சனி, 29 ஆகஸ்ட், 2015

கடவுள் காரியப்படும் இடங்கள்.!

கடவுள் காரியப்படும் இடங்கள்.!

கடவுளின் உண்மைத் தெரியாமல் காட்டு மிராண்டிகளாய், மக்கள் திரிந்து கொண்டு உள்ளார்கள்.

சாதி,சமயம்,மதங்கள் கடவுளைப் பற்றி ஏதும் தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள்.மக்களும் அவர்கள் சொல்லியது உண்மை என்று நம்பிக் கொண்டு, கண் தெரியாத குருடர்கள் போல் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

 கடவுள் இந்த உலகத்தில் எப்படி காரிய காரணமாய் இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை வள்ளல்பெருமான் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்.

உலகத்தைப் படைத்த இறைவன் ;--

இந்த உலகத்தில் அண்டத்திலும் ,உயிர்களின் பிண்டத்திலும் காரிய காரணமாய் விளங்கிக் கொண்டு உள்ளார்

அண்டத்திலும்,பிண்டத்திலும் ;--

அண்டத்தில் நான்கு இடத்திலும்,பிண்டத்தில் நான்கு இடத்திலும் கடவுள் காரிய பிரகாசம் உள்ளது.

அண்டத்தில் அகம்,..அகப்புறம் ..புறம்,..புறப்புறம் என்னும் நான்கு இடத்திலும் .உயிர்களின் பிண்டத்தில் ,அகம் ..அகப்புறம்,..புறம் ..புறப்புறம் என்னும் நான்கு இடத்தில் காரிய காரண பிரகாசமாய் விளங்கிக் கொண்டு உள்ளது.

அண்டத்தில் ;--அகம் என்பது அக்கினி ...அகப்புறம் என்பது சூரியன்,,,புறம் என்பது சந்திரன்,,,புறப்புறம் என்பது,நட்சத்திரங்கள் போன்ற நான்கு இடத்திலும்.

பிண்டத்தில் ;--''அகம்'' என்பது ஆன்மா ..''அகப்புறம்'' என்பது ஜீவன் என்னும் உயிர் ..''புறம்'' என்பது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள்.புறப்புறம் என்பது ,கண்,மூக்கு,காது,வாய்,உடம்பு என்னும் இந்திரியங்கள்

அண்டத்தில் நான்கு இடத்திலும் ,பிண்டத்தில் நான்கு இடத்திலும் ஆக எட்டு இடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தால் உள்ளது.

காரணத்தால் உள்ள இடங்கள் ;--

பிண்டத்தில் புருவ மத்தியில்  ஆன்மா இருக்கும் இடம் , , அண்டத்தில் பரமாகாசம் என்னும் ஆகாயத்தின் மத்தியில்...

காரிய காரணமாய் உள்ள இடம் நான்கு  ;--

பிண்டத்தில்;-- ''விந்துவும்'' அதில் இருந்து உண்டாகும் ''நாதமும்'' (சப்தம் ) ஆகிய இரண்டு இடத்திலும் உள்ளது.

அண்டத்தில்;--மின்னல்,அதில் இருந்து உண்டாகும் இடி என்னும் சத்தம்,ஆகிய  இரண்டு இடத்திலும் உள்ளது.

அது அல்லாது சர்வ யோனிகள் இடத்தும் .

விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும் நாத விளக்கமாகிய இடி இடத்தும்,இதல்லாது பாரோடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதியாக உள்ளதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அதுதான் ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும்,காரண காரியமாய் விளங்கிக் கொண்டு உள்ளது.

சத்திய ஞான சபை !

அதைக் கண்டு தெரிந்துதான் ''சத்திய ஞான சபையை ''வடலூரில் எண்கோண வடிவமாக வள்ளல்பெருமான் அமைத்துள்ளார் .

மேற்குறித்த ஆன்மப் பிரகாசமே ஞான சபை ,அதன் உள் ஒளியின் அசைவே நடம் என்பதாகும் அதைத்தான் ஞானாகாச நடனம் என்றும் ,அசைவு உற்றதே நடராஜர் என்றும்,ஆனந்த நடனம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதலால் ஏமம்,கனகம் ,ரஜிதம்,ரவுப்பியம் முதலாகச் சொல்லப்பட்டது.
அண்டத்தில் சூரியனிடத்தில் கனகமும்,சசி(சந்திரன் ) இடத்தில் ரஜிதமும் என்றும் சொல்லப்படுகின்றது..

அதேபோல் ,பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபை என்றும்,ஜீவ ஆகாசம் ரஜிதசபை என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண இயற்கை விளக்கம் காரியமாயும்,காரணமாயும் ,காரண காரியமாயும் இருக்கின்றது.

முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நான்கு இடத்திலும்,அண்டத்தில் நான்கு இடத்திலும்,கடவுள் விளக்கம் விசேஷ மாக உள்ளது.

ஆதலால் நாம் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும்,அதன் உள் ஒளியே பதியாகவும் வணங்க வேண்டும்.

எக்காலத்திலும்,புருவ மத்தியின் கண்ணே நம்முடைய மனத்தை செலுத்த வேண்டும்.

முக்கியமான காலங்கள் ஆறு ;--

மேற்குறித்த காலங்கள் சூரிய உதயம்,..உச்சிப்போது ...சாயரஷை...மாலை..
யாமம்..வைகறை ஆகிய காலங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

ஞான சபையும் அருட்பெருஞ்ஜோதியும் ;--

பிண்டத்தில் ;--ஒரு பொருளினது நாமம்  ரூபம் ,குணம்,குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக் காட்சி,இந்திரிய அறிவு என்பதாகும்.

அதன் நாமம்,ரூபம்,குணம்,குற்றங்களையும் விசாரித்தல் கரணக்காட்சி மன அறிவு , என்பதாகும்.

அதன் பிரயோஜனத்தை அறிதல் ஜீவ காட்சி ஜீவ அறிவு என்பதாகும்.

அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம காட்சி ,ஆன்ம அறிவு என்பதாகும்.

இதேபோல் அண்டத்திலும்;- அக்கினி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் உள்ளது

நட்சத்திரக் காட்சி,..சந்திரக் காட்சி,..சூரிய காட்சி,..அக்கினி காட்சிகளும் ..உண்டு.

பிண்ட ஒளியும் அண்ட ஒளியும்.;--

பிண்ட ஒளி ;--ஆன்ம ஒளி....ஜீவ ஒளி ...மன ஒளி ...கண்ணொளி யாகும்.

அண்ட ஒளி ;--அக்கினி ஒளி ..சூரிய ஒளி ...சந்திர ஒளி ...நட்சத்திர ஒளி..யாகும்.

கடவுள்;-- மேலே கண்ட எட்டு இடங்களிலும் காரணமாகவும் ,மற்ற இடங்களில் காரிய காரணமாகவும் பிரகாசமாய் விளங்கிக் கொண்டு உள்ளார் .
மேலும் விரிக்கில் பெருகும்.

இந்த உண்மையை அறியாத மக்கள் கடவுளைத் தேடிக் கொண்டு உள்ளார்கள்.
எங்குத் தேடினாலும் கடவுள் கிடைக்க மாட்டார்.நம்முள் இருக்கும் ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் கடவுளின் உண்மைப் பிரகாசம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்....

எல்லா ஆன்மாக்களிலும்,எல்லா உயிர்களிலும் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள்தான் உள்ளது என்பதை அறிவாலே அறிந்து கொள்ளுங்கள் .

ஆன்ம விளக்கமும் அறிவு விளக்கமும் ,அருள் விளக்கமும் என்னவென்று தெரிந்து கொண்டால் எல்லா உண்மைகளும் தன்னைத்தானே தெரியும்.

அதைத்தான் தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்று வள்ளல்பெருமான் இறைவனிடம் வேண்டுகின்றார்.....நன்றி

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

.

  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு