திங்கள், 20 மே, 2019

வள்ளல் பெருமானுக்கு எல்லாம் தெரியும் !

*வள்ளல் பெருமானுக்கு எல்லாம் தெரியும் !*

வள்ளலார் சமய.மதத்தில் இருந்துதான் சன்மார்க்கதிற்கு வந்தார் என்று சன்மார்க்கிகளும்.மற்ற  சமய மதத்தார்களும் நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்கள்..

*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்* என்பதை மறந்து பேசிக் கொண்டு உள்ளார்கள்..

வள்ளலார் ஆரம்பத்தில் சமயத் தெய்வங்களை வழிபடுவதும்.சமயத் தெய்வங்கள் மீது பாடல் இயற்றுவதும்..மக்களை தன் வசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக .அவர் நடித்த உண்மை நாடத்தின் ஒரு பகுதியாகும்..

அவரே பின்னாளில் பாடலில் பதிவு செய்கிறார்...!

*படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய்*

*நீயே படிப்பிக்க வைத்தாய் அன்றியும் அப்படிப்பில் இச்சை*

*ஒடித்தேன் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின்*

*உள்ளபடியே துணை என  நான் உறுதியாகப் பிடித்தேன்*

*மற்ற அதுவும் நீ பிடிப்பித்தாய் இப்பேதையேன்*

*நின் அருளைப் பெற்றோர் போல*

*நடித்தேன் எம் பெருமான் இது ஒன்றும்*

*நானே நடித்தோனோ அல்லது நீயே நடிப்பிக்க வைத்தாயோ !*

என்று மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்டி வைக்க வள்ளலார் ஆடுகின்றார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்..

மேலும் ஒரு பாடலிலே பதிவு செய்கின்றார்..!

*பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்*

*கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை*

*ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்*

*ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.!*

வள்ளலார் செய்யும் செயல் அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படியே செய்து வருகின்றார்..

உண்பது.உறங்குவது.பாடுவது.வணங்குவது.பேசுவது. எழுதுவது எல்லாமே ஆண்டவர் சொல்படிதான் செய்து கொண்டு வருகின்றார் என்பதை அறிவுள்ள சன்மார்க்கிகள் முதலில் தெரிந்து கொண்டால் தான்.மக்களிடம் உண்மை நிலையை சொல்ல முடியும்.சுத்த சன்மாக்கத்தை விதைக்க முடியும்.

மேலும் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில்* உரைநடைப் பகுதியில் தெளிவாக பதிவு செய்கிறார்....!

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே!

குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து.

 அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

*அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்*.

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.

*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்*

. *வாலிபப்பருவம் தோன்றிய போதே* சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்,

*அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,*

 உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். அன்றியும்

*வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் *பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை* முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல்

*எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் *சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து*

 எக்காலத்தும் நாசமடையாத *சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம்* என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்.

* *கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்*

* கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி*
 முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி

*நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும்,* நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது *அகத்தினும் புறத்தினும்* இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.

*இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!*

மேலே கண்ட விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி உள்ளார்..

நாம் கண்டபடி மேடைகளில் உளறாமல் .நமக்குத் தெரிந்தை மட்டும் வைத்துக் கொண்டு.சாதி. சமய மதக் கொள்கைகளையும்.
சுத்த சன்மார்க்கத்தையும் இணைத்து மக்களை குழப்ப வேண்டாம்...

என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

திருஅருட்பாவை நன்கு படியுங்கள் தெளிவு அடையுங்கள்.உண்மை அறிந்து அருளைப் பெற முயற்சி செய்யுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..






 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு