புதன், 15 ஜூன், 2016

ஆன்மா என்பது வேறு ! உயிர் என்பது வேறு ! உடம்பு வேறு !

ஆன்மா என்பது வேறு ! உயிர் என்பது வேறு ! உடம்பு வேறு !

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்து விட்டு,அழியாத அருளைப் பெற்று  மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி செல்ல வேண்டும் என்பதுதான் இறைவனின் சட்டம் கட்டளை !.
ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்ய வேண்டுமானால்,தனித்து செயல்பட முடியாது அதற்கு வேண்டிய வசதிகளை மாயை செய்து கொடுக்க வேண்டும் மாயையால்  உ.யிரும் உடம்பும் கொடுக்கப் படுகின்றது .
ஆன்மா இந்த உலகத்தில் சுற்றுலா செய்வதற்கு  உயிரும் உடம்பும் மாயையினால் கட்டிக் கொடுக்கப்படுகின்றது.
ஆன்மாவிற்கு முதலில் உயிர்  கொடுத்து, தாவரம்,ஊர்வன, ,பறப்பன,நடப்பன,தேவர்,நரகர் ,மனிதர் போன்ற ஏழு வகையான உடம்பு கொடுக்கப்படுகின்றது.
உயிர் ஒன்றுதான் ஆனால்  உடம்புகள் வேறுவேறாக கட்டிக்  கொடுக்கப்படுகின்றது.
பல பிறவிகள் எடுத்து இறுதியாக மனித தேகம் கொடுக்கப் படுகின்றது.
ஆன்மாவிற்கு கடைசியாக மனிதப் பிறப்புக் கொடுக்கப்படுகின்றது.மனிதப் பிறப்பில் மட்டுமே  .அறம்.பொருள் ,இன்பம்,அனுபவித்து பின் வீடுபேறு அடைய வேண்டும்.
வீடுபேறு என்பது எங்கு இருந்து வந்ததோ அங்கே திரும்பி செல்லவேண்டும்.அதுதான்  சொந்த வீடு என்பதாகும் .இங்கு வாழ்ந்து  வந்த வீடு வாடகை வீடு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒளி அணுக்களால் கட்டிக் கொடுக்கப் பட்ட வீடு !
ஆன்மாவிற்கு மாயையால் கட்டிக்  கொடுத்த உயிரையும்,உடம்பையும், அழிக்காமல்,அதை ஒளியாக மாற்றி திருப்பி மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஏன் என்றால் ? ஒளி அணுக்களைக் கொண்டுதான் உயிரும். உடம்பும்,கட்டிக் கொடுக்கப் படுகின்றது .அதை மீண்டும் ஒளியாக மாற்றி மாயையிடம் ஒப்படைக்கப் படவேண்டும்.,
சாமாதி அடைந்தோ ! முக்தி அடைந்தோ ! பஞ்ச பூதங்களில் கலந்தோ ! வந்த இடத்திற்கு செல்ல முடியாது .அவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.!
தவம்,தியானம்,யோகம் போன்ற அற்ப செயல்களாலும் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாது.!
ஆன்மா எப்படி இங்கு வந்ததோ அப்படியே திரும்பி செல்லவேண்டும்.
உடமபையோ உயிரையோ எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
உயிரையும் உடம்பையும் அழித்துவிட்டு செல்லவும்  அனுமதி கிடையாது..உயிரையும்,உடம்பையும் அழித்தால் அதற்கு மரணம் என்று பெயர் .
மரணம் வந்தால் மீண்டும் உயிரும் உடம்பும் கொடுத்து .துன்பம் ,துயரம்,அச்சம் பயம் போன்ற துன்பங்களில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.
திரும்பிச் செல்லாத ஆன்மாக்கள் !
இதுவரையில் வந்த ஆன்மாக்கள் ஒன்று கூட சொந்த வீட்டிற்கு  திரும்பி செல்லவில்லை.
இந்த உண்மையை எந்த அருளாளர்களும் மனித தேகம் படைத்தவர்களுக்கு சொல்லித் தரவில்லை.கதைகளாகவும் கற்பனைகளாகவும் சொல்லி மக்களை குழப்பி விட்டார்கள் .
ஏன் என்றால் அவர்களுக்கு கடவுளின் உண்மையும் ஆன்மாவின் தன்மையும்,முழுமையாக தெரிந்து கொள்ள வில்லை .
வள்ளல்பெருமான் வந்து,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியபடி  தான் வாழ்ந்து ,அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்  உண்மையான வழியைக் காட்டி உள்ளார்.
உண்மையான வழியைக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .
சுத்த சன்மார்க்க கொள்கை சாகாக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதாகும்.
இதுவரையில் சாகும் கல்வியை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அதனால் ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் இறந்து இறந்து ,பிறந்து பிறந்து துன்பத்தில் மூழ்கிக் கொண்டே இருந்து வருகின்றன.
சாகாக் கல்வி என்பதற்கு  ''மரணம் இல்லாப் பெரு வாழ்வு'' என்று பெயர் வைத்துள்ளார்.
ஆன்மாக்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு  திரும்பி செல்ல வேண்டுமானால் அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி .உடம்பையும்,உயிரையும் மாயையிடம் திருப்பிக் கொடுத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
உடம்பையும் உயிரையும் திரும்ப கொடுக்க வேண்டுமானால் அருள்  வேண்டும் .
அருள் என்பது இறைவனால் கொடுக்கும் நன்  நிதியாகும் அது அழியாத நிதியாகும்.
அருளைப் பெரும் வழி !
மாயையால் உண்டாகும்  உலகில் உள்ள உயிர்களுக்கு வரும் .பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை.எளிமை,பயம், போன்ற துன்பங்களைப் போக்க வேண்டும்.
உயிர்களின் துன்பங்களை போக்கினால் அருள் என்னும் (திரவம்) அருள்   ஆற்றல் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த ஆற்றல் உள்ள அருளினால் 
உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் அவற்றை  ஒளிமயமாக்கி  முழுவதுமாக மாயையிடம் ஒப்படைத்தால் ஆன்மாவிற்கு என்று ஆன்ம தேகம் கொடுக்கப்படுகிறது.
ஆன்ம தேகத்திற்கு மூன்று வடிவங்கள் கொடுக்கப் படுகின்றது.அவை ;-- சுத்த தேகம்,..பிரணவ தேகம்,..ஞான தேகம் என்னும் ஒளி தேகம் கொடுக்கப்படுகின்றது.அதற்கு 'சுத்த பிரணவ ஞான தேகம்'' என்றும் முத்தேக சித்தி என்றும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும்  பெயர் வைத்துள்ளார்  வள்ளல்பெருமான்.
''சுத்த பிரணவ ஞான தேகம்'' பெற்றால் எந்த தடையும் இல்லாமல் ஆன்மா இந்த அண்டத்தை விட்டு வெளியே சென்று வந்த இடத்திற்கு சென்றுவிடும்.
தனியாக வந்த ஆன்மா உயிர் உடம்பு,எடுத்து திறம்பட வாழ்ந்து உயிரையும் உடம்பையும் அழிக்காமல் திருப்பிக் கொடுத்து.மாயையிடம் நல்லபெயர் எடுத்து நற் சான்று பெற்று திரும்பி சென்றால் ஆண்டவர் அற்புதமான பரிசு ஒன்று வழங்குவார்.
அங்கு சென்றவுடன் ஆன்மாவிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஐந்தொழில் செய்யும் வல்லபம் என்னும் பரிசு வழங்கப் படுகின்றது.
அதற்கு பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் ,என்றும் அழியாத நிரந்தர பேரின்பம் என்றும்,சத்து சித்து ஆனந்தம் என்றும் பெயராகும்.
ஆன்மாவை இங்கு அனுப்பியதின் நோக்கமே பேரின்பம் பெற்று வாழ்வதற்காகவே இறைவன் அனுப்பி உள்ளார் .
ஆன்மா சுற்றுலா செய்ய  அனுப்பியதின் நோக்கம் அருளைப் பெறுவதற்கே ! 
சுற்றுலாவில் நாம் இன்பம் அடைய வேண்டுமேத் தவிர துன்பம் அடையக் கூடாது .சுற்றுலா செய்துவிட்டு இங்கு இருந்து திரும்பும் போது ,அருள் வல்லபத்துடன் மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்பதுதான் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விருப்பமாகும்.
உயர்ந்த அறிவை பெற்றுள்ள மனித தேகம் எடுத்துள்ளவர்கள் உயிரையும் உடம்பையும் மாற்றி இந்த தேகத்தையே நித்திய தேகமாக மாற்றி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் .
நாம் அனைவரும் வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியைக் கடைபிடித்து அருளைப் பெற்று பேரின்பத்தைப் பெறுவோம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு