வியாழன், 21 பிப்ரவரி, 2013

பொருள் தேடும் உலகில் அருள் தேடும் ஆன்மாக்கள் !.


 பொருள் தேடும் உலகில் அருள் தேடும் ஆன்மாக்கள் !.

பொருள் தேடும் உலகில் அருளைத் தேடும் மனித ஆன்மாக்கள் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது உண்மையாகும் ..

வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கம் ஒன்றே ,அருளைத தேடும் வழியைக் காட்டுவித்துள்ளது .

பொருளை விட்டு அருளை ஏன் தேட வேண்டும் .?

பொருள் என்பது இவ்வுலகில் வாழும் ஆன்ம உயிர் இனங்களுக்கு கடவுளால் படைக்கப் பட்டதாகும்.அதிலே உயிர் உள்ளப் பொருள் ,உயிர் அற்றப் பொருள்கள் என இரண்டு வகைகள் உண்டு .கல்லு ..மண் ..போன்ற உயிர் அற்ற பொருள்களும்,அதில் இருந்து உண்டாக்கும் உலோகங்களும்,மற்றும் உள்ள காய்ந்த மரம்,கட்டை,கோல்,குச்சிப் போன்ற,ஜடப் பொருள்களையும், எந்த ஆன்ம உயிர்களும் உணவாக உட் கொள்வதில்லை.உயிர் தோன்றப் படக் கூடிய, பொருள் களையும் ,உயிர் உள்ளப் பொருள்களையும் எல்லா ஆன்மாக்களும் உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன .

இவ்வுலகில் ஆன்மாக்கள் வந்து வாழ்வதற்காக இவ்வுலகத்தை...இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்,இயற்கை விளக்கம் என்னும் அருளைக் கொண்டு படைக்கப் பட்டதாகும்.

ஆன்மாவில் இருந்து உயிர்கள் தோன்றி வாழ்வதற்காக,,ஐந்து பஞ்ச பூதங்கள் என்னும் ..மண் ...நீர் ...அக்கினி ...காற்று ...ஆகாயம் போன்ற பஞ்ச பூத அணுக்கள்...உருவமுள்ள பொருள்களாகவும்,உருவம் அற்ற அணுத்துகள் போன்ற பொருள்களாகவும் , அதற்கு துணையான எங்கும் நிறைந்த,ஏழு விதமான அணுக் கூட்டங்களும் படைக்கப் பட்டுள்ளன .

முதல் பிறவி .....

ஆன்மாக்கள் இந்த உலகத்திற்கு வந்ததும் ,ஆன்மா வாழ்வதற்கு முதல் பிறவி என்னும் தாவர உயிர்கள் கொடுக்கப்படுகிறது .அந்த தாவர உயிர்கள் புல்...நெல் ...மரம் ...செடி ...பூண்டு முதலிய வாகவும்,கல்...மலை ...குன்று ...முதலியவாகவும்,பிறந்து பிறந்து ,களையுண்டல்....அறுப்புண்டல்....வெட்டுண்டல்....கிள்ளுண்டல்... உலர்ப்புணடல் ...உடைப்புண்டல் ...வெடிப்புண்டல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் ..இறந்து இறந்து ,அத்தாவர யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்பு அடைந்து அடுத்த பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

இரண்டாம் பிறவி .....

அடுத்த பிறவியாக ..எறும்பு ...செல் ...புழு ...பாம்பு ...உடும்பு ....பல்லி முதலியவாகவும் ,தவளை ...சிறுமீன் ...பெருமீன் ....முதலை ....சுறா...திமிங்கலம் முதலியவாகவும் ;,பிறந்து பிறந்து ,தேய்ப்புண்டல்...நசுக்குண்டல் ....அடியுண்டல் ...பிடியுண்டல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அவ் ஊர்வன ...நீர் வாழ்வன போன்ற யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்பு அடைந்து அடுத்தப் பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

மூன்றாம் பிறவி ;----

அடுத்த பிறவியாக ,ஈ ...வண்டு ...தும்பி ...குருவி ....காக்கை ....பருந்து ....கழுகு ...முதலியவாக பிறந்து பிறந்து ,...அடியுண்டல் ...பிடியுண்டல் ...அலைப்புண்டல் ....உலைப்புண்டல்....முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அப்பறவை யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று,..உழன்று உழன்று அலுப்பு அடைந்து அடுத்தப் பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

நான்காம் பிறவி ;----

அடுத்த பிறவியாக ,..அணில்....குரங்கு ...நாய் ....பன்றி ....பூனை ...ஆடு ...மாடு....யானை ....குதிரை ....புலி .....கரடி ....சிங்கம் ....முதலியவாக பிறந்து ,பிடியுண்டல் ...அடியுண்டல் ....குத்து உண்டால் ...வெட்டு உண்டல் ...தாக்குண்டல் ...கட்டுண்டல் ....தட்டுண்டல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அவ்விலங்கு யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்படைந்து பின் அடுத்த பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

ஐந்தாம் பிறவி ;---

அடுத்து ,பசாசர் ....பூதர்....இராக்கதர் ...அசுரர் ....சுரர் ...முதலியராகப் பிறந்து பிறந்து ,அலைப்படுதல் ....அகப்படுதல் ...அகங்கரித்தல் ...அதிகரித்தல் ....மறந்து நிற்றல் ...நினைந்து நிற்றல் ...மயக்குறுதல்....திகைப்புறுதல்....போரிடுதல் ...கொலைப்படுதல் ...முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து ,அத்தேவ யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்படைந்து பின அடுத்த பிறவிக்கு ஆன்மா செல்கிறது .

ஆறாம் பிறவி ;----

அடுத்து ;--காட்டகத்தார் ...கரவுசெய்வார் ....கொலை செய்வார் ...முதயராகப் பிறந்து பிறந்து ,இறந்து ,இறந்து ,அந்நரக யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று சென்று ,உழன்று உழன்று ,அலுப்படைந்து மேலும் ஆன்மாக்கள் ,அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் ..அச்சமும் ...அவலமும் ...களைப்பும் ...துன்பமும் அடைந்து அடுத்த பிறவி எதுவென்று தெரியாமல் ஆன்மா திகைத்து கொண்டு இருந்ததை கவனித்த... அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ...

ஏழாம் பிறவி ;----மனித தேகம் !

நம்முடைய கருணைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவுளத் தடைந்து, இரங்கிஅருளி ,அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய ..உயர்ந்த அறிவு உடைய மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது இந்த மனித தேகத்தில் செலுத்தி அருளிய தேவரீரது பெருங் கருணைக்கு ,மனிதனாக பிறந்த நாம் என்ன கைம்மாறு செய்துள்ளோம் ..ஒன்றும் செய்தோம் இல்லை ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !இம்மனித தேகத்தில் செலுத்திய காலத்தும் ,தாய் வயிற்றிலும் ...சிசு பருவத்திலும் ...குமார பருவத்திலும் ....பல்வேறு அவத்தைகளால் அறிவின்றி இருந்தோம் .ஆகலின் தேவரீர் பெருங் கருணைத் திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண் போது கழித்துக் கொண்டு இருந்தோம் .அப்பருவம் கழிய இப்பருவத்தின் இடத்தே உண்மைத் தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தோம் .இருக்கின்றோம் .

இறைவனால் கொடுக்கப் பட்ட , உயர்ந்த அறிவுடைய  மனிதப்பிறவி கொடுத்ததின் நோக்கம் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறோம். நாம் உலக வாழ்க்கையில் கடந்து வந்த உயிர்த் தோற்றங்களின் வரிசையில் பொருளை உண்டு (புசித்து )வாழ்ந்து வந்ததால் அதே போல் மனிதப் பிறப்பிலும் தொடர்ந்து பொருள் உணவை உண்டு வாழ்ந்து வருகிறோம்.இவை சரிதானா ?தவறானதா ?என்பதை நம்முடைய அறிவைக் கொண்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும் .

மனித தேகம் கிடைத்தும் ,அதன் உண்மை தெரியாமல் மனிதனாக பிறந்த அனைவரும் பொருள் தேடும் வாழ்க்கையிலே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.அதனால் என்ன பயன் என்றால் ? நமக்கு மரணம் என்னும் முடிவுதான் வருகிறது.மரணம் வந்து விட்டால் நாம் என்ன செய்ய முடியும்.பொருளை வைத்து மரணத்தை வெல்ல முடியுமா ?என்றால் முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

உலகத்தையும்,அண்டத்தையும்,நாட்டையும்,ஆளுகின்ற அதிகாரத் தலைவர்களும் ,பட்டம் பதவி ,புகழ் அறிவு ஆற்றல் படைத்த அறிஞர் பெருமக்களும்,சித்தர் ,யோகி,ஞானி போன்ற அருளாளர்களும்,அறிவியல் விஞ்ஞானிகளும்,மற்றும் உள்ள ஆராய்ச்சி யாளர்களும்,  மற்றும் உள்ள ஒன்றும் தெரியாத மக்களும் மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் இறந்து கொண்டே இருக்கிறார்கள் .இறந்து போனபிறகு அவர்கள் எங்கு உள்ளார்கள்,என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

மரணம் என்பது இயற்கை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.மரணம் என்பது இயற்கை அல்ல !அவை செயற்கையே என்று வள்ளலார் தெளிவு படுத்துகிறார் ,தப்பாலே சகத்தவர் சாகவே துணிந்து உள்ளார்கள்  ,மனித பிறவியில் நாம் தவறு செய்வதால் தான் மரணம் வருகிறது ,ஆதாலால் மரணம் என்பது செயற்கை அல்ல ,அவை செயற்கையே யாகும் என்கிறார் வள்ளலார் அவர்கள்.

வள்ளலார் பாடிய பாடலைப் பாருங்கள் !

கனமுடையோம் கட்டுடையோம் என்று நினைத்து இங்கே
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்றுவரும் செய்தி அறியீரோ
செத்த உமது இனத்தாரைச் சிறிது நினையீரோ
தினகரன் போல் சாகாத தேகம் உடையவரே
திருவுடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் நீண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே
வழங்குதற்கு என் தனித்தந்தை வரும் தருணம் இதுவே !

என்கிறார் வள்ளலார் .நாம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் எமன் என்னும் கூற்றுவன் வருகின்ற போது என்ன செய்யப் போகின்றீர்கள் இதே போல் நம்முடைய மனித இனம் அனைத்தும் போய் கொண்டேதான் உள்ளன ,நாமும் பார்த்துக் கொண்டேதான் உள்ளோம்.மரணம் ஏன வருகிறது என்பதை நாம் சிறிதாவது நினைத்துப் பார்த்தது உண்டோ !ஏன நாம் மரணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்தோம் .இயற்கைதான் மரணம் என்பதால் சிந்திக்க தவறி விட்டோம்.

நமக்கு முன்னாடி வாழ்ந்த அருளாளர்களும்,மரணத்தை தவிர்க்கும் ,மரணத்தை வெல்லும் வழிமுறைகளை சொல்லித் தரவில்லை,காரணம் அவர்களுக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மையாகும்.

இனிமேல் நீங்கள் வருத்தமே ,துன்பமோ, அச்சமோ ,பயமோ .படதேவை இல்லை .மரணத்தை வெல்லும் வழியை நான் சொல்லித் தருகிறேன் ,நான் காட்டும் உண்மையான மெய்ந்நெறியைக் கடைபிடித்து ,மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து இறைவனுடைய உண்மையான அருளைப் பெற்று ,இறவாத வரம் பெறலாம் இன்பமுடன் வாழலாம் .என்று மனித தேகம் படைத்த அனைவரையும் அன்புடன் அழைக்கிறார் நமது அருளாளர் வள்ளல் பெருமான் அவர்கள்,அவர் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமான புனித  பாதையில் சென்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழலாம் .அதன் வழியைப் பார்ப்போம் .

பொருள் உணவு ! அருள் உணவு !

பொருள் உணவு என்பது பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்டவைகளாகும் ,அதிலே இரண்டு விதமான உணவு வகைகள் உள்ளன .அசுத்த பூதகாரிய உணவு ,சுத்த பூதகாரிய உணவு என இரண்டு வகைப்படும் .

உயிர்களையும் ,உயிர் உண்டாகும் பொருள்களையும் அபகரித்து உண்பது அசுத்த பூதகாரிய உணவாகும் .,உயிர்களை கொன்று உண்ணாமலும் ,உயிர்கள் தோன்றுவதற்கு உண்டான வித்துக்களை உண்ணாமலும் ,..பூ ...காய் ...கனி...பழம் ...இலை ... தானியங்கள் போன்றவற்றை உண்பது சுத்த பூத காரிய உணவாகும் .இந்த இரண்டு விதமான உணவு வகைகளும் இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு மாயையால் கொடுக்கப்படும் பொருள் உணவாகும் .

இந்த இரண்டு விதமான உணவுகளும் நம்முடைய உடம்பையும்,உயிரையும் ,ஆன்மாவையும் ,எப்படி பாது காக்கிறது என்பதைப் பார்ப்போம் .

தாவர உணவு !

மனித உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் ,நோய்கள் தாக்காமல், உடம்பு வலுவு உள்ளதாக்கி எலும்பு ,நரம்பு,தசை போன்ற உறுப்புகளை பாதுகாத்தும்,தாது விருத்தியும்,தத்துவ விருத்தியும் இல்லாத படியாலும் ,  ,இரத்தம் சீர் கெடாமல் ,தங்கு தடை இல்லாமல் உடம்பில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று உடம்பை இயக்கிக் கொண்டு, உடம்பையும் உயிரையும் பாது காக்கும் உணவுதான் தாவர உணவாகும் .இதனால் அறிவு தெளிவு உண்டாகும் .இதுவும் ஒரு பொருள் உணவுதான் .இதற்கு சுத்த பூதகாரிய உணவு என்பதாகும் .

மாமிச உணவு !

உணவுக்காக உயிர்களைக் கொன்று,அதனுடைய மாமிசத்தை (இறைச்சியை )சமைத்து உண்பது அசுத்த பூதகாரிய உணவாகும் .இதனால் எலும்பு ,நரம்பு ,தசை போன்ற உறுப்புகள் சீக்கிரம் செயல் இழந்து ,இரத்தம் சீர் கெட்டு,இரத்த குழாய் அடைப்பு ஏற்ப்பட்டு ,அதனால் பல நோய்கள் உண்டாகி துன்பம் துயரம்,அச்சம்,பயம் உண்டாகி ,அறிவு இழந்து துன்பப்பட நேரிடும் .இதுவும் பொருள் உணவுதான் .இதற்கு அசுத்த பூதகாரிய உணவு என்பதாகும் .

ஒரு ஜீவனைக் கொன்று மற்றொரு ஜீவனுக்கு பசி ஆற்றுவித்தல் கடவுளுக்கும் சம்மதம் இல்லை ,உடம்பிற்கும் சம்மதம் இல்லை.ஜீவ காருண்ய ஒழுக்கமும் இல்லை .என்பதை சத்தியமாக அறிய வேண்டும்.

இந்த இரண்டு வகையான உணவு வகைகளும் மனித வாழ்க்கைக்கு தேவையான உணவு வகைகள் அல்ல ! இந்த உணவு வகைகள் இரண்டும் முன் பிறவியில் உண்ட உணவுகள் ,எனபதை அறிந்து கொள்ள வேண்டும் .மிருக வாழ்க்கை உணவை நாம் இப்போது புசித்துக் கொண்டு உள்ளோம் .

இந்த இரண்டு வகையான உணவும் மரணத்தை வெல்ல முடியாத உணவாகும் .
மனிதனாக பிறவி எடுத்த நாம்,மரணம் அடையும் வாழ்க்கைக்காக ,பொருளைத் தேடிக் கொண்டு உள்ளோம் .வாழ்நாள் முழுவதும் ,மண்ணாசை ...பொன்னாசை ....பெண்ணாசை க்காக உழைத்து உழைத்து பொருளைத் தேடிக் கொண்டு உள்ளோம் .அதனால் ஆசை தீர்ந்து விடுகிறதா ? என்றால் இல்லை .மனிதனுக்கு உயர்ந்த அறிவுக் கொடுத்து இருந்தும் சிந்திக்க நேரம் இல்லாமல் பொருளைத் தேடி வைத்து விட்டு , அதனால் எந்த பயனும் இல்லாமல் மரணம் அடைந்து விடுகிறோம் .

நாம் சம்பாதித்த பொருளை ஏழை ,எளிய ,,வறுமையுற்ற மக்களுக்கும் கொடுத்து உதவாமல்,இரக்கம்,அன்பு ,தயவு,கருணை இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு திரிகின்றோம்.அதனால் என்ன பயன் அடைந்தோம்.பொருள் நம்மை அழித்து விடும் எனற உண்மை தெரியாமல் ,பொருள் மீது அளவு கடந்த பற்று வைத்து பொருளைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பொருளைத் தேடுவதால் என்ன பயன் என்பதைப் பற்றி வள்ளலார் சொல்லும் கருத்தைப் பாருங்கள் .

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங் காண்கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துனை கொள்கின்றீர் பித்துலகீரே !

பொருளை சம்பாதித்து வைத்துக் கொண்டு மதிப்போடும் ,மரியாதையோடும் வாழ்கின்றோம் என்கின்றீர் ,விலை உயர்ந்த பட்டுத் துணிகளும் ,நகைகளும் அணிந்துக் கொண்டும் திரிகின்றீர் ,பசி என்று வந்தோரை பார்க்க கூட மனம் செல்லாமல் இருக்கின்றீர் ,உங்களுக்கு எப்போது மரணம் வருகின்றது என்பதும் தெரியாமல் வாழ்கின்றீர் .திடீர் என்று மரணம் வந்து கொட்டோடும் (மேளம் )முழக்கோடும (அழுகுரல் சத்தம்) பிணக்கோலம் காண்கின்றீர்,இதுவா வாழ்க்கை ? சிந்திக்க வேண்டும்.

மனிதன் வாழ்க்கை என்பது வாழ் நாள் முழுவதும் பொருள் தேடி அலைந்து அழிந்து விடுவதில்லை,இறைவன் நம்முடைய ஆன்மாவில் வைத்திருக்கும் அருளைப் பெற்று அழியாமல் வாழ்வதுதான் மனித வாழ்க்கையாகும்.

உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் ,நல்ல குணமும் ,நல்ல அறிவும் ,நல்ல அருளும் பெற்று மரணத்தை தவிர்க்கும் வழி தெரியாமல் ,பொருளைத்தேடும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது ,பைத்தியக் காரர்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் வள்ளலார் .

மேலும் வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை யறியீர்
பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டியுள் இருந்தீர்
பட்டினிக் கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டிப்போல் வாழ்கின்றீர் கொட்டிபோல் இளைத்தீர்
எத்துனை கொள்கின்றீர் பித்து உலகீரே !

மனிதன் எப்படி வேண்டுமானாலும் பொருள் சம்பாதிக்க ஆசைப்படுகிறான் .மக்களின் ஏழ்மை நிலையை புரிந்து கொண்டு,வட்டிக்கு பணம் கொடுத்து வட்டிக்கு வட்டி என்று, பணம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுக் கொண்டான் .பணப்பெட்டியை நிரப்புவதிலும்,மேலும் பெட்டிகளை வாங்கி நிரப்புவதிலும் அதிகம் அக்கறை செலுத்துகிறான் பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கிறான் .வறுமையில் ஏழ்மையில் வாழும் மக்கள் ,பசியோடு வாழ்ந்து பட்டினி கிடைபாரை பார்க்கவும் அஞ்சுகிறான்,பழம் கஞ்சியையும் கொடுக்க மனம் தளருவதில்லை,எட்டி மரம் போல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

பணம் என்னும் பொருளைக் காப்பாற்றும் வழியைத் தெரிந்து கொண்டவர்கள் ,உடம்பையும் ,உயிரையும் காப்பாற்றும் வழியை மட்டும் கற்றுக் கொள்ளாமல்,பைத்தியகாரர்கள் போல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் ,உயிரைக் காப்பாற்றும் சுத்த சன்மார்க்கம் என்னும் மார்க்கத்தை அறிந்து கொள்வாரும் இல்லை .இவர்களை மனிதர்கள் என்று எப்படி சொல்வது ?உயர்ந்த அறிவுடையவர்கள் என்று எப்படி சொல்வது ? அறிவு படைத்த மனித பிறப்புக் கொடுத்தது பணம் என்னும் அழியும் பொருளை சம்பாதிக்கவா ! சிந்திக்க வேண்டும்.

அருளைப் பெரும் வழி !

நாம் அருள் அருள் என்று சொல்லுகிறோம் அருள் எங்கு இருக்கிறது என்பது இதுவரையில் நமக்கு தெரியாமலே இருக்கிறோம்.அருள் இருக்கும் இடத்தைப் பற்றி நம் முன்னோர்கள் முறையாக ,சரியாக ,உண்மையாக யாரும் நமக்கு சொல்லித் தரவில்லை.பல அருளாளர்கள் பல வழிகளை காட்டி உள்ளார்கள்.அதனால் நாம் ஏதாவது பயன் அடைந்து மரணம் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறோமா ? என்றால் இதுவரையில் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

சரியை ,கிரியை,யோகம்,ஞானம்,என்ற நான்கு வகை ஆன்மீக வழிகளைக் காட்டி உள்ளார்கள் .அதில் ஒவ்வொன்றிலும் நான்கு படித்தரங்கள் இருக்கின்றன,சரியையில் சரியை,சரியையில் கிரியை,சரியையில் யோகம்,சரியையில் ஞானம்,...கிரியையில் சரியை,கிரியையில் கிரியை,கிரியையில் யோகம்,கிரியையில் ஞானம் ,யோகத்தில் சரியை,யோகத்தில் கிரியை,யோகத்தில் யோகம்,யோகத்தில் ஞானம்,...ஞானத்தில் சரியை,ஞானத்தில் கிரியை,ஞானத்தில் யோகம்,ஞானத்தில் ஞானம் ,...என்னும் பதினாறு படித்தரங்கள் காட்டி உள்ளார்கள்.

இந்த பதினாறு படித் தரங்களையும் கடந்தால் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்,அதுவே ஞானம் என்னும் அருளைப் பெற்று இறைவனோடு கலந்து விடலாம் என்பதை மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.ஆனால் மக்கள் அந்த வழிகளை பின்பற்றி வருகிறார்களா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.மக்கள் முதல்படியான சரியை கிரியை ,என்ற பக்தி என்ற படிகளை தாண்டி மேலே வருவதில்லை.

அப்பாவி மக்களை பயன்படுத்தி ,தவம், யோகம்,ஞானம் என்ற வழி முறைகளை சொல்லித் தருகிறேன் என்று,பல அமைப்புகள் மக்களை  ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு உள்ளார்கள் .அதையும் உண்மை என்று நம்பி மக்கள் பணத்தையும்,நேரத்தையும் விரையம் செய்து கொண்டு உள்ளார்கள்.

பக்தி என்ற பெயரில் ஆலய வழி பாட்டிலும்,தவம்,யோக,ஞானம்,என்ற ஏமாற்றி பேர் வழிகளாலும் அருளைப் பெற முடியுமா ?என்றால் பெற முடியாது.

வள்ளலார் காட்டும் உண்மையான வழி !

மனிதனாக பிறந்த நாம் உயர்ந்த அறிவைப் பெற்றவர்கள்.மனிதனுக்கு மட்டும் உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்து இருக்கிறார் .என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.,அந்த அறிவை முறையாக ஒழுக்கத்தோடு கடை பிடித்தால் போதும் அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.அந்த ஒழுக்கம் என்னவென்றால்,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்,இவை நான்கும் முக்கியமானதாகும்,இதில் இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் என்ற இரண்டு ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதும் மற்ற,ஜீவ ,ஆன்ம  இரண்டு ஒழுக்கங்களும் சிரமம் இல்லாமல் வந்து விடும்.

இந்திரியம் என்பது,கண்,மூக்கு ,வாய்,செவி ,உடம்பு ,என்பதாகும்.இதற்கு உருவம் உண்டு.கரணம் என்பது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்பதாகும்.இதற்கு உருவம் கிடையாது மின்சாரம் போல் வேலை செய்யும்.ஜீவன் என்பது உயிர் என்பதாகும்,இதற்கும் உருவம் கிடையாது ஆனால் உயிருக்கு துணையாத தான் இந்திரியம்,கரணம் என்னும் கருவிகள் வேலைசெய்கின்றன,ஆன்மா என்பது அருள் பெற்ற ஒளியாகும் ,ஆன்மா இல்லை என்றால் உயிரும்,கரணமும்,இந்திரியமும் வேலை செய்யாது.உடம்பு செயல் இழந்து விடும் அதற்கு பெயர்தான் மரணம் என்பதாகும். .

ஆன்மா இல்லை என்றால் எதுவும் இயங்காது.உடம்பை விட்டு வெளியே சென்ற ஆன்மா எங்கு சென்றது,என்ன பிறப்பு எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது.இதுதான் ரகசியம்,அருளைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் உண்மைத்  தெரியும்,உண்மை தெரிந்தவர்கள் மரணத்தை வேன்றவர் களாகும் .

இந்த உலகத்தில் அருளைப் பெற்றவர்கள் யார் ? சித்தர்கள் ,யோகிகள் ,ஞானிகள் என்பவர்கள் சிறிது அற்ப அருளைப் பெற்று இருக்கிறார்கள்.அந்த அற்ப அருளைப் பெற்று சில சித்துக்களை செய்து,அவர்களுக்கும் பயன் இல்லாமல்,மற்றவர்களுக்கும் பயன் இல்லாமல் சமாதி அடைந்து விட்டார்கள்.அவர்களும் மீண்டும் பிறப்பு எடுப்பார்கள்.அவர்கள் உண்மையான பரிபூரண இறை அருளைப் பெற முடியவில்லை,ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியவில்லை.அவர்களையும் மாயா திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளது .ஆன்மாவில் உள்ள அருள் அமுதத்தை ஏழு திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளது .அனைத்து திரைகளும் நீங்கினால்தான் உண்மையான அருள் வெளிப்படும்.

ஏழாவது அமுதம் பற்றி வள்ளலார் சொல்லுகிறார் .

ஏழ் நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வனடி ..அம்மா
என்னென்று சொல்வனடி .

ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்த பொற் றம்பமடி...அம்மா
இசைந்த பொற் றம்பமடி.

பொற்றம்பங் கண்டேறும் போது நான் கண்ட
புதுமைகள் என் சொல்வனடி ...அம்மா
புதுமைகள் என் சொல்வனடி !

என்று விளக்கம் அளிக்கிறார் வள்ளலார்.அவர் கண்ட காட்சி ,அவர் உண்ட அமுதம், அவர் அடைந்த மகிழ்ச்சி ,அவர் அடைந்த பேரின்பம்,அவர் அடைந்த முத்தேக சித்தி,அவர் அடைந்த சுத்த பிரணவ ஞான தேகம்,அவர் அடைந்த பேரின்ப பெருவாழ்வு,அவர் அடைந்த மரணம் இல்லாத பெருவாழ்வு,மற்றும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.போன்ற அனைத்து வல்லபங்களையும் பெற்றவர் நமது அருட் தந்தை வள்ளல்பெருமான ஒருவரே !என்பதை அருள் அனுபவம் பெற்றவர்கள் நன்கு அறிவார்கள்.மற்றவர்கள் அவரை அறிந்து கொள்ளும் அறிவு அருள் அனுபவம் கிடையாது.

அந்த கருணை வள்ளல் தான் அடைந்த அருள் அனுபவத்தை எல்லா மனித தேகம் படைத்தவர் களுக்கும் சொல்ல வேண்டும் ,அவர்களும் அந்த பேரின்ப பெருவாழ்வில் வாழ வேண்டும் ,என்கிற பெருங் கருணையுடன் ,என்போல் இவ்வுலகம் பெற வேண்டும் உலக உயிர்த் திரள் எல்லாம் ஒளிநெறி பெற வேண்டும் என்பதனால் அருள் பெரும் வழியை நமக்கு இலவசமாக சொல்லிக் காட்டி உள்ளார் .அவர்காட்டிய வழியை பின்பற்றி அருள் பெறுவோம்.

அருள் தேடும் ஆன்மாக்கள் ! வழி !

நாம் புண்ணிய தீர்த்தங்கள் என்னும் கங்கை,காவிரி,யமுனை ,கோதாவரி,போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை,புனித ஆலயங்கள் என்று சொல்லப்படும் ,காசி,ராமேஸ்வரம்,மெக்கா மதினா ,புத்தகயா,தெருசலம்,பிரமிடு ,போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை .சமய மத ஏற்பாட்டில் காட்டி உள்ள ஆலய உருவ வழிபாட்டு முறைகளும் தேவை இல்லை.இந்த வழிபாட்டு முறைகளால் நமக்கு எந்த பயனும் இல்லை,அதனால் நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரந்து வெளியே வருவதில்லை ,நாம் மரணத்தை வெள்ளப்  போவதில்லை.இது சத்தியமான உண்மையாகும்.

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள்.!

நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்த்தருளி இருக்கும் கோட்டையின் கதவு சாத்திப் பூட்டப்பட்டு இருக்கிறது.அந்த பூட்டை திறப்பதற்கு சாவியாகிய ''அருள் '' வேண்டும்.இவ்வருள் அன்பினால் அல்லாது வேறு வகையால் அடைவது அரிது.இவ்வன்பு ஜீவ காருண்யத்தால் அல்லாது வேறு வகையால் வராது.ஜீவ காருண்யத்தின் லாபமே அன்பு.

ஜீவ காருண்யம் உண்டாவதற்கு வழி அல்லது துவாரம் யாதெனில் ;--

கடவுள் உடைய பெருமையும்,தரத்தையும் ...நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே யாகும். அன்னிய உயிர்களுக்கு இமசை உண்டாகாது நடத்தலே ,ஜஈ காருண்யம்.இதுதான் அருளப் பெறுவதற்கும் முத்து அடைவதற்கும் முதற் படியாக இருக்கிறது.ஆதலால் இதைப் பாது காத்தல் வேண்டும்.இப்படியே பழகிப் பழகிப் மேலே ஏற வேண்டும்.அப்படி பழகினால் .

ஜீவ காருண்யத்தால் பிரமன் ஆயுளும் .பாச வைராக்கியத்தால் விஷ்ணு ஆயுளும்,ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுளும்,பிரம்ம ஞானத்தால் என்றும் அழியாத சுவர்ண தேகம் முதலியவைகளும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

எப்படி எனில் ;--

கடவுள் சர்வ ஜீவ  தயாபரன்,சர்வ வல்லமை உடையவன்,ஆகையால் நம்மையும் சர்வ ஜீவ தயவு உடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக் கொள்ளும்படி ,...மனித தேகத்தில் வரிவித்துள்ளார் ,ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால் ,கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான ,இறந்தார் எழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்று இருக்கின்றார் .

எந்த ஜீவர்கள் இடத்தில் தயவு விருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ அந்த ஜீவர்கள் இடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாய் இருக்கும் ,மற்றவர்கள் இடத்தில் காரியப்படாது.ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில்,கடவுள் இடத்தில் பக்தியும் (அன்பு )ஜீவர்கள் இடத்தில் ஜீவகாருண்யம் என்னும் இரக்கமும் செலுத்த வேண்டும்.இதுவே ஆண்டவரின் கோட்டையின் பூட்டைத் திறக்க அருள் என்னும் சாவியாகும்.

கடவுள் தயவும் ஜீவ தயவும்;--

தயவு என்பது இரண்டு வகைப்படும் ,யாதெனில் ;--கடவுள் தயவு,,ஜீவ தயவு ஆகிய இரண்டு ....கடவுள் தயவு என்பது ;--1,இறந்த உயிரை எழுப்புதல் ,2,தாவரங்களுக்கு மழை பெய்வித்தல்,3,முருக,பட்சி,ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி,அருட்சக்தியால் ஊட்டிவைத்தல் என்பவையாலும்.4,சந்திரன்,சூரியன்,அக்கினிப் பிரகாசங்களைக் கால ,தேச ,வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்.5, பக்குவிகளுக்கு அநுக்கிரகித்தல்,6, அபக்குவிகளைச் செய்யவேண்டிய அருள் நியதியின்படி ,தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல் இவைகள் யாவும் கடவுள் தயவாகும்.

ஜீவ தயவு என்பது ;--மனிதர்கள் தயவாகும்.தன்னுடைய சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகாரம் செய்தல் ,ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயவு வண்ணமாக இருத்தல்.இப்படி இருந்தால் அருள் காரியப்படும்.

கடவுள் மனித தேகத்தில் காரியப்படுதல் .;--

கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க சமய,மத ஏற்பாட்டில் மகான்கள் தத்துவ அடையாளங்களாகப் பெயரிட்ட விக்கிரம பேதமாகிய சிலைகளை ,தங்கம் ,வெள்ளி,வைரம்,கோமேதகம்,இரும்பு,மண்ணு,ஈயம் ,பஞ்ச்லோகங்கள் முதலியவற்றால் கடவுள் காரியப்படுவது சரியை,கிரியை,யாதி பேதம் எட்டில் சரியையில் சரியை,கிரியையில் சரியை, இவ்விரண்டையும் செய்கின்ற மனிதர்களது ஞாயம் ,

மேலும் அதில் தோன்றி அனுக்கிரகம் செய்விப்பது என்பது மாயா ஜாலம்,மாயா ஞாயம்..அருள் உருவமான அறிவே ,உருவங் கொண்ட சிவத்தை ,அறிவாலே அறிவது உண்மையாகும்...மேலும் அனலுக்குச் சரியான கற்பூரம் ,பஞ்சு,கரி,காய்ந்த கட்டை முதலிய வஸ்துக்களில் அக்கினி சீக்கிரம் பற்றுவது போல் காரியப்படும்.கதலி (பச்சை வாழமட்டை ) முதலிய காரியப்படுவது தாமசமாகும்( தாமதம் )அதுபோல் ஜீவ காருண்யமுள்ள பக்குவ ஆன்மாக்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால் .சுத்தமாதி தேகம் மூன்றும் ( சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்.)அத்தருணமே வரும் .

அதேபோல் ஜீவ காருண்யம் இல்லாத பக்குவ இல்லாதவர்களுக்கு அருள் செய்தால் ,வாழையின்  இடத்தில் அக்கினி காரியப்படுவது போலாகும்.ஆதலால் கடவுள் அருள் வெளிப்படுவதற்கு அபக்குவிகள் தங்கள் செயற்கை குணங்களாகிய ராகத் துவேஷங்களை நீக்கல் வேண்டும்.சினம்,காமம்,வெகுளி,மயக்கம்  முதலிய வற்றையும் நீக்கி ,உயிர்களுக்கு உபகாரம் செய்தல் வேண்டும்.

சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சம் உண்டாக்குவது போல் .மனித சிறிய தயாவாகிய அன்பு,தயவு,கருணைக் கொண்டு,,,கடவுளின் பெரிய தயாவாகிய அன்பு ,அறிவு,ஆற்றல் அருள் என்னும் பெரிய தயவைப் பெற வேண்டும்.இதுவே பொருளைத் தேடாமல் அருளைத் தேடும் வழியாகும்.மேலும் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடைப் பகுதியில் விரிவாக எழுதி வைத்துள்ளார் .ஊன்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதப் பிறப்பு எடுத்ததின் நோக்கமே அருளைப் பெறுவதற்கே ! என்பதை தெரிந்து,அறிந்து,புரிந்து கொண்டு இப்பிறப்பிலே அருளைப் பெற்று மரணத்தை வென்று,பேரின்ப பெருவாழ்வு வாழ்வோம்.வளமுடன் வாழ்வோம்.

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

மேலும் பூக்கும்;--

1 கருத்துகள்:

21 பிப்ரவரி, 2013 அன்று PM 5:26 க்கு, Blogger திண்டுக்கல் தனபாலன் கூறியது…

ஒவ்வொரு பாடலும்... அதற்கான விளக்கமும்... மிகவும் அருமை ஐயா...

நன்றி... வாழ்த்துக்கள்...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு