சனி, 11 ஜூலை, 2015

ஆன்ம இன்ப லாபத்தை எதனால் பெறக் கூடும் !

ஆன்ம இன்ப லாபத்தை எதனால் பெறக் கூடும் !

ஆன்ம இன்ப லாபத்தில் மூன்று வகைகள் உண்டு .அவை ;--இம்மை இன்ப லாபம்,...மறுமை இன்ப லாபம்,..பேரின்ப லாபம் என்பவைகளாகும்.

அந்த மூன்று லாபங்களையும் எதனால் பெருக் கூடும் எனில் ;--

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏக தேசத்தைக் கொண்டும் .அருட் பூரணத்தைக் கொண்டும் அடையக் கூடும் என்று  அறிய வேண்டும்.

மூவகை இன்பங்களில் அருளின் ஏக தேசத்தைக் கொண்டு அடையத் தக்கவை எவை ?

அருட் பூரணத்தைக் கொண்டு அடையத் தக்கது யாது ? என்று அறிய வேண்டில்.

இம்மை இன்ப லாபம் ,..மறுமை இன்ப லாபம் ,..என்கிற இரண்டையும் அருளின் ,ஏக தேசத்தைக் கொண்டு அடையக் கூடும் என்றும் .

பேரின்ப லாபம் என்கின்ற ஒன்றையும் --அருட் பூரணத்தைக் கொண்டு அடையக் கூடும் என்றும் அறிய வேண்டும் .

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருள் எந்த வண்ணம் உடையது என்று அறிய வேண்டில்;--

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும்.நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும் .அறிவார் அறியும் வண்ணங்களும் ...அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ...ஆகிய சர்வ சத்தி வண்ணங்களும் ;தனது ஏக தேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை  உடையது  என்று  அறிய வேண்டும்.

அந்த அருள் எவ்விடத்து விளங்குகின்றது ? என்று  அறிய வேண்டில் ;--

நோக்குவார் ,நோக்குமிடம் ,நோக்கப்படும் இடம் ,
கேட்பார். கேட்கும் இடம் ,கேட்கப்படும் இடம் .
சுவைப்பார் ,சுவைக்கும் இடம் ,சுவைக்கப்படும் இடம் .
முகருவார் ,முகரும் இடம் ..முகரப்படும் இடம் ..
பொருந்துவார் ,பொருந்தும் இடம் ,பொருந்தப்படும் இடம் .
பேசுவார் ,பேசும் இடம் பேசப்படும் இடம் .
செய்வார் ,செய்யும் இடம் ,செய்யப்படும் இடம் .
நடப்பார் ,நடக்கும் இடம்,நடக்கப்படும் இடம் .
விடுவார் ,விடும் இடம் ,,விடப்படும் இடம் .
நினைப்பார் ,நினைக்கும் இடம்,நினைக்கப்படும் இடம் .
விசாரிப்பார் ,விசாரிக்கும் இடம்,விசாரிக்கப்படும் இடம்.
துணிவார் ,துணியும் இடம் ,,துணியப்படும் இடம் ..
தூண்டுவார்,தூண்டுமிடம்,,தூண்டப்படும் இடம் .
அறிவார் ,அறியும் இடம்,அறியப்படும் இடம் .
அனுபவிப்பார்,அனுபவிக்கும் இடம் ,அனுபவிக்கப்படும் இடம் .

முதலிய எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றது என்று அறிய வேண்டும்.

அந்த அருளை எதனால் பெறக்கூடும் என்று அறிய வேண்டில் ;--

ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் பெறக்கூடும் என்று அறிய வேண்டும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக் கூடும் என்பது எப்படி ? என்று அறிய வேண்டில் .

அருள் என்பது ;-கடவுள் இயற்கை விளக்கம் ,அல்லது கடவுள் தயவு என்பதாகும்.
ஜீவ காருண்யம் என்பது ;--ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் ,அல்லது ஆன்மாக்களின் தயவு என்பதாகும்.

அதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும்.சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் போல் என்று அறிய வேண்டும்.

இதனால் ஜீவ காருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறிய வேண்டும்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது,அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது ;--அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்.;அதனால் உபகார சத்தி மறையும்.உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

புண்ணியம் ,பாவம் என்பது !

புண்ணியம் என்பது -ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்.
பாவம் என்பது ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.

அன்றி ,ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்,அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும் அறிய வேண்டும் .

அவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நினைவு பெற்ற சாத்திய ஞானிகளே மேற் குறித்த பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும்.

அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்...

மேலே கண்ட உண்மைகளை அறிந்து தெரிந்து கடைபிடித்து வாழ்கின்றவர்களே மனிதர்கள்.

கண்டதை எல்லாம் பேசி காலத்தை வீண் காலம் கழிக்காமல்  ஜீவகாருண்ய வல்லபத்தையும்,ஜீவ காருண்ய இலக்கணத்தையும் புரிந்து செயல்பட அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு