வியாழன், 11 மே, 2017

நல்வினை ! தீய வினை ! என்றால் என்ன ?

நல்ல வினை  ! தீய வினை !

நல்வினை, தீய வினை என்பது எவ்வாறு மனிதனின் ஆன்மாவில் பதிவாகின்றது !

கடவுளின் படைப்பில்  தாவரம் முதல் , ஊர்வன ,பறப்பன,நடப்பன,தேவர்,அசுரர் ,மனிதன்.. மனித பிறப்பு வரை நல்வினை தீயவினை என்பது ஆன்மாவில் பதிவாவதில்லை.காரணம் அவைகள் இயற்கை நியதி பிரகாரம் மேல்நிலைப் பிறப்பை நோக்கி வாழ்ந்து  வளர்ந்து கொண்டே வருகின்றது.மனிதப் பிறப்புத்தான் உயர்ந்த அறிவுள்ள  பிறப்பாகும்.

மனிதப் பிறப்புத் தொடங்கி மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும்  நல்வினை எதிர்வினை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும்.இதில் நல்லது எது ! கெட்டது எது ? என்பது தெரிந்தும்  தெரியாமலும் செய்து கொண்டு வருகிறோம் நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைகின்றோம்.கெட்டது நடந்தால் துன்பம் அடைகின்றோம்.நல்லது ஏன் நடக்கின்றது ? கெட்டது ஏன் நடக்கின்றது என்பதை நாம் சிந்திப்பதில்லை .

நல்லது நடந்தால் புண்ணியம் என்றும் ,கெட்டது நடந்தால் பாவம் என்றும் நடைமுறையில் உள்ளன...நல்லது நடக்கும்போது ஒன்றும் பெரியதாக நினைப்பதில்லை.கெட்டது நடந்தால் பரிகாரம் தேடி ஆலய வழிப்பாட்டிற்கு சென்று பெரியவர்கள் சொல்லிய பிரயாசித்தம் என்னும் பரிகாரம்  செய்கின்றோம்.அதனால் துன்பம் நீங்கி விடுமா என்றால் ஓர் அளவிற்கு மன ஆறுதல் கிடைக்கும்.துன்பம் முழுவதும் தீர்ந்தபாடில்லை .என்பதை நாம் அறிவோம்.

மனிதன் வாழ்க்கை !

மனித பிறப்பின் நோக்கம் இகத்தே பரத்தை பெற்று மகிழ்ந்திடல்  வேண்டும்.அதாவது இந்த உலகத்திலே  இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வேண்டும் என்பதுதான் மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆணையாகும் .கட்டளையாகும்.

ஆனால் அதை நாம் மறந்து மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்ற பொருள்கள் மேல் இச்சை ( ஆசை ) வைத்து அதிலும் முழுமை பெறாமல் ,நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,மரணம் வந்து மாண்டு போகின்றோம்..

மனிதன் இகத்தில் வாழ்ந்து,கடவுளைத்  தொடர்பு கொண்டு, அறம்,பொருள்,இன்பம்,அடைந்து வீடு பேறு அடையலாம் என்று சொல்லி வைத்து உள்ளார்கள்... மரணம் அடைந்து பின்பு பரத்திற்கு செல்லலாம் என்று சமய ,மதங்கள் சொல்லிய வண்ணம் தத்துவ தெய்வங்களை வழிப்பட்டு  வாழ்ந்து சொர்க்கம்,கைலாயம்,வைகுண்டம்,சிவலோகம் சென்று விடலாம் என்று கற்பனையாக சொல்லி வைத்து உள்ளார்கள்.அவை உண்மையா ? என்றால் உண்மை இல்லை என்கின்றார் வள்ளலார்.

அறம் ,பொருள் ,இன்பம்,வீடு என்பதை இந்த பிறப்பிலே அடைந்து அனுபவித்து .பின் அனைத்தையும் பற்று அற விட்டு இறைவன அருளைப் பெறுவதே மனித குலத்தின் இயற்கை குணமாக இருக்க வேண்டும்...இறுதி வரை விடாமல் இருப்பவர்களுக்கு தீய வினைகள் தாக்கி மரணம் அடைய செய்வித்துவிடும்.

மனம்,வாக்கு,காயம் !

மனிதன் செய்யும் ஒவ்வொரு  செயல்களும் தீயவினையாகவும்,நல்ல வினையாகவும் ,ஆன்மாவில் திரைகளாக பதிவாகி  ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன .என்பதையும் அவற்றை நீக்கி அருளை எவ்வாறு பெற வேண்டும் என்பதை வள்ளலார் கீழே பதிவு செய்துள்ளார் .

  அருள்நெறி
கடவுளது திருவருளை எவ்வாறு பெறக்கூடும்? அருளென்பது கடவுள் தயவு. ஜீவகாருண்ய மென்பது ஜீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக்கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல், சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெறவேண்டும்.
அக் கடவுள் தயவாகிய அருள் எத்தன்மை யுடையது? நமது ஆன்ம அறிவாகிய புத்தி தத்துவத்தினுக்கு நன்மை தீமையை விளக்கிக்காட்டுவதாயும், வேதாகம கலைகளைக் கொண்டு நன்மையாதிகளை விதிப்பதாயும், அறிபவர்களின் தரத்திற் கொத்ததாயும், அறிபவர்கள் எந்த வஸ்துவை அறிகின்றார்களோ அந்த வண்ணமாயும் உள்ளது.
அத் தன்மையான அருள் பிண்ட அண்டத்தில் எவ்வண்ணமாய் விளங்குகின்றது? காண்பார் காணுமிடம் காணப்படுமிடம், அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம், தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம், சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம், அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம், கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம், முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம், கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம் முதலியவாய் விளங்கும்.
இவ் வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து, நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்கொண்டு, அவரால் கட்டளையிடும் ஜீவ காருண்ய திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில், அவ்வருளைப் பெறலாம்.
நன்மை தீமை என்பவை யாவை? நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம். புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.
புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன? மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். 
அவையாவன:- மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். 
வாக்கினால் பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். 
தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள். 
இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.
அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்? 
அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து சிற்சபையின் கண் (ஆன்மா ) மனதை செலுத்தி இடைவிடாது தொடர்பு  கொண்டிருந்தால் நீங்கும்.
அறியாத பாவங்கள் யாவெனில், நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினஞ் செய்யுஞ் ஜபத்தாலும், பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும்,ஜீவ காருண்ய விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.
பிராயச்சித்தம் என்பது  (ஜீவ காருண்யம்) முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன? மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.
வேதாந்திகள் "பாவம் முதலிய கருமங்களும், புண்ணியம் முதலிய ஏதுக்களும் நமக்கில்லை, நாம் சர்வசாக்ஷி" என்கின்றார்களே -அஃதென்ன? தேகவாசனை, இந்திரியவாசனை, கரணவாசனை, பிராணவாயுவின் செயற்கையிலுண்டாகும் வேறுபாடு முதலிய நன்மைகளில் சலிப்பற்று ஆகாரம், நித்திரை, பயம் முதலியவைகளில் தாம் சலித்தும் சோர்ந்தும் திடுக்கிட்டும் இல்லாமல், நிவாததீபம் போல் விளங்கும் ஜீவன் முத்தர்கள் சமூகத்தில் பாவ கிருத்தியங்கள் நடவா; புண்ணியங்களும், பிரயோஜனம் பற்றிச் செய்யார்கள்; பொன்னும் ஓடும் சரியாகக் காண்பார்கள். அத் தன்மையுடைய நித்திய முத்த சுத்த ஞான தேக சித்தர்கட்குப் பாவ புண்ணியமில்லையென்று அவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நமக்கே தெரியும்.
மேலும், அவர்கள் இந்தப் பவுதிக சரீரத்தில் வசித்தாலும், சரீரமாகிய தத்துவ தாத்விகங்கள் இப்போது நமக்கு அசுத்த தேகமாயும் அசுத்தப் பொறியாயும் அசுத்தக் கரணமாயும் அசுத்த அனுபவமாயும் அசுத்த அறிவாயும் இருப்பது போல் இரா. தத்தபடத்தைப் போல் காரியத்தில் இலதாயும் காரணத்தி லுளதாயும், அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும்.
எனவே மனிதர்கள் இந்த பிறப்பிலே தீய வினைகளை நீக்கி.நல்வினைகளை பெருக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும்.என்பதுதான் வள்ளலார் சொல்லும் சுத்த சன்மார்க்க நெறியாகும்.

மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்ந்து இருப்பீ ரானால் 
மரணம் எனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ 
சற்றும் அதை உம்மால் தடுக்க முடியாதே 
சமரச சன்மார்க்கத் தவர்கள் அல்லா அதனை 
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ் வுலகில் எவரும் 
இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் 
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருளாம் 
அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே !
என்னும் 24,ஆவது  ஞான சரியைப் பாட்ல வாயிலாக தெரிவிக்கின்றார் .அவற்றை நன்கு படித்து உண்மை உணர்ந்து அருள் பெரும் வாழ்க்கையில் வாழ்ந்து மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
9865939896...




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு