வியாழன், 20 ஏப்ரல், 2017

வள்ளலாரின் அருள் அறிவு விஞ்ஞானம் ! பாகம் 3,,


வள்ளலாரின் அருள் அறிவு விஞ்ஞானம் ! பாகம் 3,,

அருட்பெருஞ்ஜோதியர் என்பவர் யார் ?

இயற்கையில் தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும் !
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் !
இரண்டும் படாத பூரண இன்பம் ஆனவர் என்றும் !

அதற்கு வள்ளலார் சொல்லுகின்ற விளக்கம்  ... இயற்கை உண்மை  என்றும் .இயற்கை விளக்கம் என்றும் ..இயற்கை இன்பம் என்றும் சொல்லு கின்றார் ! .

அவர் என்ன செய்து கொண்டு உள்ளார் ?

எல்லா அண்டங்களையும்,
எல்லா உலகங்களையும்,
எல்லாப் பதங்களையும்,
எல்லாச் சத்திகளையும்
எல்லாச் சத்தர்களையும்
எல்லாக் கலைகளையும்
எல்லாப் பொருள்களையும்
எல்லாத் தத்துவங்களையும்
எல்லாத் தத்துவிகளையும்
எல்லா உயிர்களையும்
எல்லா செயல்களையும்
எல்லா இச்சைகளையும்
எல்லா ஞானங்களையும்
எல்லாப் பயன்களையும்
எல்லா அனுபவங்களையும்

மற்றை எல்லா வற்றையும் தமது ''திருவருள் ''சத்தியால் தோற்றுவித்தல் ...வாழ்வித்தல் ...குற்றம் நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல் ..விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்

எல்லாம் ஆனவர் என்றும்
ஒன்றும் அல்லாதவர் என்றும்
சர்வ காருண்யர் என்றும்
சர்வ வல்லபர் என்றும்

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு ,உயர்வு இல்லாத தனிப் பெருந்தலைமை '''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த ''சுத்த மெய் அறிவு ''என்னும் பூரணப் பொது வெளியில் ,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .என்பதை வள்ளலார் மிகவும் அழுத்தம் திருத்தமாக மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார் ..

சுத்த மெய் அறிவு என்னும் ,''பூரணப் பொது வெளியில்'' இருந்து கொண்டு  அருட்பெருஞ்ஜோதியர் என்னும் உண்மைக் கடவுள் இயங்கிக் கொண்டும்,இயக்கிக் கொண்டும் உள்ளார் என்பதை நாம் அறிந்து,புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர் இயங்கும்  ''பூரணப் பொது வெளியைப்'' பற்றி திரு அருட்பா ஆறாம் திருமுறையில் ''பதி விளக்கம் ''என்ற தலைப்பில் பாடல் வாயிலாக பதிவு செய்து உள்ளார் !

வண்ணம் மிகு பூத வெளி ,பகுதிவெளி ,முதலா
வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளியாகி
எண்ணம் முறு மாமவுன வெளியாகி ,அதன்மேல்
இசைத்த பர வெளியாகி ,இயல் உபய வெளியே
அன்ண்ணூறு சிற் பர வெளியாகத் தற்பரமாம் வெளியே
அமர்ந்த ''பெரு வெளியாகி'' அருள் இன்ப வெளியாத்
திண்ணம் உறும் ''தனி இயற்கை உண்மை'' வெளியான
திருச்சிற்றம்பலம்  தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்த
கொண்ட வெலாங் கொண்ட வெலாங் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த  ''வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாய்''
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !


என்றும் மேலும் ..அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்ற தலைப்பில் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரும் தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி எனரசே !

என்னும் பாடல் வாயிலாக ,''பூரணப் பொது வெளியைப்'' பற்றி பதிவு செய்கின்றார் ..

மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் விளக்கம் தருகின்றார்.!

உரை மனம் கடந்த ஒரு பெரு வெளிமேல்
அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி !

சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளி எனும்
அத்தகைச் சிற்சபை  அருட்பெருஞ்ஜோதி !

சுத்த மெய் ஞான சுகோதய வெளி எனும்
அத்து விதச்சபை அருட்பெருஞ்ஜோதி !

தூய கலாந்த சுகம் தரு வெளி எனும்
ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !

ஞான யோகாந்த நடத்திரு வெளி எனும்
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

விமல போதாந்தமாய் மெய்ப்பொருள் வெளி எனும்
அமலச் சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !

பெரிய நாதாந்தப் பெரு நிலை வெளி எனும்
அறிய சிற்றம்பலத்தே அருட்பெருஞ்ஜோதி !

சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

சுத்த சிந்தாந்த சுகப் பெரு வெளி எனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

தகர மெய்ஞ் ஞானத் தனிப் பெரு வெளி எனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி !

தத்துவா தீத தனிப்பொருள் வெளி எனும்
அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !

சச்சிதானந்தத் தனிப்பர வெளி எனும்
அச்சியல் அம்பலத்தே அருட்பெருஞ்ஜோதி !

சாகாக் கலை நிலை தழைத்திடு வெளி எனும்
ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !

காரண காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

ஏகம் அனேகம் எனப்பகர் வெளி எனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

வேதம் ஆகமங்களின் விளைவுகளுக்கு எல்லாம்
ஆதாரமாஞ் சபை அருட்பெருஞ்ஜோதி !

சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
அமையும் திருச் சபை அருட்பெருஞ்ஜோதி !

சாக்கிரா தீதத் தனி வெளியாய் நிறை
வாக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

என்னும் அருட்பா அகவல் வரிகளில்  அருட்பெருஞ்ஜோதியர் என்னும் இயற்கை உண்மைக் கடவுள் இயங்கும் ''அருட் பெரு  வெளியைப்'' பற்றி தெளிவாக விளக்கி உள்ளார். இவைப்போல் பலப்பாடல்களில் அருட்பெருஞ்ஜோதியர் இருக்கும் இடமான அருட்பெரு வெளியைப் பற்றி,அருள் அறிவால் கண்டு,அதனுள்  கலந்து உலக மக்களுக்குத் தெரிவிக்கின்றார் நமது அருட் தந்தை வள்ளலார் .

மேலும் அண்டங்களையும்,உலகங்களையும் அவற்றில் உள்ளப் பொருள்களையும்,உயிர்களையும், எதற்க்காக? ஏன் ?   எவ்வாறு, படைத்தார் என்ற அருள் ரகசியம் பற்றி  ,அருள் அறிவு விஞ்ஞானத்தைப் பற்றி பார்ப்போம். .
தொடரும் ;---

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு