திங்கள், 29 ஏப்ரல், 2019

ஜீவ சமாதி என்றால் என்ன ?

*ஜீவசமாதி என்றால் என்ன ?*

ஜீவன் என்றால் உயிர்.. சமாதி என்றால் மரணம்.

உயிரை நிறுத்திக் கொண்டு மரணம் அடைவதற்கு ஜீவசமாதி என்று பெயர்.

இப்படி ஜீவசமாதி அடைவதால் எந்த பயனும் கிடையாது.

*மறுபடியும் அவர்களுக்கும் பிறப்பு உண்டு.*

இறைவன் அருள் பெற்று மரணம் அடையாமல் வாழ்ந்தால் மட்டுமே மீண்டும் பிறப்பு இல்லை.

உடம்பும். உயிர் என்ற ஜீவனும் முழுமையான அருள் பெற்று.உட்ம்பில் உள்ள அனைத்து பஞ்சபூத அணுக்களும்  ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றிக் கொண்டால் மட்டுமே..அதற்கு அருள் தேகம் என்றும் ஒளிதேகம் என்றும் பெயர்.

சமாதி பழக்கம் பழக்கம் அல்ல.சகஜ பழக்கமே பழக்கம் என்கிறார் வள்ளலார்.

*உலகில் சமாதி அடைந்த சித்தர்கள் காடுகளிலும்.
மலைகளிலும் .குகை களிலும் அமரந்தபடியே உயிர் அடக்கம் கொண்டவர்கள்*.

அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

இந்த பழக்கத்திற்கு சமய மதங்களில் முத்தி நிலை என்பார்கள்..

முத்தி நிலை வேறு சித்தி நிலை வேறு.

முத்தி என்பது முன்னுறு சாதனம் என்றும்.

சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்றும் வள்ளலார் சொல்லி உள்ளார்.

சாதனம் முதிர்ந்தால் சாத்தியம் கைகூடும்..

சாத்தியம் என்பது சித்தி நிலை அதாவது மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

மரணத்தை வென்றவர்கள் மட்டுமே இறைவனிடம்  தொடர்பு கொள்ள முடியும் .மீண்டும் பிறப்பு இல்லாமல் பேரின்ப சித்தி பெருவாழ்க்கை வாழ்வதற்கு வழி கிடைக்கும்..

எனவே ஜீவசமாதி என்பதும் ஒரு வகையான மரணம் தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உட்கார்ந்து கொண்டே உயிர் அடக்கம் கொள்வதால் உடம்பு மடங்காது அப்படியே கட்டைபோல் நின்றுவிடும் .

எந்த நிலையில் உயிர் அடக்கம் கொள்கிறதோ அப்படியே உடம்பு அமைந்து விடும்..

ஜீவசமாதி அடைவதால் அவர்களுக்கும் எந்த லாபமும் இல்லை.மக்களுக்கும் எந்த லாபமும் இல்லை..

வள்ளலார்பாடல் !

அந்தோ ஈததிசயம்
ஈததிசயம் என் புகல்வேன்

அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே

இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி

இதுகாட்டி அதுகாட்டி என் நிலையுங் காட்டிச்

சந்தோட சித்தர்கள் தந் தனிச்சூதுங் காட்டி

சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி

வந்தோடு நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி

மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மை எவர்க் குளதே.!

மேலே கண்ட பாடலில் சித்தர்களின் தனி சூதும் காட்டி புரிய வைத்தாய் என்கிறார் வள்ளலார்.

மேலும் சாகாத நிலைக்காட்டி சகஜ நிலையும் காட்டி புரிய வைத்தாய் என்று.உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றுகிறார்.

மேலும் கடும் தவம் செய்த சித்தர்களுக்கும் அருள் கிடைக்கவில்லை .
இறைவன அவர்களுக்கு தன் உண்மை சொரூபத்தைக் காட்டவில்லை என்று பின் வரும் பாடலிலே பதிவு செய்கிறார்.

*ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற யோகம்.தவம்.தியானம்.வழிபாடுகள் யாவும் வெற்று மாயா ஜாலங்களே என்கிறார் வள்ளலார்*.

மகாதேவமாலை பாடல் 55.../

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்

பொற்பற மெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்பட ஐம் பொறியை ஓம்பி

நிற்பவருக் கொளித்து மறைக் கொளித்து யோக

நீண்முனிவர்க் கொளித்து அமரர்க் கொளித்து மேலாம்

சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்

திருவாளர் உட்கலந்த தேவ தேவே.!

என்னும் பாடலிலே தெளிவுபட விளக்கம் தருகிறார் வள்ளலார்.

இவற்றை எல்லாம்  மக்கள் புரிந்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.

கண்மூடித்தனமாக பழக்கத்தை போற்றி புகழ் வேண்டாம். என்றும் அவைகளை பின்பற்ற வேண்டாம்  என்றும் சொல்கிறார்.

நமக்கு உண்மையான மார்க்கத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார்  மூலமாக தந்து உள்ளார்..

*அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும்..*

அதுதான்.உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் எடுத்த மக்கள் கடைபிடிக்க வேண்டிய திருநெறி என்பதாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனை யாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலிலே இருள் நெறியான மருள் நெறியில் வீழ்ந்து காலத்தை வீண் விரையம் செய்யாமல்.

அருள் நெறியைக் கடைபிடித்து வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்...

*உலகில் உண்மையான ஒரே அருள் நெறி சுத்த சன்மார்க்க நெறி என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு