ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

உலகின் உண்மைப் பொது நெறி !

உலகின் உண்மைப் பொது நெறி !


உலகின் உண்மைப் பொது நெறியாக விளங்குவது ,வள்ளலார் தோற்றுவித்த ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,'' என்ற பொது நெறியாகும். இதை தமிழக அரசு சட்ட பூர்வமாக,உலகின் பொது நெறியாக கொண்டு வரவேண்டும்.இதுவே எங்களது வேண்டுகோளாகும் .

உலகில் உள்ள அனைத்து மனித குல வாழ்க்கைக்கும் ,ஆன்மீகத் தேடலுக்கும் கடவுளின் பொதுவான  வழிபாட்டு முறைகளுக்கும் ,மனிதநேய தனிமனித ஒழுக்க நெறி முறைகளுக்கும்,ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமைக்கும் ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் மனப்பாங்கை உண்டாக்குவதற்கும், மனிதன் பசி ,பிணி,தாகம்,இச்சை ,எளிமை,பயம்,கொலைப் போன்ற துன்பங்கள் நேரிடாமல் பாது காப்பதற்கும் நீண்ட வருடங்கள் உயிருடன் வாழ்வதற்கும்,மேலும் மரணமே இல்லாமல் வாழ்வதற்கும் ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகத்,தன்னை மாற்றிக் கொண்டு பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு தகுதியும் வாய்ப்பும் உள்ள நெறியாகும்.

ஓர் உண்மைப் பொது நெறியாக,அனைத்து உலகத்திற்கும்,அனைத்து நாட்டிற்கும்,அனைத்து மக்களுக்கும்,ஒரு பொதுவான வழிகாட்டும் நெறிமுறைகள்,இல்லாமல் இருந்தது , இல்லை என்பதை அறிவு சார்ந்த பெரியோர்கள் அறிவார்கள் அவற்றை போக்குவதற்கு வள்ளல் பெருமான் அவர்களால் தோற்றுவிக்கப் பட்டதுதான்.சாதி,சமயம்,மதம் சாராத ஓர் உண்மைப் பொது நெறியாகும் .

உலகில் உள்ள ஒவ்வொரு சாதி,சமயம்,மதம் போன்ற மனித வாழ்க்கை நெறி முறைகளை,கடைபிடித்து வருபவர்கள்,ஆன்மநேயம் ,மனித நேயம் இல்லாமல்  வெறிபிடித்த மிருகங்கள் போல் செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள். மேலும் கொள்ளை  வினை(திருட்டுத்தனம் ) கூட்டு உறவாக உள்ளனர் .அந்த கூட்டத்தில் உரைக்கின்ற கலைகளும் ,கள்ளத்தனமான காட்சிகளும்,கதிகளும்,விதிகளும்,பதிகளும் அதில் காட்சிதரும் கடவுளர்களும் எல்லாம் குழைந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் போல்,சித்தரித்து உள்ளார்கள்,உள்ளன என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார் .

அதற்கும் மேலாக வேதங்கள் ,ஆகமகங்கள் ,புராணங்கள்,இதிகாசங்கள் அனைத்தும், இந்திர மாயா ஜாலங்கள் போல் உள்ளன அவரவர்களும் அவரவர்,ஆன்மீக தலைவர்கள் எழுதிய நூல்கள் மட்டும்தான் உண்மை என்றும்,  மற்றவர்கள் எழுதிய நூல்கள் பொய் என்ற கோணத்தில்,கண்மூடித் தனமாக கடைபிடித்து ,பேய்பிடித்த பித்துப் பிள்ளை விளையாட்டுகள்  என உணராமல் பல பல பேதங்கள் உற்று அங்கும், இங்கும், எங்கும் போரிட்டு,சண்டை இட்டு அழிந்து வீண் போய்  கொண்டு உள்ளார்கள் .என்பதை தெளிவு படுத்தி உள்ளார் வள்ளல் பெருமான்அவர்கள்.

மேலும் இறைவனுடைய அடியார்கள்,அவதாரங்கள்,தூதுவர்கள்,தீர்க்க தரிசிகள் என்று சொல்லப்படும் ஆன்மீக வாதிகள்  எல்லாம், உண்மை தெரியாமல் உளறிக் கொண்டு உள்ளார்கள்.மேலும் ஆன்மீகம் என்ற பெயரில் கடவுள் உண்மைகளையும்,ஆன்மாவின் உண்மைகளையும்,அவற்றால் பெரும் சக்தி வாய்ந்த அருள் உண்மைகளையும்,  மறைத்து ,உண்மைக்கு புறம்பான தத்துவங்களை,கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும்,சொர்க்கம் என்றும்,நரகம்,பரலோகம் என்றும் ,பெயரிட்டு ,இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து ,உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்,

கடவுளுக்கு உடலும்(உடம்பு ) உயிரும் உண்டா ?

தெய்வத்திற்கு கை,கால்,மூக்கு,வாய்,கண்,உடம்பு தலை,முதலியன் இருக்குமா ?என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள்,இஃது உண்மையாக இருப்பதாகவே...முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் (ஆதிசங்கரர் ,இராமானுஜர்,காமகோடி பீடாதிபதி,இன்னும் பலபெரியவர்கள் ) என்று பெயர் வைத்து கொண்டவர்களும்,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள்.உண்மையாக இருப்பது போலவே பல பல உருவங்களைக் கடவுளாக படைத்து வைத்து விட்டார்கள்.

ஆனால் அவற்றை மறைத்தவன் ஓர் வல்லவன்,( வேத வியாசர்,வால்மீகி போன்றவர்கள் )அவர்கள்  மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவர்கள் பூட்டிய {மறைப்பை }பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இதுவரைக்கும் அப்படிப் பட்டவர்கள் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை,

அவர்கள் மறைத்து வைத்து இருந்த,உண்மைக்கு புறம்பான தத்துவங்கள் அனைத்தையும், உடைத்து பொடி பொடியாக்கி,உண்மையை  வெட்ட வெளிச்சமாகக் காட்டி ,மக்கள் மத்தியில் போட்டு உடைத்தவர் தான் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.பொய்யான சமய மதங்களை,பொய்யான தத்துவங்களை குழி தோண்டி புதைக்க வந்தவர்தான் நமது வள்ளலார் அவர்கள்.    

உலக மக்களை,... அந்த படு குழியில் இருந்து எடுத்து ,காப்பாற்ற வேண்டும் என்ற பெருங் கருணைக் கொண்டு ,உண்மைப் பொது நெறியாகிய,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் பொது நெறியை, தனிப்பெரும் பனித நெறியைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற அவசியத்தால்,அவசரத்தால்,... மெய்ப் பொருளாகிய இயற்கை உண்மையான இறைவர் என்னும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்!,ஓர் மனித உருவம் தாங்கி இவ்வுலகத்திற்கு வருகிறார் .அவர்தான் நமது அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு  வந்ததின் அவசியத்தை பல பாடல் வழியாக தெரியப் படுத்துகின்றார்.

இறைவன் வருவிக்க உற்ற பாடலை பாருங்கள் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந் திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

இவ்வுலகத்திற்கு வள்ளலார் மூலமாக உண்மைப் பொது நெறியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற பெயரில்,அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தோற்றுவித்து உள்ளார், என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.அறிந்து கொண்டும் வருகின்றார்கள்.மேலும் அம் மெய்ந் நெறியைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும்,உலகப் பொது நெறி ,அனைவருக்கும் பொதுவான  மார்க்கமாகும். வள்ளலார் என்னும் மனிதன் தோற்றுவிக்க வில்லை ,வள்ளலார் என்னும் உடம்பில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அமர்ந்து செயல்பட்டுக் கொண்டு தோற்றுவித்து உள்ளார் என்பதை,சன்மார்க்க அன்பர்கள் முதலில் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.பின்பு மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண்டு அருளிப்
பெருங் கருணை வடிவினோடு வரு தருணம் இதுவே
கருநெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

என்கிறார் வள்ளலார் ...இந்த உண்மையினால் .யாருக்கும் கலக்கமோ ,தயக்கமோ,பயமோ,வருத்தமோ வேண்டாம். என்னுடைய சகோதர ஆன்மாக்கள் என்ற முறையில் ஒருமையினால்,உரிமையினால்  உண்மைகளை வெளிப் படுத்துகிறேன் .ஆண்டவர் எனக்கு அருளை வாரிவழ்ங்கிக் கொண்டு உள்ளார் .அந்த அருளை நீங்களும் பெற்றுக் கொள்வதற்கு யாதொரு தடையும் இல்லை,நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்  எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும் ..ஆதலால் நீங்கள் அனைவரும் சாதி,சமய,மத நெறிகளை விட்டு உண்மை நெறிக்கு வாருங்கள் என்று உலகில் உள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார் .நானும் சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைப் பெற்றேன்,நீங்களும் எளிதில் பெறலாம்  என்கிறார் வள்ளல் பெருமான் .

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வானாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

என்னும் பாடல் வாயிலாக உறுதிப் படுத்துகிறார் .

இனிமேல் இந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய உண்மை மெய் நெறியின் வழியாகத்தான் உலக மக்கள் அனைவரும் வரவேண்டும்.வந்தாக வேண்டும் .வேறு உண்மை நெறியோ ! உண்மையான மார்க்கமோ ! இதை விட்டால் வேறு வழி எதுவும் இல்லை என்கிறார் வள்ளலார்.

மேலும் வள்ளலாருக்கு இறைவனே நேரில் வந்து... தான் இருக்கும் இடத்தையும் இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் இடத்தையும்  உண்மையான அருட்பெரு வெளியையும் காண்பித்து ,அங்கு இருந்து தான் அருட்சக்தி எங்குமாய் பூரணமாய் விளங்கிக் கொண்டு இருப்பதையும் .அனைத்து அண்ட கோடிகளும்,பிண்டப் பகுதிகளும் ,அதன் உள்ளே நிகழ்ந்த பற்பல பொருள் திரள்களும் ,விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவு ஆனந்தம் விளங்க, எதுவும் அழியாது,அதன் அதன் அறிவுக்குத் தகுந்தால் போல் விளங்கிக் கொண்டு உள்ளவர் நான் ஒருவரே !நானே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ! என்பதை, வள்ளலாருக்கு தன்னை ஆறுமுகப் படுத்திக் கொள்கிறார்.அவரே (அருட்பெருஞ்ஜோதி ) நேரில் வந்து காட்டியதால் அறிந்து கொண்டேன் என்கிறார் . .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது ;-- என்னுடைய உண்மை இருப்பிடத்தை உனக்கு மட்டும் தான் காண்பித்து உள்ளேன் ,அந்த இடத்தைக் கண்டவன் நீ ஒருவன் தான், அந்த இடத்திற்கு செல்வதற்கும்,மற்றும் உள்ள அனைத்து அண்டங்களுக்கும் தங்கு தடையின்றி செல்வதற்கும்,ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் காண்பதற்கும்,அனைத்தையும் செயல் படுத்துவதற்கும்,அனைத்து உயிர்களும் உம சொல் வழி கேட்டு நடப்பதற்கும் உண்டான  தகுதிப் பெற்று உள்ளவன், நீ ஒருவன்தான் என்பதாலும் ,என்னுடைய அருளை பரிபூரணமாக பெற்றவன் என்பதாலும்.,என்னுடைய உரிமைகள் அனைத்தும் பெற்றவன் '' நீ ஒருவன் தான்'' என் பிள்ளை,என் செல்லப்பிள்ளை, என் நல்லப்பிள்ளை,நான் சொன்னபடி  வாழ்ந்தும்,,மக்களுக்கு போதித்தும்,போதித்தது போல் எழுதி வைத்தும் உள்ளதால் என்னுடைய பூரண அருளை உமக்குத் தந்துள்ளேன் உன்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றி உள்ளேன்.இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டாம் என்னுடைய இடத்திற்கு அழைத்து செல்ல வந்துள்ளேன். நீ   என்னுடைய சொந்தப் பிள்ளை என பல பெயரிட்டு அழைத்து செல்கிறார் இறைவன் .

இறைவனே வந்து வள்ளலாரை அழைத்து செல்வதைப் பார்த்து தேவர்களும்,மூவரகளும்,சித்தர்களும்,முத்தர்களும்,சத்தி சத்தர்களும், மற்றும்  மூர்த்திகளும்,யோகிகளும்,நிர்வாகத் தலைவர்களும்,ஞானிகளும், மற்றும் உள்ள கடவுளர்களும் ,அருளாளர்களும் அனைவரும் அதிசயிக்கின்றனர்,ஆச்சரியப் படுகின்றனர் என்கிறார் வள்ளல் பெருமான்.பாடலைப் பாருங்கள்.

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் கழிக்கும் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனி உனை நான் கை விடோம் என்றும்
மைபிடித்த விழி உலகர் எல்லாருங் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !;----மேலும்  

உலக உயிர் திரள்கள் எல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்து தொழிலையும் யான் செய்யத் தந்தனை !
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக் அளித்தனை
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச் சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக  எந்தனை

இன்னும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.

அனைத்து ஆன்மீக அடியார்களும்,பெரியோர்களும் ,அருளாளர்களும்,கர்ம,யோக,ஞான சித்தர்களும்   வள்ளலாரைப் பார்த்து போற்று கின்றதையும் ,பாராட்டு கின்றதையும் ,வணங்கு கின்றதையும் வள்ளலாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இறைவனைப் பார்க்க முடியாமல் வள்ளலாரைப் பார்த்துப் போற்றுகின்ற,அளவிற்கு இறைவன் வள்ளலாருக்கு  அருளைக் கொடுத்து,உள்ளதை நினைந்து வள்ளலார் என்னே அதிசயம் !என்னே அதிசயம் !என்று ஆச்சர்யப் படுகிறார் .

நான் பாடிய பாடல்கள் அனைத்தும் இறைவன் சொல்லியது !

நானுரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை யன்றி
நானுரைக்கும் வார்த்தை யன்று நாட்டீர் நான் ..ஏனுரைப்பேன்
நான் யார் எனக்கு என வோர் ஞான உணர்வு வேது சிவம்
ஊநாடி நில்லா வுழி !

இயற்கை உண்மைத்  தனிப்பெரும் தெய்வம்,அருள் நடம் புரிகின்ற  நடராஜ பதியாகிய அருட்பெரும் ஜோதி ஆண்டவரே! என்னுடைய பாடல்களை எல்லாம் தன்னுடைய பாடல்களாக அணிந்து அருள்கின்றீர் .என்னே உங்கள் பெருங் கருணை என நெகிழ்ந்து,மகிழ்ந்து ,உணர்ந்து ,புணர்ந்து போற்றுகிறார்  வள்ளல் பெருமான !என்னே அவருடைய பெரும் தன்மை !, என்னே அவர் பெருங்கருணை !,என்னே அவருடைய தனிப்பெருங் கருணையான அரும் பெரும் அருள் அமுதம்! அந்த அளவிற்கு உண்மை ஒருபுறம் மறைந்து இருக்க,பொய்யான கற்பனைக் கடவுள்களை மக்கள் மத்தியில் பரப்பி உள்ளார்கள்.பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

உண்மைக் கடவுளின் உண்மையைத் தெரிந்து கொள்ளாத மதவாதிகள்.சமயவாதிகள்.எப்படிக் கடவுளைப் பின்பற்றி வழிபாடு செய்கிறார்கள் என்பதை பின்வரும் பாடல்கள் வாயிலாகத் தெரியப்படுத்துகிறார்.

கொள்ளை வினக் கூட்டு உறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையுங்
கள்ளமுறு அக் கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சி தரும் கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்ற மணி மன்றில்
தனி நடஞ் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே !

உலகத்தில் தோன்றிய மதவாதிகள் சமயவாதிகள் அனைவரும் உண்மைக்கு புறம்பான செய்திகளையே மக்களிடம் போதித்து  விஷத்தை விதைத்து விட்டார்கள்,அதனால் உலகம் முழுவதும் விஷம் பரவி விட்டது..அதனால் மக்கள் உண்மை தெரியாமல் பொய்யான கொள்கைகளை கடைபிடித்து,பொய்யான விஷத்தை உண்டு வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

கொள்கை என்பதும், வாழ்க்கை நெறி என்பதும்,இயற்கை என்னும் கடவுள் உண்மைகளை ,கடவுளால் கற்பிக்க பட்டது என்று மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றன என்பதை அக்காலம் முதல் இக்காலம் வரை, மக்கள் அறிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு ஏற்று கொண்டு உள்ளார்கள் அவர்கள் காட்டிய பொய்யான  பாதையில்,பொய்யான நெறியில்,உண்மையான விபரம் தெரியாமல்,அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.அவை எல்லாம் உண்மையா?பொய்யா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.உணர வேண்டும் .அறிவால் அறிய வேண்டும் .அதனால்தான் மனிதனுக்கு உயர்ந்த அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பஞ்ச பூத உலகத்தை, அண்டத்தை, சூரியன் ,சந்திரன் நட்சத்திரம்,போன்ற கிரகங்களையும்,அதில் உள்ள பொருள்களையும், அதில் வாழும் உயிர்களையும்,மற்றும் உள்ள அணுத் தோற்றங்களையும்,அனைத்திற்கும் முக்கிய காரண காரியமாகிய ''ஆன்மாக்களையும்'' '''',தோற்றிவித்தும்,...வாழ்வித்தும் ....,குற்றம் நீக்குவித்தும்...,பக்குவம் வருவித்தும் ,...விளக்கம் செய்வித்தும் ....பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெருந் தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ! என்பதை சத்திய அறிவால் அறிந்து கொள்ளாமல்,இந்த உலகத்தில் தோன்றிய சமய மதவாதிகள் பொய்யே மெய்யாக இருப்பது போல்,கற்பனை காவியங்களை  பாவனை செய்து படைத்து வைத்துள்ளார்கள் ,    

இன்று வரையில் வள்ளலாரைத் தவிர ,வேறு எவராலும் உண்மையான அருள் பெருவெளியை,அருட்பெருஞ்ஜோதியை, அங்கு செயல்படும் அருள் ஆற்றலை,அருள் சக்தியை,அங்கு இருந்து இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் ,உண்மையான இறைவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.உண்மையான அருள் ஆற்றல் என்னும் சக்தி ,யாரால் ? எங்கு இருந்து இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.அறிவியல் விஞ்ஞானி களாலும்,ஆன்மீக அருளாளர்  களாலும்.இன்றுவரை  கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

இப்போது உலகில்,மக்களால் பேசப்படும், போற்றப்படும் .பெரிய மதங்களான இந்துமதம்,கிருத்தவ மதம் ,இஸ்லாம் மதம்,புத்தமதம்,போன்ற மதங்களும் ,அவற்றால் தோற்றுவித்த சமயங்களும்,சாத்திரங்களும் ,சாதிகளும்,சங்கற்ப விகற்பங்களும், எல்லாம் கற்பனையே ! இந்த உலகத்தில் உள்ள மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அறியாமையால் அழைத்து சென்று அழிக்கின்ற மதங்கள் இவைகளே யாகும்....மனித அறிவு மேம்பட்டு ஆன்ம அறிவை அறிந்து, அருள் அறிவினால் அறிகின்ற போதுதான் உண்மைகள்,தன்னைத்தானே விளங்கி வெளிப்படும் . என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் .

மதம் என்றும் சமயம் என்றும்  சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்
பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்தனக்கே
வெட்ட வெளியாய் அறிவித்திட்ட அருள் இறையே
சதமென்றுஞ் சுத்த சன்மார்க்கப் பொதுவில்
தனி நடஞ் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே !

மதவாதிகள் சொல்லிய அனைத்து பொய்யுரை களையும் ,பொய் என்பதை உணர்த்தி தெளிவுபடுத்தி,அதில் செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்திய கடவுளின் பெருங்கருணையை போற்றிப் புகழ்கின்றார் வள்ளலார்...மற்றும்  எந்த தடையும் இல்லாமல் வெட்ட வெளியாக உண்மையை அறிவித்த உன்னுடைய பெருமையை,பெருங்கருணையை எப்படி போற்றுவேன்.போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை என்பதை வள்ளலார் விளக்கம் அளிக்கிறார் .

அதுமட்டும் அல்ல உன்னுடைய உண்மையான பொது நெறி, ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறி'' என்பதையும் அறிந்தேன்.அந்த உண்மையை உலக மக்களுக்கு பறை சாற்றப் போகிறேன்.என்பதையும் அறிவிக்கிறார் .இந்த மார்க்கம் என்னுடைய மார்க்கம் அல்ல ! எல்லாம் வல்ல இறைவனுடைய மார்க்கமாகும் என்கிறார் வள்ளலார் .மேலும் இந்த மார்க்கத்தை அவசிய அவசரமாக தோற்றுவித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள்.

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடு மோர்
பவநெறி இதுவரை பரவியது அதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற என் அரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும்.

பேருற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம்
பேய்ப் பிடிப்பு உற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாதபடி விரைந்து
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு
எணணற்க எனற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்குண ஆனந்த பர நாதாந்த வரை ஓங்கும்
நீதி நடராஜ பதியே !

உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத் தனிநெறியை, மக்களுக்கு உணர்த்த வேண்டும்,போதிக்க வேண்டும் ,மக்கள் அதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்,மேலும் உணர்ந்து உணர்ந்து,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்து நிறைந்து பேரானந்த கண்ணீர் கொண்டு,ஆன்மாவில் இருந்து உற்றுப் போல் வெளியே வரும் அருளைப் பெற்று, ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் கொண்டு,பெருஞ் சுகமான, மகிழ்ச்சியான,மரணம் இல்லாத பேரானந்த பெருவாழ்வு வாழ வேண்டும்.அகில உலக அனைத்து மக்களும் பெற வேண்டும் எனற, பெருங் கருணையோடு ''அருட்பெருஞ் ஜோதி'' ஆண்டவர் வள்ளலாரிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து உள்ளார் . .

சத்திய தருமச்சாலை !

வள்ளல் பெருமான அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆணைப்படி, வடலூரில்  1865,ஆம் ஆண்டு,.. முதன் முதலில் ''சமரச வேத சன்மார்க்க சங்கம்'' என்று பெயர் வைத்து சங்கம் நடந்து வரும் காலத்தில் ,சில மாதங்கள் கழித்து ''ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ''என்று பெயர் மாற்றம் செய்கிறார் அந்த சங்கத்தின் பெயரால் சங்கம் நடந்து வருகையில் ... 23...5....1867,ஆம் ஆண்டு ஏழைகளின் பசிப் பிணியை  போக்க சத்திய தருமச்சாலையை தொடங்கி வைக்கிறார் .தருமச்சாலை திறம்பட செயல்பட்டுக் கொண்டு வரும் காலத்தில்,..உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியான, ஒரு பொதுவான கடவுள்  வழிபாட்டு முறையை உருவாக்க திட்டமிடுகிறார்,அச்செயலுக்கு இறைவனுடைய அனுமதியைப் பெறுகிறார் .இறைவனுடைய முழு அனுமதியைப் பெற்று ''ஞானசபை''யைக்  கட்டத் தொடங்குகிறார் .

ஞான சபை !

1871,ஆம் ஆண்டு வடலூர்.. ஊர் மக்களின் உதவியால் 80,..என்பது காணி நிலம், பெறப்பட்டுஅதன் மத்தியில் எண்கோண வடிவமுள்ள ஒரு ஞான சபையை, கட்டத் தொடங்கி 25...1....1872,,ஆம் ஆண்டு நிறைவு செய்கிறார்.அந்த நாளில் ஞான சபை முதல் தைப்பூச் பூசை விழா நடந்தாக,வள்ளலாரே நடத்தி வைத்தாக எழுதி வைத்துள்ளார்கள்.அதற்கு திரு அருட்பாவில் எந்த ஆதாரமும் இல்லை .

1873,ஆம் ஆண்டு தமிழ் வருடம்,பிரமோதூத ஆண்டு ,மார்கழி மாதம் 21,..இருபத்தி ஒன்றாம் நாள் ஒரு அறிவிப்பை வள்ளலார் வெளியிடுகிறார் அதன் விபரம் வருமாறு .---

ஞான சபை விளக்கப் பத்திரிக்கை !

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !

இன்று தொடங்கி ,சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை''என்றும்,சாலைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' என்றும் சங்கத்திற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்றும்  பெயர்  வழங்குதல் வேண்டும் .என்று கட்டளை இடுகிறார் . அத்துடன் நிற்கவில்லை ஞான சபையை  எப்படி பாது காக்க வேண்டும் !யார் உள்ளே செல்ல வேண்டும் !,உள்ளே சென்று என்ன செய்ய வேண்டும்!,எது வரைக்கும்,எந்த காலம் வரை  அப்படி செய்ய வேண்டும் !,என்பதை மிகத் தெளிவாக எழிதி வைத்துள்ளார் .

சன்மார்க்க நம்மவர்கள்,மற்றும் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகிகள்   அவசியம் கவனிக்க வேண்டியதாகும்.வள்ளலார் ''தைப் பூச ஜோதி தரிசனம்''காட்டினார் என்பதும் முதற் பூச விழா தொடங்கி வைத்தார் என்பதும் தவறான செய்திகளாகும் .திரு அருட்பாவில் எந்த இடத்திலும் அதற்குண்டான ஆதாரங்கள் இல்லை .

வள்ளலாருடன் இருந்த அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான சபாபதி குருக்கள் செய்த சூழ்ச்சியாகும்.

மேலும் ஞான சபை விளக்கப் பத்திரிகையில் விளக்கமாக பதிவு செய்துள்ளார் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.

இன்று தொடங்கி ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது '''அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்''' ,ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும்.பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம்.மேலே ஏற்றுகிற ''குலோப்பு ''  முதலிய விளக்குகள் வேண்டாம் .
தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேகசுத்தி ,கரணசுத்தி,உடையவர்களாய் ,திருவாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும்.      

அடுத்து ;--நாலு நாளைக்கு ஒருவிசை காலையில் ,மேற்குறித்த சிரியரைக் கொண்டாவதும்,பெரியரைக் கொண்டாயினும் ,உள்ளே தூசு துடைப்பிக்கப் புகும் போது நீராடிச் சுத்த தேகத்தோடு கால்விரல்களில் வத்திரம் {துணி }சுற்றிக் கொண்டு புகுந்து ,முட்டிக் கால் இட்டுக் கொண்டு தூசு துடைப்பிக்க செய்ய வேண்டும்.விளக்கு வைக்கின்ற போதும்,இங்கனமே செய்விக்க வேண்டும்.

விளக்கு வைத்ததற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக் குட்பட்ட சிறுவரும் ,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும் பொருள் ,போகம்,இடம்,போகம்,முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் ,தெய்வ நினைப்பு உள்ளவர்களாய்,அன்பு உடையவர்களாய் இருத்தல் வேண்டும் ,விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும் போதும் ,நம்மவர்களில் நேர்ந்தவர்கள் .புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும்.

யாரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது,ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருத்தல் கூடாது.அத்திறவு கோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து ,அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.

என்பதை ஞானசபையின் விளக்கப் பத்திரிகையில் அழுத்தம் திருத்தமாக எழுதி வைத்துள்ளார் .''அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்''என்பதை நாம் கவனிக்க வேண்டும், இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
என்ன ? இதனுடைய விபரம் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன் .

வள்ளலாரின் உண்மைப் பொது நெறி !

வள்ளலாரின் முடிவான முக்கிய கொள்கை யான,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற பொதுவான தனி நெறியானது என்ன என்றால் , அவரது முடிவான கொள்கையானது அவருடைய முந்தைய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.அவர் சமயத்தின் மீது வைத்திருந்த பற்றை முழுதும் பற்று அற கைவிட்டு விட்டு ஒரு புதிய வழியை கண்டு பிடித்து அவ் வழிக்கு ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்று பெயர் வைத்து உலகிற்கு வெளிப் படுத்தி உள்ளார் .

அவர் இளம் பருவத்தில் சமயத்தில் பற்று வைத்து பாடிய சமயம் சார்ந்த பாடல்கள் பாடியதற்கு காரணம் ,தனக்கு அப்போது ''கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது ''என்கிறார் வள்ளலார் .அவர் சொல்லியது .

சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ''ஒருவரே''என்பது அவர் கண்ட ''அருட்பெருஞ்ஜோதி "'ஆண்டவர் என்பது அவர் கண்ட உண்மையாகும்.

தான் கண்ட கடவுள் உலகில்,சாதி,சமயம்,மதம் போன்ற சாத்திர ,புராண ,இதிகாசங்களில் ,வந்ததாக சொல்லுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுளர் ,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல என்பதை திட்டவட்டமாக 12...04...1871,ஆம் ஆண்டு தன்னுடைய அறிவிப்பின் மூலமாக அறிவித்துள்ளார் .

அந்த ஒருவரே ஆகிய கடவுளை நாம் அடைவதற்கு ,உண்மையான ஆன்ம அறிவு , உண்மையான கடவுள் பக்தி,உண்மையான உயிர் இரக்கம்,உண்மையான அன்பு,உண்மையான தயவு,உண்மையான கருணை ,உண்மையான பொது நோக்கம், மற்றும் திரிகரண அடக்கம்,முதலிய நற்குண ஒழுக்கங்களையும்,உண்மை உரைத்தல் இன்சொல்லாடல்,உயிர்களுக்கு உபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் கடைபிடித்து ,''சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகி இருத்தல் வேண்டும் .என்கிறார் வள்ளலார் .
மேலும் அவர் வெளிப்படுத்தியது !

இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது!,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர் களானால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் பெற்றுக் கொள்ளவில்லை .நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லஷ்யமே என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ ,அந்த லஷ்யம் தூக்கி விடவில்லை.என்னை இந்த இடத்திற்குத் தூக்கிவிட்டது யாதெனில் ;--அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று ''சத்திய பெருவிண்ணபத்திலும் ''எத்தேவரையும் ,நின் சாயையாய்ப் பார்த்தேன் அன்றித் தலைவா வேறு எண்ணியது உண்டோ ''எனவும் .

''தேடியது உண்டு நின்து உரு உண்மை " என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்து இருக்கின்றேன்.மேலும் அவர் தெரிவித்த ''உண்மைப் பெருநெறி ''பொது நெறி ஒழுக்கம் யாதெனில் ,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக''.என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றி விட்டது ,அது யாதெனில் தயவு,''தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .என்பதை தெளிவு படுத்தி உள்ளார் நமது வள்ளல் பெருமான் அவர்கள்.

அன்பு,தயவு,கருணை என்னும் சாதனத்தை கடைபிடித்து,...என்னை ஏற்றிவிட்டது யாதெனில்  தயவு என்னும் ''கருணை '' தான் என்னை மேலே ஏற்றிவிட்டது, என்கிறார் .கருணை என்னும் ஒரே சாதனைத்தால் மட்டுமே கடவுள் என்னும் உண்மையை அறிந்து ''இறை அருள்'' பெற்று பேரின்ப பெருவாழ்வு என்னும் ''மரணம் இல்லாப் பெருவாழ்வை ''பெறமுடியும் என்கிறார்.

அன்பு,தயவு,கருணை ,என்னும் வளர்ச்சிக்கு,விருத்திக்கு,எது தடையாக இருக்கிறது என்றால் சாதி,சமயம்,மதம் போன்ற கட்டுப்பாட்டு ஆசாரங்கள்,தடையாக உள்ளன .எனவே மேபடி ஆசாரங்களை முழுதும் விட்டு ஒழித்து ,சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கம் வருவித்துக் கொள்ள வேண்டும்.என்பதே வள்ளலார் காட்டிய உண்மைப் பொது நெறியாகும்.

சாதி,சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார் வள்ளலார் .

மேலும் வள்ளலார் காட்டிய தனி நெறியானது,எல்லா சாதி, சமய,மதம்,போன்ற மார்க்கங் களுக்கும்,உண்மைப் பொது நெறியாக விளங்குகின்றது.மற்ற மார்க்கங்களுக்கு விரோதமான மார்க்கம் அல்ல !அந்நிய மானதல்ல,அனநின்னிய மானதாகும்  என்பதையும் விளக்குகிறார் எல்லா மார்க்கங்களும் இதனுள் அடங்கி உள்ளன என்கிறார்.இதில் உள்ளது வேறு எதிலும் இல்லை,வேறு எதிலும் இல்லாதது இந்த மார்க்கத்தில் உள்ளன என்கிறார் .அதனால்தான் உலகின் உண்மைப் பொது நெறி ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய '' நெறியாகும் ,                

சன்மார்க்கத்தின் முக்கிய கொள்கைகள் !

 நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லஷ்யம் வைத்துக் கொண்டு இருந்த ,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷ்யம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் ,அவைகளில் ஒன்றிலாவது உண்மையை தெரிவிக்காமல் தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தின் உடைய உண்மை இன்ன தென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .

மேலும் ;--சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும் ,வேதாந்தம் ,சித்தாந்தம்,{கிருத்தவம்,இஸ்லாம்,)முதலிய மதங்களிலும்,லட்சியம் வைக்க வேண்டாம் .அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழுஉக் குறியாக குறித்து இருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.அவ்வாறு பயிலுவோமே யானால் நமக்கு காலம் இல்லை.

ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் ஏனெனில் ,அவைகளிலும் அவ் அச்சமய மதங்களிலும் அற்ப பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய ,''இயற்கை உண்மை ''என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்று கொள்ளு கின்றதற்கு முடியாது.ஏனெனில் நமக்கு காலம் இல்லை .என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .

மேலும் ஒரு விளக்கம் தந்துள்ளார் !

நாம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடத்தில் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி உள்ளார் .

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !இது தொடங்கி எக்காலத்தும் ''சுத்த சன்மார்க்கத்தின் ''முக்கியத் தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத (பதியாத) வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை ''எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !தேவரீர் திருஅருட் பெருங் கருணைக்கு வந்தனம்  ! வந்தனம் !

இந்த விண்ணப்பத்தை ஒவ்வொரு நாளும் வழிபாட்டுக் காலத்தில் சன்மார்க்க அன்பர்கள் சொல்லிக் கொண்டே உள்ளார்கள் .ஆனால் அவர்கள் சாதி,சமயம்,மதம் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்க்களை விட்டு விட்டார்களா என்றால்,அப்படி யாரும் விட்டுவிட்டதாக தெரியவில்லை ,இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள்..பற்றிய பற்றுகள் அனைத்தும்,பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுங்கள்.பயன் அடைவீர்கள்.

மேலும் , வள்ளலார் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது ,நேர்மையானது,ஒளிவு மறைவு இல்லாதது ,அருளால் சொல்லப் பட்டது என்பதை உணர்ந்து நாம் எல்லவரும் ,உலக உண்மைப் பொது நெறியாக விளங்கும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் ''கொள்கைகளை கடைபிடித்து, ஆன்மநேய ஒருமைப் பாட்டுடன் வாழ்வோம். உலகில் உள்ள அனைத்து ஆன்மாக் களையும் நம்மவர்களாக ஆக்கிக் கொள்வோம்.துன்பம்,துயரம்,அச்சம்,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நலமுடன் வாழ்வோம்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு.

மேலும் வளரும் ;--




       .

      

2 கருத்துகள்:

12 பிப்ரவரி, 2013 அன்று PM 11:40 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

இறைவனே வந்து வள்ளலாரை அழைத்து செல்வதைப் பார்த்து தேவர்களும்,மூவரகளும் சித்தர்களும்,முத்தர்களும்,மூர்த்திகளும்,யோகிகளும்,நிர்வாகத் தலைவர்களும்,ஞானிகளும், மற்றும் """உள்ள கடவுளர்களும்""" ,அருளாளர்களும் அனைவரும் அதிசயிக்கின்றனர்,ஆச்சரியப் படுகின்றனர் என்கிறார் வள்ளல் பெருமான் .
????? then u are also telling they are not true

 
20 பிப்ரவரி, 2013 அன்று PM 3:57 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

வள்ளலார் பாடிய பாடல் வருமாறு.

ஐவர்செய்யும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருளமுதம் என்
கைவரச் செய்து உன்னுவித்தாய் கங்கணமும் என் கரத்தணிந்தாய்
சைவர் எனும் நின்னடியார் சபைநடுவே வைத்து அருளித்
தெய்வம் என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் .

மேலும் ;--தேவரும் மூவரும் சித்தரும் முத்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை போற்றி நின் பேரருள் போற்றி நின் பெரும் சீர் .ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி.

இன்னும் நூற்றுக் கணக்கான பாடல்கள் ஆதாரம்இருக்கிறது.

நன்றி வந்தனம் வாழ்க !

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு