சனி, 18 மே, 2019

பேரின்ப லாபத்தின் பெருமை !

மரணம் அடையாமல் வாழ்பவர்களின் நிலைப்பாடு.!

இவ்வுலகில் மரணத்தை வென்ற மகான் ஒருவரே ! அவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் பெற வேண்டிய லாபமே மரணத்தை வெல்லுவதுதான்.அதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மனிதப்பிறப்பு என்னும் உயர்ந்த பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்ம லாபம் என்று பெயர்.

அந்த லாபம் மூன்று வகைப்படும்.

1.இம்மை இன்ப லாபம்.
2.மறுமை இன்ப லாபம்
3.பேரின்ப லாபம்

என மூன்று வகையாக உள்ளன.

முதலில் நமது வாழ்க்கை வள்ளலார் சொல்லிய வழிக்காட்டிய வண்ணம்  நேர்மை.உண்மை.ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் சுத்த தேகமாக மாற்றம் அடையும்.

அந்த அருளை விரயம் செய்யாமல் வாழ்கின்ற போது அடுத்த கட்டமாக பிரணவ தேகமாக மாற்றம் அடையும்.

மேலும் அருளை விரயம் செய்யாமல் வாழ்கின்ற போது தான் மரணத்தை வெல்ல முடியும்..அதற்கு முத்தேக சித்தி என்றும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் பெயர்.

இவைகள் எல்லாமே ஆன்ம லாபம் என்று பெயர்.

அந்த பேரினப ஆன்ம லாபம் அடைந்தவர் பெருமை !

எப்படி இருக்கும் என்பதை வள்ளலார் விளக்குகின்றார்.

👉யாவும் தாமாய் விளங்குவது அவர் தேகம் ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் உலாவும்

👉தோல்,நரம்பு,எலும்பு,
தசை,இரத்தம்,சுக்கிலம் முதலிய அசுத்த பூதகாரியங்களும்,அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்

👉பொன்வடிவாக தோன்றுதல் மாத்திரமே அன்றி,ஆகாயம் போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரணவ தேகத்தையும், தோன்றப்படுதலும் இன்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்

👉உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்,புறத்தே மண்,கல் முதலியவற்றால் எறியினும்,அவை அவர் வடிவை தாக்குவனவல்ல

👉உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்,புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது

👉உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்,புறத்தே நெருப்பில் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல

👉உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்,புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித்து அசைக்க மாட்டாது

👉உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்,புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது

👉அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும்,வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும்,பார்த்தல், பேசுதல் முதலிய விஷயங்களை பற்றுவனவல்ல

👉தயையினால் விஷயங்களை பற்றவேண்டில்,சுவர்,மலை முதலிய தடைகள் அவர் கண்களை மறைப்பனவல்ல

👉அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்து இருந்தே கண்டறியும்

👉அண்ட பிண்டங்களில் எவ்விடத்திலிருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்தில் இருந்தே கேட்டறியும்

👉எவ்விடத்து இருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த இடத்திருந்தே சுவைத்தறியும்

👉எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்தவிடத்திருந்தே பரிசித்தறியும்

👉எவ்விடத்தில் இருக்கின்ற சகந்தங்களையும் அவர் நாசி இருந்த இடத்திருந்தே முகந்தறியும்

👉எவ்விடத்தில் இருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்திருந்தே கொடுத்தல் கூடும்

👉எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்தவிடத்திருந்தே நடத்தல் கூடும்

👉அவரது வாக்கு எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர்களோடும் இருந்த இடத்திருந்தே பேசுதல் கூடும்

👉அவரது மற்ற இந்திரியங்கள் இருந்த இடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும்

👉அவரது மனம் முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல

👉தயவினால் பற்றத் தொடங்கில் எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்

👉அவரது அறிவு ஒன்றையும் சுட்டியறியாது,தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்ல அண்டங்களையும்,எல்லா உயிர்களையும், எல்லாப் பண்புகளையும், எல்லா அனுபவங்களையும் எல்லாப் பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டியறியும்

👉அவர்கள் நிர்க்குணத்தராவார்கள்,உள்ளே தாமச இராசத சாத்துவிகம் முதலிய முக்குணங்களாலும் விகாரப்படார்கள், புறத்தே அவரது குணங்கள் கரணங்களை  ப் பற்றுவனவல்ல

👉உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்,புறத்தே அவரது பிரகிருதி குணங்களை பற்றுவனவல்ல

👉உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்,புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது

👉உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்,புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது

👉காலம்,வித்தை,ராகம்,புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை

👉மாயையால் பேதப்படார்கள்,சுத்த மகாமாயையைக் கடந்து அதன்மேல் அறிவுருவாக விளங்குவார்கள்

👉ஆகாரம்,நித்திரை,மைதுனம்,பயம் என்பவைகளால் தடைபடார்கள்

👉அவர்கள் தேகத்திற்க்கு சாயை,வியர்வை,அழுக்கு,நரை,திரை,மூப்பு,இறப்பு முதலிய குற்றங்கள் உண்டாவனவல்ல

👉பனி,மழை,இடி,வெயில் முதலியவற்றாலும்,இராக்கதர்,அசுரர்,பூதம்,பிசாசு முதலியவற்றாலும்,தேவர்,முனிவர்,மனிதர்,நரகர்,மிருகம்,பறவை,ஊர்வன,தாவரம் என்பவைகளாலும்,எவ்விடத்தும்,எக்காலத்தும், அவர் தேகம் வாதிக்கப்படாது

👉கத்தி,வாள் முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது

👉எல்லா அண்டங்களும் அணுக்கள்போலச் சிறிதாகத் தோன்றுதலும்,எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோன்றுதலும் அவர் தேகத்திற்கு சாத்தியம்

👉இறந்தாரை எழுப்புதல்,வார்த்திபரை வாலிபராக்கல் முதலிய கரும சித்திகளும்,யோக சித்திகளும்,ஞான சித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்

👉சிருஷ்டித்தல்,காத்தல்,
அழித்தல்,மறைத்தல்,அனுக்கிரகித்தல் என்கின்ற ஐந்தொழில்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்

👉பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்

👉அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும்,அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்,அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்

👉சர்வ சக்தியும் உடையவர்களாய்,எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ஆணவம்,மாயை,கன்மம் என்னும் மும்மலங்களும்,அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய் பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்

👉சடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர்பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்

👉அவரது பெருமை வேதாந்த,சித்தாந்த,கலாந்த,போதாந்த,நாதாந்த,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும்,அவற்றைக் கடந்தும் விளங்கும்..

இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகும்

இந்த நிலையை அடைந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் வள்ளலார்.

மனித தேகம் பெற்ற அனைவரும் இந்த பேரின்ப லாபத்தை அடைய வேண்டும் என்பதே..சுத்த சன்மார்க்கம் காட்டும் சாகாக்கல்வி யாகும்.

நல்லதை செய்வோம் நலம் பெற வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு