சனி, 4 பிப்ரவரி, 2017

பசிக்கு சாதி சமயம் மதம் என்ற பேதம் தெரியாது.!

பசிக்கு சாதி சமயம் மதம் என்ற பேதம் தெரியாது.!


பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம் - சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவர்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.

பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும் பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும். ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

மோட்ச வீட்டின் கதவை திறக்க சாவி வேண்டும்.சாவியைப் பெற்றுக் கொள்வது தான் ஜீவகாருண்யம்.ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப் படுகின்ற.பக்தி தியானம்.தவம்.யோகம் போன்ற எச்செயல்களாக இருந்தாலும் வெற்று மாய ஜாலங்கள் என்கிறார் வள்ளலார்.

பசி என்பது. எல்லா உயிர்களுக்கும் பொதுவாக. இறைவனால் கொடுக்கப்பட்ட உபகாரக்கருவி. எனவே ஜீவர்களுக்குப் பசியைப் போக்குகின்ற போது.நம்முடைய பசியை இறைவன் போக்குவார்.

நம்முடைய பூத உணவான பொருள் உணவு உட்கொள்ளுகின்ற வரை.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகாது.திரைகள் விலகாதவரை. அருள் உணவு ஆன்மாவில் இருந்து சுரக்காது.

ஜீவகாருண்யம் என்பது இயற்கையாக செயல் பட வேண்டும். செயற்கையாக செயல்படக்கூடாது.

அதனால் தான் வள்ளலார் "' எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞாஜோதி'''  என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

இயற்கை என்பது சாதி.சமயம்.மதம்.உற்றவர்.பெற்றவர்.் உறவினர் நண்பர்.போன்ற எந்த பேதமும்் இல்லாமல் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பதை அறிந்து செயல்படுவதுதான் இயற்கை என்பதாகும்.

இறைவன் இயற்கை உண்மையானவன்.அதேபோல் நாமும் இயற்கை உண்மையுடன். பின்பற்ற வேண்டும்.

அருள் இயற்கை விளக்கமானது.இயற்கை இன்பமானது.

இயற்கை உண்மையுடன் ஜீவகாருண்யம் செய்தால் மட்டுமே இயற்கை விளக்கமான அருள் சுரக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே.இயற்கை இன்பம் கிடைக்கும். செயற்கை உடம்பானது இயற்கை உடம்பான ஒளிதேகமாக மாற்றம் அடையும்.

அதன் பின்பு கிடைக்கும் இன்பம்தான் இயற்கை இன்பம் என்பதாகும்.அதற்கு பெயர்தான் .பேரின்ப பெருவாழ்வு என்பதாகும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இந்த இன்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்பது தான் வள்ளலாரின் பேராசையாகும். இறைவன் விருப்பமும் இதுவேயாகும்.

வள்ளலாரின் அருள் வாய்மையை பின்பற்றி வாழ்ந்து காட்டுவோம்.மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு