ஞாயிறு, 5 மே, 2019

அப்பா அம்மாக்கள் ஜாக்கிறதை !

அப்பா அம்மாக்கள் ஜாக்கிறதை !

திருமணம் செய்து குடும்பம் நடத்தி நல்ல தொழில் செய்து வருமானம் ஈட்டி வாழ்ந்து வரும்போது இல்லற இன்பத்தில் குழந்தைகள் பிறந்து விடுகின்றன.

குழந்தைகளை அன்புகாட்டி பாலூட்டி தாலாட்டி வளர்த்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து பெரிய ஆட்களாக வளர்த்து விடுகின்றோம்.

அதன்பின் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறோம்.

அதற்குள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயதாகி விடுகின்றது.வருமானம் குறைந்து விடுகின்றது

அப்பா அம்மாவை விட மகனோ மகளோ நல்ல வருமானத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் வசதி வாய்ப்புக்கள் வருமானம் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சொந்தம் என நினைத்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொந்தமாக பங்களா வீடு இருக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தம் ஆகாது.

சொந்தமாக கார்.பைக் இருக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தம் ஆகாது.

நிறைய பணம் சொத்து இருக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தம் ஆகாது..

அப்பா அம்மா சேர்த்து வைத்த சொத்து மகன் மககளுக்கு சொந்தம்.

மகன் மகள் சொத்து அப்பா அம்மாவிற்கு சொந்தமாகாது.

மகன் மகள் சம்பாதித்த வசதி வாய்ப்புக்களை அப்பா அம்மா சொந்தம் கொண்டாடுவது பெரிய தவறாகும்.

அதுதான் உலகத்திலே பெரிய தவறாகும். ஏன் என்றால்.அப்பா அம்மா கொடுத்த சொத்து அல்ல.  எல்லாம் அவர்கள் சம்பாதித்தது...எனவே சொந்தம் கொண்டாடுவது தவறுதானே !

அப்பா அம்மா வசதி குறைந்து மகன் மகளிடம் கை ஏந்தும் நிலை வந்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கூனி குறுகி அசிங்கப்பட வேண்டி வரும்.

எனவே யாரிடமும் கை ஏந்தாமல் வாழ்வதற்குண்டான வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதே நல்ல வாழ்க்கையாகும்.

உடல்நிலை நல்ல முறையில் இருந்தால் அவர்களுக்கு அப்பா அம்மா வேலைக்காரர்களாக ஆக்கிவிடுவார்கள்.
வீட்டின் வாச்சுமேன் வேலைக்கு வைத்து விடுவார்கள்.

உடல்நிலை குன்றி போயிருந்தால் அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகி விடுகின்றார்கள்.வீட்டின் ஓரம் தள்ளி வைத்து விடுவார்கள்.

அப்பா அம்மாவின் சொல்பேச்சு கேட்டு வளர்ந்த மக்கள்... அவர்கள் சொல் பேச்சை கேட்கும் நிலைக்கு அப்பா அம்மா தள்ளப்படுகிறார்கள்.

உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிலவிற்கு உதவி கேட்கும் சூழ்நிலை வந்தால்  சலித்துக் கொண்டே பணம் கொடுப்பார்கள்

அவர்களின் பொருளை எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட உரிமை கோர முடியாது.

நல்ல மக்களாக அறிவுள்ள மக்களாக இருந்தாலும். அப்பா அம்மாவை நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் .நினைத்தாலும் சூழ்நிலைகள் இக்காலத்தில் மாறிக் கொண்டே வருகின்றது. அதுதான் உண்மை.

தேவை இல்லாத செலவுகள் நிறைய செய்வார்கள் .அப்பா அம்மாவின் தேவைகளுக்கு செலவு செய்ய தயங்குவார்கள்.

அப்பாக்கள் இறந்து அம்மாக்கள் இருந்தாலும் கொடுமை..
அம்மாக்கள் இறந்து அப்பாக்கள் இருந்தால் அதைவிட பெரிய கொடுமை வேறில்லை.

எனவே நம் மக்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என நினைத்து வாழ்வது அப்பா அம்மாவின் அறியாமையாகும்.

ஏன் என்றால் அப்பா அம்மாவின் உடல் இன்பத்தால் பிறந்த குழந்தைகள் அவர்கள்..அதனால் அவர்கள் நம் சொந்த குழந்தைகள் அல்ல.

காம இன்பத்தின் வேகத்தில் பிறந்த குழந்தைகள்.

எனவே அவர்கள் காப்பாற்றுவார்கள் என நினைப்பது அறியாமையிலும் அறியாமையாகும்.

இறைவன் தான் காப்பாற்றுவார் !

நம்மை படைத்தவர் ஒருவர் உள்ளார் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். என்பவராகும்..

அவர்தான் தாயாகி தந்தையுமாய. தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித்தலைமை தெய்வம் என்பவராகும்.

அவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே எந்த குறையும் இல்லாமல் வாழ வைப்பார் என்பதுதான் சத்தியமான உண்மை.

(இன்று நம் மக்கள் நாளை அவர்களும் அப்பா அம்மாக்கள் ஆகி விடுவார்கள்)

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ....அவர்தான் இறுதி காலத்தில் கைவிடாமல் காப்பாற்றுவார்.

இந்த உலகில் உள்ள அனைத்து அப்பா அம்மாக்களுக்கும் இந்த செய்தி பொருந்தும்.

எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகிறார்...

கைவிட மாட்டான் என்று ஊது ஊது சங்கே
கனக சபையான் என்று ஊது ஊது சங்கே !

எல்லாம் செய் வல்லான் என்று ஊது ஊது சங்கே
எல்லார்க்கும் நல்லான் என்று ஊது ஊது சங்கே
எல்லாம் உடையான் என்று ஊது ஊது சங்கே
எல்லாமும் ஆனான் என்று ஊது ஊது சங்கே !

கருணா நிதியர் என்று ஊது ஊது சங்கே
கடவுள் அவனே என்று ஊது ஊது சங்கே.
அருள் நாடகத்தான் என்று ஊது ஊது சங்கே
அம்பலச் சோதி என்று ஊது ஊது சங்கே !

நம்மை கருவரையில் இருந்து இரவும் பகலும் எந்நேரமும் காப்பாற்றி வந்த இறைவன் முதுமையிலும் காப்பாற்றுவார் என்ற முழு நம்பிக்கை யுடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்...

இறைவனைத்தவிர வேறு எவரும் நம்மை காப்பாற்ற முடியாது..

எனவேதான் மக்களுக்காக வள்ளலார் தெளிவாக  பதிவு செய்துள்ள பாடல் !

புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான்

புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்று என்னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்

உடைமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக்கரும்பே செங்கனியே கோற்றேனே

மெய்ப்பயனே கைப்பொருளே விலை அறியா மணியே !

தகுந்த தனிப் பெரும் பதியே தயா நிதியே கதியே

சத்தியமே என்று உரைமின் பத்தியொடு பணிந்தே !

என்னும் பாடலிலே தெளிவாக எளிய தமிழில் புரியும்படி சத்தியம் வைத்து பதிவு செய்துள்ளார்..

யாருடைய பொருளும் நம்மைக் காப்பாற்றாது நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்தான் நம்மை காப்பாற்றும்..

வள்ளலார் எவருடைய பொருளிலும் வாழ்க்கை நடத்தவில்லை.

எங்குறு தீமையும் எனைத்  தொடரா வகை கங்குலும் பகலும் மெய்க் காவல் செய் துணையே !

என்பார் வள்ளலார்

இறைவனுடைய அன்பிலே அறிவிலே அருளிலே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.மரணத்தை வென்று என்றும்  வாழ்ந்து கொண்டுள்ளார்.

நமக்கு இந்த பிறவியில் மரணத்தை வெல்ல முடியவில்லை என்றாலும் அடுத்த பிறவியில் மரணத்தை வென்று வாழ்வோம்.

எனவே அப்பா அம்மாக்கள் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் இறைவனைத் தொடர்பு கொள்ளுங்கள் இனிமையான வாழ்க்கை அமையும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு