புதன், 22 ஜனவரி, 2020

உருண்டை உலகத்தின் திசைகள் !

*உருண்டையான  உலகத்திற்கு திசைகள்* !

நாம் வாழும் உலகம் உருண்டையாக கோழிமுட்டை வடிவமாக உள்ளது என்று விஞ்ஞான அறிவியல் கண்டுபிடித்து ஏற்றுக்கொள்கிறது.

மேலும் உலகம் தன்னைத்தானே ஓய்வு இல்லாமல் சுற்றிக் கொண்டு உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்கிறது.

சுற்றிக்கொண்டு உள்ள உலகத்திற்கு திசைகள் எப்படி சொல்ல முடியும்.

கிழக்கு.மேற்கு.வடக்கு.தெற்கு.என்றும் வடகிழக்கு.வடமேற்கு.தென்கிழக்கு தென்மேற்கு என்றும் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

உலகம் தட்டையாக இருந்தால் பொருந்தும்.உலகம் உருண்டையாக உள்ளது தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் உள்ளது என்பதால் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்விக்கு வள்ளலார் பதில் சொல்லுகின்றார்.

வள்ளலார் சொல்லும் பதில்!

*உலகத்திற்கு அகம்.அகப்புறம் என்றும் புறம் புறப்புறம் என்றும் திசைகள் உள்ளன என்று பதில் சொல்லுகின்றார்*

உருண்டையான உலகத்திற்கு.அகம் அக்கினி என்றும்.அகப்புறம் சூரியன் என்றும்.புறம் சந்திரன் என்றும்.புறப்புறம் நட்சத்திரங்கள் என்றும் பதில் சொல்லுகின்றார்.

அதேபோல் மனித உடம்பிற்கும்.அகத்தில் இருப்பது ஆன்மா என்றும்.அகப்புறத்தில் இருப்பது ஜீவன் என்றும்.புறத்தில் இருப்பது கரணங்கள் என்றும்.புறப்புறத்தில் இருப்பது இந்திரங்கள் என்றும் பதில் சொல்லுகின்றார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது எவ்வாறு.

அகம் என்பது உருண்டையின் உள்ளே மத்தியில் இருப்பது அகம் என்றும்.

அதற்கு அடுத்த வட்டத்தில் இருப்பது அகப்புறம் என்றும்.

அதற்கு அடுத்த வட்டத்தில் இருப்பது புறம் என்றும்

அதற்கு அடுத்த வட்டத்தில் இருப்பது புறப்புறம் என்றும் சொல்லுகின்றார்.

உலகம் சுற்றிக்கொண்டு இருக்கும் போது இந்த நான்கு வட்டங்களும் தடை இல்லாமல் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அகத்தில் உள்ள அக்கினி என்னும் அருள் ஆற்றலால் எல்லையற்ற அணு காந்த சக்தியால் இந்த உலகம் தன்னைத்தானே இயங்கிக் கொண்டுள்ளது.

அதேபோல் மனித உடம்பின் அகம் என்னும் இடத்தில் உள்ள ஆன்மாவின் ஆற்றலால் ஆன்மகாந்த அருள் சத்தியால் உடம்பை இடைவிடாது இயக்கிக் கொண்டுள்ளது.

இதற்கு விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவுப் படுத்துகின்றார்.

பஞ்ச பூத உலகில் பஞ்ச பூதங்களின் தன்மையும் அவற்றின் செயல்களையும் அகவலில் தெளிவாக தெரியப்படுத்து கின்றார்.அகவலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அகவல் வரிகளில் சொல்லப்பட்ட திசைகள்!

256. வெளியிடை அனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

257. புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

258. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

259. அகப்புற நடுக்கடை அணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

260. அகப்புற நடுமுதல் அணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த அருட்பெருஞ் ஜோதி

261. கருதக நடுவொடு கடை அணைந்த அகமுதல்
அருளுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி

262. தணி அக நடுவொடு தலையணைந்த அகக்கடை
அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

263. அகநடு புறக்கடை அணைந்த அகப்புற முதல்
அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

264. அக நடு புறத்தலை அணைந்து அகப் புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

265. அக நடு வதனால் அகப்புற நடுவை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

266. அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட வமைத்த அருட்பெருஞ் ஜோதி

267. புறநடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

268. புகலரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி

269. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

270. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

271. அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

272. அகக்கடை முதற்புணர்ப்ப அதனால் அகக்கணம்
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி!

மேலே கண்ட அகவலில் அகம். அகப்புறம்.புறம்.
புறப்புறம் என்ற  திசைகளை சொல்லி உள்ளாரேத் தவிர.கிழக்கு.மேற்கு.
வடக்கு.தெற்கு என்ற வார்த்தையை வள்ளலார் உபயோகப் படுத்தவில்லை.

அகத்தில் இருந்து வெளிப்படும் அருள் ஆற்றலால் அகப்புறம்.புறம் புறப்புறம் என்ற நான்கு பக்கங்களும் செயல் பட்டுக் கொண்டுள்ளன.

நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவற்றை பதிவு செய்கிறேன்.

இந்த உலகம் போல் போல் பலகோடி உலகங்கள் அண்டங்கள் அனைத்தும்  தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளன.

இவற்றை எல்லாம் இயக்கி இயங்க வைக்கும் அருள் ஆற்றல் எங்கிருந்து வருகிறது. இயக்குபவர் யார் ? என்ற உண்மையை அருள் ஆற்றலினால் கண்டு வெளிப்படுத்துகிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்னமுடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்ற கோடா கோடியே

திருகலறு பலகோடி ஈசன்அண்டம்
சதாசிவ அண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்

உறுவுறும் இவ் அண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்

ஒருபெருங் கருணைஅரசே
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வமே எலாம்
வல்ல நடராஜபதியே.!

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய  தனிப்பெருங்கருணை வாய்ந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்திரு நடனத்தை கண்டு களித்து கலந்து தெரியப்படுத்துகின்றார்.
இன்னும் விரிக்கில் பெருகும்.

ஆன்ம அறிவைக் கொண்டு சிந்திப்போம் தெரிந்து கொள்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு