வியாழன், 16 ஜனவரி, 2020

மானிடப் பிறப்பு !

*மானிடப்பிறப்பு*!

*மனிதப்பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்ட அருள் கொடையாகும்*.

இந்த பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தை காலம் உள்ள போதே அடைய வேண்டும் என்பதே மனிதபிறப்பின் லட்சண லட்சியமாகும்

மனித பிறப்பில் ஒழுக்கம் நிறைந்து இல்லற இன்பத்தை அனுபவித்து அதன்பின் இறை தொடர்பு வைத்து அருள் பெறுவதே மனித குலத்திற்கு முக்கிய லட்சியமாக விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும்.

*அறம்.பொருள்.இன்பம் வீடு இந்நான்கையும் நான்கு காலங்களிலும் அனுபவித்து பின் பற்று அற்று வாழ்வதே இறை அருளைப் பெற ஏதுவாக இருக்கும்* என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

சுத்த சன்மார்க்கத்தில் துறவு சந்நியாசம் போன்றவைகளுக்கு இடம் இல்லை.

இந்த வாழ்க்கை முறையை உலகத்திற்கு வெளிப்படையாக சொல்ல வந்தவர்தான் வள்ளலார்.

உலகத்தில் உள்ள மனித தேகம் கிடைத்த மக்கள் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.  துன்பம் முதலியவற்றால் வருந்துகின்றவர்களின் வருத்தத்தை போக்குகின்றவர்கள் கடவுளின் அருளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்னும் உண்மையை வெளிப்படையாக சொன்னவர்தான். வள்ளலார்.

இல்லறத்தில் உள்ளவர்கள் தான் மக்களுக்கு தொண்டு செய்ய முடியும்.

தொண்டு செய்யாதவர் கையில் சோறு சாப்பிட வேண்டாம் என்கிறார் வள்ளலார்.

*தொண்டுறார் கை சோற்றினை விரும்பேன்  என்கிறார் வள்ளலார்*.

தியானம்.தவம்.யோகம்.புற வழிபாட்டால் ஆன்ம லாபம் பூரணமாக கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்தவர் வள்ளலார்.

இறைவனால் படைத்த உயிர்கள் துன்ப்படுவதை கண்டபோதும்.அறிந்தபோதும்.கேட்டபோதும்.துன்பப்படுவார்கள் எனபதை முன் கூட்டியே அறிந்த போதும் அந்த துன்பத்தை போக்கும் ஜீவ உரிமையும் ஆன்மநேய உரிமையும் அறிந்து உபகாரம் செய்பவர்களே  ஆன்ம லாபமான அருளைப் பெறும் தகுதி உடையவர்களாவார்.
என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்தவர் வள்ளலார்.

*ஜீவகாருண்யம் ஒழுக்கத்தினால் மட்டுமே அருளைப் பெற முடியும்* என்பதை தெளிவு படுத்தி. ஒரு சிறப்பு வாய்ந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் தலைசிறந்த  நூலை எழுதி உலக மக்களுக்கு  தந்தவர் வள்ளலார்.

*இதனால் சமய மதவாதிகளின். வெறுப்பிற்கு ஆளானார் வள்ளலார்*.

*தான் சொன்ன சுத்த சன்மார்க்க கொள்கையை தானே கடைபிடித்து அதில் வெற்றி பெற்று. இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று.முத்தேக சித்தி பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான்  மாபெரும் அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்*.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடிக்காமல்.சமய மதக் கொள்கைகளையும் சன்மார்க்கத்தையும் இணைத்து பேசியும் குழப்பியும்.

அற்பத்தனமான பட்டம் பதவி புகழுக்காக.தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர்கள் எக்காலத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ளவோ அருளைப் பெறவோ முடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன்

பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்

சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்

பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.!

*பிறப்பு இறப்பு எனும் சட்டத்தை கிழித்தவர் வள்ளலார்*.இறந்தால் பிறப்பு உண்டு.இறக்காமலும் மீண்டும் பிறப்பு இல்லாமலும் வாழும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.வாழ்ந்து கொண்டும் இருப்பவர் வள்ளலார்.

மேலும் வள்ளலார் பாடல் !

இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இலை இன்றினி நான்

பிறக்கவும் ஆசை இலை உலகம் எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே

சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை
ஒன்றில்லை

துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை
ஒன்றிலையே.!

*மேலே கண்ட பாடல்கள் நம்மை சிந்திக்க வைப்பவை*.

வள்ளலாருக்கு பின் வள்ளலார் போல்  இதுவரையில் மரணத்தை வெல்ல முடியாததற்கு காரணம்.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை எவரும் முழுமையாக பின்பற்ற தவறி விட்டார்கள் என்பதே உண்மை நிலவரம் இதுவேயாம்.

இனிமேலாவது சுத்த சன்மார்க்க கொள்கையை முழுமையாக கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.

வள்ளலார் பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும் ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

என்றும்.

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே

வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்

செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்

ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்
உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் கொள்கை உண்மையை மட்டுமே போதிப்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு