வெள்ளி, 25 ஜனவரி, 2013

அருள் ஆட்சி நடத்தும் அருளாளர் யார் ?

அருள் ஆட்சி நடத்தும் அருளாளர் யார் ?

இந்த உலகத்தின் வரலாறுகளைப் பார்த்தால் படித்தால்,நம் அறிவுக்கு எட்டிய மட்டில் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.மனித அறிவுத் தோன்றி மக்களை வழி நடத்தும் அருளாளர்கள் ,ஆட்சியாளர்கள் அளவில் அடங்காது .

எத்தனைப் பேரரசுகளும்  ,சிறிய அரசுகளும் தோன்றித் தோன்றி அழிந்து போய் இருக்கின்றன.வரலாற்று அறிவுக்கு முந்திய தோன்றிய அரசுகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது அரசுஆட்சி செய்து வந்து இருக்கின்றன என்பது ,இன்றைய மனித சமுதாயத்திற்கு ஓரளவு தெரிந்தும் தெரியாமலும் இருந்து  இருக்கின்றன.இவைகள் எல்லாம் ஏன் அழிந்து போயின என்பதை நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். எல்லா ஆட்சிகளின் தோற்றக் கேடுகள் ,சமரசம் இல்லாத,சமநோக்கம் இல்லாத,சத்தியம் இல்லாத,சரியான முறையான வழிமுறை இல்லாத ஆட்சியாளர்களின்  செயல்பாடுகளே,காரண காரியமாகும்.

முந்தய ஆட்சிகளின் வரலாறுகளை ,ஆட்சியாளர்களின் வரலாறுகளை புதைப்பொருள் ஆராய்ச்சிகளின் வழியாகவும் பழங்கால கல்வெட்டு காட்சிகளின் வழியாவும் புதைப்பொருள் உலோகங்களாலும்,கற்சிலைகள் வாயிலாகவும்  இன்றைய மக்கள் அறிந்து கொண்டு வருகிறார்கள்.அந்த ஆராய்ச்சியின் வாயிலாக ,எத்தனையோ அரசுகள் ,மாமன்னர்கள் சிலகாலம் மணிமுடி அணிந்து அரசு கட்டிலில் இருந்து செங்கோல் செலுத்தி உளார்கள்.பின்னாடி அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து,மறைந்து போய் உள்ளதை வரலாற்று வழியாக படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டு உள்ளோம் .

இந்த அரசுகள் எல்லாம்,நீண்ட காலம் ஆட்சி செய்யாமல் குறைந்த ஆயுள் உள்ள அற்பமான அரசுகள் என்பதை காண்கிறோம் .மனிதன் மனிதனை ஆட்சி செய்வது அற்பமானதாகும்.அவை நிலைப் பெற்று நிற்காது என்பதையும் நாம் அறிவாலே அறிந்து கொள்ளவேண்டும் .

மனிதர்களையும்,மற்ற உயிர்களையும்,அதன் அதன் தன்மைக்கு தகுந்தால் போல் சம நோக்குடன்  பாதுகாத்து வழிநடத்தும் தகுதி ,ஆட்சி செய்யும் தகுதி ஆண்டவரின் முழுமையான அருள் பெற்றவர்களால் தான், குற்றம் அற்ற குறை இல்லாத ஆட்சி செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் சாதாரண அறிவைக் கொண்டு ஆட்சிசெய்தால்,எந்த ஆட்சியாக இருந்தாலும் சீக்கிரம் அழிந்து போய்விடும் .அன்றும்சரி, இன்றும்சரி,என்றும்சரி ! நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவரின் முழுமையான அருளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை என்பதை,அருட்பெருஞ்ஜோதி! யால அறிந்து கொண்டு உள்ளோம் .

இவ்வுலகை தோற்றுவித்தல் ,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல், விளக்கம் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும் ,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,சர்வ காருண்யர் என்றும் ,சர்வ வல்லபர் என்றும்,தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத ,தனிப்பெருங் கருணை ,தனிப்பெரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்னும் உண்மைக் கடவுள் ஒருவராகிய அந்த தனிப்பெருங் கருணைக் கடவுள் ,

வள்ளலார் !

இந்த உலகத்தை நிரந்தரமாக,அருள்புரிந்து  ஆட்சி செய்வதற்கு அனுப்பி வைத்த அருளாலர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .

நமது உண்மைத் தந்தையாகிய அருட்பெருஞ் ஜோதி ! அம்பலத்து அரசிரின் உயர்ந்த சிறப்பையும் அவரால் அவர் திருஅருளால் உலகம் இயங்கிக் கொண்டு இருப்பதையும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க தோற்றத்தின் வாயிலாக அறிகின்றோம்.நமது அம்பலத்தரசர் அருட்பெருஞ் ஜோதியர் ,அருள் அரசாட்சியும் நித்தியமாக இருப்பதையும் காண்கிறோம் .

அந்த அருட்பெருஞ்ஜோதி ஒருவராக இருந்தும்,தானே எல்லா உயிர்களின் உள்ளும் புறமும் நிலவி, கலந்து, நின்று,நிலைத்து தன்னுடைய தனிப்பெருங் கருணையால் அனைத்து உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டு ,தடைபடாமல் செயல்பட்டுக் கொண்டும் விளங்கிக் கொண்டும் உள்ளார் என்பதை உணர்ந்து கொண்டோம்.

உலகில் உள்ள நால்வகை யோனி பேதங்களும் ,ஏழ்வகைப் பிறவி நிலைகளையும் கடத்தி வந்து,எவ்வித தடைகளும் சிறிதும் தடைபடாது உயிர்களை வாழவைத்து ,இறுதிப் பிறப்பான மனிதப் பிறப்பை கொடுத்துக் வாழவைத்து வழங்கிக் கொண்டு  வருகிறது .

இறுதிப் பிறப்பான மனிதப் பிறவி எடுத்துக் கொண்ட ஆன்மா உண்மைக் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வேண்டும் என்பது ,கடவுளின் ஆணையாகும் .இது அவரது அருள் ஆட்சியில் ஒவ்வொரு மனித தேகம் எடுத்து வாழ்ந்து அடையும் தனிப்பெரும் பேராகும் .

இந்த தனிப்பெரும் பேறும்,தனிப்பெரும் வல்லபமும்,பெற்றவர்தான் வள்ளலார் .இவருக்கு முன்னாடி வந்த அருளாளர்கள் எவரும் இந்த பேறு பெறவில்லை என்பதை நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதலால் இவ்வுலகில் நிலையான ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த அருள் நோக்குடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !திருவுள்ளம் கொண்டு புதிய ஆட்சியைத் தோற்றுவிக்க உறுதிப் படுத்துகிறார் .

இது அவரது அருள் அரசாட்சியில் ஒருவன் அடையும் மாபெரும் பேறு ஆகும் இப்பேறு பெற்று விளங்கியவர் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். அந்த அருட்பெருஞ் ஜோதி அரசால் ,தன்னுடைய அருட்ஜோதி மகுடமாகிய ,அருட் ஆட்சியை அதாவது அருட்பேரோளித் திருமுடியும் வள்ளல் பெருமானுக்கு சூட்டியுள்ளார்,இதன் பொருள் என்ன ?

ஆதியும் அந்தமும் இல்லாத் தன் அருள் அடசாட்சியை இப்போது நம்முடைய வள்ளல் பெருமானிடம் வழங்கி அதற்கு அடையாளமாக பேரொளித் திருமாமணி முடியும் சூட்டிவிடார் .என்பது உண்மையாகும்.அப் பேரரசின் ,பட்டத்து உரிமை முதற்பிள்ளை இவராக உள்ளதை அறிகின்றோம்.

வள்ளல் பெருமான் அவர்கள் இப்போது சமரச சுத்த சன்மார்க்க சத்திய  அருள் ஒளி என்னும் சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று, அருட்பெருஞ் ஜோதி செங்கோலை தாங்கி ..இக்காலம் முதல் இனிவரும் எக்காலமும் அளவு கடந்த நெடுங்காலம் அருள் ஆட்சி செங்கோல் நடத்திக் கொண்டு உள்ளார் என்பதை ,சமரச சுத்த சன்மார்க்க அன்பர்களும் ,உலகில் உள்ள அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் !  

    உண்மை விளக்கம் ;--ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் ஜோதிக்கடவுள் நம்முடைய வள்ளல் பெருமானுக்கு தன்னுடைய ஜோதி மகுடத்தை சூட்டி,ஆட்சிப் பொறுப்பையும் வழங்கி விட்டார் என்றால் ,அந்தக்கடவுள் தன் போன்று விளங்கும்படி இவரை அரசுக்கட்டிலில் வீற்றிருக்கச் செய்து விட்டுத் தாம் விலகிச் சென்று விட்டதாக எண்ணி விடக்கூடாது.

ஆன்ம அணுவில் இருந்து இதுவரை அருளாட்சி ஆண்டுவந்த அருட்பெருஞ் ஜோதிக்கடவுள் இப்போது அந்நிலையில் இருந்து கொண்டே தன் திருஅருளை ஓர் பக்குவம் உள்ள ஆன்மாவில் பரிபூர்ண நிறைவு பெறச்செய்து ,அருட்பிரகாச சுத்த வடிவோடு தன் நித்திய அருளாட்சியே உலகம் எல்லாம் கண்டு கொள்ளவும், அனைத்து ஆன்மாக்களும் பெரும் நன்மைப் பெற்று ஒங்க செய்யவே இப்படி வெளிப்படத் திகழ்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன் உலகம் உண்மையானக் கடவுளைக் காண்பது முடியாத காரியமாக இருந்தது ,இருக்கின்றது .ஆனால் இந்தக் கடவுள் இப்போது தன்னுடைய அருள் ஆட்சியை உலகம் எல்லாம் கண்டு ஆனத்தம் அடைந்து இருக்கும்படி ,திருஅருட்பிரகாச வள்ளலின் வடிவில் இருந்து ஆளத் தொடங்கி விட்டு உள்ளார் .உலகம் இந்த வள்ளலின் உண்மையைக் கண்டு ,கடவுளின் உண்மையைக் காண்பது எளிதாகி விட்டு இருக்கின்றதாம்.

வள்ளலாரின் உண்மை வடிவம்,மனித உருவில் மிக எளிய தோற்றத்தில் விளங்கிபும் ,அது இப்போது அருட் பிரகாசமான அழியாத் தனிவடிவமாக அகம் இருந்து அனகமாய் விரிந்து நிறைந்து விளங்கிக் கொண்டு உள்ளது.இவர் இப்போது எல்லா ஆன்மாக்களிலும் அகவடிவாய் இருந்து அவரவர்களாய்த் திகழ்ந்து இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் அவரது புறவடிவமான படத்தை மட்டும் கண்டு வழிபாடு செய்வது அறியாமையாகும்.அதுதான் அவருடைய திருஉருவம் என்று மயங்கி இருத்தல் வேண்டாம்.அருட்கண்களால் அகமாக உள்ள சிற்சபையைக் கண்டு அருட்பிரகாச வடிவைக் கண்டு கொள்ள வேண்டும்.வள்ளல்பெருமான வடிவம் ஒவ்வொருவரின் ஆன்ம வடிவமாக உள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் .

வள்ளலார் சித்தி பெறப்போகும் போது கடைசியாக சொன்ன வார்த்தை வார்த்தை ;---இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் ,இனிமேல் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ,அருட்பிரகாச வள்ளல் பெருமான் இப்போது இயற்க்கை உண்மையான அருட்பெருஞ் ஜோதியாக இருந்து கொண்டு ,இயற்கை விளக்கமான அருளை அனைத்து எல்லா  உயிர்களும் இன்பம் அடைதல் பொருட்டு. இயற்கை இன்பமாகவும் வழங்கி விளக்கிக் கொண்டு உள்ளார் .

ஆதியீ றறியா அருள் அரசாட்சியில்
ஜோதி மாமகுடம் சூட்டிய தந்தையே !

தன்கையில் பிடித்த தனி அருட்ஜோதியை
என்கையில் கொடுத்த எனதனித் தந்தையே !

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தன்னுடைய ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் வள்ளல் பெருமான் கையில் கொடுத்துள்ளார் என்பதை மேலே கண்ட அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளில்,தெளிவாக விளக்கி உள்ளார் .

இப்போது வள்ளல் பெருமான் முழுமையான அருளைப் பெற்று ஒளிதேகம் என்னும் சுத்த பிரணவ ஞான தேகத்துடன் அருள் அரசாட்சி செய்து கொண்டு உள்ளார் . இது இறைவரின் புதிய நிலைத் தோற்றமே அன்றி இந்த அருட்பிரகாச வடிவம் வேறு எதுவும் அல்லவாம்.இவரது உண்மை வடிவம் அருட்பெருஞ்ஜோதி அரசின் விளக்கமாக அறிகின்றோம்.

இப்போது அருட்பெருஞ் ஜோதியின் ஞான சிங்காதன பீடத்தில்,அமர்ந்து கொண்டு அருள் ஆட்சி நடத்தும் அருளாளர் நமது வள்ளல் பெருமான்தான் என்பதை அறிவாலே அருளாலே அறிந்து கொண்டு உள்ளோம்..அருள் ஒளிச் செங்கோலைக் கொண்டு உலகு உயிர்ப் பொருள்களை எல்லாம் சுத்த சன்மார்க்க சுகவாழ்வான பேரின்ப வாழ்வு வாழும் பொருட்டு,சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து உள்ளார் .இவற்றை திருஅருளால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் புற உலகம் இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளாது ,பழைய இருள் நெறியை பின்பற்றி சென்று சென்று அழிந்து கொண்டு இருக்கின்றது.உண்மையை அறிந்து கொள்ளும் ,சுத்த சன்மார்க்கத்திற்கு  முக்கிய தடைகளாகிய ,சாதிகள் சமயங்கள்,மதங்கள்,போன்றவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம்,ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்,இருந்து கொண்டு உள்ளது.

வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற,எதிலும் பற்று வைக்காமல் உண்மைக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் ,அவர் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை எக்காலத்தும்,எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் உறுதியுடன் வாழ பழகிக் கொண்டோ மானால்,உண்மைகள் தன்னைத்தானே விளங்கும்.

இப்போது வள்ளல் பெருமான் வேறு அல்ல ! அருட்பெருஞ் ஜோதி வேறு அல்ல !இரண்டு உருவமும் ஒரே அருள் உருவமாக ,இயற்கை உண்மையாக,இயற்கை விளக்கமான,இயற்கை இன்பமாக ,விரிந்து எங்கும் நீக்கமற நிறைந்து செயலாற்றிக் கொண்டு உள்ளது .

இப்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அருள் ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் என்னும் அருளாளர் ஆவார் !

அருட்பெருஞ் ஜோதி !

மேலும் பூக்கும்;--

ஆன்மநேயன் ,கதிர்வேலு..                   .                 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு