சனி, 30 ஜூலை, 2016

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !
ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையாலும் ஊழ் வினையாலும் சத்தியமாக வராது ?
ஜீவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை மனைவி தடுத்தாலும்.பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,தந்தையைப் பிள்ளைத் தடுத்தாலும் ,சிஷ்யரை  ஆசாரியர் தடுத்தாலும்,---அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,--குடிகளை அரசன் தடுத்தாலும்,;--அந்த தடைகளால் சிறிதும் தடைபடாமல் அவரவர்  செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லாது வேறிடத்தில் போகாது என்பதை ,உண்மையாக நம்பி,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டும் என்றும் அறிய வேண்டும்.
உள்ளபடி பசியால வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுக்க நினைத்த போது,நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியரகளை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறமும், கீழும் மேலும்,நடுவும் பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற ,''கடவுள் விளக்கத்தையும்'' ,''திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும்'' பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.
ஆதலால் அந்தப் புண்ணியர்கள் ''கடவுளைக் கண்டவர்கள்'' என்றும்,கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும்,அறிய வேண்டும்.பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறியவேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசி என்கின்ற அபாயத்தில் நின்றும் நீங்கச செய்கின்ற உத்தமர்கள் எந்த ஜாதியாராயினும் ,எந்தச் சமயத்தாராயினும் எந்தச் செய்கையை உடையவர்களாயினும்,... தேவர்,.முனிவர்..சித்தர் ..யோகியர்..முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்பு உடையவாகள் என்று சர்வ சக்தியை உடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.;---
ஜீவ காருண்யத்தின் வல்லபம் யாது ? என்று அறிய வேண்டில் !
உயிர்களுக்கு இன்பம் உண்டு பண்ணுவதே அதன் பிரயோஜனம் என்று அறிய வேண்டும்.
ஜீவ காருண்யத்தின் சொரூப ரூப சுபாவம் வியாபகம் ''அருளைப் பெரும் வழியாகும் "' அதற்கு மேல் மோட்ச வீட்டின் திறவு கோல் ,ஜீவ காருண்யத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதற்கு மேல் இறைவன் மீது அசைக்க முடியாத அன்பு வேண்டும்.அந்த தெய்வம் சமய மதங்களில் சொல்லும் தெய்வங்கள் அல்ல என்பதை உண்மை அறிவால்  அறிந்து கொள்ள வேண்டும்.அந்த உண்மையான தெய்வம் வள்ளலார் காட்டிய ,அறிமுகப் படுத்திய  ''அருட்பெருஞ் ஜோதி '' ஆண்ட்வராகும்.
அந்த தெய்வம்தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் .அந்த தெய்வத்தை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்...அந்த தெய்வம் நமது சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 
கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகீர் 
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது 
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர் 
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் 
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின் 
செரித்திடு ''சிற்சபை'' நடத்தைத் தெரிந்து துதித்திடுமின் 
சித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே !
மேலே கண்ட பாடலில் சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகின்றார் .ஒரே கடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,அவர் சிற்சபை என்னும் ஆன்மாவில் ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் அவரைத் தொடர்பு கொண்டு துதிக்க வேண்டும் என்கின்றார் ..
சுத்த சன்மார்க்கிகள் உண்மையைப் புரிந்து கொண்டு செயல் பட்டால் எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும் ..புரிந்து கொண்டால் சரி ....  .  
திருஅருட் பிரகாச வள்ளலார் . 
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு