வெள்ளி, 3 மே, 2019

வள்ளலார் சொன்ன உளவு !

வள்ளலார் சொன்ன உளவு !

நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்.

இறைவனிடம் அருளைப் பெற வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகும்.

இறைவன் அருளைப்பெற சாதாரண மக்களால் முடியாது..ஏன் என்றால் ?அவர்களுக்கு இறைவன் யார் என்பதும் தெரியாது.அருளைப் பெறும் வழியும் தெரியாது.

எனவே அருளைப் பெரும் வழியைக் காட்டுவதற்கு அருளாளர்கள் பலர் உலகில் தோன்றினார்கள் .அவர்களுக்கு ஞானிகள் என்றும்.சித்தர்கள் என்றும்.ஆன்மீகத் தலைவர்கள் என்றும்  போற்றப் பட்டார்கள்.

சமயத்திற்கு தகுந்தாற்போல் பொய் சொல்லியவர்களுக்கு சமயவாதிகள் என்றும்.

அகங்காரத்தால்  பொய்யான  கடவுள்களை காண்பித்ததால் மதவாதிகள் என்றும்.

தொழிலுக்காக பொய்யான சாதியை வகுத்தவர்கள் சாதி வெறியர்கள் என்றும் சொல்லப்படுகின்றார்கள்.

மதம் என்னும் ஆணவத்தால் இருப்பவர்களை மதவாதிகள் என்றும் சொல்லப்படுவார்கள்.

அவர்கள் இறைவனைக் காண பலப்பல வழிகளைத் தேடினார்கள்.அவைகளிலே சரியை.கிரியை.யோகம்.ஞானம் என்னும் வழிகளைக் கண்டார்கள்.

அதிலே சரியை.கிரியை.யோகத்தோடு நின்று விட்டார்கள்.அதற்கு மேல் அவர்களால் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. செல்லவும்  முடியவில்லை.

அவர்கள் சென்ற வழியே முடிவானது என்று அறிந்து அதிலே நின்று விட்டார்கள் அதிலே மூழ்கி விட்டார்கள்.

அவர்கள் கண்ட கடவுள்கள் அனைத்தும் தத்துவங்களே என்பது அவர்களால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. அவைகளை உண்மைக் கடவுள் என்று நம்பி விட்டார்கள்.

அவர்கள்  நம்பிய கடவுள்களையே  மக்களுக்கு போதித்து வணங்குவதற்கு பலப்பல  வழிகளைக் காட்டினார்கள்.அவைகள்தான் தியானம்.தவம்.யோகம்.உருவ வழிபாடுகள்..அனைத்தும்.

அவைகளை தெரிந்து கொள்வதற்கு வேதம்.ஆகமம்.புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள்.போன்றவற்றை படைத்தார்கள்.

மக்கள் அவற்றை இன்றுவரை பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள்..

அதிலே சில அன்பர்கள் தங்களின் சிற்றறிவைக் கொண்டு அற்ப அருளைப்பெற்று முக்தி என்னும் நிலையை அடைந்தார்கள்.மேலும் உயிரை அடக்கி சமாதி நிலை அடைந்தார்கள்..

முக்தியால் இறைவனைக் காணமுடியவில்லை.உயிரை அடக்கிக் கொண்டு சமாதி நிலையை அடைந்தார்களாலும் கடவுளைக் காணமுடியவில்லை.

அவர்களை சொர்க்கம்.கைலாயம்.வைகுண்டம்.பரலோகம்.போன்ற இடங்களில் சென்று வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் என்றும் பொய்யான கற்பனைக் கதைகளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்..

மக்களும் அந்தக் கதைகளை உண்மை என்று நம்புவதற்காக  இடம் வாகனம் பெயர்.ரூபம்.ஆயுதம்.தீர்த்தம்.ஆலயம்.
புண்ணிய ஸ்தலம் போன்றவற்றை நம்பும் படியாக தோற்றுவித்து உள்ளார்கள்..

கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரங்களை கடவுள்களாக படைத்து விட்டார்கள்.அதிலே வரும் கதாநாயகன் பெரிய கடவுளாகவும்.மற்ற கதாபாத்திரங்கள் சிறிய தெய்வங்களாகவும் படைத்து விட்டார்கள்.

அவற்றை பின்பற்றி வாழ்ந்து கொண்டு வரும் மக்கள் ஆன்ம லாபமும் அருள் லாபமும் பெற்றுக் கொள்ள முடியாமல் மாண்டு கொண்டே இருக்கிறார்கள்.

*உண்மைக் கடவுள் வருகை !*

*உண்மையை அறியாமல் அரைகுறை ஞானிகள் உண்மைக் கடவுளை தெரிந்து கொள்ளாமல் மறைத்ததால்*

மக்களின் அறியாமையைப் போக்குவதற்காகவும்.உண்மையை வெளிப்படுத்துவதற்காகவும்....

*கடவுளே உண்மையை உரைக்க இவ்வுலத்திற்கு வந்துள்ளார் வள்ளலார் !*

கடவுளே இவ்வுலகிற்கு வந்தாலும் மனித உருவம் தாங்கிதான் வரவேண்டும் என்பதுதான் இறைச்சட்டம்.

*வள்ளலார் உருவத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகை*!

வள்ளலார் பாடல் !

அகத்தே கருத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே
எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்னும் பாடலிலே தெளிவாக தெரியப்படுத்துகின்றார்..

உண்மையை உணர்த்த ஒரு மார்க்கம் வேண்டும் என்பதற்காக இறைவனே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்றுவிக்கின்றார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

அந்த உண்மை மார்க்கத்திற்கு தலைவன் யார் ? என்றால் தோற்றுவித்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தலைவன் ஆவார் !

வள்ளலார் பாடல்.!

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச் சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே

*சுத்த சிவ சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற் போற்றும் என் மார்க்கம் நின் மார்க்கமே !

சுத்த சன்மார்க்கம் என்பது இறைவன் படைத்த மார்க்கம்.இறைவன் படைத்த மார்க்கத்தில் உண்மைக்கு மட்டுமே இடம் உண்டு என்பதை தெளிவாக அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இறந்தவர்களை எல்லாம் எழுப்பி சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்கத்தின் கட்டளைப்படி பின்பற்றி வாழவைத்து அருளைப் பெற்று மரணத்தை வெல்லும்
வழியைக் காட்டுவதே இறைவனுடைய நோக்கமாகும்.

சுத்த சன்மார்க்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டுமானால் ..*பொய்யான சாதி.சமய.மதமான துன்மார்க்கங்களை தொலைக்க வேண்டும்.அழிக்க வேண்டும்* என்பதற்காக  1872. ஆம் ஆண்டு எல்லா மார்க்கத்தையும் அழித்து விட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..

பாடலை கவனியுங்கள் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்.சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்

என்மார்க்கம் நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார் மன்மார்க்கத்தாலே மகிழ்ந்து !

என்னும் பாடலிலே...சாதாரண மக்களாகிய உங்களுக்கு புரியாவிட்டாலும் வையகத்தில் வானகத்தில் மற்றகத்தில் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அரைகுறை ஆன்மீக அருளாளர்கள்  இந்த உண்மையை தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஏன் என்றால் மரணத்தை வெல்லும் வழிதெரியாமல்.முத்தி நிலை அடைந்த முத்தர்கள்.சித்தர்கள் யாவரும்  சித்தி நிலை அடையும் *உளவை*தெரிந்து கொண்டார்கள்.எனவே மகிழ்ச்சி அடைகின்றார்கள்..என்பதை சாதாரண அப்பாவி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் அருளைப் பெறும் *உளவை* வள்ளலாரிடம் சொல்லி அருளைப் பெறும் வழியைக் காட்டியவர் தான் நம் உண்மைத் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்...

தன்னிடம் உள்ள அருளை தம் குழந்தைகள் பெற்று மரணத்தை வென்று தம்மிடம் வரவேண்டும் என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆசையாகும் ஆணையாகும்...

அருளைப் பெறுவதற்கு தியானம் .தவம்.யோகம்.வழிபாடு இவைகள் எல்லாம் வேண்டாம் அதிலே மூழ்கிவிட்டால் மூடம் உண்டாகும் என்கிறார் வள்ளலார்  .மூடம் என்றால் மரணம் என்பதாகும்.

அதேபோல் குரு சிஷயன் போன்ற ஆண்டான் அடிமை என்ற பேதங்களும் வேண்டாம் என்கிறார்.

உத்தமர்தம் உறவு மட்டுமே வேண்டும்.உத்தமர் உறவு கிடைத்தால் தான் நீங்கள் உத்தமராக முடியும்.
அந்த உத்தமர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்...

 குரு என்பவரும் அவரே!

*மருட்பகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !*

மேலும்....

அகவலிலே இறுதியாக சொல்லுகிறார்..

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

*உயிர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்க வேண்டும்.*

*உத்தமர் தம் உறவு வேண்டும்*.

இந்த இரண்டு வழிகள் தான் *உளவு* என்பதாகும்.

உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவு அருட்பெருஞ்ஜோதி !

உயிர்களுக்கு வரும் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற இடையூறுகளை நீக்குவதே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

உத்தமர் தம் உறவு வேண்டும் என்பது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே உத்தமர் என்பவராகும்..

அவரிடம் தொடர்பு கொள்வதே *சத்விசாரம்* என்பதாகும்.

இந்த இரண்டில் முதலில் மிகவும் முக்கியமான உளவை வள்ளலார் பதிவு செய்கின்றார்..

பாடல் !
காலையிலே நின்றன்னைக் கண்டு கொண்டேன்.
சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்...
ஞானமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் ஏகா நினக்கு அடிமை ஏற்று !

தத்துவங்கள் கடந்து அதன்மேலே நடிக்கும் ஏகம் அனேகமாக எல்லா இடங்களிலும் நிறைந்து நடம் புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உம்மை தொடர்பு கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் பொருட்டு .அமுத காற்றை காலையிலே அனுப்புவதைக் கண்டு கொண்டேன்.  எனவே சன்மார்க்க சாலை வழியாக வந்து சாகா வரமும் பெற்றேன் என்கிறார்.

அதற்கும் மேலே சன்மார்க்க சாலை என்றால்.பசித்த ஏழைகளின் பசியைப் போக்கும் தருமச்சாலை என்னும் வழியைச் சாலை என்னும்  உளவைச் சொல்கின்றார்.

பாடலை உற்று கவனியுங்கள் !

என்பாட்டுக்கு எண்ணாததை எண்ணி இசைத்தேன் என்தன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான்

முன்பாட்டு காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்சாலையிலே வா என்றான் தான் !

நான் காலையிலே அமுதக்காற்றை சுவாசித்து அனுபவிக்கின்ற போது.எனது அறிவை விளக்கி தரும்ச்சாலை வழியாக வா என்று கட்டளை இட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்கிறார்..

தருமச்சாலை வழியாக வருவதையே உளவு என்கிறார் வள்ளலார்.

மேலும் ஒரு அற்புதமான பாடல் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம்

தருமச்சாலை யிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே

சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்

மா நடத்தரசே என் மாலை அணிந்தருளே !

மேலே கண்ட பாடலிலே எளிய நடையில் எளிய தமிழில் விளக்கம் தந்துள்ளார் .மேலும் விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்..

அடுத்த பாடலில் தான் உளவை வெளிச்சம் போட்டு பதிவு செய்கிறார் !

மாலையிலே உலகியலார்  மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே

காலையிலே கலப்பதற்கு இங்கு எனைப்  புறம் போ என்கின்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி

ஓலையிலே பொறித்ததை நீ உன்னுளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் *இவ் உளவு* அறாயாய்

தருமச்சாலையிலே சன்மார்க்க சங்கம் தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே !

சாதி சமய மதங்களை தோற்றுவித்தவர்கள் ஓலையிலே எழுதி வைத்துள்ள பொய்யான கருத்துக்களைப் படித்து அதிலே உழன்று கொண்டு உள்ளீர்கள் .ஆதலால் இந்த உளவை தெரிந்து கொள்ள முடியாமல் அலைந்து கொண்டுள்ளீர்கள்.

மாலையிலே கணவன் மனைவி உறவு கொள்வது வழக்கமாக கொண்டு உள்ளீர்கள்..அதனால் மாண்டு போகின்றீர்கள்.

நான் அமுதக் காற்றை சுவாசித்து. காலையிலே இறைவனுடன் கலந்து தருமச்சாலை வழியாக சென்று கொண்டு உள்ளேன்.

நீங்களும் தருமச்சாலை வழியாகவும்.சன்மார்க்க சங்க வழியாகவும் வந்தால் அந்த உண்மை உளவை அறிந்து. தெரிந்து புரிந்து கொள்வீர்கள் ....

இந்த உளவைத் தெரிந்து கொள்ள உலக படிப்பான சந்தைப் படிப்பை விட்டு நம் சொந்த படிப்பை படிக்க வேண்டும்.

சொந்த படிப்புத்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும் ...

*எனவேதான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதாகும்*.

கல்லார்க்கும்  கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

அருள் என்பது உலக கல்வி கற்று பெறுவது இல்லை...
இது அருள் கல்வி என்பதால் சாகாக் கல்வி என்னும் பெயர் சூட்டுகின்றார்.

அருள் கல்வி என்பது அன்பால்.தயவால்.கருணையினால் உயிர் இரக்கத்தால் கற்றுக் கொள்வதாகும்.

எனவேதான் ...

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சுவமே !

ஆரே என்னினும் இரங்கு கின்றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !

என்கிறார் வள்ளலார்..

மேலும்

உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே !

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே !

என்னும் உளவை தெளிவாகத் தெரியப்படுத்தி உள்ளார்.

ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால் அறிவு உண்டாகும்.அறிவு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் உண்டாகும்.ஒளி உடம்பால் கடவுளைக் காணும் வழி உண்டாகும் .கடவுளைக் கண்டால் மரணத்தை வென்று கொள்ளலாம்.

கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்..

இதுவே பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.

தொடரும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு