திங்கள், 4 ஜனவரி, 2016

உயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் !

உயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் !


ஆன்மநேய சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வந்தனம் .

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது அவர்களுடைய உயிராகும்.

உயிர் இல்லை என்றால் நாம் வாழ்வே முடியாது .உயிரின்  தன்மையை அதனுடைய ஆற்றலை நாம் அறிந்து கொள்வதே இல்லை.

நமக்கு அழகான மனைவி ,அழகான வீடு ,அருமையான குழந்தைகள் .அழகான பங்களா அளவில்லாத சொத்துக்கள் ,தேவைக்கு அதிகமான வாகனங்கள் வேண்டிய பொருள்கள் .எந்த நேரமும் வீட்டு வேலை செய்ய ஆட்கள் ,இன்னும் தேவையானது எல்லாம் நிறைந்து இருக்கின்றது .

இவ்வளவு இருந்தும் உங்களின் உயிருக்கு ஒரு ஆபத்து வந்து விட்டால்,பணத்தைக் கொடுத்து மருத்துவ மனையில் சேர்த்தும் ,டாக்டர் கை விட்டுவிட்டார் என்றால் உங்கள்  உயிரைக் காப்பாற்ற முடியுமா ?

அளவில் அடங்காத வசதிகள் வாய்ப்புகள் இருந்தும் உங்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் ,நீங்கள் வாழ்ந்து அனுபவிக்க முடியாமல் உங்கள் உயிர் பிரிந்து மரணம் வந்து விட்டால் என்ன பயன் ?

நீங்கள் பாடுபட்டு சேர்த்த வைத்த மனைவி,மக்கள், சொத்து,சுகம் ஆடம்பரம் அனைத்தையும் விட்டுவிட்டு சென்று விடுகின்றீர்கள்,நீங்கள் அனுபவிக்க முடியாமல் செல்வதற்காகவா? இவ்வளவையும்  சேர்த்து வைத்தீர்கள் சிந்திக்க வேண்டும்.

உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி இருக்கின்றது .

உயிரைக் கொடுத்த கடவுளுக்கு மட்டுமே உங்கள் உயிரைக் காப்பாற்றும் சக்தி ஆற்றல் இருக்கின்றது அதைத்தான் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு உயிரைக் கொடுத்த ஒரே கடவுள்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர'' என்பதாகும்

அவர் ஒளியாக உள்ளார் .உயிரும் ஒளியாக உள்ளது .ஒளிதான், ஒளியைக் காப்பாற்ற முடியும்.

இந்த உலகத்தில் உயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும் அதுதான் கருணையே வடிவமானாதாகும் .

உங்கள் உயிர் உடம்பை விட்டு வெளியே செல்லாமல் காப்பாற்ற  வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

உலகில் துன்பப்படும் உயிர்களை நீங்கள் பாது காத்து காப்பாற்ற வேண்டும். மற்ற உயிர்களை நீங்கள் காப்பாற்றும் போது ,உங்கள் உயிர் ஆண்டவரால் காப்பாற்றப் படும்.''இதுதான் உயிரைக் காப்பாற்றும் பெரிய ரகசியம்''

உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ,வள்ளல்பெருமான்  ''ஜீவகாருண்ய ஒழுக்கம்'' என்று பெயர் வைத்துள்ளார்.

ஜீவன் என்றால் உயிர் .காருண்யம் என்றால் உயிர்களுக்கு உதவி செய்வது...ஒழுக்கம் என்றால் அவற்றை பின் பற்றுவது.

வள்ளலார் சொன்ன ஜீவ காருண்யம் என்ற ஒழுக்கத்தை இடைவிடாது யார் கடைப் பிடிக்கின்றார்களோ ,அவர்களின் .உயிர் உடம்பை விட்டு பிரியாமல் பாது காக்கப்படும்.

உயிர் உள்ள ஜீவர்களுக்கு வரும் துன்பங்கள் எவை எனில் ;--

பசி,பிணி,கொலை, இச்சை .எளிமை,தாகம், பயம் என்பதாகும் .இந்த துன்பங்கள் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே  இருக்கும்.

மேலே கண்ட துன்பங்களால் தான் மரணம் வருகின்றது.

இதில் உள்ள துன்பங்களில் உங்களால் எந்த துன்பத்தைப் போக்க முடியுமோ அவற்றைப் போக்குங்கள் உங்கள் உயிர் காப்பாற்றப்படும்.

மொத்தம் ஏழு துன்பங்கள் ,;--மேலே கண்ட துன்பங்களில் முதன்மையானது பசித் துன்பம் .பசிக் கொடுமை,மேலும் அதற்கு பசிப்பிணி என்று பெயராகும் .

மற்ற ஆறு துன்பங்களை எவ்வகையிலாவது தாங்கிக் கொள்ளலாம் ஆனால் பசியைத் தாங்கவே முடியாது .பசி இல்லாத உயிர்களே கிடையாது .பசி வந்தால் மற்றவை எல்லாம் மறந்து விடும்.அதனால்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றார்கள் .பறந்து போவதில்லை மறந்து போவது என்பதாகும்.

சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது பசியினால் துன்பப்பட்டவர்களைப் பார்த்தோம் இல்லையா ..பசிக்கு ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை என்பதை கண் கூடாக கண்டோம்.

எனவே நண்பர்களே உங்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பசித்தவர்களுடைய பசிப்பிணியைப் போக்குங்கள் ,உங்களின் விலை மதிப்பில்லாத உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ,மனைவி  மக்களோடு மகிழ்ச்சியோடு வாழுங்கள் .

நாம் எதற்க்காக வாழ்கின்றோம் துன்பம் இல்லாமல் ஆனந்தமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் .அதுதானே வாழ்க்கை ,

எத்தனைக் கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

நம்முடைய வீட்டில் எந்த உயிர்களுக்கும் ஆபத்து,மரணம், துக்கம்,  இல்லாமல் வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்க்கையாகும்.

வழிபாடு என்பது,புரத்திலே உள்ள ஆலயங்களிலே,உயிர் இல்லாத உணர்ச்சி இல்லாத சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தும் அங்குள்ள உண்டியலிலே பணத்தையும், தங்கத்தையும்  பொருளையும் கொண்டு போய் கொட்டுகின்றோம் .அது வழிபாடு அல்ல.

ஆலயங்களிலே கொட்டுவதை .ஏழைகளின் வயிற்றில் கொட்டுங்கள் ..அதுதான் வழிபாடு என்பதாகும் .

ஏழைகளின் பசியைப் போக்குவதே சிறந்த வழிபாடாகும்.அதுதான் உங்களின் உயிரைக் காப்பாற்றும் அருள் நிறைந்த கருவியாகும் .

எனவே தான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும்...உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்,..ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்... என்றும் வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு போதித்து உள்ளார். .

இவை யாவும் வள்ளலார் சொல்லியது அல்ல .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரின் ஆன்மாவில் அமர்ந்து அவருடைய உயிரையும் உடம்பையும் காப்பாற்றி,மரணத்தை வெல்ல வைத்து , ,மக்களுக்கு இவற்றைப் போதிக்க வேண்டும் என்று கட்டளை இட்டதால்,ஆன்மநேய உரிமையோடு ,உயிர்க் கருணையோடு உலக மக்களுக்கு உயிரைக் காப்பாற்றும் உண்மையை வள்ளல்பெருமான் வெளிப் படுத்தி உள்ளார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்;--

வட்டிமேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டி உள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங் கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போற் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே !

எனவே என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புகளே உங்களின் உயிர் போனால் மீண்டும் பெற முடியாது .

உங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வள்ளலார் சொல்லிய ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 ...

1 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 அன்று PM 8:08 க்கு, Blogger Unknown கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு