செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

விந்து நாதம்,பரவிந்து பரநாதம் இரண்டு வகை !

விந்து நாதம்,பரவிந்து பரநாதம்  இரண்டு வகை !

நமது உடம்பில் இரண்டு விந்து ,இரண்டு நாதம் உள்ளது ,...
ஒன்று பொருளினால் உண்டாவது ,ஒன்று அருளினால் உண்டாவது.
ஒன்று ஆன்மா என்னும் உள் ஒளியில் தோன்றுவது .
ஒன்று உடம்பில் உள்ள மூல ஆதாரத்தில் உள்ள  குண்டலினியில் இருந்து  தோன்றுவது.

மனிதர்களின்  ஆண், பெண் உறவினால்,அன்பு மிகுந்த காதல் என்னும் காமத்தினால்,உயிர் இன்பம் உடல் இன்பம் வெளிப்பட்டு ,இடைவிடாத சேர்க்கையால் அங்கே உஷ்ணம் உண்டாகி ,அந்த உஷ்ண   இன்பத்தினால் வெளியே வருவது விந்துவும்,நாதமும் ..அதனால் கரு உண்டாகி குழந்தை பிறக்கும்., அந்த இன்ப சேர்க்கை  இல்லாமல் எந்த உயிரும் தோன்றாது.இதற்கு சிறிய இன்பம் ,அதாவது சிற்றின்பம் என்று சொல்லப்படுவதாகும்.அதன் துணை இன்பங்கள் நிறைய உள்ளன.

 அந்த  இன்பத்தினால் உண்டான உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்து  கொண்டே உள்ளன ஏன்?

அந்த சிற்றின்பம் அனைத்து மக்களுக்கும் ,அனைத்து உயிர் இனங்களுக்கும்,ஒரே  தன்மை உடையன, இந்த இன்பம் அனுபவிக்கின்ற வரை,பசி,பிணி,தாகம்,இச்சை எளிமை,பயம்,கொலை ,மரணம் , பிறப்பு இறப்பு போன்ற துன்பங்கள்  வந்து கொண்டே இருக்கும்.இது எதனால் வருகின்றது என்றால் நாம் உண்ணும் பொருள் உணவினால் ,விந்தும்,அதனால் தோன்றும் நாதம்  என்னும் சப்தமும்   நம் உடம்பில் தோன்றுகின்றது..அடுத்து அடுத்து   விந்து வெளியே வர வர ,உடம்பும் அதில் உள்ள உறுப்புக்களும் தேய்மானம் உண்டாகி வயது முதிர்ந்து இறுதியில் விந்தும் நாதமும் நின்றுபோய்,அதாவது அடைப்பட்டு உயிர் பிரிந்து மரணம்  வந்து விடுகின்றது..

இதைத்தான் வள்ளலார் பாடலில் பதிவு செய்கின்றார் !

சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவாரைத் துணிந்து கொள்ளக்
கூற்றாசைப் படும் என நான் கூறுகின்றது உண்மை இனிற் கொண்டு நீவிர்
நேற்றாசைப் பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழைப் பெசுவீரே ! .......என்றும்.

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன்
துன்னு நற் தவம் எலாம் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப் போம் என்
அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையிற்
பொருந்திய கார சாரஞ் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
தங்கினேன் என்செய்வேன் எந்தாய் !

என்று வள்ளலார் மக்களுக்குத் தெரியப் படுத்து கின்றார் .
நாம் உண்ணும் உணவினால் விந்து நாதம் உண்டாகி இறைவன் இடத்தில் தொடர்பு கொள்ள முடியாமல் ,சிறிய இன்பத்தை அனுபவித்து மரணத்தை தழுவிக் கொண்டே உள்ளோம் .

மரணத்தை வெல்ல வேண்டுமானால் பர விந்துவையும், பர நாதத்தையும் பெற வேண்டும் அவற்றை அனுபவிக்க வேண்டும்.

பரவிந்து ,பரநாதம் எங்கு உள்ளது ?

நமது உடம்பில் நம்மை இயக்கும் , அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியில் பரவிந்து உள்ளது ..ஆணும் பெண்ணும் உடல் உறவு கொண்டு இன்பத்தை அனுபவிப்பது போல் ,ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும்  உறவு கொள்ள வேண்டும்.இடைவிடாது  தொடர்பு கொள்ள வேண்டும் ,அந்த உறவினால் அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகி,திரைகள் விலகி  ஆன்மாவில் பரநாத ஒளி உள்ளே  நுழையும் ,அந்த பர நாத ஒளியால் பரவிந்து சுரக்கும் அதற்குப் பெயர்தான் அருள் என்பதாகும்,.அருள் சுரக்கும் போது அனுபவிக்கும்  இன்பத்தை பேரின்பம் என்று சொல்லப்படும்.,அதற்கு இயற்கை இன்பம் என்றும் சொல்லப்படும்.

அந்த அருள் இன்பத்தினால் இந்திரியம் ,கரணம்,ஜீவன்,ஆன்மா என்னும் நான்கு பகுதிகளும் இன்பம் அடைந்து ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.அதுவே மரணம் இல்லாப் பேரு வாழ்வாகும் .

இயற்கை இன்பம் எது என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இடம் பெறும் இந்திரிய இன்பம், கரண இன்பம், உலக
இன்பம், உயிர் இன்பம், முதல் எய்து இன்பமாகித்
தடம் பெறுமோர் ஆன்ம இன்பம், தனித்த அறிவு இன்பம்
சத்திய பேரின்பம்,முத்தி இன்பமுமாய்,அதன்மேல்
நடம் பெறும் மெய்ப் பொருள் இன்பம்,நிரதிசிய இன்பம்
ஞான சித்திப் பெரும் போக நாட்டரசின் இன்பமுமாய்த்
திடம் பெற வோங்கிய '''இயற்கைத் தனி இன்ப மயமாம்'''
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

இயற்கை  உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொண்டு அனுபவிப்பதே உண்மையான  இன்பம் என்றும்,அந்த இயற்கை  இன்பத்தை அனுபவிப்பவர்களுக்கு என்ன என்ன இன்பங்கள் கிடைக்கும் என்பதை வள்ளலார் மேலே கண்ட பாடலில் விளக்கமாகத் தெரியப் படுத்தி உள்ளார்.

மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அணைந்து அடைந்த சுகத்தை அனுபவமாலை என்ற பகுதியின் இரண்டாவது பாடலில் தெரியப் படுத்து கின்றார் .

கண்ணுறங்கேன் உறங்கினும் என் கணவரோடு கலக்கும்
கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவின்
எண்ணடங்காப் பெருஞ்ஜோதி என்னிறைவர் எனையே
இணைந்து இரவு பகல் காணா இன்புறச் செய்கின்றார்
மண் உறங்கும்,மலை உறங்கும் ,மலை கடலும் உறங்கும்
மற்றும் உள எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது
பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார்
பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்திலரே !

மேலும் என்னைப்போல் எவரும் அருட்பெருஞ்ஜோதியை அனுபவிக்க வில்லை என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள் என்பதனை விளக்கும் பாடல்.

எல்லாம் செய் வல்லதுரை என்னை மணம் புரிந்தார்
எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடுரை நீ தோழி
நல்லாய் மீக் கூற்று உடையார் இந்திரர் ,மாமுனிவர்
நான்முகர் ,நாரணர் எல்லாம் வான் முகராய் நின்றே
பல்லாரில் இவள் புரிந்த பெருந்தவத்தை நம்மாற்
பகர்வது அரிது என்கின்றார் சிற்பதியில் நடம்புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே
வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே !

என்னும் பாடல்வாயிலாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

எனவே விந்து நாதம் ,என்பதும் பரவிந்து பரநாதம் என்பதும் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்..இரண்டிற்கும் வீரியம் உண்டு .இரண்டிற்கும் இன்பம் உண்டு ,ஒன்று அழியும் இன்பம் ,...ஒன்று அழியா இன்பம்
ஆண் பெண் இருவரும்  அனுபவிப்பது சிற்றின்பம் அவற்றில் விந்து நாதம்  சுரக்கும் குழந்தைப் பிறக்கும்...அருட்பெருஞ்ஜோதியும்  ஆன்மாவும் அனுபவிப்பது பேரின்பம் அவற்றில் அருள் சுரக்கும் மீண்டும் பிறப்பு இல்லாமல் மரணத்தை வெல்லலாம் .

அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது !

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்றெலாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே !
அருள் பெறின் ஒரு துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருளிது எனவே செப்பிய சிவமே !
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எலாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !
அருள் சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ்சுகம்
மருட் சுகம் பிற வென வகுத்த மெய்ச்சுகமே !

அருளே நம்குலம் அருளே நம் இனம்
அருளே நாமறிவாம் என்ற சிவமே
அருளே நம் சுகம் அருளே நம் பெயர்
அருளே நாமறிவாம் என்ற சிவமே
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுதம் உண்டனை
அருண்மதி வாழ்க என்று அருளிய சிவமே
அருள் நிலை பெற்றனை அருள் வடிவு உற்றனை
அருள் அரசு இயற்றுக என அருளிய சிவமே !

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி யோடு கலந்து,இன்பத்தை அடைந்து அருளைப் பெற்று,ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு,மரணத்தை வென்று  பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு ஐந்தொழிலையும் செய்து கொண்டு உள்ளார் .நாமும் அவர் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் சென்று அருட்பெருஞ்ஜோதி யுடன் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று,பேரின்பத்தை அடைந்து மரணத்தை  வென்று வாழ்வோம் ..

விரிக்கில் பெருகும் ....தொடரும் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

1 கருத்துகள்:

6 மார்ச், 2020 அன்று PM 1:41 க்கு, Blogger குருவே துணை கூறியது…

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு