வெள்ளி, 11 ஜனவரி, 2013

இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்


இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்

இந்திய நாகரிகம் தொன்மையானது, தொடர்ச்சியானது. அரிதானதும்கூட. சீன நாகரிகத்தில் மட்டுமே இத்தகைய தொன்மையையும் தொடர்ச்சியையும் பார்க்க முடியும் என்று பண்டைய இந்திய வரலாறு என்ற நூலில் கே.சி. சௌத்திரி என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
‘அந்நியர்கள் வரும்போது அவர்களுடைய கருத்துகளும், ஏற்கெனவே பாவிக்கப்பட்டு வந்த கருத்துகளும் — இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் –  இணைக்கப்பட்டன. அதன்மூலம் புதிய கருத்துகள் வார்த்தெடுக்கப்பட்டன. இதுவே இந்திய நாகரிகத்தின் உயிராகவும் மூச்சாகவும் இருந்தது. காலாகாலத்துக்கும் அதற்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுத்தது.’
மனிதன் நாகரிக உருவாக்கத்துக்கு முந்தியவன், பழைமையானவன். தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி எடுத்துச்சென்றன. அவற்றை இணைத்துப்பார்க்கும் போது பல கண்ணிகள் விடுபட்டுப் போயிருப்பதும் புலப்படத்தான் செய்கிறது.
மனிதன் மிகப் பலவீனமான மிருகம். அதே சமயம் மனிதன் மட்டுமே சுற்றுச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் தன் தேவைக்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்ட மிருகம்.
This begining is as animal as social life itself at this stage. It is mere herd-consciousness, and at this point man is only distinguished from sheep by the fact that with him consciousness takes the place of instinct or that his instinct is a conscious one. (The German Ideology, Marx and Engels).
சுற்றுப்புறத்தைக் கட்டுப்படுத்த அவன் எடுத்துக்கொண்ட விவேகமான முறைமைகளும், மற்ற மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியவற்றோடு ஒட்டி வாழ அவன் முயன்றதும்தான் மனித நாகரிக முன்னேற்றத்துக்கான ஆணிவேர்களாகும்.
நாகரிக வளர்ச்சியின் அஸ்திவாரம் முதலாவது விவேகம், இரண்டாவது அவனுடைய சூழ்நிலை. சூழ்நிலை என்பது அவன் வாழும் பகுதியின் இயற்கை தன்மையையும், சிறப்புத் தன்மையையும் பொறுத்துள்ளது.
வரலாறு என்பது காலக்கணக்குக்கு உட்பட்டதாகும். இல்லையென்றால் தொடர்பற்ற சில கதைகளாக மாறிவிடும். வரலாற்றின் ஒரு கண் காலக் கணக்கு. மற்றொன்று அது எழுதப்படும் மண்ணின் புவியியலாகும். (Physical Geography).
உலக நாகரிகங்களை, சிந்துவெளி நாகரிகம், நைல் நாகரிகம், டைகரிஸ் – ஈப்ரிடஸ் நாகரிகம், யாங்ஸி நாகரிகம் என்று நான்காகப் பார்க்கிறார்கள். இந்திய நாகரிகம் அல்லது சிந்துவெளி நாகரிகம் என்பது இணையற்ற சில சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறது. ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
அந்நிய கருத்துகள் வந்தபோதும் அதனைச் செரிமானம் செய்துகொண்ட போதும் தனக்கென்று உள்ள சில அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டது. மேற்கத்திய கலாசாரம் கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. இயற்கையை வெல்வதன் மூலம் இது முன்னேறியது. இயற்கையை வெல்வதுதான் நாகரிகத்தின் சாராகக் கருதி தன்னை வளர்த்துக் கொண்டது.
இந்திய நாகரிகமோ ஒத்து வாழ்வதும், சுற்றுச் சுழலோடு இணைந்து வாழ்வதும்தான் முக்கியமானது என்று கருதியது.
‘இயற்கையை ஆளுவோம் என்று மேலை நாகரிகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மனிதனுக்கு நேர் எதிராக நிற்கும் இயற்கையிடமிருந்து வளமான வாழ்வைப் பறிக்க முனைவதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் அடிநாதம்…. ஆனால் இந்தியாவின் பார்வை வித்தியாசமாக இருந்தது. மனிதனும் உலகமும் வெவ்வேறானவை என்று பார்க்காமல், இரண்டும் இணைந்ததுதான் முழுமையான உண்மை, தனி மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள இணக்கம்தான் முக்கியமானது என்று இந்தியா கருதியது.’ (குருதேவர் ரவீந்தரநாத் தாகூர் 1912 – 12ம் ஆண்டுகளில் சிகாகோ, ஹார்வர்டு பல்கலைப்கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து).
இந்திய நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதையும் வரலாற்றாளர்கள் சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அது மொழியில், சமூக அமைப்பில், மதத்தில், இலக்கியத்தில் பரவியுள்ளது.
‘ஹரப்பா நாகரிகத்தில் ஈசன் என்றும், பசுபதி என்றும், அன்னை தெய்வம் என்றும் வழிபட்டு வந்தார்கள். இன்றும் சிவனாகவும் பார்வதியாகவும் வழிபாடு நடப்பது அதன் எச்சம்’ என்கிறார் கே.சி. சௌத்திரி.
‘பனிக்கட்டி உருண்டு வரும்போது தன்னுள் ஏராளமானவற்றை சேர்த்துக் கொள்கிறது. மேலும் மேலும் கனமடைந்தாலும் அதன் உட்பகுதியை மேலே சேர்ந்தவை மூடாமல் பளிங்கு போல வெளிக்காட்டுகிறது. இந்திய நாகரிகமும் இப்படிப்பட்டதுதான்!’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு தன்னுடைய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இந்திய நாகரிகத்தின் அடிப்படை சகிப்புத்தன்மை. அதனை அமல்படுத்தும்போது ஏற்படுவதுதான் ஒற்றுமையில் வேற்றுமை சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் பரந்துபட்ட உலகில் பரவ வேண்டும் என்பதுதான் இந்திய நாகரிகத்தின் அடிப்படையான நோக்கம்.
Brothers and Sisters என்று விவேகானந்தர் சிகாகோ நகரத்துச் சிறு மண்டபத்தில் அழைத்ததன் முழு அர்த்தமும், சாரமும், இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடுதான். இதுதான் இந்திய நாகரிகத்தின் அழிவற்ற குணம்.
இந்த சகிப்புத்தன்மை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல்ரீதியான பலவீனமாகவும் இருந்ததுண்டு. இருந்தும் இதுதான் இந்தியத் தன்மையின் சிறப்பு என்றும் அந்நிய மோதல்கள் ஏற்பட்ட போதும் இந்தச் சிறப்புத் தன்மை தொடர்வதும் முக்கியமானதாகும்.
இந்தியாவில் புவியியல் இருப்பும் அதன் நாகரிகத்தில் சிறப்பான வளர்ச்சியை உருவாக்கியது. கடும்பனியுள்ள வடக்கு மலைப்பகுதி, சிந்து, கங்கை, பிரம்மபுத்திராவால் நனைக்கப்படும் சமவெளிகள், தக்காண பீடபூமி, உயரத்திலிருந்து சரிந்து கடலைச் சந்திக்கும் தென்பகுதி என்று உலகத்தின் எந்த நாட்டுக்கும் இல்லாத வானிலை சூழல் அந்த மக்களின் அன்றாட வாழ்வில் வேறுபாடுகளை உருவாக்கியது.
புகைப்படத்தில் மட்டுமே கடலைப் பார்க்கும் உ.பி. டில்லி கிராமத்துச் சிறுவனும், அதே வயதில் சீறிப் பாயும் கடல் அலை மேல் ஏறி விளையாடும் குமரிச் சிறுவனையும் இந்த தேசத்தில் பார்க்க முடியும். புவியியல் மனிதனின் திறமையை நிர்ணயிக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடு வரலாற்றையும் வரலாறு நாகரிகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.
வானுயர்ந்த மலைத் தொடர், பிரம்மாண்டமான நதிபுரத்து வெளிகள், உயர்ந்த பீடபூமி, பரந்துபட்ட பாலைவனம் ஆகியவை சிறப்புத் தன்மையை அளித்தன. ஷிவாளி மலை முகட்டில் பிறக்கும் கங்கை வங்கத்தில் சங்கமமாகிறாள். எத்தனை மனிதர்கள் – எத்தனை வேறுபாடுகள் – இருந்தும் அந்த வேறுபாட்டை வளப்படுத்திக் கொண்டே அந்த மக்களை இணைக்கும் நூலாகவும் அவள் இருக்கிறாள்.
கைபர் கணவாய் அந்நியர்கள் புக வாய்ப்பளித்தது. ஆரியர்களிலிருந்து அகமது ஷா அப்தாலி வரை பலரும் வந்தார்கள். எத்தனை கருத்துக்கள் வந்து சேர்ந்தன. பாரசீகத்தினர், கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் என்று இந்தக் கணவாய் பலருடைய வருகைக்குச் சாட்சியாக இருந்தது.
தென் பகுதியின் நீண்ட கடற்கரைகள், ரோம், சினா, மலாய், தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு தொடர்பைத் தந்தன. இதன்மூலம், இந்தியா, உலக மக்கள் அதிகமாக வாழக்கூடும் மையப்பகுதியாக மாறியது. வேறுபட்ட மதங்கள், இனங்கள், மரபுகள், பழக்க வழக்கங்கள் சங்கமிக்கும் பகுதியாக மாறியது.
இங்கு ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் திராவிடர்களும், சீனர்களும், சாகர்கள், ஹீனர்கள், பாதன்கள், முகலாயர்கள் ஆகியோரும் மிகப் பெரிய சமுத்திரமாக மாறி தங்கள் அடையாளங்களை இழந்தார்கள் என்று ரவீந்திரநாத தாகூர் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
இந்தியா, இந்துக்களுக்கு பௌத்தர்களுக்கு சமணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு, பார்சிகளுக்கு, கிறிஸ்துவர்களுக்கு தாய் வீடாக மாறியது. இனம், மதம், மொழி, பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று பார்ப்போமானால், இந்தியா பன்முகத் தன்மை கொண்ட மக்கள் தொகுதியாகும்.
அந்தமான், நிகோபர், நாகாலாந்தில் தென்படும் நீக்ரோ சாயல், சிக்கிம், பூட்டான் சிட்டகாங் பகுதியில் காணப்படும் மங்கோலியச் சாயல், வங்கம், பீகார், ஒரிசா, உ.பி., தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள பரந்த நெற்றியைக் கொண்ட சாயல், பஞ்சாப், ராஜஸ்தான் சிந்து பகுதியில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதிச் சாயல் என்று எத்தனை இனங்களின் சாயல்கள் இங்கு உள்ளன! இந்தச் சாயல் கொண்டவர்கள் ஒரு பகுதி என்றில்லாமல் பரந்து வசிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
இயற்கை தன்னுடைய பன்முக வெளிப்பாட்டைக் காட்ட இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வேறெந்தப் பூமிப் பகுதியிலும், இயற்கை இத்தனை அழகாக, கம்பீரமாக அமையவில்லை. இதுவே இந்தியாவில் காணும் ஒற்றுமைக்குள் வேற்றுமை என்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கண்காட்சி சாலையாகும் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். கடும்பனி உள்ள காஷ்மீர், பனிக் காலத்தில் கடும் குளிரும், கோடை காலத்தில் கடும் வெப்பமும் கொண்ட வங்காளம், ஒரிசா, பீகார் எப்போதுமே வெப்பம் கொண்ட தென் இந்தியா ஆகியவை இங்கு மட்டுமே உள்ளன. விதவிதமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இந்த மண்ணில் மட்டுமே உள்ளன. மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு வேறுபாடுகள் தென்படும்.
அணுகிப் பார்த்தால் இதற்கிடையே ஓர் இணக்கம் இருப்பது புலப்படும். இந்த இணக்கம் தான் இந்தியாவின் ஆத்மா. இந்திய நாகரிகத்தின் அடிநாதம்.
ஆரியர்களும், ஹீனர்களும், முகலாயர்களும் வந்தார்கள். பின்னாளில் டச்சு, பிரான்சு, ஆங்கிலேயர்கள் என்று வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை பின்னங்களாக்கி, அதனை முழுமையாக்கிய ரசாயனம் தான் இந்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த சுவையாகும். இதன்பால் உருவானதுதான் ஓர் ஒன்றிணைந்த கலாசாரம்.
இந்திய ஒற்றுமை என்பது அரசியல் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. மௌரிய, குப்த, மொகலாய சாம்ராஜ்ஜியங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் மக்களின், சமூக, பொருளாதார ஒற்றுமை என்பது அப்படியே இருந்தது. இது இந்தியர்களிடைய ஒருமைப்பாட்டை வளர்ந்தது. (ஜே.என். சர்க்கார் எழுதிய இந்திய ஒற்றுமை – என்ற கட்டுரை).
‘இந்திய ஒற்றுமை என்பது ரத்தம், நிறம், மொழி, உடை, பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஒன்று’ என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு ஹிஸ்டரி ஆஃப் இந்தியா நூலாசிரியர் வி.ஏ. ஸ்மித். இதன் உன்னதம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற சுதந்தரப் போராட்டத்தின்போது வெளிப்பட்டது. மகாராஷ்டிரா மட்டும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று மராட்டியனோ, வங்காளம் விடுதலை பெற வேண்டுமென்று வங்காளியோ, தமிழ்நாடு மட்டும் விடுதலையடையவேண்டும் என்று தமிழனோ போராடவில்லை. ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்காக அனைவரும் போராடினார்கள்.
இயற்கையோடு மட்டுமல்லாமல், சக மனிதனோடும் சேர்ந்து இணைந்து வாழ்வதுதான் இந்திய நாகரிகத்தின் வேரும், சாரமும் ஆகும் .

வள்ளலார் !
1823,ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர் வள்ளலார் என்பவராகும்.அவர் இறைவனால் வருவிக்க  உற்றவராகும்.நாடு,மொழி,இனம்,நாகரிகம் என்பது உலக  மனித குலத்திற்கு பொதுவானதாகும் என்றார் .அனைத்து உயிர்களும் இறைவன் படைப்பாகும்.அதில் உயர்ந்த அறிவுடைய பிறப்பு மனிதப் பிறப்பாகும்.மனிதர்களை பிரிக்கும் எந்த பிரிவுகளாக இருந்தாலும் அவை உயிர்களை அழித்துவிடும் ,நாட்டை பிரித்து அழித்து விடும். நாகரீகம் என்ற பெயரில் மனிதர்களை வேற்றுமைப் படுத்தி ரத்தம்,நிறம,இனம் மொழி உடை,வாழ்க்கை முறை என்ற பிரிவினையை உருவாக்கி ,மனித குலத்தை வேறுபடுத்தி,மக்கள் போருற்று      இறந்து வீண் போய்  கொண்டு உள்ளார்கள் .மேலும் சாதி சமயம்,மதம் என்ற பிரிவினையை உருவாக்கி பொய்யான கற்பனைக் கடவுள்களை படைத்து மக்களை பிரித்து விட்டார்கள்.இவற்றை எல்லாம் ஒழித்து ,அழித்து புதிய உலகத்தை ,புதிய அமைப்பை உருவாக்க வந்தவர்தான் வள்ளலார் என்பவராகும்.

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு ,இறவன் படைப்பில் வேற்றுமைகள் இருக்கக் வேண்டாம்.உலகத்தை உருவாக்கி ஆண்டு கொண்டு இருக்கும் கடவுள் ஒருவரே !அவர் அருட் பேரோளியாக உள்ளார் .அறிவுபடைத்த மனிதர்கள் இவற்றை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் ,என்பதற்காக     உலக மக்களுக்கு பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கினார் . அதற்குப் பெயர்தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற அமைப்பாகும்

அந்த அமைப்பின் வழியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது !

கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பவராகும் .

சாதி,சமய,மதம்,இனம்,,மொழி,நாடு என்ற வேற்றுமைகள் கூடாது !

அனைத்து உயிர்களும் ஒன்று என்ற ''ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும் !

சிறு தெய்வ வழிபாடு செய்ய வேண்டாம்.!

கடவுள் பெயரால் உயிர்பலி செய்ய வேண்டாம்.!

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும்.!

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு.! ஜீவ காருண்யமே இறை வழிபாடு !

ஜீவ காருண்ய ஒழுக்கமே மோஷ வீட்டின் திறவுகோல்.!

தனிமனித ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், மிகவும் முக்கியமானதாகும் .!

இறந்தவரை புதைக்க வேண்டும்.எரிக்க வேண்டாம்.!

சமாதி பழக்கம் வேண்டாம் சகஜ பழக்கம் வேண்டும்.!

எதிலும் பொது நோக்கம் வேண்டும் .

மேலே கண்ட ஒழுக்க முறைகளும் ,வாழ்க்கை முறைகளும் மனித வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ,ஒற்றுமை உலகம் எல்லாம் ஓங்கும் .என்பதை வலியுறித்தி உள்ளார் வள்ளல் பெருமான் அவர்கள் .உலக ஒற்றுமைக்கு இதுவே சிறந்த வழியாகும் ,

இறைவன் மேல் அன்பும் ,உயிர்களின் மேல் இரக்கமும் கொண்டு வாழ்ந்தால் சமுதாயம் நலம் பெரும் ,மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இதுவே சிறந்த வழியாகும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
வினடதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியை கடைபிடித்து மேப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என்தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து ,நித்தியர்களாகி வாழ்ந்திடல் வேண்டும் .
அனைத்துலக மக்களும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .

ஆன்மநேய அன்புடைய சகோதரர் ;--கதிர்வேலு .  





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு