பிரணவ தேகம் என்று பெற்றுக் கொண்டவர்கள் என்றும்,யோக சித்திப் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படும்.

ஞான சித்தர்களின் விபரம் ;-- இறைவன் அருளை முழுமையாகப் பெற்று 64000 அறுபத்து நான்கு ஆயிரம் சித்திகளையும் தன் சுதந்தரத்தால் நடத்தும் வல்லமைப் பெற்றவர்கள்.647,கோடி பேதமாகிய மகா சித்திகளையும் தன் இஷ்டம் போல் நடத்தும் பேர் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு காலம் கடந்த நிலை ,அடிநிலை,முடிநிலை,சுத்த கர்ம ,சுத்த யோக ,சுத்த ஞான சித்தி வல்லபங்களைப் தன் சுதந்தரத்தால் நடத்தும் வல்லமைப் பெற்றவர்கள்...இவர்களுக்கு சுத்த பிரணவ ஞானதேகம் பெற்றவர்கள் என்பதாகும்.இவர்கள் மரணத்தை வென்றவர்கள்.அவர்களும் தனக்கு கிடைத்த சித்தி வல்லபத்தை தவறாக பயன் படுத்தினால் இறப்பு வந்து விடும் .மீண்டும் மனிதப் பிறப்பு எடுக்க வேண்டியது  வரும். இவர்கள் ஆணவம் மாயை ,கன்மம்,மாமாயை,பெருமாயை என்ற ஐந்து மலங்களையும் வென்றவர்கள்.

ஆனால் இவர்கள் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டார்களா ? என்றால் ஒருவராலும் காண முடியவில்லை. அருளைப் பெற்றது என்னவோ உண்மையாகும்  ,அந்தக் உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தான் அருள்  வழங்கப்பட்டது .ஆனால் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  சமூகத்தை கண்டு உள்ளார்கள்.அவரின் உருவத்தை நேரில் காண இவர்களால் முடியவில்லை.இவர்களுக்கு காட்சியும் அவர் கொடுக்க வில்லை.

வள்ளலார் சத்திய ஞான விண்ணப்பத்தில் சொல்லுகின்றார் !

மரணத்தை வென்று  ஞான சித்திப் பெற்றவர்களை வள்ளலார் சென்று கேட்கின்றார் .

இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாகிய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுள்ளம் பற்றி திருவாய் மலர்ந்து ''திருவார்த்தை அளித்து அருளல் வேண்டும் '' என்று விண்ணப்பிக்கும் தோறும் திருவார்த்தை அளித்தல் இன்றிப் பெருங் கருணைத் ''திருக் கண்களில் ஆனந்தநீர் ''பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும் .உணர்ந்தோர் வியந்து உரைப்பக் கேள்வியுற்று இயற்கைத் திரு அருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ ! என்னையா !! என்று குலாவிக் குலாவிக் கூவு கின்றவன் ஆனேன் என்கின்றார் .

விரிக்கில் பெருகும் சுருக்கமாக விளக்குகின்றேன் !

மேலும் வள்ளலார் ;--  ஒ ! ஒப்பு உயர்வு இன்றி விளங்குகின்ற ஒருவரே !
தேவரீர் திருவண்ணமும் ,திருஅருட் சமூகத் திருவண்ணமும் அறிதற்கும்,கருதுதற்கும் துதித்தற்கும் ,எத்திரத்தானும் கூடாவாயினும் அடிமை அளவிற்கு இயன்றபடி அறியாது ,அறிந்தும்,கருதாது கருதியும்,துதியாது துதித்தும்,எனது உரிமையை ஊற்றஞ் செய்கின்றனன் ஆனேன் ! வந்தனம்,! வந்தனம் ! என்று அருட்பெரும்ஜோதி திருவுரு உண்மையை அறிய வேண்டும் என்று கேட்கின்றார்.

சுத்த பிரணவ ஞான சித்தர்கள் ஞான யோகத்தில் பூர்த்தி அடைந்தவர்கள் பூரண அருளைப் பெற்றவர்கள் மரணத்தை வென்று இருக்கின்றார்கள் ,பஞ்ச பூதங்களில் கலந்து இருக்கின்றார்கள்.ஆனால் அருளைக் கொடுத்த அருட்பெரும்ஜோதியைக் காண முடியவில்லை,அருட்பெருஞ்ஜோதியுடன் கலக்க முடியவில்லை. .என்கின்றார் வள்ளலார் . .

வள்ளல்பெருமானுக்கு மட்டுமே ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்சி கொடுத்தார்.கலந்து கொண்டார் ! .அதைத்தான் கண்டேன் ! களித்தேன் !! கலந்து கொண்டேன்!!! என்கின்றார் ..

வள்ளலார் பாடல் !;-- திருவடிப் புகழ்ச்சி 4,ல்  ஏழாவது பாடல் !

திருத்த மிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டி செய்யும் திறத்தர்களும் காக்கும்
அறுத்த மிகு தலைவர்களும் அடக்கிட வல்லவரும்
அலை புரிகின்றவர்களும் உள் அனுகிரப் பவரும்
பொறுத்த மற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள் எதுவோ எனத் தேடிப் போக அவரவர் தங்
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால்
கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன்,கலந்து கொண்டேன் களித்தேன் !

என்கின்றார் .. மேலும் ஒருபாடலில் பதிவு செய்கின்றார் !

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மா தவம் பன்னாட் புரிந்து மணி மாடநடுவே
தேன் இருக்கும் மலர் அணைமேற் பளிக்கறையின் ஊடே
திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே
நல்ல திருவருள் அமுதம் நல்கியது அன்றி என்
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே !

பல்லாயிரம் ஆண்டுகளாக,தேன் சுரக்கும் மலர்களை கொண்டு மலர் அணை  அமைத்து அதன் மேல் இறைவன் பாதம் படும்படி பரப்பி , மாபெரும் தவம் செய்து காத்துக் கொண்டு  இருக்கும் பிரம்மா ,விஷ்ணு,சங்கரன்,போன்ற கர்த்தாக்ளுக்கும்,மேலும்  சத்தி சத்தர்களும்,சுத்த,பிரணவ,.ஞான சித்தர்களும்,தன்னுடைய திரு உருவைக் காட்டாமலும்,அவர்கள் விரும்பி காத்துக் கொண்டு இருந்த  இடத்திற்குச் செல்லாமலும்,நான் இருக்கும் குடிசையில் தானே வலிந்து நுழைந்து .எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசையான உடம்பில் புகுந்து கலந்து கொண்டாயே !

என்று தெளிவாக சொல்லுகின்றார்.எவருக்கும் காட்டாதே என்மட்டில் காட்டிய  அந்தக் கள்வனை போற்றுகின்றார்.  எவருக்கும் காட்டாத தன் உருவை ,''அருட்பெரும்ஜோதி ஆண்டவர்''  தனக்கு காட்டியது மட்டும் அல்லாமல் .தன்னுடம்பிலே கலந்து கொண்டார் என்கின்றார் ..ஏன் ? வள்ளலாருக்கு   மட்டும் காட்சி கொடுக்க வேண்டும் ,கலந்து கொள்ள வேண்டும் .என்பதை வள்ளல்பெருமானே விளக்கம் தருகின்றார் !

மேலும் வள்ளலார்..ஆறாம் திருமுறை   நடராஜபதி மாலையில் 26,ஆவது பாடல் !

துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது
நினைச் சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் மாக்கி மெய்
வாழ்வு எலாம் பெற்று மிகவும்
மன்னு உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி
விளையாடுக அருட் ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்கு அளித்து என் உள்ளே
கலந்து இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நடராஜ பதியே !

என்ற பாடலின் வாயிலாக தெளிவுப் படுத்து கின்றார்.

வள்ளலார் தாவரம் முதல் மனிதர்கள் வரை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற எண்ணங் கொண்டு,கருணையே வடிவமாக ! இரக்கமே வடிவமாக ! தயவே வடிவமாக! பூரண  கருணையோடு வாழ்ந்து, ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ்ந்து ,வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடிய காரணத்தால் ! ... தான் யார் ? என்ற உருவைக் காட்டி .என்றும் அழியாத  சுத்த பிரணவ ஞான தேகத்தையும் கொடுத்து ஐந்து தொழில் வல்லபத்தையும் கொடுத்து .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !...வள்ளலார் உடம்பிலே கலந்து  தன் நிலைக்கு வள்ளலாரை மாற்றிக் கொண்டார் ..

அதைத்தான் வள்ளலார் ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்'' என்பதை தெளிவாகச் சொல்லிய தோடு அல்லாமல்,இறைவன் சொல்லியபடி !.இறைவன் ஆணைப்படி ! வாழ்ந்து காட்டியவர் தான் நமது திரு அருட்பிரகாச வள்ளலார் .

மரணத்தை வென்றவர்கள் இருக்கின்றார்கள் ! .கடவுளைக் கண்டவர்கள் இல்லை !

கடவுள் பூரண அருள் பெற்றவர்கள் உண்டு !  கடவுளோடு கலந்து கொண்டவர்கள் இல்லை !

ஒரு தொழிலைப் பெற்றவர்கள் உண்டு ! ஐந்து தொழிலைப் பெற்றவர்கள் இல்லை !!

ஒளி உடம்பு பெற்றவர்கள் உண்டு ! எல்லா உயிர்களிலும் கலந்து கொண்டவர்கள் இல்லை !

அருட்பெருஞ்ஜோதி யாகவே தன்னை மாற்றிக் கொண்டவர் தான்  நமது வள்ளல்பெருமான் ஆவார்கள்  !! .

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு !
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு !!
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு !!!
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு !!!!

நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி,அன்பு,தயவு, கருணையோடு வாழ்ந்து அருள் பூரணத்தைப் பெற்று,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்,என்னும் முத்தேக சித்தியைப்  பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

விரிக்கில் இன்னும் பெருகும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..
9865939896,..


 .


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு