வியாழன், 9 ஜூலை, 2015

”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன??””””

”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன??””””

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ஐயா அவர்களுக்கு வணக்கம்;மற்றும் ஏனைய சன்மார்க்க நல்லெண்ண நண்பர்களுக்கும் வணக்கம்.

சன்மார்க்கத்தின் உண்மை என்பது வள்ளலார் நாம் சன்மார்க்க ஒழுக்கத்தில் வாழ்பவர்களுக்காக வழங்கிய மாபெரும் கொடை அல்லவா, அது என்ன?

உண்மை என்பது வள்ளலாருக்கு முன் வந்த எந்த ஒரு ஞானியர்களும் யோகிகளும் இருடியர்களும் தெரிவிக்காத ஒரு மாபெரும் அரிய பொக்கிஷமாகும் என்பதில் ஐயமிருக்க வாய்ப்பில்லை தானே? எனில் அது என்ன?

நாம் அனைவரும் சன்மார்க்க உண்மை என கருதுவதும், கருதி ஆசரிப்பதும் ஜீவகாருண்யம் எனும் மாமருந்தையே அல்லவா? அல்லது ஒளி வழிபாடு என கொண்டாடும் ஜோதி தரிசன வழிபாடு அல்லவா?..எனில் அது தான் சன்மார்க்க உண்மையா என நாம் மறுமதிப்பீடு செய்து ஆராயவேண்டிய தருணம் எப்போதோ கடந்து விட்டது, அந்த உண்மை என்ன?

பேருபதேசம் என வள்ளலார் கடைசியில் நமக்கு தந்து விட்டு சென்றது என்ன என்பதை சன்மார்க்கிகளாகிய நாம் அனைவரும் உலகம் உய்யும் பொருட்டு, சன்மார்க்கம் உய்யும் பொருட்டு தீர ஆலோசித்து பெறவேண்டிய பேருண்மையாக இருக்கின்றது;அந்த பேருண்மை என்ன?

இதுகாறும் வந்த ஞானிகள் உண்மையை மறைத்து விட்டனர் என வள்ளலாரே வருத்தப்படுகின்றார் எனில் அந்த உண்மையின் ரகசியமும் அதன் தன்மையும் எத்தகையது என நாம் சத்விசாரத்தினால் அறிந்து பெற்றுகொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றதுவல்லவா?..அந்த உண்மை என்ன?

கொடி கட்டி கொண்டபடியினால் இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்ளுவார்கள் என வள்ளல் பெருமான் சொல்லி சென்றிருக்கின்றாரே, அந்த கொடி என்ன என அவர் சொல்லுமிடத்து ,அது நாபி முதல் புருவமத்தி வரை இருக்கும் ஒரு நாடி என விளக்குகின்றார்.அந்நாடியின் மேல் புருவமத்தியின் உட்புறத்தில் ஒரு சவ்வு தொங்குவதாகவும் ,அதன் நிறத்தையும் சொல்லுகின்றார் அல்லவா?...அதில் ஏறவும் இறங்கவும் நாடி இருப்பதாகவும் சொல்லுகின்றார் அல்லவா?...இதன் உண்மை என்ன?

நாம் சன்மார்க்கிகள் இதுவரைக்கும் இந்த கொடியினை கட்டிகொள்கிறோம் அல்லவா?..ஆனால் இதன் உண்மை எதுவென ஆலோசிக்கவோ, சத்விசாரம் பண்ணவோ நமக்கு நேரமேயில்லை போல தெரிகிறது. 150 வருடங்கள் கழிந்து விட்டாகினும் இதுவரைக்கும் யாரும் சன்மார்க்க கொடியினால் வள்ளலார் சொல்லி விட்டு சென்ர உண்மை என்னவென விளக்கமுன்வரவில்லை என்பது சற்று தீராத வேதனையாகவே உள்ளது.,அல்லவா?

மேற்சொன்ன பேருபதேச பகுதியை நாம் அனைவரும் படித்திருப்பதே தான், அப்படி படித்த நமக்கு தெரிந்த உண்மை என்ன/...அந்த உண்மையினால் கிடைத்த நன்மை என்ன? ஒன்றுமில்லை என்பதுவே பதில், ஏதோ கொடி இருக்கிறது, நாடி இருக்கிறது எனும் ஓர் அறிவு தான் கிடைத்திருக்கிறது. ஆனால் உண்மை கிடைத்திருக்கிறதா என கேட்டால் இல்லை என்பதே பதிலாக அனைவருக்கும் இருக்கும் அல்லவா?..அந்த உண்மை, வள்ளலாருக்கு முன் யாரும் அறிந்திராத உண்மை என்பது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கிறது என்பதுவா? அல்லது இதற்க்கு உட்கிடையாக மேலும் நாம் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஏதோ ஒன்று விட்டு போயிருக்கின்றதா/? வள்ளலார் சொல்லும் அந்த பேருண்மை என்ன என்பதை தயை கூர்ந்து சத் விசாரத்தினால் பெற்றுகொள்ள நாம் உரிமை உடையவர்களாய் இருப்பதனால், முன் வந்து விளக்கதினை விசாரிப்போமாக, வாழ்க வையகம்.


ஒரு சிறிய விளக்கம் ;--


ஆன்மாவின் வண்ணகம் வெள்ளை வண்ணம்  அருட்பெருஞ்ஜோதியின் வண்ணம் மஞ்சள் என்னும் பொன் வண்ணம் ..வெள்ளை வண்ணமான  ஆன்மாவை இவ்வுலகில் வாழுகின்ற போது ஏழு  வண்ணங்களாக ஏழு திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன.அதனால்  பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது .பிறப்பு  இல்லாமல்  வாழ வேண்டுமானால் இறைவன் அருளைப் பெற்று திரைகளை நீக்க வேண்டும்.

திரைகள் நீங்கினால் உடம்பின் பஞ்ச பூத இயக்கம் நின்று விடும்.பஞ்ச பூத இயக்கம் நின்று போவதை ,கொடிக் கட்டிக் கொண்டோம் என்கின்றார் .இனி இவ்வுலகில் இயங்கும் இயக்கத்தை நிறுத்தி எல்லா உலகங்களிலும் எல்லா உயிர்களிலும் இயங்கும் ஆற்றலைப் பெற்றேன் என்கின்றார் .

ஆன்மா என்பது பரிசுத்தமான வெள்ளை வண்ணம் .அருள் என்பது மஞ்சள் என்னும் பொன் வண்ணம்.
ஆன்மாவும் அருளும் இணைந்ததை கொடிக் கட்டிக் கொண்டோம் என்று நினைக்கத் தோன்றுகின்றது .
அருளும் ஆன்மாவும் ஒன்றோடு ஒன்று பூரண மாக இணைந்து விட்டால் மரணம் இல்லாமல் வாழலாம் 

அதைத்தான் ;--

கொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி 
கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி 
அடிமுடிக் கண்டோம் என்று சின்னம்பிடி 
அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி . .

சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி 
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி 
பொற்சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி 
புந்தி மகிழ கின்றோம் என்று சின்னம் பிடி ..என்றும்.

சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனதாச்சு 
தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு 
இச்சமய வாழ்வில் எனக்கு என்ன இனி ஏச்சு 
என்பிறப்புத் துன்பம் எல்லாம் இன்றோட போச்சு.

இந்த உலகின் பிறவித் துன்பத்தை போக்கியவர் .மேலும் பிறவி இல்லாமல் வாழும் வாழ்க்கையை பெற்றதின் நோக்கத்தை கொடிக் கட்டிக் கொண்டதாகவும் சொல்லலாம் .

பொருள் இயக்கத்தை நிறுத்தி ,அருள் இயக்கத்தை பெற்றுக் கொண்டார் வள்ளல்பெருமான் அந்த இயக்கத்தின் வண்ணம் மஞ்சள் வெள்ளை.என்றும் நினைக்கின்றேன்.

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்ப்பா முரசு 
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு 
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு 
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு .

என்ற பாடல்களின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்து கின்றார் . என நினைக்கின்றேன் .

கொடி என்பது தொப்புளுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு. ஆன்மாவின் மத்தியில் அதாவது புருவ மத்தியில் ஒரு ஜவ்வு உள்ளது .அதன் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று ஆன்மாவை தொடர்பு கொண்டுதான் உள்ளே செல்கின்றது.அதுதான் பிராண வாய்வு, அந்த காற்றுதான் தொப்புள் என்னும் நாபி வரையில் சென்று உடம்பு இயக்கத்திற்கு உபாயமாக இருக்கிறது.அது ஏறவும் இறங்கவும் இருந்தால் இயக்கம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதாகும்.

பிராண வாய்வு ஏறவும் இறங்கவும்இயங்கிக் கொண்டு இருக்கும் வரையில் பஞ்ச பூத உடம்பு இயங்கிக் கொண்டு இருக்கும் அதுநின்றுவிட்டால் மரணம் வந்துவிடும் .அந்த பிராண வாயுவு இயங்காமல்,உடம்பை நிலைத்திருக்க வேண்டுமானால் அருள் வேண்டும்.அருளைப் பெற்றுவிட்டதால் .ஊன்உடம்பு ஒளி உடம்பாக மாறிவிடும்..ஏறி இறங்கும் ஜவ்வு என்னும் நரம்பை இயங்காமல் கட்டிவிடலாம்..அதன்பின் பிராணவாய்வு தேவை இல்லை .

அதைக் கொடிக் கொண்டோம் என்றும் சொல்லிஇருக்கலாம்...அதன் வண்ணம் எப்படி இருக்கின்றது என்பதை கால் பங்கு பொனமை என்றும் முக்கால்பங்கு வெண்மை என்றும் சொல்லுகின்றார் .நான் சொல்லுவதை அனுபவித்தில் கண்டால் மட்டுமே தெரியும் என்கின்றார். 

அனுபவம் எப்படி கிடைக்கும் ?

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை.கொடி கட்டிக் கொண்ட படியால் ,இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரிய வொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் .தெரிவிக்கின்றார்,தெரிவிப்பார்.

நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது .அந்த தயவு வருவதற்கு ஏதுவான பொது உரிமையும் கூட
இருக்க வேண்டும்.

இப்படி இருந்து கொண்டு இருந்தால் ,ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள் .எல்லோருக்கும் ,தாய்,தந்தை,அண்ணன்,தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப் பட்ட உதவி எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடம் இந்த இடம்.

இது சத்தியம் ,இது சத்தியம்,இஃது ஆண்டவர் கட்டளை. என்று நிறைவு செய்கின்றார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு