செவ்வாய், 7 ஜூலை, 2015

ஞான சபையும் அருட்பெருஞ் ஜோதியும் !

ஞான சபையும் அருட்பெருஞ் ஜோதியும் !

வடலூரில் வள்ளல்பெருமான் ஞான சபையை அமைத்துள்ளார் .

ஞான சபை என்பது மனிதனின் தலைப் பாகத்தில் உள்ள உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவின்  இருப்பிடத்தை காட்டும் அமைப்பாக்கும்.

சத்திய ஞான சபை என்னுட் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் .

என்றும் .

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்த ஓர் அருட்பெருஞ் ஜோதி .

என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.

ஞான சபை என்பது ஆன்மப் பிரகாசம் ,அந்தப் பிரகாசத்திற் குள் இருக்கும் பிரகாசம் கடவுள் .

அந்த உள் ஒளியின் அசைவே நடனம் .இவற்றைத்தான் சிற்சபை என்றும் அல்லது ஞான சபை என்றும் ,நடராஜர் என்றும்,நடனம் என்றும் சொல்லப் படுகின்றது.

ஒரு பொருளின் நாம ரூப குண குற்றங்களை விசாரிக்காமல் ,அந்தப் பொருளைக் காணுதல் இந்திரிய அறிவு ,இந்திரியக் காட்சி என்பதாகும்.

ஒரு பொருளின் நாம ரூபத்தையும்,குணா குற்றங்களையும் விசாரித்தல் கரணங்களில் உள்ள மன அறிவு ,கரணக் காட்சி என்பதாகும்.

ஒரு பொருளின் பிரயோசனத்தை அறிதல் ஜீவ அறிவு ,ஜீவ காட்சி என்பதாகும்.

ஒரு பொருளின் உண்மையை அறிதல் ஆன்ம அறிவு ஆன்ம காட்சி என்பதாகும்.

ஆன்ம அறிவு என்பது ஆன்மாவில் இருந்து தோன்றுவது.ஆன்ம அறிவை அறிந்தவனே ,தெரிந்தவனே அருட்பெருஞ்ஜோதியைக் காணமுடியும்.

இதைத்தான் வள்ளல்பெருமான் .சத்திய ஞான சபை என்னுட் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்கின்றார்.

அவர்கண்ட உண்மையைத்தான் இயற்கை விளக்கமாக வடலூரில் ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார்.

நாம் அறிந்து கொள்வதற்கு அன்பு,தயவு,கருணை என்னும் ஜீவ காருண்யத்தை கையில் எடுக்க வேண்டும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

நாமும் இறைவன் அருளைப் பெற்றால் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு