புதன், 28 அக்டோபர், 2015

நான் சிலைகளை வணங்குவது இல்லை !

நான் சிலைகளை வணங்குவது இல்லை !

நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ,மற்றவர்களைப் போல் ...கடவுள் சிலைகளில் உள்ளார் என்று நினைந்து எல்லா சிலைகளையும் வணங்கினேன்.

அப்போது எனக்கு அறிவு என்பதே இல்லாமல் இருந்தது..

வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவைப் படித்துப் பார்த்து உணர்ந்து ,அறிந்து கடவுள் சிலைகளில் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்

உயிர் உள்ள இடத்தில் கடவுள் உள்ளார் !

உயிர் உள்ள எல்லா ஜீவன்களிலும் கடவுள் உள்ளார் என்பதை அறிந்தேன்

''ஆன்ம என்னும் உள் ஒளி'' இல்லை என்றால் உயிர் தோன்றாது என்பதை அறிந்தேன்.

ஆன்மா என்னும் உள் ஒளிதான் கடவுளின் ஒரு சிறிய கூறாகும்.அதுதான் கடவுளின் ஏக தேசம் என்பதாகும் என்பதாகும் அறிந்தேன்.

எனவே உயிர் உள்ள ஜீவன்களை நேசிக்க கற்றுக் கொண்டேன்.எல்லா உயிர்களும் என்னுடைய சகோதரர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

உயிர்களை இயக்கும் ஆன்மா தான் கடவுள் என்பதை அறிந்தேன் .அந்த உண்மை தெரிந்த பிறகுதான் ''ஆன்ம நேய ஒருமைப்பாடு''என்னும் மகா உண்மையை அறிந்தேன் .

நான் வணங்குவது உயிர் உள்ள ஜீவன்களை !.

நான் வழிபடுவது அருட்பெருஞ்ஜோதியை !

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டவன் எவனோ அவனே அறிவு உள்ளவன் அவனே கடவுள் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ !

இந்த பாடல்தான் என்னுடைய அறிவுக் கண்ணை திறந்தது ,

வள்ளலார் சொல்லிய வழிபாடு ஜீவகாருண்யம் .

உயிர்களில் இறைவன் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்பதை அறிந்து ,உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குவதே கடவுள் வழிபாடு என்பதை தெரிந்து உயிர்களுக்கு உதவி செய்து வருகின்றேன் .

இதுதான் நான் தினமும் செய்யும் ,என்னுடைய வழிபாடாகும்.

இந்த வழிப்பாட்டால்  எனக்கு அளவு இல்லாத இன்பம் கடவுள் கொடுத்துக் கொண்டே உள்ளார் .

சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை .நீங்களும் முயன்று பாருங்கள் அதனால் உண்டாகும் ஆன்ம லாபத்தை உணர்வீர்கள்.

எனவே சிலைகளை வணங்குவதால் எந்த பயனும் இல்லை.உயிர்களுக்கு உதவி செய்யுங்கள் ..

உங்களுக்கு வரும் துன்பம் துயரம்,அச்சம் .பயம்,பிணி போன்ற எந்த விதமான துயரங்களும் உங்களை நெருங்காது.

உயிர்களுக்கு உதவி செய்தால் உண்மையான இறைவன் உங்களுக்கு பாது காப்பாக இருந்து உங்களை காப்பாற்றுவார் .

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நன்மை என்னவென்று பின்னால் விளங்கும்.

நான் நாற்பது ஆண்டுகளாக வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் கோடு தவறாமல் செயல்பட்டுக் கொண்டும் வாழ்ந்தும் வருகின்றேன்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறேலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு