புதன், 17 ஏப்ரல், 2019

வள்ளலார் மகா உபதேசத்தின் ஒரு பகுதி !

*வள்ளல் பெருமான் உபதேசித்த மகா உபதேசம் !*

வள்ளலாரின் கடைசி உபதேசம்.....

இந்த உபதேசத்தின் சிறிய பகுதியை வெளியிட்டுள்ளேன்

பாடம் படிப்பதுபோல் படிக்காமல்.ஒவ்வொரு வரியையும் பொறுமையாக ஊன்றி படியுங்கள்.

*கடவுள் உண்மைத் தெரியாமல் நாம் வாழ்ந்து எந்த பயனும் இல்லை*.

வள்ளலார் சொல்லியதை கேட்டு படித்து அறிந்து உணர்ந்து நம் வாழ்க்கையில் ஆன்ம லாபம் பெறுவதே இந்த மனிதப் பிறப்பின் முக்கிய லட்சியமாகும்.

வள்ளலாரின் வாய் மொழி !

இதுவரையில் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், *மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: *கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*

 "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

 ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.(வேத வியாசர் ) அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

*அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை யடையலாம்.*

அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும்.

*ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது.*

முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனை யென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடல் !

* இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திர
சாலங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம் என அறிக

செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம் பற்றிய ஞான தேசிகமா மணியே

அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.
- திருஅருட்பா 4176

மேலும் இதுவரை நம் பின்பற்றி வருகின்ற..

*சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்*.

அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமே யானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லது, *ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது*.

ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். "*நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது*. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும்.

அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - *திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும்*. அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.

 ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால்,

*அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது*.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலே ஏற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.
*நான் அப்படி அந்தச் சமயத்தில்
வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.*

*என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ*

என, "தேடியதுண்டு நினது திருஉரு உண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன்.

மேலும் ஆண்டவர்  தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.

*"கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது

**யாதெனில் தயவு
தயவு என்னுங் *கருணைதான் என்னைத் தூக்கி விட்டது**.

பாடல் !

* மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன் தன்னையே மதித்துன்

சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ

தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.
- திருஅருட்பா 3635

கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுக
மற்றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
- திருஅருட்பா 3503

*அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்*.

*இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது*. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும்,

*அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்*;

*மிரட்டிச் சொல்லுவேன்;*

*தெண்டன் விழுந்து சொல்லுவேன்;*

*அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்;*

*அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்*.

இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.

*இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்*.

ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம்
*ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்*.

இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் -

சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - ( வடலூர் சத்திய ஞானசபைக்கு ) அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடு கூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.

*நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன்*.

 ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.
*சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்*.

 ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை.

*"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!"*

 என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்:

*ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது*.

ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
*அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன?*

இவை முதலானஅண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? *நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன?*

கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

 இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின் கண் உள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாக சொல்லுவார்கள்.

*அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம்.* ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

இப்படியே "காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் - ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் - *காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா*"

என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம்,

ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில்,

*மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம்* செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும் படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

*இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார்.*

 மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள்.

இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள்

 *இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை*.

இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.
மேலும்,

 சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது

சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது.

அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்....

*நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை*.

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சி யெடுத்துக் கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான *திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை* -

எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - *உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி* அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: *நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே,*

 ஆண்டவர் முதற்சாதனமாக

*அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி*

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

*தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, *அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்*.

சுத்த மாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. *சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம்*

. மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே.

*ஆதலால் இத் தருணம்இக்காலமே சன்மார்க்கக் காலம்*
.
இதற்குச் சாக்ஷியாக இப்போது தான்சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது.

அக்கொடி உண்மையில் யாதெனில்:

*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது*;

இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.*

 கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

*முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.*

 இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள்.

அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால்

*ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்.*

 இதுசத்தியம், சத்தியம், சத்தியம். இஃதுஆண்டவர் கட்டளை.
*எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ*, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்.

*இது ஆண்டவர் கட்டளை.*

ஆண்டவர் கட்டளையை ஏற்று அதன்படி வாழ்வதே சுத்த சன்மார்க்கிகளின் கடமை..

இன்னும் பழைய துன்மார்க்க நெறிகளான சாதி.சமய.மதம் போன்ற நெறிகளைப் பின்பற்றிக் கொண்டும்.சன்மார்க்க நெறியை பின்பற்றிக் கொண்டும் இருந்தீர்கள் என்றால் எந்த வகையான பிரயோஜனமும் இல்லாமல் பயனும் இல்லாமல் போய்விடும்.

உங்கள் வாழ்க்கை உங்கள் முயற்சியில் தான் உள்ளது .

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு